செவ்வாய், 14 நவம்பர், 2017

மணம், மணி, அம்மணம், அம்மணி, . மண்ணுதல் சொல்லமைப்பும் பொருளும்

உலகில் நல்ல அலங்காரம் செய்துகொண்டு தூய்மையாகத் தென்படுவோருக்கே பெரிதும் மதிப்பு உள்ளதென்றால் அது மிகையாகாது.  நன் கு படித்தவருக்கு அல்லது பதவியில் உள்ளவருக்குப் பெருமதிப்பு உள்ளது.  அதுபோல் வாய் கண் மூக்கு செவி உடல் என அனைத்தும் போற்றத்தக்க முறையில் தூய்மையாய் வைத்திருப்பவரை யாரும் மகிழ்வுடன் வரவேற்பர். 

அழகுடன் திகழ இன்று நமக்குக் கிடைக்கும் துணைக்கருவிப் பொருள்கள் மிகப்பலவாம். பணம் செலவழித்து அவற்றை வாங்கி அழகுடன் விளங்குகின்றோம். காட்டிலும் மேட்டிலும் காலங்கழித்த முந்தியல் மாந்தனுக்கு இவையெல்லாம் கிட்டவில்லை.  சவர்க்காரம் என்னும் சோப்பும்கூட கண்டுபிடிக்கப்படாத நிலையில், சீயக்காய்த் தூள் என்னும் சிகைக்காய்த் தூளும்கூட உண்டாக்கப்படாத நிலையில்,  அவன் தண்ணீரில் வெறுமனே குளிக்கவேண்டியிருந்தது. வியர்வை விளைத்த நாற்றம் நீங்க அவன் என்ன செய்தான்?

கொஞ்சம் நன்மணம் உள்ள மண்ணை உடலில் பூசிக்கொண்டான். அப்புறம் குளத்திலோ ஆற்றிலோ வேறு நீர்நிலைகளிலோ மூழ்கி எழுந்தான். பேச்சு வழக்கில் முழுகாமை இருத்தல், தலைமுழுகுதல் முதலிய பல குறிப்புகளும் மனிதன் எப்படிக் குளித்தான் என்பதை விளக்கும். முழுகுதல் என்பதும் இடம் நோக்கி, குளித்தலை உணர்த்தும்.  

அவன் மண் பூசிக் குளித்தமையால் “ மண்ணுதல் “ என்ற சொல்லுக்குக் குளித்தல் என்ற பொருள் உண்டாயிற்று. அரசன் குளிக்கும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுக்கு மண்ணு மங்கலம் என்று பிற்காலத்தில் குறிக்கப்பட்டது.
கழுவி எடுக்கப்பட்ட ஒளிக்கல்லுக்கு “ மணி “  என்ற பெயர் வந்தது.
குளித்தபின்னர்தான் நன்மணம் வந்தது.  ஆகவே மண் > மண > மணத்தல் என்ற சொல் வாசனையையும் ஆடவர் பெண்டிர் இணைப்பையும் குறித்தது.

பெருமாட்டிகளெல்லாம் நன்கு குளித்தவர்களே,  அவர்கள் “ அம்+ மணி “ எனப்பட்டனர்.   அம் = அழகு; மணி = குளித்த பெண்.

குளிக்கும்போது ஆடை களைந்தே பலரும் குளிப்பர். தூய்மை பெற  அதுவே வழியாய் இருந்தது. (புதிய) ஆடையை அவர்கள் மீண்டும் அணியுமுன் அவர்கள் அழகாகக் குளித்தெழுந்த ஆடையில்லா நிலையில் இருந்தனர்.  அது அம் மணம் ஆயிற்று. அம் = அழகு. மணம் = உடல் கழுவிய நிலை.   அதாவது ஆடை அணியுமுன் உள்ளதான நிலை.

மண் + அம் = மணம். குளித்தபின் உள்ள நிலை. மண்ணு + அம் = மணம்.

இதையெல்லாம் அணுகி ஆய்கின்றவேளை தமிழின் பழமை புரிகிறது.

திங்கள், 13 நவம்பர், 2017

நல்லகாலம் தமிழ்நாடு இந்தியாவுக்குள் !



நல்ல காலம்  இந்தியாவில் தமிழ்நா டின்று
வல்லவொரு மாநிலமாய் வளர்ந்தி லங்கும்;
இல்லையென்றால் உலகில்மண் விழுங்கு நாட்டோர்
சொல்லப்பலர் அவர்கைக்குள் சுருண்டு வீயும்.

எல்லையென்றும் இருத்தல்பிறர் கொல்லை  யாகும்;
முல்லைவனம் எமதென்ற முழக்கம் மட்டும்
உள்ளதனை உறுதிபெற உருக்கில் வார்த்துக்
கொள்ளுமொரு படையாமோ குறுக்கில் நிற்க?

இவை இரண்டும் தாழிசைகள், வழக்கமாக விருத்தப்பாக்கள் வரும் சந்தத்தில் அளவடியில் அமைந்தன.

தலித்துகளைப் பற்றி ஒரு சிறிய சிந்தனை..........



தலித்துகளைப் பற்றி ஒரு சிறிய சிந்தனையில் ஆழ்வோம்.

தலித்து என்ற சொல் எங்கிருந்து எப்படி உண்டாயிற்று என்பதுபற்றி அறிஞர் பல வரைந்துள்ளனர்.  அவர்களின் கருத்துகள் பட்டொளிருமாறு கலைக்களஞ்சியங்களும் அகராதிகளும் தம்முள் சிற்றுரைகளையும் கட்டுரைகளையும் உட்பொதிந்து இலங்கிக்கொண்டுள்ளன. அவைகள் கூறியதுகூறலாக இல்லாமல் அவை தாண்டிய ஒரு சிந்தனைச் சிற்றுரையை வரைதலே எம் நோக்கமாகும். அந்நோக்கம் இனிது ஈண்டு வெளிப்படுமாக.

தலித்து என்பது தாழ்த்தப்பட்டோர் எனபதாகப் பழைய சமஸ்கிருத அகராதிகளிற் காணக் கிட்டிற்றிலது. ஆயினும் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்ட தென்பதாக அறிஞர் சிலர் கருதுகின்றனர்.    நேர்முகமாக இல்லாமல் ஒடுக்கப்படுதல் பொருளாய்க் கொண்ட ஒரு சங்கதச் சொல்லினின்று திரிந்தமைந்ததாகக் கொள்கின்ற நிலை உண்மையுடன் ஒட்டி நிற்பதாகக் கொள்ளல் ஏற்புடைத்தென்று தெரிகின்றது.

இது இங்கனமாயின் ஆங்குப் புகுந்து திரும்புவோம்.

தமிழில் தளி என்றால் எண்ணெய் விளக்கு என்றும் தளிச்சேரி என்பது ஆடற்பெண்டுகள் வதியும் தெருவென்றும் சொல்லப்படுகிறது.  அப்பெண்கள் தளிச்சேரிப்பெண்டுகள் எனப்படுகிறார்கள். எனவே தளித்து என்றால் எண்ணெய் விளக்குப் பிடித்தவர்கள் அல்லது உடையவர்கள் என்று பொருள்கொள்ள இடமுண்டு.  -து என்ற விகுதி உடையது, உடையோர் என்றும் பொருள்விரிக்க இடனுண்டு.

விளக்கு அல்லது தீப்பந்தம் பிடிக்க ஆளில்லாமல் இரவில் நடனம் முதலியன நடைபெறுதலை இயலாது என்றே கூறவேண்டும். நடனக்காரிகளுக்குப் பறையடித்தல் முதலியன இருக்க வாய்ப்பு இல்லை. அதற்குப் பதிலாக விளக்குப் பிடித்திருக்கலாம்.

தள் என்பது வெளியில் நீட்டிக்கொண்டிருப்பது என்று பொருள்படவேண்டும்.  தள் > தள்ளு.  தள் > தளி.  எனவே வெளி நீட்டிக்கொண்டுள்ள திரி,  தளியாகிறது. இது விளக்கைக்குறித்தது ஆகுபெயர். நாளடைவில் திரிக்கு ஏற்பட்ட சொல் விளக்கைக் குறித்தது.
தளி என்பதற்குக் கோவிலென்றும் அறை என்றும் பொருளிருக்கின்றன. கோவிலும் இவர்கள் வாழ்ந்த அறைகளும் இருந்த சேரி தளிச்சேரி என்றும் வழங்கியிருக்கலாம்.

இங்ஙனமிருப்பினும் தளித்து என்ற வழக்கு அண்மைக்காலம் வரை தமிழ் நாட்டிலில்லை என்பதே சிந்தனை. தமிழ் நாட்டில் வழக்கிறந்துவிட்ட இது, வட இந்தியாவில் வெற்றி நடை போட்டுவிட்டதோ?

சமஸ்கிருதத்தில் தலித்தா என்றால் அடிமட்டத்தில் வைக்கப்பட்டது,  இடத்தில் பொருத்தப்பட்டது  என்று பொருள்தருகிறது.  என்றாலும் இது சாதி குறிக்காத பொதுச்சொல்.

எனவே தலித்து என்பது இதிலிருந்து பெறப்பட்டுப் பட்டியல் சாதியினரைக் குறிக்க வழங்கப்பட்டது என்று கொள்வதில் தவறில்லை.  காரணம் தலித்து என்பது தமிழ் நாட்டில் வழக்கிலில்லை. இவர்கள் தமிழரிடை ஆதித்திராவிடரென்றும் தாழ்த்தப்பட்டோர் என்றும் வழங்கப்பட்டோராவர்.

என்றாலும் தலித்தா என்பது தாழ்த்த(ப்பட்டோர்) என்பதில் உள்ள பதத்தின் முற்பகுதியாகும். பட்டோர் என்பது ஒழிய,  தாழ்த்த என்பது மட்டும் வடக்கேறிò தலித்த என்று  அரைச்சொல்லாகக் குறுகி  வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பது அறிந்துகொள்ள ஒன்றும் கடினமில்லாதது ஆகும்.

தமிழே உருவாக நிற்க, சங்கதம் அது காட்டும் கண்ணாடியாய் இலங்குவதில் வியப்பு ஒன்றுமில்லை.

தாழ்த்த (ப்பட்டோர்) > தாழ்த்த  > தால்த்த > தலித்த > தலித்து1

(மறுபார்வை செய்யப்படும்.)

---------------------------------
1   A this stage you may refer to a similar development in English, where the Latin omnibus ( = for all )  shortened to -bus  and now refers to a large vehicle carrying passengers.  -bus is actually a
Latin  suffix.  In fact it is in a worse position than the word தாழ்த்த,
carrying some meaning, whereas -bus has no appreciable meaning having no connection whatsoever to a vehicle or the passengers travelling in it. What an anomaly!  Enjoy the word history.