வெள்ளி, 15 நவம்பர், 2013

பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி என்ற  பெயர் எவ்வாறு அமைந்தது? இதனை  நாடுவோம்!

 பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும்.  வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து"  என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப்  பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம்.  இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா:  இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.



புதன், 13 நவம்பர், 2013

சீர் > (சீல்) > சீலம்.



சீலம் என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.


சீர் > (சீல்) > சீலம்.

ரகரமும் லகரமும் ஒன்றுக்கொன்று பதிலெழுத்துக்களாக நிற்கவல்லவை.

(பிற மொழிகள் பலவற்றிலும் இத்தகைய நிகழ்வினைக் காணலாம்.)

எடுத்துக்காட்டு:

தமிழில் சீரை > சீலை இதுபின்  சேலை என்றானது. சேலைக்குச் சீலையே முந்து வடிவமாகும்.

தமிழ் மிக்கப் பழமை வாய்ந்த மொழி என்பதை சீரை என்ற சொல்லை ஆய்ந்தறிந்து கொள்ளலாம். சீரை என்பது மரப்பட்டை. காட்டு மாந்தன் மரப்பட்டையை ஆடையாக அணிந்துகொண்டு திரிந்தான். நெயவு அறியாக் காலத்தில் இவ்வித இயற்கைப் பொருட்களைத்தாம் பயன்படுத்தினான். காட்டுவாணர் பலர் இங்ஙனமே இன்னும் வாழ்கின்றனர் அல்லது அண்மைக் காவம் வரை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

அம்பலம் என்ற சொல்லும் அம்பரம் என்று திரிவதுண்டு.

சிற்றம்பலம் > சித்தம்பலம் > சிதம்பரம்.  ற்ற > த்த பேச்சுவழக்குத் திரிபு. ல> ர முன்கூறியபடி ஆனது. இதற்கு வேறு அழகிய முடிபுகளும் கூறப்படுவதுண்டு. அவை சில இறைப்பற்று உரைகளின் வாயிலாக நீங்கள் அறியக்கிடைக்கும்.

.

சனி, 12 அக்டோபர், 2013

முச்சலிக்கை

வெவ்வேறு சார்பினர், ஒன்றுகூடி கலந்துரையாடி ஏதேனும் ஒன்றுபற்றி ஆய்வு நடாத்துதற்கு,  கலந்தாய்வு என்கிறோம். தொழிற்சங்க  வட்டாரங்களில் பெரும்பாலும் "பேச்சுவார்த்தை" என்கிறார்கள். இது மக்களிடையே பயின்று வழங்கி இன்று ஆட்சி பெற்றுவிட்ட வழக்கு. பேசி  முடித்து எதையேனும் வார்த்து எடுக்கவேண்டுமே! இப்படிப் பார்த்தால் நன்றாகவே உள்ளது. இல்லையேல், "பேச்சு" என்பதும் "வார்த்தை" என்பதும்
தொடர்பு உடையவை என்பது சொல்லாமலே புரியும். பேச்சு  (talk)   வார்த்தை, (word).  vaarththal - moulding. Figuratively speaking, all words are moulded.
இது நிற்க!

பேச்சுகளின் முடிவில், அறிக்கை வெளியிடுவார்கள். அறிக்கை வெளியிடப் படாத பேச்சு, பெரும்பாலும் பயனற்றதாக இருக்கலாம். அல்லது
பின்னொரு நாளில் மீண்டும் கூடுவதாக இருக்கலாம்.

பேச்சு முடித்து அறிக்கை > முடித்து அறிக்கை > முடித்தறிக்கை > முடிச்சறிக்கை > முச்சறிக்கை.

முச்சறிக்கை>  முச்சலிக்கை > முச்சலிக்கா

Note:
வாய் > வார் > வார்த்தை என்பதும் கவனிக்கத்தக்கதே ஆகும்.
வாய் இடமென்றும் பொருள். வார்த்தல் ‍ ஓர் அமை‍ப்புள்ள இடத்தில் இடுதல். அமைத்தல்.