வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

தான்வந்தர முனிவர்

இன்று தான்வந்தரம் என்ற சொல்லைப் பார்ப்போம்,

தான்வந்தரம் தைலம் என்று ஒரு தேய்த்துக்கொள்ளும் எண்ணெய் உள்ளது.  இது நாட்டுவைத்தியம் செய்வோரிடையிலும் செய்துகொள்வோரிடையிலும் மிக்கப் புகழ் எய்திய ஓர் எண்ணெய் ஆகும். தலைக்குத் தான்வந்தரம் தைலமும் உடம்புக்குச் சீரபலாத் தைலமும் தேய்த்துக் குளித்தால் சில உபாதைகள் நீங்குவதாகக் கூறுவர்.  நரம்புத் தளர்ச்சியை விலக்குவன இவை என்பர்.  தான்வந்தர முக்கூட்டு என்றொரு தைலமும் கேரளத்தாரால் பயன்படுத்தப்படுகிறது. இவை யாம் சில ஆண்டுகட்கு முன் கேள்விப்பட்டவை ஆதலால் சரியாக ஒப்பிக்கிறேமா என்று ஐயப்பாடு உள்ளது,  நீங்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

தான்வந்திரி ( தான்வந்தரி ) என்பது ஒரு முனிவரின்  பெயராம். இவர்தாம் தம் நூலில் இத்தைலம் ( தான்வந்தரம்)  பற்றிக் கூறியுள்ளார் என்ப.

தான்வந்தரி ஒரு பெரிய மருத்துவ நூலார்.  இவர்பற்றிச் செய்திகள் இப்போது கிட்டிட வில்லை.

எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. தானே வந்த அரிய முனிவர் என்ற பொருள்படும் இவர் பெயர் ஒரு காரணப்பெயரே ஆகும்.

தான் :  தானேயாக.
வந்து :  தோன்றிய
அரு :   அரிய
இ:  விகுதி.

தானே வந்து மக்களிடம் தோன்றிய அரிய முனிவர்
தான்வந்தர முனிவர்

அரு> அரி என்பதற்குப் பதில் தான்+வந்து + இரி என்பதே சொல்லின் வடிவமாகவும் இருத்தல் கூடும்.  இரு என்ற வினை இரி  என்று கேரள நாட்டில் வழங்கும்.அவ்வாறாயின்  அரிய முனிவரென்பதற்குப் பதிலாக வந்து இருந்த முனிவர் என்று பொருள்கொள்ளுதல் வேண்டும்.  இதில் சிறப்பில்லை. அரிய முனிவர் என்பதே அவர்க்குப் பெருமை சேர்ப்பது. செயற்கு அரிய செய்த அருமுனி அவரென்பதனால் என்று கொள்க.  மேலும் இஃது அவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்.  அவர்தம் இயற்பெயர் எமக்குக் கிட்டவில்லை,  செயற்கரிய செய்த பெரியவரே இவர்.

நோய் தீர்க்கத் தைலம் தந்த இம்முனிவரைப் பாராட்டுவோமாக.

இவர்பற்றிய அரிய செய்திகள் உங்கட்குக் கிட்டுமாயின்  அல்லது  நீங்கள் அறிந்திருப்பின் இங்குப் பின்னூட்டமிட்டுப் பகிர்ந்து கொள்ள வருக.

கருத்துகள் இல்லை: