சனி, 12 ஜனவரி, 2019

உத்தரவும் உதையமும்.

உதயம் என்ற சொல் தமிழ் மூலமுடைத்து. எங்ஙனம் என்பது காண்குவம்.

உ  -  முன்பக்கத்தில் எழுதல்.  மேலெழுகை. இன்னும்   இதற்குப் பல பொருள்கள் உள என்பதை மறத்தலாகாது.

து  .  உடைமைப் பொருள் அல்லது உடையது என்று பொருள்படும் விகுதி.

தமிழ் இதனை உலகினுக்கே தந்துள்ளது. தமிழ் முன் தோன்றிய மூத்த குடியினர் மொழி.  அதனால்தான் உலகிற்கு அளிக்க முடிந்தது.  இது நம் பெருமைக்குரியது ஆகும்.

" இட் "  என்ற ஆங்கிலச்சொல்.  இட் என்ற இலத்தீன்,

It is    என்பது      id est   என்று இலத்தீனில் வரும்.  இதுதான் சுருங்கி  i.e.,  அதாவது என்பதற்கு ஈடாகப் பயன்பாடு காண்கிறது.

து >< த்.    து என்பதில் உகரம் சாரியை.  உண்மையில் சாரியை விலக்கி நோக்குவோமாயின் இது என்பது இத் என்பதே.    ஒரு சொல்லினைச் சார்ந்து இயைந்து வருமொலியே சாரியை.

இப்போது து என்னாமல் த் இட்டுக்கொள்வோம்.

உ + த் + அ +  அம். இதன் விளக்கம்:     முன்னிலையில் ( உ)    ;  த்   =  அது;     அ =  அங்கே;   அம் ( எழுகிறது )   என்று வாக்கியமாக்கி இன்புறுக.  அதுவே உதயம்.

பெரும்பாலும் ஒன்றை உதைக்கும் போது கால் முன் சென்று தொடும்.
உது > உதை:  தெரிகிறதன்றோ.    உ + த் + ஐ  என்றும் விளக்கலாம். ஐ:  கீழே காண்க.

ஊருதல் என்பதும் நகர்தலும் ஏறுதலும் குறிக்கும்.   ஊ என்பதும் அதன் குறுக்கமான முன்னிலைச் சுட்டு உ என்பதும்  முன் பக்கல் எனற்பொருட்டு.
பக்கல் = பக்கம்.   ஊ உறுதல்: ( இக்கால வழக்கில் சொல்கிறோம் ).   ஊ உறு > ஊரு(தல்).

சுட்டுக் கருத்துகளைக் குறித்துக்கொள்ளுங்கள்.

உதையம் என்பது சுருங்க,   உது + ஐ + அம் என்றும் விளக்கலாம்.  ஐ என்பது மேல் .  இது குறுகும் என்று தொல்காப்பியம்  உரைக்கிறது.  ஆகவே  ஐ > அ.
ஆகவே உதையம் உதயம் ஆகிறது.

இதில் ஐயமொன்றும் காணேன் ஐயனே.

இந்திய மொழியாகிய சங்கதத்தை இந்தோ ஐரோப்பியம் என்று கூறும் ஐரோப்பிய  ஆய்வாளர்கள் ஒருபுறம் நிற்க.   அதன் பல சொற்கள் ஐரோப்பியத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டன.  கடன் ஒன்றுமில்லை. திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்.

உ என்பது பலமுறை விளக்கப்பட்டுள்ளது.  உ = முன் (உள்ளவர்).  தரவு > தருவது.  படை நடத்துபவர் பெரும்பாலும் முன் செல்வர்.  அவர்கள் தருவது உத்தரவு.   சில வேளைகளில் பின்னிருந்து ஆணைகளைப் பிறப்பிக்கலாம் எனினும் முன்னின்று கட்டளை வழங்குவதே பெரும்பான்மை.  இந்தப் படைச் சொல் பின் பொதுவழக்கில் வந்துவிட்டது. என்றாலும் அதிகாரத் தரவையே குறிக்கிறது.

மேலிருப்பதற்குத் தாங்குதல் தருவது உத்தரம்.   தரு > தரம்.  உ என்பது மேல் என்றும் பொருள்படும்.

நீ  உன் என்பவற்றில் உ என்பதிலிருந்தே உன் வருகிறது.   இப்போது இது
தெளிவுபட்டிருக்கும்.

திருத்தம் பின். தட்டச்சுப் பிழைகள்:  தன் திருத்தப் பிழைகள்.
திருத்தம் செய்யும்வரை திருத்திக்கொண்டு வாசித்தல் -  நன்றி.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

இராவுத்தர் பட்டப்பெயர்.

தமிழகத்தில் பல  சமயத்தினரும் வாழ்கின்றனர்.  இவர்களிலும் முஸ்லீம்களும் உளரென்பதும் அவர்களில் பலருக்கும்  பட்டப்பெயர்கள் உள்ளன வென்பதும் நீங்கள் அறிந்ததனவே  ஆகும்.  இப்பெயர்களில் இராவுத்தர் என்பதுமொன்று.

இவர்கள் தமிழகத்துட் புகுங்காலை குதிரைகளில் வந்தனரென்று இவர்களில் பலரும் கூறியபடியால் இராவுத்தர் என்ற சொல்லுக்குக் குதிரைவீரன் என்ற பொருளை அகரவரிசை அறிஞர்கள் தரலாயினர்.

ஆனால் இச்சொல்லை ஆய்ந்த வேறு சில அறிஞர்கள் இராவில் வந்து யுத்தம் செய்தபடியினால் இவர்கள் இராயுத்தர் என்று குறிக்கப்பெற்றனர் என்று கூறினர்.  பகலிலும் போரிட்டிருக்கலாம் எனினும் இரவு வேளையில் வந்து போரிடுவதை ஓர் உத்தியாகக் கொண்டிருந்தனர் என்று இவர்கள் கருதினர்; பெரும்பான்மை கருதிய வழக்காகவும்  இது இருக்கலாம்.

இவற்றுள் எது உண்மை ஆயினும்,  நாம் இங்குக் கருதியது  யாதெனின் முருகப் பெருமான்மேல் திருப்புகழ் பாடிய நம் அருணகிரிநாதர் முருகனையே இராவுத்தர் என்றொரு பாட்டினில் வைத்துப் பாடுகிறார்  என்பதுதான்.  இதை யாம் முன் எழுதியதுண்டு:  அந்த இடுகை இங்கு கிட்டவில்லை.

இனி இராவுத்தர் என்ற சொல்லை ஒரு முருகப்பெருமானின் பெயராய்க் கொண்டு இங்கு அதனை நுணுகி ஆராய்வோம்.

இரா  =  இல்லாத.   முருகன்போலும் இறைவன் கண்முன் நிற்பதில்லை.  ஆகவே அவர் கண்முன் இராத ( இல்லாத) வர்.

உது > உத்து:    இல்லாவிடினும் அவர் பற்றனின் முன்னிலையை உடையவர்:  அதாவது முன்னிருப்பவர்.

து என்பது உடைமைப் பொருளில் வருவதை:

விழுப்பத்து :   விழுப்பத்தை உடையது.
அறத்து  :    அறத்தினுடைய
புறத்து :   வெளியிடத்தினது.

என்பவற்றுள் காண்க.

எனவே துவ்விகுதியின் பொருளை இவற்றிலிருந்து கண்டுகொள்ளலாம்.

உ என்பது முன் என்று பொருள் தருவதனால் உத்து என்பது  முன்னது என்று பொருள் படும்.

அர் என்பது பலர்பால் விகுதி.  இங்கு பற்றும் பணிவும் கொண்டு வரும் விகுதி.

இல்லாமலே முன்னிருப்பவர் முருகன் (அல்லது கடவுள்.)  முன் இல்லை என்றால் இல்லை என்று பொருள்படாது.  அவர் இல்லாமலே (கண்ணுக்குப்  புலப்படாமலே)  இருக்கின்றார்.

படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல்,  அருளல் என்பன அவர்தம் பண்புகளாகக் கூறப்படும்.

இவற்றுள் மறைத்தல் என்பது இங்கு முன்மொழிவு   ( பிரஸ்தாபம் ) பெறுகிறது.

எனவே அருணகிரியாரின் பாடலில் இப்பண்புகளில் ஒன்றைச் சுட்டுகிறது இப்பெயர் என்று அறிக.  இது நம் முஸ்லீம் நண்பர்களைக் குறிக்கவில்லை.

இராவுத்தர் என்ற இச்சொல் வகர உடம்படுமெய் பெற்றது.


வியாழன், 10 ஜனவரி, 2019

சிங்காரமும் சிருங்காரமும்.

சிருங்காரம் என்ற சொல்லை யாம் முன் விளக்கியிருந்தோம்.

சிருங்காரம் என்ற சொல்லும் இடைக்குறைந்து  "சிங்காரம்"  என்று வரும்.  தொடர்களில் இது:   " சிங்காரச் சென்னை"  " சிங்காரப் புன்னகை"  என வரும்.  சிங்காரம் என்பதும் ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பண்டை மக்கள் எண்ணினர்.   "சிங்கார லகரி " என்ற தொடர் காண்க.   லகரி என்பது முன்னர் விளக்கப்பட்ட சொல்லே:

https://sivamaalaa.blogspot.com/2019/01/blog-post_8.html


ஒரு பொருள் பேரளவில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து நோக்கினாலே அது முழுமையும் பார்வைக்குள் அடங்கும்.  அடங்கிய ஞான்று அதன் முழு அழகும் வெளிப்பட்டு மகிழ்வுறுத்தும். அதாவது எக்காட்சியும் ஒரு திரையடக்கத் தன்மை உடைத்தாய் இருத்தல் வேண்டும்.

ஒரு சாமிசிலை மிகப்பெரிதாய்  வடிக்கப்படலாம். கண்ணுக்குத் திரையடக்கமான மாதிரியானால் அழகு வெளிப்பட்டு சிங்காரமாகிவிடும். இதுவே இதன் சொல்லமைப்புப் பொருள் என்றாலும் பிற்காலத்தில் இது தன் சிறப்புப்பொருளை இழந்து  பொதுப்பொருள் எய்தி  " அழகு"  என்ற  பொருள்தெரிவிக்கும் சொல்லாகிவிட்டது என்பதுணர்க.

சிறுகுதல் :   குறைதல். சுருங்குதல்.

சிறுகிவிட்ட பொருள் பெரிய பொருளின் மாதிரியே.   மா = அளவு.  திரி : திரிக்கப்பட்டது, செய்யப்பட்டது.  திரியென்பது முதனிலைத் தொழிற்பெயர்.

மா என்பது பல பொருளுடைய சொல்.  அது மாவு என்றும் பொருள்படும்.

சிறுகு + ஆர் + அம் >  சிறுங்காரம்

இதுபோல் அமையும் சொற்களில் ஒரு ஙகர ஒற்றுத் தோன்றும்.  எடுத்துக்காட்டுகள்:

வில >  விலகு > விலக்கு > விலங்கு.  (வில + கு )

மனிதரிலிருந்து விலக்கிய அல்லது வேறான உயிர்வகை.  பிற அணி : பிற வகை:  பிற அணி > பிறாணி > பிராணி என்பதும்  அதுவாகும்.

பிறாணியின் உள்ளிருப்பது பிராணன்.  அது தம்மிலும் உள்ள துணர்ந்தக்கால் பொதுப்பொருளில் விரிந்தது.

அன்றிப் பிறந்தன அனைத்தும் உடையது பிற > பிராணன் எனினும்  அஃதே. இவை விளக்கவேற்றுமைகள் அன்றி அடிப்படை வேற்றுமை அல்ல.

பிற (பிறத்தல் ) > பிற + அணன் =  பிறாணன் > பிராணன்

அணவுதல் :  அணம்  -  அணன்

பிறத்தலை அணவி நிற்பதாகிய உயிர் என்று விரிக்க.

பிற என்பதனுடன் ஆகாரத் தொழிற்பெயர் விகுதி சேர்ந்தால் பிறா என்று வந்து பின் அணன் என்பதனுடன் இணையப் பிறாணன் ஆகி, பின்னர் றகரம் ரகரமாகிப் பிராணன் என்றாகும்.

ஆகார விகுதி பல சொற்களில் வரும்.

நில் > நிலா
பல > பலா  பல சுளைகளை உடைய பழம்.
விழை > விழா

அழ =  அல.
அழ > அல  > அலங்கு + ஆர் + அம் = அலங்காரம்.

பழ என்பது பல என்றும் வரும்.  அதுபோலவே அழ என்பது அல ஆனது,

அலங்காரம் என்பது போலவே சிறுங்காரம் என்பதிலும் ஙகர ஒற்று தோன்றியது.

இ+ கு : இங்கு;   அ+ கு = அங்கு;  எ+ கு =  எங்கு.      -க்கு என்று வலிக்காமல்   - ங்கு என்று மெலித்தனவால் உணர்க.

சிறுங்காரம் :  இதுபின் சிருங்காரம் என்று மாற்றப்பட்டது.   று > ரு.

மொழிவரலாற்றில்  ரகரம் முந்தியது.   றகரம் பிற்பட்டதாகும்.  றகரம் என்பது இரு ரகரங்கள் கொண்ட ஓர் எழுத்து.. நம் முன்னோர் ரகரத்தையும் றகரத்தையும் ஒலிப்பதில் வேறுபாடு தெரிவிக்கும் திறமுடையவர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. இன்று இது எழுத்தளவிலான வேறுபாடே ஆகும். ஒலிப்பதில் யாரும் வேறுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. திரம் என்று எழுதினாலும் திறம் என்று எழுதினாலும் வாசிப்போர் 1 ஒரே மாதிரியாகவே ஒலிக்கின்றனர்.  அறம் என்பதை ஓரிருவர் அழுத்தி ஒலித்து  அது வல்லின றகரம் என்று தெரிவிக்க முயன்றதுண்டு.  தமிழைப் படிப்பதே ஒரு சுமையாகி, அது வீட்டுமொழியாக  ஆகிவிட்ட இக்காலத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.  ரகர றகர வேறுபாடின்றி வழங்கும் பல தமிழ்ச்சொற்கள் பல உள்ளன.  ஒருகாலத்தில் இவை ஒருதன்மையவாய் இருந்தமையையே இது நமக்குத் தெரிவிக்கின்றது.  இரு ரகரங்களை இணைத்து எழுத்தமைத்து  வேறுபடுத்தற்குக் கீழே ஒரு கோடிழுத்துள்ளனர் (ற)  என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

புணர்ச்சி என்பது சிற்றின்பம் எனவும் குறிக்கப்படுவதால்  சிறு என்பதிலிருந்து அமைந்த சிருங்காரமென்பதும் புணர்ச்சி குறிக்கும்.  அல்லால் இன்பச்சுவை, அழகு  அன்பு , சிறிதாகிய பொட்டு எனவும் பொருள்தரும்.

சிராய் என்பது சிறு விறகுத் துண்டு.   இதுவும்  சிறு என்பதனடிப் பிறந்ததே எனினும் றகரம் ரகரமாய் மாறியிருத்தல் காண்க.  சிறு >  சிராந்தி  (  இளைத்தல் )  சிறிதாதல்:   சிறுமைக் கருத்தே  உணர்க. சிராய்தல் :  சிறுகாயம் உண்டாகுதல்.

சிறு என்பதன் முன் அடிச்சொல் சில் என்பதே.  சில் >  சிறு.  எனவே இதைச் சிறு என்பதிலிருந்து காட்டாமல் சில் > சிலுங்காரம் > சிருங்காரம் என்று காட்டின் லகர ரகரத் திரிபாக இதனை உணர்விக்குமாறு காண்க.  அதுவுமிதே.  கல்லினின்று  பெயர்ந்த அல்லது தெரித்த சிறு துண்டும் சில்லு எனப்படும்.

ஓர் இலை மரத்திலிருந்து விழுந்தது எனினும் கொம்பிலிருந்து விழுந்தது எனினும் கிளையிலிருந்து விழுந்தது எனினும்  காம்பிலிருந்து விழுந்தது எனினும் இணுக்கினின்று விழுந்தது எனினும் அதே.

அறிதலே மகிழ்தல். 



அடிக்குறிப்புகள்:

வாய் > வாயித்தல் (  வாய்கொண்டு  ஒலியினால் வெளிக்கொணர்தல் ).  யகர சகரம் போலியால்  வாசித்தல் ஆயிற்று.  இப்படி இன்னொரு சொல்:  நேயம் . > நேசம்.   பாய்> பாயம் > பாசம்.  உணர்வு ஒருவர்பாலிருந்து இன்னொருவர்பால் பாய்வது.  பாயம் வழக்கிறந்தது.  பாய்ச்சல் ( எழுச்சி என்றுமாம்).  உணர்வெழுகை. பசு(மை)+ அம் = பாசம், முதனிலை நீட்சி  எனினுமாம். இருபிறப்பி.  பாய  = பரவ.  ஆதலின் உணர்வின் பரவுதல் எனினுமாம்.  பாய்> பாய்ம்பு > பாம்பு:  இதில் யகர ஒற்று களைவுண்டது.  பாய்தல் நகர்தலாம் அன்றித் தாவுதலெனினும் ஒப்பதே. இவை வெவ்வேறு மாதிரி அசைவுகள்.



இளமை  சிறுமை  அழகு என்பதை வலியுறுத்தும் ஒரு பாட்டு.  எழுதிய கவி யாரென்று தெரியவில்லை: இளமையில்  உருவிற் சிறிதாய் இருப்பதும் ஒரு காரணமாகும்.பொருள்களும் சிறுமையில் அழகு தருபவை.

குட்டியாய் இருக்கையிலே --- கழுதை
குதிரையைக் காட்டிலும் எட்டுமடங்கு' --- ஏழு
எட்டுமாதம் ஆனபின்னே ---  முழங்கால்
முட்டுவிழுந்து மோசமாக விளங்கும்.

பாட்டில் பொருள் தொடர்பு அற்ற வரிகள் விடப்பட்டன ,


திருத்தம் பின்.