புதன், 20 பிப்ரவரி, 2019

வேவு வேசி தாசி தாசன்

ஒற்றர்களை அனுப்பி அவர்கள் மறைவாக இருந்து நடப்பவைகளை அறிந்துவருவது அரசின் செயல்களில் ஒன்றாகும்,  சில வேளைகளில் இவ் வொற்றர்கள் மாறுவேடத்தில் செல்வர்.

இவ்வேடத்திற்கு அவர்கள்  ஆடை அணிகலன் முகமாவு முதலியவற்றால் தங்களை வேய்ந்துகொள்ளவேண்டும்.  வேய்தல் என்றால் மேல் அணிந்துகொள்ளுதல்.

அவன் பெண்ணுடைகளை வேய்ந்துகொண்டான்.
ஒரு சேவகனின் உடையை வேய்ந்துகொண்டான்

என்றெல்லாம் கூறலாம்.

இந்த வேய் என்ற சொல் தொழிற்பெயராகும் போது வேய்வு ஆகிறது.  வேய்வு என்பதில் யகர ஒற்று கெடும்போது அச்சொல் வேவு என்று திரிந்துவிடும்.

இதிலிருந்து வேவு பார்த்தல் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.


யகர ஒற்று இல்லாமற் போன சொற்கள் பல.

எனக்குப் பிடித்த ஒரு திரிபு: வேய்வு >  வேவு போன்றது இது.

வாய் > வாய்த்தி:> வாத்தி >  வாத்தியார். ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை).

உபா த்ியாயர் என்பது வேறு சொல்.

பண்டைக் காலத்தில் எல்லாம் வாய்ப்பாடமாகத் தான் கற்றனர்.  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுத்தவர் வாய்த்தியார் > வாத்தியார்.

உய்த்துணர்தல் குறிக்கும் உய்த்தி என்ற சொல்லும் உத்தி ஆனது அறிக.

உத்தி என்பது பின் யுக்தி ஆனது மெருகு.

கண்ணுக்கு இனிய ஆடைகளையும் செம்பஞ்சுக் குழம்பு போலும் அழகுபடுத்தும் துணைப்பொருள்களையும் ேய் ந் து கொண்ட வள் வேய் > வேயி ஆனாள்.  யிகரம் சிகரம் ஆகுமாதலால் இது பின் வேசி என்று திரிந்தது மட்டுமின்றி, பொருளும் பொல்லாமை பூண்டு விலைமகள் என்று உணரப்படலாயிற்று.

தன்னுடல் தந்தவள் தா > தாசி எனப்பட்டாள்.   சி என்பது ஒரு விகுதி.   தாச்சி என்று வல்லெழுத்து மிகாமல் தாசி என்றே மென்மை பெற்றுச் சொல் அமைந்தது. அன்றியும் இடைக்குறை என்று விளக்கினும் ஏற்றற்குரித்தே.
உடலுழைப்புக்குத் தன்னைத் தருவோன் தாசன் எனப்பட்டான்.  இவை தா என்ற சொல்லினின்றும் அமைந்தவை.  சில மேலை வரலாற்றாசிரியர் இதன் அமைப்பு அறியமுடியவில்லை என்றனர். அது தமிழ் வினைச்சொல்லான தா என்பது அறியாமையே  ஆகும். அயற்றிரிபு தாஸ்யு என்பதாகும்.

தாசி என்பது பண்டை நாட்களில் வேலைக்காரிகளைக் குறித்திருக்கக்கூடும்.  வேலைக்காரிகள் ஆண்டைகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டமையால் அவர்கள் பின் விலைமாதர் நிலைக்குத் தள்ளப்பட்டிருத்தல் கூடுமென்பதை ஊகிக்கக் கடினமொன்றுமில்லை என்பதறிக.


திருத்தம் வேண்டின் பின். Some new errors not in original noted. Will correct..

கருத்துகள் இல்லை: