திங்கள், 11 ஜூன், 2018

இலாவண்யம் இலாபம் லேகியம் லாகிரி சொற்கள்

சொற்களைப் பற்றிய ஆராய்ச்சியைப் பல ஆண்டுகளாக ஈண்டு மேற்கொண்டு வருகின்றோம்.  நாம் ஆய்ந்து வெளிப்படுத்திய சொற்களும் பலவாகும்.

எடுத்துக்காட்டாக ஊர்ஜிதம் என்ற சொல்லை விளக்கினோம்.  உறுதிதம் என்பதினின்று  உறுஜிதம் > ஊர்ஜிதம் என்பது படைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டினோம்.     இரு > இருத்தல் > (  இருத்தித்தல்) என்ற புனைவிலிருந்து சிருத்தித்தல்> சிருஷ்டித்தல் என்று புனைவுசெய்து,  இருக்கும்படி செய்தல், உண்டாக்குதல் என்ற பொருளில் சொல் உலவ விடப்பட்டது என்பதை விளக்கினோம்.  சொற்களைச் சிந்தனைக்குட்படுத்தி அவை எங்கனம் புனையப்பட்டன என்பதை அறிந்து விளக்குதல் எளிதானதே ஆகும்.  ஒன்றை உருவாக்கி அது இருக்கும்படி செய்தலே சிருஷ்டித்தல். செய்த  எதவும் இல்லாமலாய்விடுமானால்  அதனைச் சிருட்டித்தல் என்று சொல்லமாட்டோம்.

இன்றும் பல சொற்கள் புதிதாகப் படைக்கப்பட்டு வழக்குக்கு வந்துள்ளன. எடுத்துக்காட்டு: " இணையம்"  என்பது.  இணையம் ஏற்பட்டவுடன் தமிழர் இச்சொல்லைப் படைத்துக்கொண்டது மகிழற்குரியதே ஆகும்.  ஆனால் நம் ஆராய்ச்சியில் இன்று நாம் படைத்துக்கொண்ட சொற்களைவிட  ஏறத்தாழ் ஆயிரமுதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்த இந்தியர்கள் படைத்தளித்த சொற்கள் மிகப்பலவாகும்.  தாமே திரிந்த வடிவங்களிலிருந்தும் தாம் திரித்த வடிவங்களிலிருந்தும் அவர்கள் நம்முன் வைத்த சொற்கள் கண்டு வியக்கத்தக்க எண்ணிக்கையில் உள்ளன என்பதை நாம் மறுக்க ஒண்ணாது என்பதறிக.  அவர்கள் பல புதுமொழிகளைக் கூடப் படைத்து அளித்துள்ளனர். பல எழுத்துருக்களையும் படைத்துள்ளனர்.  அவர்கள் செய்துமுடித்த பணி மிகப் பெரிது ஆகும்.

பல சாதிகளைப் படைத்துக்கொண்டு பிரிந்து நின்றது போலவே இந்திய மக்கள் பல மொழிகளை உருவாக்கிக்கொண்டனர் என்று கூறின் அது ஓரளவு உண்மையே ஆகும்.  மலைகள், மடுவுகள், காடுகள், தொலைவு என்ற பல காரணங்களால் ஓரிடத்தில் இருப்பவர் பேச்சுக்கும் இன்னோரிடத்தில் இருப்பவர் பேச்சுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றி மிகுவது மொழிகள் மாத்திரத்தில் இயற்கையாகும்.  ஆனால் அவற்றை  அடிப்படையாக்கிப் புதுமொழிகள் பலவற்றைப் படைத்துக்கொண்டதில் நன்மையும் இருக்கலாம் தீமையும் இருக்கலாம்.

இனி வெறும் தத்துவங்களை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், இரண்டு மூன்று சொற்கள் அமைந்தவிதம் காண்போம்.

இலாவண்யா என்றது அழகு என்று பொருள்.   இலாவண்யா என்பது ஊரிலே எங்கும் காணற்கியலாத  அழகு.  இலா:   ஊருக்குள் இல்லாத;  அணி -   அழகு.
யா என்பது  ஆயா என்பதன் முதற்குறை.  இந்தப் புனைசொல்லை ஒரு பெண்ணுக்குப் பெயராய் இட்டால்,  அதற்குப் பொருள் ஊருக்குள் இல்லாத அல்லது காணமுடியாத பேரழகி என்று பொருள் கூறவேண்டும்.  எப்படிச் சொல்லை சுருக்கி எழுத்துக்களை வெட்டி வீசினாலும்  இலா (  இல்லாத ); அணி = அழகு என்பவற்றை மறைத்தல் இயலாது.

இதேபாணியில் அமைந்த இன்னொரு சொல் இலாபம் என்பது.  இலா -  முன் இல்லாத அல்லது கிட்டாத;  பம் -   பயன்.  பயன் என்ற சொல் பயம் என்றும் வரும்.   அன்  ஈற்றுச்சொற்கள் அம் ஈற்றிலும் வரும்.  அறம் அறன்;  பயம் - பயன்.  இவை பல வுள.    முன் கிடைக்காத பயன் இப்போது கிட்டினால் அல்லது முன் இல்லாத பயன் இப்போது வந்தால் அதுவன்றோ லாபம்.  இங்கு பயம் என்பதில் யகரத்தை வீசிவிட்டு,  இலா+பம் =  இலாபம் என்று புனைந்தனர்.

கட்டியாக இல்லாமல் இளகிய நிலையில் குழைக்கப்படும் மருந்து லேகியம்.
இளகு > இளகியம் > லேகியம் ஆனது,  லேகியம் என்பது இரசியாவிலிருந்து வந்த சொல் என்று எண்ணுவோன் ஆய்வுமூளை சற்று குறைந்தவன்.

மதுவை அருந்தியபின் மனிதன் சற்று இளகிய, திடம் கரைந்துவிட்ட நிலையை அடைவதுண்டு.  இதைத் தரும் மது   உண்மையில் இளகி இருக்கச் செய்வது ஆகும்.  இளகு+ இரி=  இளகிரி >  இளாகிரி > லாகிரி ஆனது.

இரு என்பது இரி என்று வருவது மலையாள வழக்கு.
லகர ளகர வேறுபாடு சில சொற்களில் கடைப்பிடிக்கப்படா.  இலக்கண நூல் காண்க.  எடுத்துக்காட்டு:  செதில்  -   செதிள்.
இளகு என்பதே இலகு என்றும் லகு என்றும் திரியும்.
இவை மொழிகளில் காணப்படும் திரிபுகளும் மாற்றங்களும்தாம்.

அறிந்து ஆனந்தம் காண்க.


ஞாயிறு, 10 ஜூன், 2018

சேனை என்னும் சொல்.

சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதே என்பதை ஆய்ந்தறிவோம்.

சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் என்பது முன்னர்ப்  பொருளாகும்,  அல்லது பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம்,

"இந்த ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து சேனை நாட்கள் ஆகிவிட்டன."  இந்த வாக்கியத்தை வாசித்தால் சேனை என்பது பல என்று பொருள்படுதல் தெரியும்.  இது பேச்சு வழக்கில் உள்ள சொல். இன்று மறக்கப்பட்டு வருதல் அறியலாம்.

சந்தையையும் சிலர் சேனை என்பதுண்டு என்று அறிகிறோம்.  "சேனைக்குப் போய் வந்தாள்"  என்பது காண்க.

 சேனை என்பது உறவினர் நட்பினரையும் குறிக்கும்.  "  அந்தத் திருமணத்துக்கு அவர் தம் சேனையுடன் போயிருக்கிறார்"  என்பது இப்பொருளது ஆகும்.

இப்பொருளில் இது கம்பராமாயணத்திலும் வந்துள்ளது.   ( கம்ப. தைலமா.8)

பிங்கலந்தையில் இது தெரு என்று பொருள் தெரிக்கப்படுகின்றது.

சேனை என்பது படையையும் ஆயுதத்தையும் குறிக்கும்.

இருபது கவளி வெற்றிலைக்கு ஒரு சேனை என்பதுமுண்டாம்.

சேனை என்பது நண்பர்கள் என்றும் பொருள்படுதலால்  "கூடாச்சேனை"  என்பது கூடாநட்பு என்றும் பொருள்படும்.

சேனை என்ற சொல் தமிழிலக்கியத்தில் இடம்பெற்ற சொல்லே ஆகும். இதன் அடிச்சொல் சேர்தல் என்பதே.  இது பலர் என்றும் சேர்க்கப்பட்டவர்கள் என்றும் நன்  கு பொருள்தருவது ஆகும்.

சேர் >  சே+ன் + ஐ என்று அமைந்துள்ளது.  ரகர ஒற்று வீழ்ந்து சே ஆனது. பின்  -0னகர ஒற்று இடைநிலையாய் நின்று ஐகாரம் என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்றது.

இதைப் பானை என்ற சொல்லுடன் ஒப்பு நோக்குக.  பா என்பது விரிவு குறிக்கும் சொல். வாய் விரிந்த வனை ஏனத்துக்குப் பானை என்று சொல்கிறோம்.  விரித்துப்போடும் ஓலைப் பின்னலுக்குப் பாய் என் கிறோம்,
படுக்கைவாட்டத்தில் உள்ளதைப் பட்டை என் கிறோம். ப> படு > பட்டை.
பலகை என்பது விரிந்து சப்பட்டையாக உள்ள மரத்தின் அறுத்த பகுதி.
அதாவது ப > பா என்ற வரிசையில் இப்படி பரந்து விரிவுடைய பல பொருள்களின் பெயர்கள் வருகின்றன.  பார்த்தல் (see ) என்ற வினை,  பொதுவாக கண்ணால் புலப்படுத்திக்கொள்வது.  நோக்குதல்   (look  ) என்பது குறுக்கமாக ஒன்றைக் கட்புலப்படுத்திக்கொள்வது ஆகும்.   பா> பார் என்பதையும் பார் என்று பொருள்படும் விரிந்த உலகையும் சிந்திக்கவும்.

பா> பானை;   சே> சேனை.  இரண்டிலும் இடைநிலை 0னகர ஒற்று ஆகும்.

சேர் என்பது ரகர ஒற்று இழத்தலை சே  >  சேமி என்பதில் அறிக.1


எனவே பலர் என்றும்  கூடுதலென்றும் சேர்க்கப்படுதல் என்றும் பொருள்படும் சேனை  என்பதன் சொற்பிறப்பு அறிந்து மகிழ்வீராக.

அடிக்குறிப்பு:

1  சேகரன் :  அடிச்சொல்:  சேர் > சே.  சேர் + கரன்  =  சேகரன்.  பொருள்:  நிலவைச் சேர்த்துவைத்திருப்பவன்.  சே என்பது சிவப்பு என்றும் பொருளாம்.  சிவந்தான் ,  சிவன்.  இருபிறப்பிச் சொல்.    சேர்  + கு + அரன் =  சேகரன் எனினுமாம். ரகர ஒற்று  வீழ்ச்சியும் கு இடைநிலையும் காண்க .

2  சேர் + நர்  = சேர்நர் >    சேர்நை>  சேனை .  This accounts for the appearance of the intermediate ந் ( ன் ) resulting in  னை .    








மோடியைக் கொல்லத் திட்டம்,

மோடியைக் கொல்லவோர் திட்டமாம் --- ஓர்
மூலை நகரத்தில் கொட்டமாம்!
ஓடியும்  ஓடி உழைக்கிறார் --- இந்தியா
ஒட்டுக்கும் பல்லோர் பிழைக்கிறார்.

பல்லோர் பிழைக்க நலம்நண்ணும் ---இந்தப்
பாரிலூ ழல்கெடப்  பலம்பண்ணும்,
நல்லோனாம் மோடியைக் கொல்வதோ?---இது
நல்லோர்தம் நெஞ்சமும் சொல்வதோ?

செய்தநன் மைகளை மாய்ப்பதா?  --- பாரில்
சீரில் இடுக்கண்கள் சேர்ப்பதா,
உய்தநற் பாரதம் தேய்வதா ---  நலம்
ஓங்கிய பின்பின்னே போவதா?


https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwj69N66hMnbAhVHVrwKHd0uCYIQqUMILjAA&url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2Fanother-rajiv-gandhi-type-incident-maoist-letter-exposes-plan-to-kill-pm-modi%2Farticleshow%2F64505905.cms&usg=AOvVaw3gUXuR_hQo4_JkxlDWg8z8