ஞாயிறு, 21 நவம்பர், 2010

இறையின்பம்

தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.


இதன் பொருள்:

தனித்தலையாய் = தானே தனியராய்; இறையின்பம் = இறைவன் பால் பத்தி (பக்தி) கொண்டு அவனை நாடிச்சென்று இன்புறுவது;
தினைத்துணையே நன்மை! = சிறிதளவே நன்மை தருவதாகும்;

பனித்தூய்மை அடியரொடும் = பனியைப் போல தூயவரான அடியார்களுடன், இனித்திடுமாறு =இன்பம் உண்டாகுமாறு ; ஆழ்ந்து நினைத்து = தியானம் செய்து;
அமர்ந்து நிலைப்படுத்தி = உட்கார்ந்து மனத்தை நிலைப்படுத்தி; நிறைவினையே காணல் = அத்தியானத்தின் வெற்றியைக் காணுவது;
அனைத்துலக அடியவரும் = ஏனை மதங்களின் அடியார்களும் பனைத்துணையென் றேற்பர். =பெருநன்மை பயப்பது என்று ஏற்றுக்கொள்வர்.,கூட்டு முயற்சி ஆதலினாலே. என்றவாறு.

கருத்துகள் இல்லை: