திங்கள், 6 ஜூலை, 2020

அபிப்பிராயம் பின் வரும்கருத்து.


யாமோர் இடுகையை எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்புக் கொடுக்க முனைந்தேம். அவ்விடுகை சமீபம் என்ற சொல்லைப்பற்றியது. “சமீபம் என்ற அழகான சொல்" என்ற தலைப்பினை அதற்கு இட்டேம். இதைப் படிப்பவர் எவரும் என்ன அழகான சொல் என்று கேட்க மாட்டாரென்பதே எமது துணிபாகும். அந்தச் சொல்லில் என்ன அழகு கண்டீர் என்று எம்மிடம் யாரும் சண்டை பிடிக்க வரமாட்டார் என்பது யாமறிவேம். அழகோ அழகில்லையோ பலர் அவ்விடுகையின் உள்ளுறைவிலேதான் ( substance or content ) கவனம் செலுத்தியிருப்பர் என்பதும் யாம் பட்டறிவுகொண்டு அறிந்து வைத்துள்ளதாகும்.

ஒன்று அழகாக இருக்கிறதோ இல்லையோ, இது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருத்தி அழகு என்றால் இன்னொருத்தி அழகு இல்லை என்பாள். இதனைக் கருத்து அல்லது அபிப்பிராயம் என்று குறிப்பிடுவர். பேச்சு வழக்கில் இதை "நினைப்பு" என்றும் இதற்கு எதிராக உண்மைநிகழ்வை "நடப்பு" என்றும் வேறுபடுத்தி உரைப்பர். நடப்புக்கு நினைப்பு ஒரு முரணிகழ்வு ஆகும். நினைப்பு பிழைப்பைக் கெடுத்துவிடுமென்பதற்கு என்ன பொருள்?

சட்டத்துறையில் கருத்துக்கும் நடப்புக்கும் வேறுபாடு கண்டுகொள்ளுமாறு பல விளக்கங்கள் கூறப்படுவதும் வரையறவுகள் வழங்கப்படுவதும் உண்டு.

அபிப்பிராயம் என்ற சொல்லுக்கு வேறுவிதங்களில் அமைப்பு காணப்படுவதுண்டு. இப்போது இச்சொல்லை ஆய்வுசெய்வோம்.

அபி என்பது ஒரு சங்கத முன்னொட்டு. ஆனால் அது உண்மையில் " அதன் பின் " என்ற தொடரிலிருந்து சுருக்குண்டதாகும். அபிவிருத்தி என்ற சொல்லில் அதன் பின் செய்யப்படும் விருத்தி என்று விளக்குக. முன்னாளில் கட்டிய ஒரு வீட்டுக்கு அபிவிருத்தி மேற்கொள்ளுதல் என்பது வழக்கில் கூறப்படுவதாகும். இங்கு வழக்கு என்பது உலகவழக்கு. விருத்தி என்பதோ விரி > விரித்தி என்பதன் திரிபு.

உலகில் ஆதியில் ஏற்பட்ட அபிப்பிராயம், ஒன்றைப் பார்த்து அது அழகியது, நல்லது என்பனபோலும் பாராட்டுக்களே. அடுத்தவன் அதை ஏற்கமறுப்பதாகிய ஒரு புகழ்ச்சி. இது அழகு என்றால் இதனினும் அது அழகு என்று பதில்வரும். ஆகவே அபி+ பர + ஆயம் > அபிப்பிராயம் என்று திரிந்த சொல். அதன் பின் புகழ்தலாவது கண்ட அல்லது கேட்ட பின் புகழ்தல், முதலியவை. பின்னர் இச்சொல் பொதுப்பொருள் எய்தியது. "பொதுவாகக் கருதப்படுவது" என்ற பொருளை அடைந்தது. அகரத் தொடக்கம் இகரமாதல் அதழ் > இதழ் என்பதனால் அறிக.

இவற்றையும் நோக்குக:

பரமன் > பிரமன் > ப்ரம்மன்  ( ப> பி > ப் )   அ > இ திரிபுவகை.

பரமன் - எங்கும் பரந்திருப்பவன்,  கடவுள். பிரமனும் கடவுள் தான்.

தெய்வப்பெயர்கள் ஒரு நடுவண் கருத்தினின்றே உருவெடுத்துப் பல்கியவை. சொல்லாய்வில் இவற்றை ஏற்புழி ஒன்றெனவும் பலவெனவும் கருதி அறிக. தெய்வப்பன்மை மீண்டும் ஒருமையாகிவிடும். இவற்றை விரிக்கும் நூல்களின்வாய் உணர்க. யாமதற்குள் செலவுமேற்கொள்ளவில்லை.



இவ்வாறாகப் பர என்பது பிர என்றானது. பரத்தல், புகழ்தல் , பரவுதலும் இப்பொருளில் வரும். “ அயோத்தியர் கோமானைப் பாடிப்பர" என்று வாக்கியத்தில் வருதல் காண்க.
அபிப்பிராயம் என்பது ஒன்றைக் கண்டபின் அல்லது நிகழ்த்தியபின் வரும் கருத்து. சுருக்கமாகப் "பின்னுரை" என்னலாம் எனினும் பின்னுரைகள் கருத்துமட்டுமேயன்றிப் பிற உள்ளுறைவுகளையும் 'உள்ளடக்கும்'.

பிராயம் என்பது வேறு. அது பிற ஆயம் என்பது ஆகும். ஆய்+அம் = ஆயம். ( ஆனது, ஆவது முதலியவை. )  பிறந்தபின்னரே வயது ஓடத்தொடங்கும். பிறந்தபின் ஆவதுதான் வயது/ அகவை. பிற ஆய அம் > பிராயம். றகரத்துக்கு ரகரம் மாற்றீடு. ௳. ரகர றகர வேறுபாடின்றி இயலும் சொற்கள் பல உள. எழுத்தியலில் றகரம் என்பது இரு ரகரங்களின் இணைப்பு.  ரர>ற.  மலையாளமொழியில் இவற்றின் எழுத்தமைப்புகளைக் கருத்தில் கொள்க. புரிந்துகொள்ளலாம்.
.

இவ்வாறு அறிந்து மகிழ்க.

மெய்ப்பு - பின்பு.

சனி, 4 ஜூலை, 2020

சமீபமும் ஈதலும்

ஈதல், தருதல், கொடுத்தல் என்பவற்றின் பருப்பொருள் 
ஒன்றே ஆயினும் அவை நுண்பொருள் வேறுபாடுடையவை.
தன்னினும் குறைவான தகுதி உடையா னொருவனிடத்து
ஒரு பொருளைச் சேர்ப்பிப்பது ஈதலாம். இவ்வாறு தகுதி 
குறைந்தோனுக்குப் பொருளைத் தருவதனால் ஏற்படும் 
புகழை " இசை" என்று சொல்கின்றன தமிழ் நூல்கள். 
இதனை ஈதலற மென்றும் ஈத லிசைபட வாழ்தல் என்றும்
தமிழனின் பண்பாடு கோடிட்டுக் காட்டுகின்றது. \
(மற்ற சொற்களை ஈண்டு விளக்கவில்லை.)


இன்று நாம் சமீபம் என்ற சொல்லை அணுகி ஆய்வோம்.


சமீபம் என்பது அயற்சொல் என்று முன்னர் கூறப்பட்ட
தெனினும் அது தமிழில் வழங்குவதாகும். அஃது எத்திறத்த
தாயினும் ஆய்வதே இவண் நோக்கமாகும்.


தாம் எங்கு இருக்கின்றோமோ, அங்கு தமக்கு ஒன்று 
கைக்கு எட்டும் தொலைவிலோ அல்லது வந்து சேரும் 
தொலைவிலோ இருந்தால் அதுவே சமீபம் ஆகும். நெடுந் 
தொலைவில் இருந்து தம்மை வந்து சேர்வதில் தடையோ 
தாமதமோ ஏற்படக்கூடுமாயின் அது சமீபத்தில் இருப்பதாக
யாரும் கூறார். ஒரு வாழைமரம் தமக்குப் பழந்தரும் 
படியாகப் பக்கமிருப்பதே சமீபத்திலிருக்கிறது என்று 
சொல்லற்குரியது ஆகும். இங்கு ஏன் சேர்தல், வருதல், 
தருதல் என்ற கருத்துகளையெல்லாம் புகுத்தி இந்த 
இயல்பான விடயங்களைச் சொல்கிறோமென்பது சிறிது
நேரத்திற் புரிந்துவிடும்.


சமீபம் என்பதில் சம், ஈ (ஈதல் ), பு (இடைநிலைவிகுதி).
அம் (இறுதிநிலை அல்லது விகுதி ) என்ற உள்ளுறுப்புகள்
உள்ளன.


சம் என்பது தம் என்பதிலிருந்து பிறந்த சொல். இரண்டு
 “தன்”கள் சேர்ந்தால் தம் ஆகிறது. ஆகவே சம் என்பது 
கூட்டு அல்லது சேர்க்கை.


தம் என்பதே சம் ஆனது. தகரத் தொடக்கம் சகரத் தொடக்க
மாகும். எடுத்துக்காட்டு இன்னொன்று: தனி > சனி. ( சில 
தனி இயல்புகள் உடைய ஒரு கோள். ) இது சொல்லிடையிலும் 
வருந்திரிபாம். எ-டு: அப்பன் <> அச்சன்> <அத்தன். 
இத்திரிபில் எது அடி, எது முடி என்று ஆயாமல், ஒன்று
 இன்னொன்றாய்த் திரியுமென்பதையே நோக்குக.


ஈதல் : ஈ என்பது சேர்ப்பிப்பது உணர்த்தும். வெகு
தொலைவில் ஒன்றிருப்பதும் சரிதான், அது இல்லாமல்
போவதும் சரிதான்.  அதன் பயன் நம்மை எட்டுவதில்லை.
ஆகவே பயன் கருதி வாழ் மனிதன் தொலைவு கருதியது -
எதுவும் கிட்டுமா இல்லையா என்பதை மனத்துக்கண்
கொண்டுதான் என்பதறிக. ஆகவே ஈதல் அல்லது ஈ 
என்ற சொல் இவண் பொருண்மை உடையதாகிறது.


தம் + ஈ + பு + அம் > சம் ஈ பு அம் > சமீபம் ஆகும்.


பு என்ற இடைநிலை மிக்க அருமை. புடை = பக்கம் இருப்பது. 
புடைசூழ என்ற தொடரின் பொருள் தெரியுமானால் இதை 
உணர்ந்து போற்றுதல் எளிதே. ஆகவே பொருத்தமாகப் 
புனைந்துள்ளனர் இச்சொல்லை. முதலெழுத்து மட்டும் 
இடைநிலையாய் நிற்கிறது.


இதை வாக்கியமாக்கிப் பார்க்கவேண்டுமானால் இப்படிக்
கருத்துகளை கோவை செய்யுங்கள்:


தமக்கு ஈயும் புடைமையில் இருப்பது. அதுவே சமீபம்.
 இப்போது வாழைப்பழம் பற்றி மேற்கூறியதையும்
மீண்டும் வாசிக்கவும்.

அறிக மகிழ்க.


குறிப்புகள்

சமீப்யம் - ஒரு குருவானவர் தமக்கு அருகிலே இருந்து வழிகாட்டுவது. இது ஒரு பேறு என்று இறைப்பற்று மார்க்கத்தில் சொல்லப்படுகிறது.



பருப்பொருள் -  பரும்பொருள் என்று மாறிக்கொள்கிறது.  இது திருத்தம் பெற்றுள்ளது. 5.05  05072020





மெய்ப்பு - பின்னர்.








திங்கள், 29 ஜூன், 2020

உள்ளங்கள் நடுங்கும் உலகப்போர் வருமோ?

மூளுமோ  மூன்றுறழ்  உலகக்  கொடும்போர்
 முனைகள்   பலவாக
ஆளுமோ  எந்தவல்  லரசும்      அதனில்             
பெருவெற்   றிகள்பெற்றே     
நீளுமோ  நுண்மியாம் முடிமுகி விளைத்த 
 இடர்கள்          துயர்யாவும்
நாளுமே  மக்களும் தெளிவில்  நிலையில்
 உளங்கள்  நடுக்குற்றவே..


மூன்றுறழ் - மூன்றாவது.
முடிமுகி = கொரனா
நுண்மி -  நோய்க்கிருமி
நடுக்குற்றவே -  நடுக்கம் உற்றனவே.