வெள்ளி, 10 மே, 2019

ஆனந்தம் மற்றொரு முடிபு

 
ஒரு பசு தமது ஆயின் அதுதான் ஆனந்தம். பழங்காலத் தமிழனின் தேவை, தலைக்கு மேல் ஒரு கூரை; வீட்டினருகில் காலையில் குடிப்பதற்குப் பால்தரும் ஒரு "பாலம்மை" --- சிவபெருமான் கிருபை வேண்டும்; மற்றென்ன வேண்டும்? அருந்தத் தருமொரு பாலம்மை வேண்டும்.

தமிழறிவாளர் வேலூர் க.. மகிழ்நன் ( 1935 வாக்கில் ) , பசுவைப் பாலம்மை என்றே பெயரிட்டு வழங்கினார். அவரே சங்க இலக்கியம் என்று திரு வி.க அவர்களால் புகழப்பட்டவர் அவர். சுண்டி இழுக்கும் தமிழ் நடை அவரது என்பதை அறிந்தோர் அறிவார்.

பாலம்மை ஒன்றிருந்தால் ----- இந்தப்
பாரினில் ஆமோர் ஆனந்தமே

என்று சிந்துபாடத் தோன்றுகிறது எமக்கு.

சொல்லாய்விலோ மொழி ஆய்விலோ ஈடுபடுவோன் உணர்ச்சி வயப்படுதல் ஏற்கத் தக்கதன்று என்பர் ஆய்வுகட்கு இலக்கணம் வகுத்தோர். உண்மைதான். ஆய்வு என்று வந்துவிட்டால் யாதொரு பாலும் கோடாமையும் நடுநிற்றலுமே ஆய்நெறி ஆமென்பதே பேருண்மை ஆம்.

இதனைக் கருத்தில் இருத்தியபடி ஆனந்தம் என்ற சொல்லின்பால் ஒரு மறுபார்வையைச் செலுத்துவோம்.

முன் வரைந்த இடுகையில் ஆனந்தம்:

ஆன் + அம் + தம்.

ஆன் = பசு. அம் = அழகே ஆகும்; தம் = தமதானால்.

தம் : து அம் விகுதிகள் எனினுமாம்.

ஆனென்பது அடுத்தவீட்டிலிருந்தால் கேட்டு வாங்கிப் பால் குடிப்பது அவ்வளவு பெருமைக் குரியதாகாது. தமக்கென்று ஆனொன்று இருப்பதே ஆனந்தம்.

இறையுணர்வினால் தோன்றும் உள்ளானந்தம் என்பது பிற்கால வளர்நிலை ஆகும்.


இனி ஆனந்தம் என்பது வேரொரு வழியிலும் அறிதற்குரித்தாகிறது:

+ நன்று + அம் > + நந்து + அம் = ஆனந்தம்.

ஆக நன்றான நிலைமை ஆனந்தம்.

இதில் வரும் ஆ என்ற முன்னொட்டு ஆகாயம் என்பதில் போல வந்தது.

காயம் என்பது பழைய தமிழ்ச் சொல். நிலா சூரியன் முதலிய காய்கின்ற வான்வெளி என்பது பொருள். காய் > காயம். இது காசமென்றும் திரிவது.

இது ஆக்கம் குறிக்கும் ஆ என்ற முன்னொட்டுப் பெற்றது. ஆகாயம் ஆனது போல் இங்கும் ஆனந்தம் வந்தது.

இனி :

நன்று என்பது நந்து ஆனது எப்படி? 0ன் து > ந்து.

பின் + து = பிந்து; பிந்துதல்.
முன் + து = முந்து; முந்துதல்.

மன் + திறம் = மன் + திரம் = மந்திரம் ( மன்னுதல் = நிலைபெறுதல் ). நன்மையை நிலைபெறச் செய்தல் மந்திரத்தில் நோக்கம்).

இயல் + திறம் > இயன் திரம் > இயந்திரம். { 0ன் + தி = ந்தி }

இம்முறை பின்பற்றி :

நன்று > நன் + து > நந்து.

நன்று என்பது உண்மையில் நல் து என்பதுதான் எனினும் இங்கு நல் என்ற அடியை எடுத்துக்கொள்ளாமல் நன் என்ற புணர்வடிவையே மேற்கொண்டனர் என்று அறிக.

நல் > நன் என்பது திரிபிலும் வரும் : எடுத்துக்காட்டு: திறல் > திறன்.

நன் என்பது திரிபு வடிவமும் ஆகும்.


இயல் திறன் என்பதை இயற்றிரம் என்று வல்லெழுத்துப் புணர்த்துக் சொல்லமைத்தல் கைவிடப்பட்ட உத்தி. அது எப்படியும் பேச்சு வழக்கில் இயத்திரம் என்றே வரும். அதை மெலிக்கும் வழி மெலித்து இயந்திரம் என்றதே மொழியில் ஆற்றொழுக்கு மென்னடைக்கு ஏற்றதென்பதை இப்புலவர்கள் அறிந்திருந்தனர். இலக்கணம் செவியினிமைக்கு வழிவிடுதல் இன்றியமையாதது காண்க.

முன் எழுதிய இடுகை காண்க.

https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_16.html







வியாழன், 9 மே, 2019

அயற்சொற்களும் அகச் சொற்களும்.

காம்,  ஏம், தீம், வேம் என்ற வடிவங்களில்  தமிழ்ச் சொற்கள் உள்ளன.   ஆய், மாய், காய் என்று யகர ஒற்று வந்து முடிந்த சொற்கள் இன்னும் வழக்கில் உள்ளன.  நாய் என்பதை மறத்தல் கூடுமோ?

நாய் என்பதற்கு எதுகையாய் வரும் கூய்   ஆய் என்பன  பெயர்ச் சொற்களாய் இல்லாமல் எச்ச வினைகளாய் உள்ளன.  எனினும் கவி எழுதுங்கால் கருத்தோட்டத்தினாலும் பொருட்புனைவினாலும் இவற்றை எதுகையாம் படி அமைத்துக்கொள்வதில் மெத்தக் கடினமொன்றும் தென்படுவதில்லை. ஆய் என்ற வள்ளலின் பெயர் பெயர்ச்சொல் என்றாலும் இச்சொல்லை அவ்வாறு பெயர்ச்சொல்லாகக் கவியினுள் பதிய ஆய் ஆண்டிரனையும்  இழுத்துப் போடவேண்டும். இப்படித் திறமையாகச் செய்யப்பட்ட கவிதை அல்லது பாடலே:   " கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை" என்ற பாடலாகும்  ." கண்களுக்குள் என் கண்ணனைக் கட்டிவைத்தேன் " என்ற அடுத்த அடியோ ஒப்பீட்டு முறையில் இணைக்கப்பட்டதாகும்.  இன்றேல் கரிகால் மன்னற்கும் காதலிக்கும் உள்ள தொடர்பு,  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பைப் போன்றதே. செயலுவமையால் பொருள் ஒன்றின.

சொல்லாய்வில் றகர ரகர வேறுபாட்டினைக் கருத்தில் வைத்து அதற்குத் தேவைக்கு மேம்பட்ட முன்மை வழங்கி  உண்மை உணராது  இழிதல் காத்துக்கொள்ளுதல் வேண்டும்.  மொழியில் சொற்கள் பல்கிப் பெருகிய ஞான்று பொருட் குழப்பம் தவிர்க்க இவ்  வேறுபாடுகளின் தேவை மிகுந்தன. எனினும் உண்மை காண்டற்கு இவ்வேறு பாட்டினைக் களைந்துவிட்டு உற்றுணர்தல் என்பதே அறிவுடன் கூடிய உத்தி ஆகுமென்பதைப் புரிந்துகொளல் இன்றியமையாமை நோக்குக.

பிரச்சினை,  பிரேமை முதலிய சொற்களை ஆய்கையில் இத்தகு உத்தியே கைக்கொள்ளப் பட்டது. பிரச்சினை என்பதன் பொருண்மையில் " பிற சினை" உட்புகுந்து கலாம் விளைத்தலே கருத்தாகும். சினை என்றால் உறுப்பு,  அல்லது ஒரு பொருளமைப்பின் இயல்பான பகுதி.  இயல்பினது பொருத்தாமல் முரண்பட்டதொன்றைப் பொருத்தினால் அது பிற சினை பொருத்துதலாம். பிற சினை உட்புகவில் ஏற்படும் குழப்பமே  பிறச்சினை >  பிரச்சினை ஆனது.

மகிழுந்து ஒன்றில் பேருந்தின் உருளையைப் பொருத்திடில்  பிற சினையால் (பாகமல்லாதது  பாகமானதால் )  பிரச்சினையே. பிரச்சினை என்பதை பிரச்னை, பிரச்சனை, பிரச்சினை, பெறச்சென,  பிரஸ்னம் என்று எப்படி முகத்திரை இட்டு எழுதி மயக்கினாலும் சொல்லின் பிறப்பினில் மறப்பினையும் மறைப்பினையும் உள்ளுறுத்தல் இயல்வதில்லை. சீனியை ஜீனி எனினும் அதன் சீனத்தொடர்பினை அறுத்தல் கூடாமை போலுமே இஃதாம். சில்> சின்> சீனி என்று மாற்றுரையும் மாற்றுடையும் வழங்கி மயக்கின் அது ஓர் இருபிறப்பிச் சொல்லென அமைதி கண்டு ஒதுக்கிக்கொள்ளலாம்.  இத்தகு மாற்றுரைகளில் வரும் விளக்கவிரி ஒரு கருத்துக்குவை உருவாக்குதற்கும் நலமே செய்யும்.

ஏம் என்பது காத்தல் அல்லது காவலாய் இருத்தல் என்பதைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச்சொல்.  இன்னொரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணினை விரும்பி அவளைத் தனக்கெனக் காத்து ஒதுக்கம் செய்ய முற்படுதலே பிற ஏமை ஆகும்.  இதுவே பின் பிரேமை ஆயிற்று.  ஒரு சொல் இயல்பில் திரிபு கொள்ளாமல் ஆவியழுத்தப் பானையில் இட்டுச் சமைத்ததுபோலச் செயற்கையில் திரிபுறுத்தப்படுதலைச் செந்தமிழ் நூலோர்  பெரிதும் விரும்பவில்லை போலும்.  மேலும் அச்சொல் முன்னரே உள்ள ஒரு பொருட்கு அல்லது கருத்துக்கு இடப்பட்ட கூடுதல் பெயரே ஆனது. காதல் காமம் போலும் சொற்கள் இருக்கையில் பிற ஏமை என்பதால் விளந்ததொரு புதுமை இலதென்று கருதினர் எனலாம். இவற்றைப் புறத்தினில் இட்டுச் செந்தமிழ் நலம் காத்தல் மேற்கொண்டோராயத் தம்மைப் பாராட்டிக் கொண்டனர் தமிழ்ப் புலவோர். பிரஞ்சு அறிஞர்  இலகோவரி ஆய்வில் இத்தகு சொற்களில் அயன்மொழியில் காணப்படும் சொற்றொகை மூன்றிலொன்றாம்.

உலகில் தமிழ்ச் சொற்கள் யாண்டும் காணக்கிடக்கின்றன.  சங்க நூல்கள் என்று நம்மிடை நிலவுவன சிலவே.  ஒரு மொழியில் எல்லாச் சொற்களையும் இவை உட்பொதிந்து இலங்குவன என்று எண்ணுதல் பேதைமையே. விடுபாட்டாலும் பிற்புனைவாலும் அவற்றுள் இலாதன மிகப்பல. ஒரு சொல் அதன் சொற்பிறப்பினால்  அல்லது சொல்வழக்கினால் தமிழென்று கண்டுகொள்ளப் படலாம்.  இத்தகு சொல்லைப் பயன்படுத்துதலும் படுத்தாமையும் புழங்குவோனின் விருப்பும் உரிமையும் ஆகும்.






செவ்வாய், 7 மே, 2019

சொல்லிக் கட்டுவது சொக்கட்டான்


இன்று சொக்கட்டான் என்ற சொல்லின் அமைப்பினை அறிந்துகொள்வோம்.

இதைச் சுருக்கமாகவே சொல்லிவிடலாம்.

இந்த ஆட்டத்தில் ஒரு தொகையையோ பொருளையோ சொல்லி முன்வைத்து பகடைகளை உருட்டத் தொடங்குவர்.

ஆகவே சொல்லிப் பணம் கட்டுவது அல்லது பொருளைக் கட்டுவது தான் சொல்+ கட்டான் = சொற்கட்டான் ஆனது.

நாளடைவில் இது திரிந்து சொக்கட்டான் ஆயிற்று. ஆகவே தொல்காப்பியரின் சொல்லியலின்படி இது ஒரு திரிசொல் ஆகும்.

சொற்கட்டான் > சொக்கட்டான்.

இதுபோன்று அமைந்த இன்னொரு சொல்: சிக்கட்டான் என்பது ஆகும். சிக்கட்டான் என்பது ஒரு பேச்சுமொழிச் சொல். எழுத்துத் தமிழில் இது காணக் கிட்டிற்றிலது.

சில் + கட்டான் = சிற்கட்டான் > சிக்கட்டான்.

இச்சொல்லும் ஒரு முன் இடுகையில் விளக்கப்பட்டுள்ளது.

சிறு + கட்டு + ஆன் = சிக்கட்டான் எனினும் அது. இதில் றுகரம் வீழ்ந்தது.

காரணம்: சில் = சிறு. எண்ணிக்கைச் சிறுமையும் உருவச் சிறுமையும் எனச் சிறுமை இருவகை.

உருட்டும் பகடையைச் சொக்கட்டான் எனின் அது ஆகுபெயர்.

எனவே சொக்கட்டான் என்பதை அறிந்து மகிழ்க.

மீள்பார்வை பின் நிகழும்.