வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

றம்பம் < அறம்பம் ( ரம்பம் )


ஆரம்பம் அம்பு முதலிய சொற்களை ஓர் இடுகையின் மூலம் விளக்கினேம். 1 அம்பு என்ற ஏவப்படும் குத்துகோலுக்கு எப்படிப் பெயர் அமைந்தது என்று சொன்னோம். இச்சொல்லில் அமைந்துள்ள சுட்டடிச் சொல் வளர்ச்சியை அவ்விடுகையிற் புலப்படுத்தியிருந்தேம்.
அதை இங்குக் காணலாம்:

இவை முன்பும் எம்மால் வெளியிடப்பட்டவைதாம்.

இன்று ரம்பம் என்ற சொல்லை அறிந்தின்புறுவோம்.ஒரு புறத்தோ  இருபுறத்துமோ அறுபல் உள்ள நெட்டிரும்புத் தகடு ஒரு கைப்பிடிக்குள் மாட்டப்பட்டு மரத்தை அறுக்க வழிசெய்யும் ஓர் கருவியே ரம்பம் என்று சொல்லப்படுகிறது. இது உங்களுக்குத் தெரிந்ததே.  ஒரு வரையறவு தரவேண்டுமெனற் பொருட்டு இதைச் சொன்னோம்.

ரம்பத்தின் வேலை அறுப்பதுதான்.  ஆனால் இந்தச் சொல்லை உற்று நோக்கின் இது தெரியவில்லை.

வேற்றுமொழிச் சொல்போல் தெரிகிறது. ஒன்றும் ஆய்வு செய்யாமலும் சிந்திக்காமலும் இது தமிழன்று, காரணம் ரகரத்தில் சொல் தொடங்காது  என்று சொல்லிக்கொண்டிருக்கலாம்.  இப்படிச் சொல்பவன் மூளையைச் சற்றும் பயன்படுத்தாத முட்டாளே ஆவான்.
ரம்பம் என்பதை இரம்பம் என்று எழுதி, ரகரத்தில் சொல் தொடங்காது, ஆகவே அது உருது என்று எண்ணி, சரிப்படுத்தச் சிலர் நல்லோர் முயன்றுள்ளனர்.  அவர்களுடைய முயற்சி பிழைத்தது என்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
பழைய தமிழ் வாசகங்களில்  (பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் ) ஆசிரியர் சிலர் இதனை றம்பம் என்று எழுதியிருப்பர்.  ஆனால் றம்பம் என றகரம் அயற்சொற்களில் வருவதில்லை என்ற மறுப்பு எழுமென்பதால் பின்னர் இச்சொல் ரம்பம் என்றே எழுதப்பட்டது.

மரத்தை அறுப்பது ரம்பம்.  ஆகவே அறு என்பதே இதன் பகுதி.

அறு+ அம் + பு + அம்  என்ற வழியிற் புனையப்பட்டது இச்சொல். இதில் இரண்டு அம் வந்துள்ளன. ஒன்று இடைநிலையாகவும் மற்றொன்று இறுதியாகவும் அமைந்துள்ளன.2 

இதில் ஏன் இரண்டு அம் வரவேண்டும் எனலாம்.  இச்சொல்லை அமைத்தவன் ஒன்றை விகுதியாகவும் இன்னொன்றை இடைநிலையாகவும் பொருத்தியுள்ளான். இது பேச்சுவழக்குச் சொல். முதன்முதலாய்ச் சொல் அமைத்தவனைப் பாராட்ட வேண்டும்.  நடுவிலுள்ள அம்மினை நீக்கிவிடில் அறுபம் என்று வரும். அல்லது வலிமிகுத்து அறுப்பம் என்று வந்துமிருக்கலாம். புனையப் பல வழிகள் இருப்பின் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.  அதனை இன்னோசை கருதிய முடிவு என்னலாம்.

அறுப்பம் என்பதுதான் பிடிக்குமென்றால் உங்கள் குடும்பத்திலோ வட்டாரத்திலோ அதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். கூடாது என்று நாடாளுமன்றச் சட்டம் எதுவுமில்லை.

ஆனால் அமைந்த சொல்:  அறம்பம் என்பதே.

அறம்பம் > றம்பம் > ரம்பம்.

ஒப்புக்கு:   அரங்கன் > ரங்கன்.


அடிக்குறிப்பு.
1        (ஆம்  ஓம் என்பன வினைமுற்று விகுதிகள்.  வந்தேம் என்றும் எழுதலாம். வந்தோம் என்றும் எழுதலாம்.  இவை பிழைகளல்ல. வந்தோம்  என்பதே இன்று பெரிதும் வழங்குவது .) நன்னூலிலே வேறு இலக்கண நூல்களிலே படித்தறிக.

2  இறுதி, சொல்லின் மிகுதி:  மிகுதி> விகுதி;
ஒப்பு நோக்குக: மிஞ்சு > விஞ்சு.



அரை> அரைசு> அரைசம் > ரசம்.

வினைச்சொற்கள் பெரும்பாலும் பிறமொழியிற் சென்று இயைவுடையவாகுவதில்லை. பிறமொழியிற் பயன்பாடு காணும்போது
வினைச்சொல் ஒரு பெயர்ச்சொல்போல் இயலும் நிலையை அடைகின்றது.  எடுத்துக்காட்டாக ஆங்கிலச் சொல்: "டிரைவ்" இது தமிழில் வந்து வழங்குங்கால் அதன் வினைத்தன்மையை உள்ளுறுத்த, "பண்ணு" அல்லது "செய்" என்ற இன்னொரு சொல் தேவைப்படுகின்றது.

எடுத்துக்காட்டு: " மானா மதுரையிலிருந்து டிரைவ் பண்ணித்தான் மதுரைக்கு வரமுடியும்" என்ற வாக்கியம் ஆராய்தற்குரியது.

மானாமதுரையிலிருந்து மதுரைக்கு டிரைவித்தான் வந்தேன்" என்றால் உடனே இவளுக்குத் தமிழ் தெரியவில்லை என்று என்னை முதுகில் தட்டி மூலையில் நிறுத்திவிடுவார்கள். பண்ணு செய் என்ற உதவும் வினைகள் தேவைப்படுவது நன்`கு புரிகிறதல்லவா

உண்மையில் இந்த டிரைவ் என்பது தமிழ் வினைச்சொல்லுடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஆங்கிலத்துக்குள் நடமாடும் தமிழ்மணி அது என்றுகூடச் சொல்லலாம். எப்படி என்று கேளுங்கள்.

"நாயைத் துரத்து " என்பது ஆங்கிலத்தில் "டிரைவ் எவே த டாக்"  என்று வரும்.
இதில் வரும் "துர(த்து) " என்பதே டிரை(வ்) என்பதன் மூலம். பிறைக்கோடுகளுக்குள் அடைபட்டுள்ள  வேறுபடு ஈறுகளை மெல்ல அகற்றிவிட்டுச் சொற்களை நுணுகி ஆய்ந்தால்,   துர>டிரை என்பது நன்றாக விளங்கும். பெரும்பாலும் வண்டிகளை எத்திசையிலிருந்தும் எத்திசைக்கும் செலுத்தலாம் என்றாலும் அடிப்படையில் அது முற்செலுத்துதலே ஆகும். இதைக் கூறுகையில் உருண்டையான உலகின்மீது  எது பின் எது முன் என்பது உங்கள் சொந்த ஆய்வுக்குரியதாகும்.

 ஏன் இதை விளக்குகிறேன் என்றால்  வினைச்சொல் என்பது ஒரு மொழியினோடு  குருதியிற் கலந்து நிற்பது. துரத்து அல்லது துர என்பது வினையாதலின் தமிழுக்கே உரியது.  டிரைவ் என்பதும் வினைவடிவில் ஆங்கிலத்துக்கே உரிமை பூண்டு நிற்பது. வினைச்சொற்கள் அதிகமுள்ள மொழி கருத்துரைக்க ஏற்ற திறன்படு மொழியாகும். மேலும் சொல்லின் வினைவிசையானது பொருளில் நிற்கின்றது.  அதனால்தான் துணைவினை இன்றிப் பிறதடத்துக்குத் தாவமுடிவதில்லை.

பெயர்களைக் கடன்பெறுவதும் பிறமொழியில் ஆள்வதும் எளிதிலும் எளிதே. அரிதாவது வினையே. தமிழ் வினைச்சொல் என்பது தமிழ்ப்பெண் போன்றது. தன்னினத்துடன் மானங்காத்து மகிழும். அவ்வம் மொழியினருக்கும் ஆங்காங்கு மானமுண்டு; பிறருக்கில்லை என்பது இதன் பொருளன்று.

இப்போது ரசத்துக்கு வந்திடுவோம்.  முன் காலத்தில் உரிய துணைச்சரக்குகளைக் கல்லில் அரைத்தோ அம்மிக் குழவியால் தட்டியோ பொடிகளாக்கி நீரிலிட்டுக் காய்ச்சி எடுத்துக் குடித்தனர். தட்டக் கல் இல்லாதவிடத்து ஒரு பானை நீரிட்டால் அது அரை காலாவதுவரை நன் கு கொதிக்கவைத்து சரக்குகளின் உட்பொதிவை நல்லபடியாக இறக்கி ரசத்தைச் செய்தனர். அரைக்கப்பட்டமையின்  அரை > அரைசு > அரைசம் >  அரசம் ( இது ஐகாரக் குறுக்கம் ) > ரசம் ஆயிற்று.   அரை என்பது தமிழ் வினைச்சொல். அரங்கன் என்ற சொல் தன் முதல் எழுத்து விழுந்து ரங்கன் ஆனது போலவே அரசம் என்பதும் ரசம் ஆனது.

உரசி எடுத்த சாறு சுரசம் ஆனது எப்படி?  அதை இன்னொரு நாள் காண்போம்.

பின் தோன்று பிசகுகள் பின் திருத்தப்பெறும்.


வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சால நித்தியமான சானித்திய நிலை: பொருள்

இன்று அடிக்கடி வழங்காத ஒரு சொல்லை அறிந்து இன்புறுவோம்.  எப்போதும் நம் புழக்கத்திலும் பழக்கத்திலும் உள்ள சொற்களை மட்டும் அறிந்துகொண்டு உறக்கம் மேற்கொள்வதிலிருந்து இது சற்று வேறுபட்டுக் கேட்பாரை மகிழ்வுறுத்தும் என்று எண்ணுகிறோம்.

நாம் தெரிந்தெடுத்துள்ள சொல்:  சானித்தியம் என்பது.  இது செந்தமிழ்போல் இல்லை அன்றோ?

இதில் இரண்டு துண்டுச் சொற்கள் உள்ளன.  இவற்றுள் இறுதித் துண்டினைப் பார்ப்போம்.

இறுதி:  நித்தியம் என்பது.  ஒன்றை நித்தியமென்றால் அது என்றுமுள்ளது என்று பொருள்படும்.

ஒன்று உள்ளது என்றால் உள்ளிருக்கிறது என்பதே அதன் பருப்பொருள். ஒரு பொருளாய் அகத்திருந்தால் அங்கு உள்ளே இருக்கிறது என்போம்.  சுருக்கமாக, அது உள்ளது  என்றும் சொல்வோம்.  அது உண்டு என்பதும் வழக்காகும்.

இப்போது உள்ளது என்பதில் " உள்" என்பதன் பொருள் வலிவற்று நிற்கிறது. ஒரு கடையில் போய் அரிசி உள்ளதா என்றால் :  கடைக்காரனும் உள்ளது என்றால்,  அது உள்ளே எங்கோ இல்லாமல் வெளியிலே ஒரு பெரும் பாத்திரத்தில் இருந்தால்,  " என்ன உள்ளது என்கிறாய், அது வெளியதாய் இருக்கிறதே!"  என்றால்  பொருட்கேடு விளைந்ததுபோல் தோன்றுமே.  உள்ளது என்று நாம் சொல்லும் ஒரு பொருள் உள்ளே இல்லாமல் வெளியிலும் இருக்கலாம்.  ஆகவே உள் எனில் இருக்கின்றது என்றே பொருள்.  இஃது இவ்வாறாக  'என்றும் உள்ளது' என்பதற்கு என்றும் உள்ளிருப்பது என்பது பொருளன்று.

அகடுற யார்மாட்டும் நில்லாது ---- என்றால் நித்தியமானது அன்று,   நிலையானது அன்று என்று பொருள் கூறுவோம்.  நித்தியம் என்றால் நிற்பது என்பது.  நிற்காமல் வீழ்வது, நிற்காமல் ஓடிப்போவது, நிற்காமல் கரைந்துவிடுவது, நிற்கும்போதே ஆவியாகிவிடுவது ----- என்பவெல்லாம் நித்தியம் அற்றவை  ஆகலாம். நிற்கவேண்டும்; அதுவே நித்தியம்.  நில் > நி > நித்து> நித்தியம்  அல்லது நில் > நிற்று > நிற்றியம் > நித்தியம்.  எப்படியானாலும் நிற்பதே நித்தியம். ஓடிப்போவதும் கரைந்துவிடுவதும் சாம்பலாவதும் நித்தியமன்று.

நித்தியம் என்றால் நிற்பது; நித்தியம் என்றால் நிலையானது,

நிலை என்றாலும் நில் என்ற அதே அடியிலிருந்தே சொல் வருகிறது.

நிற்றல் > நித்தல்;  நிற்றம் >  நித்தம்.

ற்ற எனற் பாலதை த்த என்று மாற்றி அழகு கண்டுள்ளனர்,  எனினும் இவையாவும் கிருதப்புதுமை ஒன்றையும் வெளிக்கொணரவில்லை,

நித்தியம் என்றபடி சொல்லமைக்காமல்:  உள் என்பதிலிருந்து தொடங்கி,  உள்> உள்ளி > உள்ளியம் என்றும் அமைத்திருக்கலாம் எனினும் அமைக்கவில்லை. இரு என்பதிலிருந்து தொடங்கி  இரு > இருத்து > இருத்தியம் என்று வந்திருக்கலாம். வரவில்லை. அமைவுறாதன வேறு சுற்றுச்சார்புகளில் எழும் புதிய கருத்துகளுக்குச் சொல்லமைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்,

நித்தியமென்ற சொல்லினழகும் அமைப்பும் அறிந்தின்புற்ற நாம், முழுச்சொல்லையும் அறியத் தயாராய்விட்டோம்.

தயார் என்றாலே தயக்கத்தின் நிறைநிலை என்று பொருள்.  ஒரு படை உடனே போருக்குள் இறங்கிவிடாமல் தயக்க நிறைநிலையில் நின்றிருத்தலே தாயார் நிலை. படைகளும் தமிழரசும் தொலைந்த பின், தயார் என்ற சொல்லிருந்தது; ஆனால் அது எங்கிருந்து வந்தது என்று புரியாத நிலையில் தயார் தமிழா என்று ஐயம் ஏற்பட்டுவிட்டது.  தய:  தயக்கம் அல்லது தயங்கிடுதல்;   ஆர்:  நிறைவு;  ஆர்தல் -  நிறைதலே.  தய+ ஆர் . =தயார்.  இது உருதுமில்லை; கிருதுமில்லை,  இந்தோனேசியாவின் பாலிம்பாங்க்  வரை படைநடத்தி, சிங்கப்பூருக்குள்ளும் புகுந்தான், நீல உத்தம் சோழன் என்னும் இராஜ ராஜனின் தளபதி.  அவன் படைகட்கு உத்தரவுகளை உரக்கக் கூவினான்.  எங்கே அவன் பயன்படுத்திய சொற்களெல்லாம்?

யாம் இப்போது தயார்.

நித்தம் என்பதறிந்தோம்.  நித்தியம் என்பதுமறிந்தோம். இனிச் சானித்தியம் அறிவோம்.

சா+ நித்தியம் என்று பிரிப்போமானால் --- சாவு நித்தியம் என்று பொருள்பட்டுப்
பிழைக்கும் என்பதறிக.

சாலவும் நித்தியமானதே சால நித்தியம்; சால் நித்தியம்:  > சானித்தியம்.
சாலுதல்: நிறைதல் சான்றோர்: நிறைந்தோர். 

இது சான்னித்தியம் என்றும் எழுதப்படுவதுண்டு.  தெய்வத்தின்முன்  என்பது இதன் வழக்குப் பொருளாகும்.  சொல்லமைப்புப் பொருள்: மிகுந்த நிறைவு அடைந்த நிலை என்பதாகும். திருமுன் என்பதும் பொருள்.

தெய்வம் தோன்றி நிறைவு தந்த நிலை. மாறாத இன்ப நிலை.