goog_1596888458 சங்ககாலத்தில் மக்கள் அனைவரும் இடம்நோக்க ஒன்றாக வாழ்ந்தனர் என்று கொள்வதற்கில்லை. மலைவாழ்நன் குறவன் எனப்பட்டான். ஆனால் விளைச்சல் நிலமுள்ள பகுதியில் வாழ்ந்தவன் ஊரன் என்றும் பிறபெயர்களாலும் அறியப்பட்டான். அங்குத் தண் துறைகள் இருந்தன. இதனால் இவனைத் தண் துறை ஊரன் என்று கவிகள் சிறப்பித்தனர். துறையன் என்ற சொல்லும் வழக்குக்கு வந்தது. இவர்கள் வேளாண்மை விளைச்சலில் ஈடுபடுபட்டவர்கள்தாம். கன்னடர் சிலர் கோவைப் பகுதிகளில் அமர்ந்து வாழத் தொடங்கிய காலை, துறையர் என்ற பெயர் அவர்களுக்கு உரித்தாக்கப் பட்டு, பின் ஒரு சாதியாகவும் மாறிவிட்டது! நெய்தல் நிலத் தலைவனுக்கு இதே அடியிற் பிறந்த துறைவன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டது. ஆக:
துறை > துறைவன்,
துறை > துறையன்
என்று இருவேறு விதமாகச் சொற்கள் அமைந்தன. ஒன்று யகர உடம்படு மெய் கொண்டு அமைந்தது.
தலை என்ற சொல்லினை அடியாய்க் கொண்டு அமைந்த சொல்லினின்று " தலைவன்" என்ற சொல் அமைந்தது. அவ்வடியிலிருந்து தலையன் என்ற சொல்லும் அமைந்தாலும், " மாங்காய்த் தலையன், பலாக்காய்த் தலையன், மொட்டைத் தலையன், சொட்டைத் தலையன்" முதலிய வழக்குகளில் இஃது ஒட்டாகவே வந்தது. சட்டித்தலையன் என்று ஒருவகை மீனும் கடுக்காய்த் தலையன் என்று ஒருவகைப் பாம்பும் பெயர்பெற்றன. சற்று நீட்டலாகத் தலையாரி என்ற சொல்லை அமைத்துக்கொண்டனர்.
வலைகொண்டு உயிர்களைப் பிடித்து வாழ்ந்தவன் வலையனென்று பெயர்பெற்றனன் எனினும், வலைவன் என்ற சொல்லும் அமைந்து சொற்பெருக்கம் ஏற்பட்டது.
கலைவன், கலையன் என்ற சொற்கள் அமைப்புறவில்லை. இவற்றை இன்னும் பயன்படுத்தாமல் இருப்பதால் எதிர்காலத்தில் ஏற்ற வழியில் அவை ஒரு புதுப்பொருளுக்குப் பெயராய் அமைய வசதி உள்ளது.
உடம்படுமெய்களை மாற்றுவதன் மூலமே இவ்வாறு ஓர் அடியினின்று
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் கிட்டி, மொழி வளம்பெற்றது காணலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
திங்கள், 25 ஜூலை, 2022
உடம்படு மெய்கொண்டு வெவ்வேறு சொற்கள்.( தலையன், தலைவன்)
வெள்ளி, 22 ஜூலை, 2022
காவூர்தியணி ( convoy)
முன்னர் நம் வலைத்தளத்தில் "கன்வோய்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கேற்ற தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசப்பட்டது.
கன்வோய் என்பதில் பாதுகாப்பு பற்றிய கருத்து வழக்கினால் அல்லது பயன்பாட்டினால் வருகிறது. கன் (con ) - ஒன்றாக. வோய் என்பது பயணிப்பது என்ற பொருளதாம். இந்த அடிச்சொல், வோயேஜ் என்ற ஆங்கிலச் சொல்லின் தொடர்பை உள்ளடக்கிய சொல்.
கன்வோய் என்ற இற்றைநாள் வரையறவு ( definition), பாதுகாப்பையும் உட்கருத்தாகக் கொண்டது.
ஆகவே இதன் கருத்துகள் இவையாம்:
பாதுகாப்பு.
ஊர்தல் ( வண்டி அல்லது வாகனம் செல்லுதல்).
அணியாகச் செல்லுதல்.
இப்போது இதை மொழிபெயர்த்தால்:
"காவூர்தியணி" என்றாகும்.
இதுவே சரியானதாகும்.
ஊர்தியணி என்றுசுருக்கியும் சொல்லலாம்.
கா - காவல், பாதுகாப்பு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
புதன், 20 ஜூலை, 2022
பண்டைத் தமிழகத்தில் பேரிகை கொட்டிப் பிழைத்தல்.
பண்டைத் தமிழ்நாட்டில், பேரிகை என்றோர் இசைக்கருவி இருந்தது. இது ஒரு முரசு போன்றே தட்டி ஒலியெழுப்பி மகிழ்வித்துக்கொள்ளும்- மகிழ்விக்கும் ,ஒரு கருவியாகும். ஆனால் இதைக் கொட்டிப் பிழைத்தவர்கள், வயிறு வளர்ப்பதற்கே அதைச் செய்தனர் என்பது தெளிவு. அதன் மூலம் அவ்விசையைக் கேட்டோரிடமிருந்து அவர்கள் ஒரு வருமானத்தைப் பெற்றனர். அது ஒரு நாளைக்கோ இரு நாளைக்கோ போதுமானதாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆகையால் பின்னும் அவர்கள் அதைக் கொட்டி இசைக்கவேண்டியே இருந்தது. அதனால் அவர்கள் பிழைத்தனர். பிழைத்தல் என்பது அது (கொட்டுதல்) ஒரு தொடர்வருமானம் தேடுதற்குரிய நீள்செயலாய் இருந்தது என்பது திண்ணம்.
இக்கருவியை வாசிப்பதில் இடப்பெயர்வு வாசித்தோன்பால் இருந்தது. அவன் ஓரிடத்தில் நின்றுவிடாமல், இடம் பெயர்ந்து அடித்துக்கொண்டுசென்றான். அதாவது பெயர்ந்து பெயர்ந்து இசைத்தான். இங்கு பெயர்(தல்) என்ற வினைச்சொல், பேர் என்று திரிந்தது. இச்சொல்லே பேரிசை என்பதில் முன் நிற்கும் சொல்லாகும். கொட்டுவதில் எழுவது ஒலி. அதை இசை என்றும் சொல்லலாம். எனவே பேரிசை என்ற பெயர், நாளடைவில் பேரிகை என்று பெயர்மாற்று அடைந்தது. இஃது திரிபு ஆகும்.
பேரிசை என்பது பெரு + இசை என்றும் பிரித்துக் கூறற்கு வசதி யுள்ள சொல். இவ்வசதி சொல்லிலே அமைந்து கிடப்பதால் அதையும் மறுத்தற்கில்லை. பெருமை என்ற சொல்லில் அடியுடன் புணர்த்திக் கெடுத்த மை விகுதி, இலக்கணத்திற் சொல்லப்பெறும். பெருமை என்ற பண்பினால் எழுந்தது என்பதை அறிந்துகொள்ள இத்தகை விளக்கங்கள் கொள்ளப்பட்டன. ஈண்டு அதன் பயன் சற்றுக்குறைவானதே.
இப்பொருளை ஏற்றுக்கொள்வதாயின், இஃது அதிக ஒலி எழுப்பிய கருவியைக் குறிக்கிறது என்னலாம். பல முரசுகளும் அதிக ஒலி எழுப்பும் தன்மை வாய்ந்தவையேதாம். பெரிது சிறிது என்பது ஒரு பொருளை இன்னொன்றுடன் தொடர்புறுத்துவதால் எழும் கருத்து. இந்த இரண்டாவது பொருளையும் நீங்கள் கவர்ந்து கொள்ளலாம். இதில் மறுப்பொன்றும் இல்லை. யாம் இதை இருபிறப்பிச் சொல் என்றே விடுப்போம்.
காரிகை கற்றுக் கவிபாடாதவன், பேரிகை கொட்டிப் பிழைக்கலாம் என்ற பழமொழி, இதை வாசித்தவர்களின் திறனின்மையையும் ஏழ்மையையும் விளக்கவல்லதாகும். கவிவாணரே உயர்ந்தோர் என்ற பொருளை நீங்கள் மருவிக்கொண்டு நின்றகாலையும் பலரின் திறனின்மையையும் ஏழ்மையையும் நாட்டின் அற்றை நிலையையும் நாம் உதறித் தள்ளிவிடுதல் இயலாமை காண்க
முரசு கொட்டும் வேலையைப் பலர் செய்தமைக்கும் பொருளியல் நிலையே முதற்காரணமாகும். மக்களின் பொருளியல் நிலை ஒருவருக்கொருவர் வேறுபடுதல் இன்றுபோலவே அன்று மிருந்தது.
எனவே, பேரிசை > பேரிகை ( திரிபு) கண்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
Edit: some minor changes made. 21072022 0622