வெள்ளி, 21 ஜூன், 2019

மாது - தவறான சொல்!

மாது என்ற சொல் பேச்சு வழக்கில் அவ்வளவாக வருவதில்லை. அதற்குப் பதிலாகப் பெண்பிள்ளை என்ற சொல்லின் திரிந்த வடிவத்தையே கையாள்கின்றனர்.

பெண் என்ற சொல் பொம் என்று திரிவது வேடிக்கைதான்.   எகரத் தொடக்கம் ஒகரமாகவும் ணகர ஒற்று மகர ஒற்றாகவும் மாறிவிடும் நிலையில் திரிபுகளுக்குப் பெயர்போனவர்கள் தமிழ்ப்பேசுவோர் என்பது தெளிவாகவே தெரிகிறது.

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழர் தம் நெறியாம்.

இலக்கணப் படி அம்மாவை அவள் என்றுதான் குறிப்பிட வேண்டும்.   உயர்வுப் பன்மையில்  அவர் என்று  சொல்லலாம்.   ஆனால் பலர் அது என்றும் சொல்வதுண்டு.   அம்மா அஃறிணை ஆக்கப்பட்டாலும்,  அது என்பதன் உள்நோக்கம் பணிவு குறித்தலே ஆகும்.

அருகில் நிற்கும் அம்மாவைக் குறிக்க:

என் அம்மா அது.....

என்பதுமுண்டு.  நாளடைவில் அம்மா போலும் உயர்வுக்குரியவர்களையும் என் என்ற சொல்லைத் தவிர்த்து   "  அம்மா அது "   அல்லது  "  மா து " என்றனர்.

அம்மா என்ற விளி வடிவச் சொல்லின்  இறுதி:  மா.
அது என்பதன் இறுதி:   து.   து என்பதோ அஃறிணை விகுதி.

மா+ து  =   மாது;   பெண் என்ற பொதுப்பொருளில் இப்போது வழங்குகிறது.

மாது என்பதில் து என்பதாம்  அஃறிணை விகுதியை வைத்துக்கொண்டவாறே,   அர் விகுதிப் பன்மையும் பெற்று மாதர்  என்று ஆகிவிடுகிறது.

மாதர்தம்மை இழிவு செய்யும் என்ற வரி வரும் பாரதி பாடலில்  இஃது  உயர்வான பொருளுடன் மிளிர்கின்றது.

மாது என்பது ஒரு பகவொட்டுச் சொல்  அல்லது போர்மென்டோ ஆகும்.  இதன் ஆதிப் பொருள்  அது அம்மா என்ற பணிவான குறிப்பே.   உயர் வினால் அஃறிணை வடிவில் அமைந்துவிட்ட வழுவமைதிச் சொல் ஆகும்.

து விகுதி பெற்ற அஃறிணைச் சொற்கள் பல. இச்சொற்களில் திணை வலிமை பெறவில்லை.   கைது என்பது கையகப் படுதல் என்னும் தொழிலைக் குறித்து நிற்கின்றது.    விழுது என்பது சினைப் பெயர்.

பல சொற்களில் இது அது என்பன சொல்லாக்க இடைநிலையாக வரும்.  எடுத்துக்காட்டு:

பருவதம் :   பரு+  அது + அம் =  பருவதம் > பர்வதம்.   பருமை உடையதாகிய மலை.

இப்போது இன்னும் படைக்கப்படாத இரண்டு புதிய சொற்களை மேற்கண்ட பாணியிலே அமைத்துக் காண்போம்.

அம்மா அவள் >   மா + அள்=    மாவள்.
அப்பா அவன் >  பா + அன் =  பாவன்.

அப்பா அம்மா இவர்களை அவன் அவள் எனல் ஏற்றுக்கொள்ள இயலாதவை,
இற்றை நிலையில்.  இருப்பினும் அமைத்துப் பார்த்தோம்.


அறிந்து மகிழ்க.

திருத்தம் வேண்டின் பின்.

புதன், 19 ஜூன், 2019

மோடியை ஏசித் தோற்றவர்கள்.

எதிர்க்கட்சிகள் மடமை.

மோடியே மோடியென்று முக்காலும் ஏசினர்காண்
மோடியே வேண்டுமென்று நாடினரே-----நாடுடையோர்!
ஓரள வின்றியே ஊடுசென்றால் கேடுறுமே
நீரளவு நீந்துக கண்டு .

செவ்வாய், 18 ஜூன், 2019

பீரங்கி என்ற சொல்.

இன்று பீரங்கி என்ற வெடியெறி கருவியைக் குறிக்கும் சொல்லினை ஆய்ந்து இன்புறுவோம்.

பீச்சுதல் என்ற சொல் தமிழில் நன்`கு பயன்பாடு கண்ட ( அதாவது வழக்குப் பெற்ற )  சொல்லாகும்.  இது ஒரு கடைக்குறைச் சொல்.  இறுதி எழுத்து மறைந்த சொல்.  இது முன்வடிவில் பீர்ச்சுதல் என்று இருந்தது.  பீர்ச்சு என்ற வினையில் பீர் என்பதே மூலவினை.  இறுதி  ~சு என்ற ஒலியானது வினையாக்க விகுதி.   புட்டியைத் திறந்தவுடன் உள்ளிருந்த நீர் பீரென்ற அடித்துவிட்டதென்பதைக் கேட்டிருக்கலாம்.  பீர் என்னாமல் பிர்ர் என்று அதை ஒப்பொலி செய்வோரும்  உளர்.   அதுவே விரைவைக் குறிப்பதாயின் விர்ர்ர் என்று ஒப்பொலி செய்தலும் உண்டு. இதுபோன்ற உண்மை ஒப்பொலிகளும்  போலி ஒப்பொலிகளும் இல்லாமல் மொழி முழுமை பெறுவதும் சிறப்பதும் இல்லை.

விர் விர்ர்ர்ர்ர்  >    விர்+ ஐ =  விரை >  விரைதல்.
இந்த ஒலிக்குறிப்பிலிருந்து விரை என்ற வினைச்சொல் கிட்ட, அதனால் மகிழ்ந்தோம்.

இதுபோலவே

பிர்ர்ர் > பீர்ர்ர் > பீரிடுதல்;  பீர்தங்குதல் முதலிய சொற்கள் உருக்கொண்டிருத்தலும் அறிதலாகும்.

பீர்பீராய் வெளிவந்தது என்பதும் சொல்வதுண்டு.  ஒரே நீட்சியாய் வெளிப்படுதலின்றி   பல நீட்சிகளாய் வெளிவருதலையே பீர்பீராய் என்பர்.

தாய்ப்பால் பீரம் எனவும் படும்.  பீச்சிச்  சிறிது  நெட்டெறிதல் உண்டாவதால்  பீர் > பீரம்  என்ற சொல்லமைந்தது.

இவைகளை நல்லபடி உணரவேண்டும்.

பீர் >  பீர்ச்சு >  பீச்சு.

பீர் + அங்கு  + இ =  பீரங்கி:   பீச்சி  இங்கிருந்து அங்கு வீசும் கருவி  பீரங்கி ஆகிறது.

அங்கம் என்ற சொல்லும் இடைக்குறைச் சொல்லே.   ஏனை  உறுப்புகள் எல்லாம் அடங்கிய   அடக்க உருவே   அங்கம்.   அடங்கு >  அடங்கம் > அங்கம் என்று டகர வல்லெழுத்து வீழ்ந்து அங்கம் ஆயிற்று.  இவ்வாறு விளக்கி ஒரு படையணியில் அடங்கிய ஒரு குண்டெறி கருவி எனினும் ஏற்கத்தக்கதே ஆகும்.  ஆகவே இஃது இருபிறப்பிச் சொல்.

பீர்தங்கு என்ற வினைச்சொல் சீவக சிந்தாமணியிலும் வருகிறது,

பீர்தங்கிப் பொய்யா மலரிற் பிறிதாயினாளே  ( சீவகசிந். 1960 )

பீர் என்ற அடிச்சொல் பல நூல்களில் வந்துள்ள சொல்லே.

பீரிட்டது என்பதும் இயல்பு வழக்குச் சொல்லே  ஆகும்.

பீரிடும்படி ஆங்கு  வெடியை வீசும் சுடுதுளைவியே  பீரங்கி ஆகும்.