செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி பொருள்

தீபாவளி என்பதைப் பலர் பலவிதமாகப் பொருள் விரித்திருக்கின்றனர்.

தீப ஒளி என்பதே தீபாவளி என்று மருவிற்று என்பது ஒரு திறமையான விளக்கம் எனலாம்.

இது இருபெயர் ஒட்டிய கூட்டுச்சொல்லாகும்.  தீபம் ஆகிய ஒளி என்று விரிதலால் இஃது இருபெயரொட்டிய தொகை எனலாம்,

மறைமலையடிகள் இதைத் தீப + ஆவலி என்று பிரித்தார். ஆவலி என்பது ஆவலம்  என்பதிலிருந்து திரிந்தது. ஆவலம் கொட்டுதல் எனில் சுற்றி நின்று கைகொட்டி ஆடுதலாம். தீபத்தை ஏற்ற மாந்தன் அறிந்த நாள் தொடங்கி
இது வழங்கிவருகிறது என்பது விளக்கம் ஆகும்.  ஆர்தல் = சூழ்தல். ஆர்> ஆ வலம் எனில் வலமாகச்   சுற்றி யாடுதல்.  இதுவே ஆவலம் என்பதன் அமைப்புப் பொருள்.தீவாலி என்ற வட வழக்கில் வலம் > வலி > வாலி எனற சுவடு காணலாம்.


தீபாவளி எனில் தீராத பாவத்தை அழி என்பதன் திரிபு என்று கூறினாருமுண்டு. அதாவது இது ஒரு குறுக்கச் சொல் என்றனர். அழி > அளி என்று மாறிவிட்டதென்றனர்.

தீபம் என்பதன் மூலம் தீ என்பதே தீ + பு+  அம் என்பதில் பின்னவை,   (பு , அம் ) விகுதிகள்.

எப்படியாயினும் என்ன  ‍?  பலகாரம் உண்டு மகிழ்ந்திருங்கள்.

கருத்துகள் இல்லை: