வியாழன், 31 ஜூலை, 2025

அமானுடம் சொல்

 மனிதன் என்பவன் தன்னையே சீரிய, மிக உயர்ந்த  பிறவியாக எண்ணிக் கொண்டவன். என்றாலும் இயல்பு நிலை கடந்த நிகழ்வுகளைக் காணும்போதும் கேள்விப் படும் போதும்  அவற்றை "அமானுட மானவை  " என்று சொல்வதுண்டு. இச் சொல் ஒரு  பிற்காலப் புனைவு தான்.  சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தமிழர்கள் உண்டாக்கிய சொல்தான்.

இது எப்படி அமைந்தது என்பது காண்போம்.

மனிதன் என்ற சொல் மன்  என்ற  அடியில் தோன்றுவது. மன் என்ற  அடிச்சொல்லுக்குரிய பொருள்களில் நிலைபெறுதல் என்பது சிறப்பானது. எல்லா உயிரினங்களிலும் சிறப்புடையவன் ஏன் எனில் கலை பல அறிந்தவன். அறிவியல் கண்டவன் . மன் + இ+ து +அன் என்றபடி அவனுக்குச் சொல் அமைந்தது. மற்ற உயிரினங்களைவிடத் தன்னைப் புவியி லெங்கும் நிலைபேறு உடையோனாய்க் கருதிக் கொள்பவன்.

முன் எப்போதினும் நிலைபேறு என்பதற் குரிய பொருள் இப்போதுதான் மனிதனுக்கு  மிகுதியும பொருந்தினதாகத் தெரிகிறது. படைப்புத் திறன் மிக்குவந்து சி றந்தவனாகிவிட்டான்.

நாளேற நாளேறச் சிறப்படைந்துவிட்டான்

இப்போது "அமானுடம்" என்ற சொல். அ என்பது  மறுதலை , ( "மாற்று இடம்").  அல்லாதது என்பது பொருள்.  மனிதனுக்குரிய இயல்புகளுக்கு மாற்றம் உடையதாய் இருத்தல் என்று பொருள்.

அகரம் இங்கு முன்னொட்டாக வருகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை தரப்பட்டுள்ளது




ஆபயன் என்னும் சொல்

 இன்று ஆபயன்  என்னும் சொல்லைத் தெரிந்து இன்புறுவோம்.

இது  இலக்கண முறையில் எத்தகையை சொல்? ,வினைத்தொகை என்னும் வகையுட்  பட்டால்  ஆகும் பயன் என்னும் பொருளில் வந்து, வலித்தல் விகாரம் தோன்றாமல் போதரும்.  அப்போது ஆ என்பது பசுவைக் குறிக்காது. ஆப்பயன் என பகர மெய் தோன்றினால் பசு தந்தது என்று பொருள் பட்டுப் பால் ( தயிர், மோர், வெண்ணெய். நெய் முதலானவற்றைக் குறிக்கும்.

பாட்டில் ( செய்யுளில்) எதுகை நோக்கிக் குன்றி  மீண்டும் "ஆபயன்" என்று வருதலும் கொள்க. அப்போது அஃது ஆவின் பயனே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்ந்து கொள்க.









திங்கள், 28 ஜூலை, 2025

வெடி, வேட்டு என்னும் சொற்கள்.

 இன்று வெடி வேட்டு என்னும் சொற்களைக் கருதுவோம்.

வெடி வேட்டு என்பன இடையின வகரத்தில் தொடங்கிய சொற்களாயினும் வல்லின டகரம் வருதலால், வெடிப்பு நிகழ்வுக்குப் பொருத்தமான சொற்களாய்விடுகின்றன. இடிபோலும் இயற்கை நிகழ்வுகளி லிருந்து மனிதன் வெடியொலியையும் அதன் தாக்ககத்தினையும் நன்கு அறிந்துகொள்வா னாயினன்.  வெடுக்கெனல் என்பது வேகத்தையும் ''டுக்''கென்ற ஒலியையும் ஒருங்கே குறிக்கவல்லதாய்  இருக்கிறது.

வெடி என்பதில் ஒலிமுறையில் நாம் காதில் அதிர்வையும் காட்சிக்கு விரைவையும் கண்டுபிடித்தாலும் சேர்த்துவைத்த வெடிபொருள் ஓரிடத்திலிருந்து சட்டென்று பிளந்துகொண்டு வெளிப்படுவதையே முதன்மையாக அறிகிறோம்.  இவ்வாறு விடுதலுக்கு விள்> விடு>வெடு> வெடிப்பு; விள்> வெள்> வெடி> வெடிப்பு;  விள்> வெள்> வெடு> வேடு> வேட்டு என்றபடி சொற்கள் திரிவன வென்பதை அறியலாம்.

வெடிக்குமிடத்தில் உள்ள நிலம் அல்லது பிற இடம் சேர்ந்து இருத்தலை விட்டு, அங்கு விடுபாடு அல்லது பிளவு ஏற்படுவதையும் அறியலாம்.

வெடிக்கும் இடத்தில் ஒரு வெட்டு விழுந்திருந்தால்,  வெட்டு> வேட்டு என்று முதனிலைத்  திரிபு இருப்பதை உணரலாம்.

இவற்றை உணர்ந்து தமிழ்ச் சொல்லமைப்பை உணர்ந்து மகிழ்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.