வெள்ளி, 24 மார்ச், 2017

புவி . (தோன்றியது .)

பூத்தல் என்பது, பலரும் அறிந்த பொருள்,  "பூ மலர்தல்".

ஆனால் இச்சொல்லுக்கு வேறு பொருள்களும் உள்ளன:

தோன்றுதல், பயன் தருதல், அழகாகுதல், பருவம் எய்துதல் என்பன.

இவற்றுள் தோன்றுதல், முன்மைவாய்ந்த பொருளாம்,

புவி அல்லது இவ்வுலகம் தோன்றியது  என்பதே பலரின் எண்ணமாகும்.
தமிழரின் எண்ணமும் அஃதே.

மண் தோன்றி... என்பதைக் கேட்கையில், இம்மண் தோன்றியதென்பதே
நம் அறிவு நமக்குச் சொல்வது  ‍  :  தோன்றிய ஞான்று நாம்
இல்லை எனினும்.

பூ > பூவுலகு.  ( பூ+ உலகு).
பூ >  பூமி.    ( இங்கு "ம்" இடைநிலை).
(இவ்விடைநிலை உம் என்பதன் தலைக்குறை.)
பூ > பூவனம் > புவனம்.
( பூ ‍= தோன்றிய; வனம் = அழகுள்ளது ).
( வல்>வன்; வன் > வனை> வனைதல்; வன்>  வனம் ).
வனப்பு = அழகு. வல்> வல்லி ‍: பெண்,அழகி.
இவ்வோர்பும் ஏற்புடைத்தே:‍
பூவு> பூவு+அன்> அம் > பூவனம்; . புவனம்.
நெடில் குறுகுதல் பல சொற்களில் வரும்.


பூ > பூவி  >  புவி . (தோன்றியது .)   வி : விகுதி.

சாவு > சவம் எனக்   குறுகுதல்  காண்க.

இவற்றை ஆய்ந்து தெளிக.



வியாழன், 23 மார்ச், 2017

தொப்பி என்ற தமிழ்ச்சொல்

தொப்பி என்ற தமிழ்ச்சொல் பல வட்டார மொழிகளிலும் பரவியுள்ளது.
வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற பல தமிழர்கள் வெயில், மழை முதலிய இயற்கை நிகழ்வுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள,
தொப்பியணிந்தனர் என்று சொல்வர். பின், கங்காணிகளே அதனைப் பெரிதும் அணிந்தனர் என்றும் கூறுவர். இது எங்ஙனமாயினும்;

தொப்பியைப் பாருங்கள். அது நடுவில் உட்குழிந்து காணப்படுகிறது. இப்படி உட்குழிவதைத் தொய்வு என்றும் கூறுவர்.

சொல் அமைந்த விதம் காண்போம்.

தொய் (தொய்தல்).   தொய் > தொ. இது கடைக்குறை. இறுதி எழுத்துக்
கெட்டது.

தொ >  தொப்பு > தொப்பை.
தொ     தொய்  >    தொய்ப்பு    >  (   தொப்பு > தொப்பை.  )
தொ > தொப்பூழ்.
தொ> தொப்பு> தொப்பி.  ( உள்குழிந்த தலையணி).
பு, இ ஆகிய விகுதிகள் சேர்ந்த சொல். இவ்விரு விகுதிகளும்
பெரிதும் தமிழிலே வருபவை.
தொப்பிக்காரன்  வேலைமேற்பார்வையாளன்.
தொய்> தொ > தொத்து  (து விகுதி, விழு > விழுது ; கை>கைது என்பன‌போல்).
தொத்துதல்  :  தொய்வில் பற்றிக்கொள்ளுதல் .



பளபளப்பூட்டப்பெற்ற சிரமம் என்ற சொல்

சிரமம் என்ற சொல் இப்போது நம்மிடைப் புழக்கத்தில் உள்ளது. பேரிடர்களாக இல்லாமல், சிறுசிறு தொல்லைகளாகத் தோன்றி நமக்கு
இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடியவற்றைச் சிரமம் என்று சொல்கிறோம்.

இது உண்மையில் "சிறுமம்" என்பதுதான்.  சிறு தொல்லைகள் என்று
வேறு சொற்களால் சொல்லலாம்.

சிறுமம் என்ற சொல் இப்போது கிடைக்காவிட்டாலும், புனையப்பட்ட காலத்திலே அல்லது அதற்கடுத்தோ மறைந்துபோய், அதனின்று தோன்றிய "சிரமம்" என்பதுமட்டும் "ஸ்ரமம்" என்று பளபளப்பு ஊட்டப்பெற்று நம்மிடை நிலவுவது,  சொல்வரலாறுகளில் காணின் இயல்புதான் என்க.

ஆனால் "சிறுமம்" என்பது சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது என்று
கூறுவதற்கில்லை.  காரணம், சிரமத்தில் சிறுமம் ஒளிந்கொதுண்டிருக்கிறது. கண்டுபிடிப்பதில் பயிற்சிபெற்ற கண்களுக்கு
அதை வெளிக்கொணர்வது சிரமத்துக்குரியதன்று.

ஸ்ரமம் என்பது பளபளப்பூட்டப்பெற்ற வடிவம். அதை மகிழ்ந்து நோக்கும்  அதே வேளையில் சிறுமத்தையும் மறந்துவிடலாகது.