வெள்ளி, 18 செப்டம்பர், 2026

அபத்தம்

 பற்று என்னும் சொல் நீங்கள் அறிந்ததே. இணக்கத்தினால் ஏற்படும் அன்புத் தொடர்பினைப் பற்று என்போம். தேவர் தம் குறளில்:

பற்றுக பற்றற்றார் பற்றினை;   அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்கின்றார்.  பன்மணிகளில் இக்குறளும் ஓர் ஒளிமணியாகும்.

சற்று என்ற சொல்லைப் பேச்சில் ''சத்தெ''  என்று சொல்வர்.  உச்சரிப்புப்  பங்கமுடையார்,  செத்தே என்றும் சொல்வர். அப்போது செத்தாய் என்பதனுடன் அது மாறுகொள்ளலாம்.

இதைப் போன்றே,  பற்று என்பதும்   பத்து என்று வந்து, 10 என்ற எண்ணைக் குறித்தல்போலுமே பேச்சில் வரும்.  காலில் அடி, மஞ்சட்பத்துப் போட்டிருக்கிறேன் என்பதிலும், காலில் பூசிப் பற்றி யிருக்கும் மருந்து, பத்து எனப்படும்.

பட்டினத்தடிகளும் பிறர் தூற்ற நம் மீது ஒட்டி வருத்தும் நிந்தனைச் சொற்களையும் பத்தம்  (பற்றம்) என்றே சொல்வார்.

நம்பால் எது பற்றியிருக்க வேண்டுமோ  அதுவே உரியது ஆகும்.  அதையே பற்றம் அல்லது பத்தம் என்போம்.  ஒன்று இயற்சொல். மற்றது திரிபு   ஆகும்.

குவியலில் உள்ள செத்தை, ஒன்றுடன் ஒன்று பற்றியிருந்து அசுத்தமாகும்.  அதிலிருந்து வேறுபடுத்த,  தூற்றும்பெத்தம் என்று பழைய நூல்கள் கூறும்.  ஆகவே பத்தம்--- பெத்தம், எனினும் பின்னது இந்நாட்களில் செவிக்கு வருவதில்லை.

அல் என்ற அல்லாமை குறிக்கும் முன்னொட்டு,  அ(ல்) என்று குன்றி முன்னொட்டாகும். (prefix).  அ -  எதிர்மறை முன்னொட்டு.  எதிர்மறை என்றால் எதிராக மறுப்பது.  மறு >  மறை. (தொழிற்பெயர்).  மறைதல்> மறை (முதனிலைத் தொழிற்பெயர்) என்று சற்று ஒளிவாக உள்ளதைக் குறிப்பது இன்னொரு சொல்.

அ+ பத்தம் > அபத்தம் என்ற சொல்லாம். இது சமஒலி மொழியாகிய சம+கதத்திலும் வழங்கும். சம+ கதம்> சங்கதம்> சம(ஸ்)கதம்> சமஸ்கிருதம்.

கதம் என்றால் ஒலி.  கத்து> கது > கது+அம் >கதம்>கிருதம்.  ஆகவே சம(ஸ்)கிருதம்.   ஸ் என்பது இணைப்பு ஒலி. சம(க்) கதம் என்ற வல்லொலி கடினமாகையால், சம(ஸ்)கிருதம் என்று மென்மைப்பாடு அடைகிறது. பிறர்க்கு ஒலிக்க எளிதானது.  அவ்வளவுதான். பத்தம் என்பதைப் பஸ்தம் என்றாலும் மென்மைப்பாடு தான்.  ஆனால் சொற்களில் இது இந்து வரவில்லை.

எதையும் சரிப்படுத்த இன்னொன்றைச் சேர்ப்பது என்பது பலவேளைகளில் உலகில் நடைபெறுகிறது.  சுவருக்குச் சுண்ணாம்பு அல்லது வெள்ளை போல. சேர்ப்பது பற்றிக்கொள்கிறது.   பற்று> பற்றி> பத்தி> பஸ்தி  என்றால் திருத்தம் சேர்த்தல். உறுதியாதல்.  இது மலாய் மொழியில் தொடர்புள்ள பொருளில் வழங்கும்.  இரு சட்டங்களில் ஆணி ஒன்று சேர்த்தால் உறுதி. பற்றி என்பது சொல்ல எளிதாயில்லாமையால் அவர்களுக்கு பஸ்தி என்பதே ஆமோதிக்கத் தக்கதானது  ( ஆம் என்று ஓதிக்கொள்ளத் தக்கதானது!!).

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 17 செப்டம்பர், 2026

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 போர்கள்  விரிந்துபுன்  வெடிகள் பொரிந்தன

யார்யார் இறந்தனர்  யாரும்  அறிந்திலா,

குழப்பம் விளைந்தது  அமைதியும் குலைந்தது

தணிந்திடல் இலாது  வணிகமும்   குறைந்தது;

பணந்தனை  ஈட்டுதல் நாடுகள் கணித்தனர்;

இழந்தனம்  மேன்மையை என்றனர் உழைந்தனர்;

ஒருவர்,  பாரதத் தாய்பெறு  குலமகள்,

இரவொடு பகலிலும் கரவாக் கண்விழித்து, 

எண்கள்  தம்முடன் பண்படப் பிணக்கிலாச்

சேவை மனத்தொடு கோவைப்  பட்டனர்;

இந்திய  நாட்டின் செந்தமிழ்ச் செல்வி.

மனந்தளர்  வில்லா மாண்புறு  கல்வி

நிர்மலா  சீதா  ராமன்  நிதித்துறைத்

தருமம்  நிறைந்த பெருமகள்  அமைச்சர்,

உறுவரு  மானம் உயர்த்திப்   பாரதம்

விளங்கிடச் செய்த விண்ணுறு மேன்மை,   

துலங்கிடச் சொல்வாய் தோழி,

கலங்குதல் அற்றுன்  நற்றாய்  மகிழவே.


அருஞ்சொற்களுக்கு  விளக்கம்:

புன்வெடிகள் -  தீய வெடிகள்.

உழைந்தனர்  -   துன்பமுற்றனர்

தருமம் நிறைந்த --  மக்கள் துயர் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் துன்பம் நீங்க  வேண்டும் என்று எண்ணியமையால்,  தருமம் நிறைந்த எனப்பட்டது.

வெடிகள் பொரிந்தன -  இங்கு தீப்பிழம்புகள் பறத்தலைக்  குறிக்கவேண்டி, மீமிசையாகக் கூறப்பட்டது.

தணிந்திடல் -  வணிகத் துன்பங்கள் குறையாமல் என்று பொருள்.

ஈட்டுதல்   பணம் வருமானம் சேர்த்தல்.

கரவா = அமைச்சர் என்ற முறையில் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டார் என்பதைக்  குறிக்க இச்சொல்.   ஒளிவு மறைவின்றி,  தன் சுகம் கருதாமல்.

இழந்தனம் -  இழந்தோம்.

தாய் பெறு குலமகள் -  பாரத நாட்டின் மேன்மைச் செல்வி.

எண்கள்  தம்முடன் பண்படப் பிணக்கிலா -  கணக்கில் சிறந்தவர்.

வரவு செலவு திட்டம் ( பட்ஜட்) தயாரிப்பில் சிறந்தவர் என்பது,

கோவைப்  பட்டனர் - தம் வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தார்.

இது மகள் தாய்க்கு எடுத்துச் சொல்லியது.  

தருமம் நிறைந்த -  இவர் பட்ஜட் மூலம் நன்மைகள் பல செய்துள்ளவர்.

நாட்டின் வருமானத்தை வெகுவாக உயர்த்தியுள்ளார்.   உறு வருமானம் என்ற தொடர் கவனிக்க,

பாரதம் விண்ணுறு மேன்மை -  வானளாவிய மேன்மை பாரத நாடு அடைந்தது.

மகளைத் தாயின்பால் ஆற்றுப்படுத்தியது. தாயின் துன்பம்

களைவித்தது.


மெய்ப்பு பின்னர்

பகிர்வு உரிமை 


செவ்வாய், 15 செப்டம்பர், 2026

தகவல்

 தக அகவல் என்பதே  குறுகித்  தகவல் ஆயிற்று.. அகவுதல் என்பதனடியாகப் பிறந்த சொல்,  தமிழ்ச் செய்யுளாகிய அகவற்பா என்பதிலும் இதன் பயன்பாட்டைக் காணலாம்.

கல்யாணமோ கருமாதியோ தக்கபடி சொல்லி அழைக்கவேண்டும் என்பது பண்டைத் தமிழர் பண்பாடு ஆகும்.

இது கவிஞர் தக்கபடி அழைக்கவில்லை என்பதைக் குறிக்க,  ''தக அகவல்'' இல்லை அதனால் போகவில்லை என்று சொல்வதிலிருந்து ஏற்பட்டுப்  பின்னர் இந்தி, அரபியிலும் பரவிற்று.  அழைத்தலும் அகவல் ஆகும்.

இப்போது இதன் பொருள் பெறப்பட்ட அல்லது அனுப்பிய செய்தி என்பதே ஆகும்.

இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்கது. பல்பிறப்பி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை


ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

தாமதம் என்பது. மற்ற ஒருபொருட்சொற்களும்.

 ஒவ்வொரு நிகழ்விலும்,  எதை எப்போது எதிர்பார்க்க வேண்டுமென்ற ஒரு திட்டக்குறி தானே எழுகிறது..  ஒரு தாலிகட்டுக் கல்யாணத்தில்  என்ன என்ன வாத்தியங்கள் இசைக்கப்பட்டாலும் வேறு ஏதேது நடைபெற்றாலும்  தாலிகட்டும் நேரத்தில் அது காணாமற் போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்டுக் கட்டப்படுகிறது என்றால் அதைத் '' தாமதம்'' என்று சொல்கிறோம். சிலப்பொழுது நடத்துநர் அல்லது சோதிடர் குறித்த நேரம், தவறிவிட்டமையால், அது தாமதமாயிற்று என்ப.

இதைக் காலந்தாழ்த்தல், நேரத்தளர்வு என்றும் கூறலாம்..

அட்டி என்பது:  இது அடு+ இ எனல் தான்.  இதன் பொருள்:  அடுத்து இடுதல். இப்போது செயல்தக்க தொன்றை,  அடுத்த காலத்துக்கு அல்லது இடத்திற்கு வைத்துக்கொள்வது   .  இதன் பொருள்: தெளிவாக அமைந்துள்ளது. டகரம் இரட்டித்தது என்பர். இது யாதெனின்,  அ+ ட்+ ட்+ இ > அ-ட்+டி  என இரட்டித்தல் காண்பீர்.

அப்பியந்தம்  என்ற சொல்லைப் பயன்படுத்துவார் இன்று குறைவு. இது அ+பின்+ அண்+ து+ அம் என்பதுவே.  அ+ பி( ன்)+(ய*)+ அண்+ து + அம்>  அப்பியண்தம் > அப்பியந்தம்  ஆகும். இதுவும் நல்ல புனைசொல் தான்;  அதற்குப் பின் அடுத்து வந்து அமைவது  என்பது பொருள். இது அப்பியந்தரம் என்றும் வரும்.  அ+ பின்+ அண்+ தரு + அம் > அப்பியந்தரம் என்றாகும். இங்குப் பின் என்பதில் னகரம் மறைந்தது. இது எடுபடாவிடாவிடின் சொல்லழகு குன்றும்.  ''பினண்த'' என்று வருதலில் அழகில்லை.

வேகக் குறைவினால் தாமதம் ஏற்படுகிறது.  எனவே  '' அவேகம்''  என்பது வேகக்குறைவு அல்லது வேகமின்மை என்று பொருள்பட்டு, பயன்படுத்துவாரின் உரைதிறத்தால்  தாமதம் என்றே பொருள்தர வல்ல சொல்லுமாகலாம்.

தாமதம் என்பது,  தாழும் + அது + அம் என்ற சொற்றொடரில்,  ழு வை எடுத்துவிட்டால்,  தாம்+ அது+ அம் ஆகி,  தாமதம் எனவரும்.  தமிழ்ப்புனைவு ஆகும்.  சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் உரியது. காலம் தாழும் அதுதான் தாமதம். இத்தமிழ்ச்சொல்லை , சமஸ்கிருதமும் பயன்படுத்தியது நம் கொடைப்பெருமை என்றாலும் உள்ளூர் மொழியாகும் அதுவும்,

ஒரு மொழி என்றால் -  கடன்வாங்குவது அப்புறம் பார்க்கலாம்,  போதுமான சொற்கள் வேண்டுமே,  இப்படிப் படைத்து அளித்தவர்களுக்குப் பின் தோன்றல்கள் என்ற முறையில்  நாம் நன்றியுடன் இருப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 11 செப்டம்பர், 2026

பாண்டியர் என்னும் சொல்

 பாண்டியர் என்ற சொல், வரலாற்று ஆசிரியர் பலரால் விளக்கப்பட்ட சொல்லாகும்.  பாண்டிய அரசுகள்,   தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த  மிகப்பழைய அரசுகளைக் குறிப்பதாகும்.

இங்கு யாம் வரலாற்று ஆய்வு எதிலும் ஈடுபடவில்லை.  தனித்தனிச் சொற்களும் அவற்றுக்கான அடிச்சொற்களும் ஆகியனவற்றைக் கொண்டு சொல்லாக்கம் அறிந்து பொருளைத் தெரிவித்தலையே செய்துவருகின்றோம்.

பண்டு என்ற சொல்லே பாண்டி, பாண்டியன் என்று அமைந்தது என்ற சொல்லமைப்பு விளக்கமும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்.   இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,  அவர்கள் ஆளத்தொடங்கிய முதற்காலத்தில் அவர்கள் புதியவர்களாகவே இருந்தமையால்,   இந்தப் பண்டு என்ற சொல்லடியாக அவர்களின் மன்னர்குலத்துக்கு இப்பெயர் ஏற்பட்டது என்று கொள்வது பொருத்தமான கருத்தாகாது. அவர்கள் பழையவர்கள் என்ற அடைமொழி பெறுமுன் எவ்வாறு குறிக்கப்பெற்றனர் என்று அறிதல் அறிவுடைமை ஆகும். இதே சொல்லில் அறியப்பட் டிருந்தனராயின் ஏன் அவ்வாறு அறியப்பட்டனர் என்று கேட்டல் வேண்டற்பால தொன்றே  ஆகும்.  தொடக்க காலத்துக்கு ஏகுவோமாயின் ஏன் பாண்டியர் என அறியப்பட்டனர் என்பது சிறப்பான கேள்வியாகும்.

அவ்வரசுமுறை, தொடக்கத்தில் எவ்வாறு அறியப்பட்டனர் என்பதற்கு ஆய்வு செய்ய உதவும் நூல்கள் ஏதும் இப்போது எமக்குக் கிடைக்கவில்லை..

  பாரதக்கதையில் வரும் பாண்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதற்கும் உதவும் நூல்கள் யாவையும் எம்மிடம் இல.

திரௌபதையின் தொடர்பாகவும் எதுவும் கைகளை எட்டவில்லை.

ஓரிரு சொற்களைக் கொண்டே ஆரியர் வந்தனனர் என்று சரித்திரம் வரைந்த வெள்ளைக்காரன் போலவே, நாமும் செல்லவேண்டியுள்ளது.

இனிப், பண்டை நாட்களில் பாண் என்ற சொல்லடியாக,  பாணினி என்ற இலக்கண ஆசிரியன் பாண வகுப்பினன் என்று சொன்னது சரி என்றே கருதலாம்.   பாணர்ஜீ என்ற வகுப்பினரும் பாணர் வகுப்பினர் என்பதும் சரியென்றே  ஆகும்.  பாண அரசிகளில் மிக்கச் சிறப்புடையவர் பாண்சாலி> பாஞ்சாலி ( அம்மன்)  என்ற ஆய்வும் ஏற்புக்குரியதே  ஆகும்.   அந்தக் காலங்களில் பாணர்கள் மிக்கிருந்தனர்.  தமிழிலக்கியமும் பாணர்கள் பற்றிய குறிப்புகள் மிக்குடையது ஆகும்.  மாதிரியைக் குறிக்கும் பாணி என்ற சொல்லும் தொடர்புடைமை காட்டவல்லது. அம்பணம் என்பது ஒரு வாத்தியக் கருவி.  பண்> பணம்.  பண்> பாண்> பாணர்.  பாண்டவருள் தவமியற்றியோர் பாண்டவர்  ( பாண்+ தவர்>  பாண்டவர்).  பாணர் என்ற சொல் ஆணர் என்றும் திரியக்கூடியது. அல்லது ஆள்+நர் >  ஆணரும் ஆகலாம்.  பாணருள் ஒரு வகையோர் கண்டியர் எனப்பட்டனர்.  இவர்களும் பாடுவோரே.  கண்ணிகள் என்பவை சிறிய பாடல்வகை.

பாணர்கள் அரசாண்டுள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்று உள்ளது.

நீங்கள் ஆய்வு தொடரலாம்.


அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.



ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வாத்தியம்

 வாத்தியம் என்ற சொல் தமிழ்ச்சொல்.  இதை ''வாத்யம்''   என்று எழுதி சமஸ்கிருதம் ஆக்கிவிடலாம். சமமாகக் கத்துவது என்ற கருத்துத்தான் இறுதியில் '' சம + கத்து+ அம் '' >( சமக்கத்தம்) > (சமக்கதம்) > சமஸ்கதம்> சமஸ்-கிருதம்> சம்ஸ்கிருதம் > சம்ஸ்கிர்தம் என்றெல்லாம் பேசுபவன் கற்பனைக்கேற்ப வடிவங்கள் மாறின.

ஏன் இடையில் ரு வந்தது என்று நீங்கள் கேட்கலாம்.  மெது என்பது மிருது என்று வரவில்லையா?  வெளியார் மெது என்பதை உச்சரிக்கும்போது நாவிற்கு எளிதாக, ஒரு ரு-வை இடையில் நுழைத்து தமக்கு வேண்டிய முறையில் நீட்டிக்கொள்வார்கள்.

இதுவே போல்,  கத்து என்ற சொல்,  கடத்து என்ற சொல்லுடன் தொடர்புடையது.  எப்படி என்றால், ஒலியானது நாவினால் உச்சரிப்புற்று அல்லது பலுக்கப்பட்டு, ஒலி ஆகும்..  கத்து என்பதற்கும் கடத்து என்பதற்கும் என்ன தொடர்பு? சிந்திக்க வேண்டுமே.  சொல்லாய்வு முறையில் சிந்திக்கவேண்டுமே. ஒரு வல்லின எழுத்து சொல்லிடையில் இருந்தால் ,  அதை எடுத்துவிட,  சொல் வேறு வடிவம் பெற்றுவிடும்.  ஒலியைக் கடத்துவது நாவு.  அது சில வேளைகளில் சோர்வினால் கடத்து என்பதைக் கத்து ஆக்கிவிடும்.  எப்போது என்பதை எப்போ என்னும். என்னடி என்பதை என்ரி  என்னும். யாம் எப்போதும் ஒரு பீடுமன்  (பீடுடைய மன்னன்) என்பதைச் சொல்வோம்.  அது பீமன் என்று வரும்.  நாற்புற ஏனச் சுவரையும் மருவி நிற்கும் ஒரு சிலுப்பி உடைய தண்டினை, மத்து என்னும்.  இது இடையின ஒலி ஆயினும் இங்கும் வரும்.  வல்லின ஒலியே இடையினமாகிவிடும்.  மருத்து, ( மருவித்து ). நாற்புறத்தையும் மருவி நிற்கும் ஒரு தடி, மத்து ஆகிறது.  மடி என்ற டகர ஒலி, மரி ஆகிறதன்றோ?  எப்படிப் போலி  ஆனது?

வாழ்த்தியம் என்பது வாத்தியம் என்றாகலாம்.  வாய்த்தியம் என்பதும் அப்படி வந்திருக்கலாம். வாய்தான் வாழ்த்திப் பாடுகிறது.  பாடுவது எப்படிப் பாவானது?  டு ஏன் தொலைந்தது?

இனியும் உரை செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை


வெள்ளி, 4 செப்டம்பர், 2026

ஆபரணம்

 இதன் அமைப்பறிவோம்.

இதை ஆ+ பரு+ அணி+ அம்  என்று பிரிக்க:

அணி+ அம் > அணம் என்றுமாகும்.  இதன்  அணி என்ற சொல்லில் உள்ள இகரம் கெடும்.  ஆகவே  அணம்  ஆம்.

ஆக்கத்திலும் ஈட்டியதாலும் பரிய (பெரிய)  பொருள் என்றற் பொருட்டு,  ஆ+ பரு> ஆபர என்று வந்தது.  அணம் என்ற சொல்லின் அகரம், ருகரத்தில் இணைய, அஃது உகரம் கெட்டு, ரகரமாயிற்று.

இவ்வாறு நோக்க,  ஆபரணம் என்பது பெரிய வகை அணிகலன்களுக்கு வழங்கப்பட்ட பெயர்க்குறிப்பு என்பது தெரிகிறது.  நாளடைவில் இது சிறியவையாகிய அணிகலன்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது மறக்கப்பட்டு,  ஆபரணம், அணிகலன் ஆகிய இரண்டுமே எல்லா வகை அணிகளுக்கும்  வழங்க நேர்ந்துவிட்டது இவ்வாய்வின்மூலம் அறியப்படுகிறது.

ஆபரண் என்ற முதலிரு சொற்பகவுகளையும் இன்னொரு வழியில் நோக்குவோம்.  அப்போது அது, '' பரணில் வைத்துக்கொள்வதற்கு ஆகும் பொருள்'' என்ற பொருளைத் தருகிறது. விலை உயர்ந்த சிறு அணிகலன் களைப் பெட்டிகளில் வைத்துப் பூட்டுவர்; அல்லது  திருடர் மிக்கிருந்த இடங்களில்  மண்ணிற் புதைத்து வைத்து,  வேண்டிய போது எடுத்துப் புழங்குவர். இக்காரணியாலும்,  ஆன பரணின்கண் அடங்குவது என்று இன்னொரு பொருளைத் தந்து,  சற்றுப் பருமையுடைய அணிபொருட்களையே இச்சொல் குறித்தது. 

இச்சொல் இருபொருட் பதிந்த ஒரு சொல் என்பது இவற்றினின்று தெளிவாகத் தெரிகிறது. 

''அணிகலன்'' என்பதில் வரும் அணி என்ற சொல்லும்  அண் என்ற அடியிலிருந்தே வருகிறது.  இவ் அடி,  அடுத்துவருவனவைக் குறிப்பது.  ஒரு கதணியை அணிந்துகொள்வது என்ற வழக்கு,  உடலை அடுத்து நிலைகொள்வது என்ற பொருளில்தான்.  இந்தச் சொல்லின் பொருள்,  ஆ பரண் அண் அம் என்பதிலும் உண்டு;  ஆ+ பரு+ அண்+ அம் என்பதை நல்லபடி நோக்குக.. அணிதல் என்ற சொற்பொருள்,  உடலை அடுத்திருப்பதால் ஏற்பட்டதுதான். அணிபவை அனைத்தும் கலந்து அணியப்படுபவைதாம். கலந்து என்றால் ஒரு நேரம் தோடு, இன்னொரு நேரம் தொங்கட்டான் அல்லது வேறு என்பதுபோலும் கலந்தணிகை.  அதனால்தான் அவற்றுக்கு கலன் ( கல+ அன்) என்று பெயர்வந்தது. பலவகை அணிபொருட்களைக் குறிக்கையில், இவ்வாறுதான் பொருந்தி அமையும். கல என்ற சொல், ஒரு மறைவான பல்பொருட் குறிப்பு ஆகும்.

இதிலிருந்து தமிழின் தற்தோற்ற நெறிமுறைகளையும் அறிந்துகொள்க.  சமஸ்கிருதத்தைத் திறம்பட வளர்த்த நெறியாளர்களும் பண்டைத் தமிழர்களே ஆவர். இதன்பின் அது இவண்வந்த பிறரிடமும் வளர்ந்து பரவியது நாம் செய்த இறைவணக்கத்தின் பெரும்பயன் ஆகும். இவற்றை அறியாக் கதைகளால் மறைக்க முயன்றவர்கள்  யாராயினும் அவர்கள் உண்மை அறிந்து போற்றுவதற்குக் கற்று அமையவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

புதன், 2 செப்டம்பர், 2026

தூபம் சொல்தரவு

 இச்சொல்லை அறிக.

தூபமிடுவதற்குரிய கைப்பிடி ஏனத்தை,  தூபக்கால் என்பர். தடவு, இந்தளம் என்ற பெயர்களும் உள்ளன.  இடுந்தளம் என்பது  சுருங்கி இந்தளம் ஆகியுள்ளது அறிக. எரியும் கரி கீழே கொட்டிவிடாமல் தடுப்பது  தடு+ வு >  தடவு என்பது பொருத்தமான பெயர்,  இதில் உள்ள டுகரம் டகரமாய் அமைந்துள்ளது.  இது தடவுதல் என்ற வினைச்சொல்லுடன் ஒத்திருப்பதனால் தொல்லை இல்லை.

தூவு> தூவம்>  தூபம் என்பதில்  வகரம் பகரமாய்த் திரிந்துள்ளது.  வகர பகரப் போலி.  வகு--- பகு என்பது போலும் வகர பகரப் போலி இதுவாகும்.

தூப  தீப நைவேத்தியம் என்பவற்றில் தூபம் இடம்பெறுகிறது.  தமிழுக்கும் சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் இச்சொற்கள் உரியவை.   தீ > தீபு> தீபம் என்பதும்  நெய்வைத்து இயலுதல் என்பதன் காரணமாக நைவேத்தியம் என்று வந்தது திரிபு. நெய் வைத்து வணக்கம் நடைபெறுதலால் நைவேத்தியம் என்று வந்தது சம ஒலித் திரிபு. 

சம ஒலி என்பது ஓசை ஒத்துவரும் மொழி. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை 


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

தங்கம் -- தகித்தல் : சொல்தரவு.

தங்கம் என்ற சொல்லுடன் தகித்தல் என்பதையும் சேர்த்து ஆய்வுறுத்துவோம். 

இங்கு நாம் ஆய்வு என்பது,  வேர்ச்சொற்களைக் ஆய்ந்து கூறுவதுதான். நூல்களில் பிறர் பலவாறு எழுதி வெளியிட்டிருக்கலாம்.  இது அவற்றைப் படித்து எழுதுவதன்று.   தேவை ஏற்பட்டிருந்தால்,  பிறர் எழுதியது மாறுதலைச் சுட்டிக்காட்ட, குறிக்கப்படலாம்.  அதுவும் எப்போதாவதுதான். இவை எம்  வேர்ச்சொல் ஆய்வுகள் ஆதலால் பிற புறக்கணிக்கப்படுதலே பெரும்பான்மை ஆகும்.

தங்கம் என்ற சொல்,  தகத்தக என்ற இரட்டைக் கிளவியிலிருந்து வருகிறது.  கிளத்தல் என்றால் சொல்லுதல்.  கிளவி என்றால் சொல்லுதல் என்று பொருள்.

தொடர்புடைய சொற்கள்:, 

அனல் -  அனற்றுதல்

கனல்  -  கனற்றுதல்

தகதகத்தல் ,   தகனித்தல்.

தகர்த்தல்.  பல்வேறு துண்டுகளாக அல்லது உடைசல்களாக சிதைத்துப் போடுதல்.  தீயினால் வெந்ததும் இவ்வாறு தகர்ப்புறும்.

தகித்தல்.  இது சுடுதலையும் சீரணித்தலையும் குறிக்கும்.

சீர் அணித்தல் -- சீரணித்தல் என்றால் சீரான நிலையை அடைதல் என்பதுதான்.   ஜீரணித்தல் என்பது முன் தமிழின்  திரிபு.  அணித்தல் என்றால் நெருங்கிச் செல்லுதல்.  அழகாகுதல் என்பதுமாம்.

தக என்பதிலிருந்து ஏற்பட்டதே  தகித்தல் என்பது.  இ-த்தல்,  இடுதல் என்பதன் திரிபு.  டு என்பது அடுதல், சுடுதல், விடுதல், படுதல் என்பவற்றிலும் பிறவற்றிலும் வினையாக்கம் செய்யும் விகுதி.  உ> உடு(த்)தல் என்று வினையானது.  உ என்பது முன் என்பது.

சம(ஸ்)கிருதம் என்பது தமிழுக்குச் சமமான ஒலியமைத்தலுடன் உண்டான மொழி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

தீவிரம் என்னும் பதம்.

 இவற்றைக் கற்றுக்கொள்ளவும்:

விர் -   விரல்   ( விர்+ அல் ).

விர்> விரு> விகு> விகு+ ஆர் + அம் >  விகாரம். ( விரிவானதுடன் சேர்ந்தது மேலும் விரிந்து அமைவது விகாரம்).  கு என்பது சென்றுசேர் குறிப்பு.  ஆர்தல் - நிறைதல். அம் - விகுதியும் அமைதலும்  ஆகும்.

விகாரித்தல்  ,  ஆர்தல் > ஆரித்தல்.  ஆர் என்னும் வினையின் தோன்றிய தொடர்பினதாகிய இன்னொரு வினைச்சொல்.

விர் > விரு> விருத்தம்.

விர்> விரி> விரிவு.

விர் > விரை. விரிதலில் உண்டாகும் வேகம்,  விரைவு.

தீயானது எரிகையில் விரைந்து பரவிவிடும். 

விர்> விரம்.

விரிதலில் பகை உண்டாகும்.  இதனின்று  விர்> விர்+ ஓ(ங்கு) + து+ அம் > விரோதம் என்ற சொல் பிறந்தது. விரிவு ஓங்குவதால் உண்டாகும் பகை உணர்வு.  ஓங்கு என்பதில் கு என்னும் வினையாக்க விகுதி தவிர்ப்புறும்.

விர்> விர்+ அடு> விர்+ அட்டு > விரட்டு. (விரிவதனால் இன்னோரிடம் செல்லுமாறு முடிவது).

இதைப் படித்து,  தீவிரம் என்ற சொல்லின் தமிழமைப்பை உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 27 ஆகஸ்ட், 2026

உத்தரவு - இது எவ்வாறு தரவு செய்யப்பட்டது.

 இன்று இந்தச் சொல்லைப் பார்ப்போம்.

முதலில் தரவு என்னும் சொல்லைப் பார்ப்போம்.

தரவு என்பதில் அடிச்சொல் அல்லது பகுதி  '' தரு '' என்பதுதான்.  இதை வினையடி என்னலாம்.  இதில் ஏற்படும் வினைமுற்றுக்களைச் சொல்வதாயின்,  தருகிறான், தருகிறாள், தருகிறது  எனபனபோலும் சில கூறலாம். ஆனால் தமிழ் ஓரளவே அறிந்தவனுக்கு,  தரவு என்பதும் தருகிறான் என்பதும் தொடர்பற்றவையாகத் தோன்றும்.  அப்படித் தோன்றுகிற ஒருவன் சொல்லாய்வு அறியாதவனா யிருப்பினும், மொழியை வேறு கோணங்களில் நன்கு  அறிந்து பயன்பெறத் தக்கநிலையில் இருப்பானாகவும் இருத்தல் கூடும். மொழிப் பயன்பாட்டாளன், சொல்லாய்வு அறியாமலே ஒரு நல்ல கட்டுரையோ கவிதையோ எழுத அறிந்திருக்கலாம்.  இலக்கணம் அறியாமலே பலர் மொழியை நல்லபடி பிழையின்றிப் பயன்படுத்தும் திறனுடையார்.

தரப்படுவது தரவு.

உ என்பது பண்டைத் தமிழில் இருந்த, இன்னும் இருக்கின்ற  ஒரு சுட்டுச்சொல்லாகும். இதன் பொருள் ''முன்னிருப்பது''  என்பதாகும்..  அதிகாரத்தில் நமக்கு மேலிருப்பவர்  அல்லது நமக்குக் கட்டளைகள் பிறப்பிக்கத் தக்க ஒருவர்,  அக்கட்டளையைப் பிறப்பித்துக் கடைப்பிடிக்குமாறு நம்மைப் பிணிப்பதே  உத்தரவு ஆகும்.   உ என்பது முன்னிருப்பது என்பதை ''உன்''  என்னும் சொல்லிலிருந்து அறிந்துகொள்ளலாம்.   உன் தாய் என்பதில்  என்பவள் உனக்கு முன்னிருந்து உன்னைப் பெற்றவள். இந்தச் சொல்லின் மூலம் ''உ''  என்ற சுட்டுச்சொல் தான்.

தமிழ்ச் சொற்கள் என்பவை,  தமிழில் காணப்படலாம்.  சமஸ்கிருதத்திலும் காணப்படலாம்.  தமிழிலிருந்து திரிந்த சொற்களும் திரியாத சொற்களும் சமஸ்கிருதத்திலும் வழங்கும் என்பதறிக.  

தமிழில் திருக்குறள் பாடியவரே  சமஸ்கிருதத்திலும்  சாணக்கியர் என்று அறியப்படுகிறார்.  நம் எழுத்துக்கள்,  ஆக்கங்கள் பல்வேறு இடங்களில் பதிவு பெற்று இருக்கின்றன.  ஒவ்வோரிடத்தில் வேறு நபர் என்று எண்ணபடும் ஒருவரை சிலவேளைகளில் அறிந்து சிலர் வியப்பதுண்டு. அதுபோலவே இதுவும்.

ஒவ்வொரு கருத்தினையும் ஒரு சாணுக்குள் அடக்கிவர்தாம் சாண் அ(ட)க்கியவ்ர்.  இந்தப் பெயரில் அடக்கியவர் என்பதில் உள்ள (ட) குறுக்கப்பட்டுள்ளது.  ட முதலிய கடும் ஒலிகளை ஒடுக்கிச் சொல்லமைப்பது ஒரு திறமையும் நற்புத்தியும் ஆகும்.  இலக்கணத்தில் இதற்கு இடைக்குறை என்று பெயர். கவிதையில் இது வரும்:  என்னில் -  எனில்  என்பது காண்க.  பேச்சிலும்  வாருங்கள் என்பது வாங்க என்றாகும். இச்சொல் ள் மறைந்து கடைக்குறையும் ஆகும்.

இச்சொல் அடக்குதல் -  அக்குதல் தான்  (  ககர மெய் நீக்கினால்),  என்றாலும் அதை அஃகுதல் என்றே முன்னோர் எழுதியதால் நாம் அதையே பின்பற்றுவோம்.  அக்கம்பக்கம் என்ற சொல்லிலும் அக்கம் என்பது  ஓர் தொலைவுக்குள் அடங்கிய பகுதி என்பதே குறித்து,  டகரம்  ஒழிந்தமை தெரியக்காட்டும்.

சம ஒலியமைப்புடன் அடுத்து நின்ற மொழி சமஸ்கிருதம்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

புதன், 26 ஆகஸ்ட், 2026

பூமியை அகழ்ந்துகொண்டிருத்தல்.

 மிகுவதெலாம் புகுவதற்கோ பூமி  வேண்டும்

புகுவதெலாம் புன்மைதாம்  பொய்கள் என்றால்

''புகுமி'' யெனும் பூமியனை பொங்கு வாளே

பொறுத்திடவே திறன்தானும் உண்டோ சொல்வீர்

வெகுள்வதுவும் வீசுவதும்  வெள்ளம் என்னும்

விளைவனைத்தும் பூமிஇவள் சீற்றம் அன்றோ

தகுமுறையில் உணருவனோ தாழ்ந்த மாந்தன்

தாரணியோ தருபொறுமை தாழா மைக்கே.


( சந்தம் மாறுகிறது)


உயிர்பெற்று வாழ்கின்ற மனிதன் பூமிக்

குயிரில்லை என்றுள்ளில் நினைத்துக் கொண்டு

தயை ஒன்றும்  பாராமல் அகழ்ந்து வீசித்

தகைநீங்கு அன்முறையால்  செயல்கள் செய்தார்

பெயல்மிக்கு  வளிவீச்சு  அழிவு  கூடி

பேணாமை தாளாமை ஒழிந்து  யாரும்

அயல் எனவே கருதாமல்   மயலும் நீங்கி

அனைவருமே ''அக உதரம் ''  அடைந்து வாழ்க


பொருள்:

தாரணியோ -  பூமியோ, ( நிலமடந்தை என்பவள்)

தாழாமைக்கே ---  குறையாமைக்காகவே

அக உதரம் -  சகோதரம் அல்லது உடன்பிறப்பு ( உதரம் - வயிறு)

தயை  - அன்பு   

உள்ளில் நினைத்துக்கொண்டு-  வெளியில் சொல்வதில்லை.

பூமியனை -  பூமிய(ன்)னை ( தொகுத்தல்)

அன்முறை -  அநியாயம்

பேணாமை - பாதுகாவல் செய்யாமை

தாளாமை - பொறுத்துக்கொள்ளாமை

மயல் -  தெளிவின்மை

பெயல் - மழை, மிக்கு -  அதிகம் ஆகி

அக உதரம் >  சக உதரம் > சகோதரம்.-  சகோதரத்துவம்.

இவ்வாறு சொல் திரிந்தது.


உட்கருத்து.  எங்கு அகழவேண்டுமோ, அங்கே நிறுத்திக்கொள்வது

மனித குலத்துக்கு நல்லது.  இமயமலையிலெல்லாம் போய் அகழ்ந்தால்

விளவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது.


மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 24 ஆகஸ்ட், 2026

சிறு(த்) திறமும் சித்திரமும் ( Post restored )

 சித்திரம் என்ற சொல் அழகானது. இதைப் பயன்படுத்தி பாரதிதாசனின் கவிதை ஒன்று உலவுகிறது.

சித்திரச் சோலைகள்

சித்திரச் சோலைகளே உமை நன்கு
திருத்த இப் பாரினிலே --- முன்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே.

இந்தப் பாட்டில் சி என்ற எழுத்திற்கு தி என்பது மோனை.  யாம் புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை யாகையால் இதில் மூலத்துடன் வேறுபாடுகள் இருந்தால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். யாம் குறிப்பிடுவது சித்திரம் என்ற சொல்லைத்தான்.

சித்திரம் ஓவியம் என்பனவெல்லாம் ஒப்புமைக் கருத்தில் தோன்றி அமைந்த சொற்கள்.  உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அமைப்பில் ஒற்றுமை இருப்பின், அதுவும் சித்திரமே.  திரம் என்பது திறம் என்பதன் திரிபு.  பின் விகுதியாகிவிட்டது. இதுபற்றி முன் கூறியுள்ளோம்.  காண்க.

ஒன்றைப்போல் சிறிதாகச் செய்யப்பட்டது  அல்லது எழுதப்பட்டது சித்திரம் என்றும் கூறுவதற்குப் பொருந்திய சொல் சித்திரம்.   சிறுத் திரம் >  ( இதில் றுகரம் குன்றி இடைக்குறையாகிச்)  சித்திரம் என்றும் வரும்.  இது பின் சமஸ்கிருதம் சென்று இடம்பிடித்தது.  ஆகவே நல்ல தமிழ்ச்சொல்.

செத்தல் என்றால் ஒத்திருத்தல்.

செ என்பதே அடிச்சொல். திரம் என்பது விகுதி.  இந்தத்  திரம் விகுதி திறம் என்ற சொல்லினின்று அமைக்கப்பட்டது.  திறம் > திரம்.  சில விகுதிகட்குப் பொருளிருக்கலாம்.  பல விகுதிகள் தம் பொருளிழந்து வெறும் சொல்லிறுதிகளாகவே பயன்படுகின்றன.  சொல்லமைப்பில் அவற்றின் வேலை அடியை மிகுத்து இன்னொரு சொல்லுருவை உண்டாக்குவதுதான். அதனால்தான் அவை விகுதி எனப்பட்டன.  மிகுதி > விகுதி.  சொல்லை மிகுத்து உருவாக்குதல். மகர வருக்கச் சொற்கள் வகர வருக்கங்கள் ஆகும்.  வருக்கம் என்றால் வருதல் தன்மை அல்லது உருவம்.  வரு> வரு+கு+ அம்= வருக்கம்.  வருகின்ற கொடிவழி.

 மி>வி:  இப்படித் திரிந்த இன்னொரு கிளவி: மிஞ்சு > விஞ்சு.

செ + திரம் = செத்திரம்.  இதுபின் சித்திரம் என்று திரிந்தது.  அதன்பின் செத்திரம் என்ற  சொல் பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்திலிருந்தும் காணாமல் போய்விட்டது.  இப்படித் தொலைந்தவை பல. செத்தல் என்ற சொல் இருப்பதால் இதனை நாம் அறியலாகிறது.

ஆய்வின்படி சித்திரம் என்பது சரியான சொல் அன்று.  செத்திரம் என்றே இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் சித்திரம் என்றால் பின்னை வடிவம் அழகாகவே அமைந்திருத்தலின் அதனையே ஏற்று வைத்திருப்போம்.

ஒத்தலும் செத்தலும்

இது ஒத்தல் என்ற சொல்லினின்று செத்தல் என்று அமைந்திருக்கவேண்டும். ஒகரச் சொல் எகரத் தொடக்கமாதலும் உண்டு.  எடுத்துக்காட்டாக எழுப்பு என்ற எகரச் சொல் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஒழுப்பு என்று வழங்குகிறது. கந்தனை ஒழுப்பிவிடு என்பர்.  ஆகவே  ஒத்தல் > எத்தல் > செத்தல் என்பது தெளிவு. அகர வருக்கங்கள் சகர வருக்கங்கள் ஆகும்.  எத்தல் என்பது செத்தல் ஆன கதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எப்போதும் எழுதுகோலும் கையுமாக இருந்து திரிபுகள் காதில் விழும்போதெல்லாம் உடன் பதிவு செய்துகொள்ளவேண்டும்.  இப்போது தொலைப்பேசிகள் மிக்க வசதியைத் தருவனவாய் உள்ளன.

செத்துப்போ என்ற சொல்லில் பகுதி செ என்பதன்று.  சா என்பதே  ஆகும்,  சா> சாதல்.  சா - செத்தல் அன்று.   செத்து என்ற வினை எச்சம்  சா > சத்து என்பதே. ஏனைத் திராவிட மொழிகளில் சத்து என்று சரியாக எச்சம் வழங்குகிறது.  தமிழில் செத்து என்று திரிவடிவம் கொள்கிறது.  இதைக் கொண்டுபோய்  ஒத்தலாகிய செத்தலுடன் ஒப்ப வைத்திடுதல் தவறு.

ஓவியம் என்ற சொல்லிலும்  ஒ என்பதே பகுதி அல்லது அடி.  ஒ > ஒத்தல்.
ஒ+இயம் = ஓவியம்.  ஓ+ அம் =  ஓவம்.   என்றால் சித்திரம்.  ஓவச் செய்தி என்று மு வரதராசனார் ஒரு நூல் எழுதியுள்ளார்.  அதைப் படித்து ஓவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில் ஓவம் என்பது கருமுட்டை; அது வேறு சொல் ஆகும்.தமிழில் ஓவம் என்றால் ஓவியம்.  ஒன்று ஓ+ அம்; இன்னொன்று ஓ+இயம் ( இ+அம்).  ஒத்தல் என்பதில் உள்ள குறில் ஒகரம் ஓ என்று நீண்டதால்  முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  சுடு> சூடம் என்பது போல.

புலிக்கு ஓவியகாயம் என்பதொரு பெயர். அழகிய புலி அடித்துக் கொன்று கடித்துத் தின்றிடும். காய்ந்தொழியும் காயமே உடைத்தாயினும்  ஓவியமாய் உலவுவது புலி.

சி - செ/  செ- சொ  திரிபுகள்

சித்திரம் ஓவம் ஓவியம் என்பன ஒப்புமைக் கருத்தினவாகும்.  சித்திரம் என்பதன் தகப்பன் செத்திரம்.  அது இப்போது மட்கிவிட்டது.

ஒப்பு நோக்குக:  செந்தூரம் > சிந்தூரம்.
                                  நெட்டூரம் > நிட்டூரம் > நிஷ்டூரம்.  நெடிது ஊர்ந்துவரும் துயர். எ-இ வகைத் திரிபு.  ஊறு என்பதே  ஊறம்> ஊரம் என்றானது எனினும் ஒப்புக.   ஊறு என்பதும் ஒத்த பொருளினைத் தருவதாம்.

நம் பாட்டன் பாட்டிகள் இல்லாமை போலவே சொற்களும் அவற்றின் பாட்டன் பாட்டிகளை இழந்துவிடுகின்றன. இருந்தால் கொண்டாடுங்கள்.  இருப்பின் பொறுப்பு டன் போற்றுவோம்.

பிழை இருப்பினும் புகினும் பின் திருத்தம்.பிழை என்றால் தட்டச்சுப் பிழை. கருத்தில் பிழைகள் இரா.

அறிக; மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

இதிலிருந்த எழுத்துக்களில் பிறழ்வு ஏற்பட்டுச் சில காணமற்போய் விட்டன.  இப்போது திருத்தி அமைக்கப்படுகிறது. 27.08.2026    0727 மணி.


















வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

நிமிஷம் நிமிடம் எப்படி அமைத்தனர்?

 ஒரு சொல்லை  அமைக்கப் பல தந்திரங்களைக் கையாளவேண்டியுள்ளது.  அவ்வாறு அமைப்பதில் இலக்கணம் படித்த புலவர்கள் திறனுடையோர் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை முழுவதையும் கல்வியில் செலவிட்டுப் பலவற்றை அறிந்து உளப்புலம் அடைந்தோரை நாம் போற்றத்தான் வேண்டும்.  என்றாலும் சில பழஞ்சொற்களை ஆய்வுசெய்கையில், பாமரர்கள் புலவர்களை வென்றுவிட்டதைப் போலவே தெரிகிறது.

நிமை என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  நிமைத்தல்  என்பது வினைச்சொல். இது இமைத்தல் என்றும் வரும்.

நிமை இடும் நேரமே  நிமிடம் எனப்படுகிறது.   நிமை+ இடு+ அம் >  நிமிடம்.  நிமை என்பதில் உள்ள ஐகாரம் குன்றிப் புணர்ந்தது.  இது சொல்லாக்கப் புணர்ச்சி.  நிமை எனற்பாலது நிம் என்று நின்றது.

நிம் என்பது ஓர் தமிழ் அடிச்சொல்.  நிம்> நிமிர் என்பதில்,  மனிதன் கூனுதல் இன்றிச் சரிப்படுத்திக்கொள்கிறான். நிம்+ ஐ > நிமை என்பதில்  நிற்கும் இமை தன் இயக்கத்தை மேற்கொள்கிறது.  இதில் சேர்ந்த ''ஐ''  இதைக் குறிக்கிறது. நிமைத்தல் என்பது  ஆகும் தொழிற்பெயர்.   இமைத்தல் என்பதும் அது.

நிமித்தம் என்பது நிமிர்ந்து இடுவித்தலுக்கான  நோக்கினைக் குறிக்கிறது.  இங்கு ''இடுத்தம்''  என்பது குறுக்கப்பட்டது.  வல்லொலியான டுகரம் விலக்குண்டு சொல் நன்கு அமைகிறது.    இது சொல்லாக்கத்தில் கடைபிடிக்கப் படும்.  எ-டு:  பீடு+ மன் >  பீமன். பீடுடைய மன்னன் என்பது. காரணப்பெயர்.  

ஒரு மத்து என்பது  சுற்றியுள்ளவற்றை மருவிச் சுற்றுகிறது.   அதனால் அதற்கு இப்பெயர் வந்தது.    மரு> மருத்து> மத்து என்று ருகரம் நீங்கியது காண்க. 

ஒரு பொருளின் நடு என்பது அதன் சுற்றியுள்ள பாகங்களை மருவி நிற்பது ஆகும்.  மருவாமை இருப்பின் அது நடுவாகாமை உணர்க. மருவி இயல்வதினால், மருத்து+ இயம் >  மருத்தியம்>  மத்தியம்  ஆயிற்று. ருகரம் நீங்கிற்று.  இந்நீக்கம், நாட்கடப்பினாலோ,  கருதி விலக்கினதாலோ நடைபெறலாம்.

நிமிடம் ( நிமை+ இடு+ அம்)  என்பது சரி. இதில் இடு என்பது பொருந்தி நிற்கிறது.  நிமிஷம் என்பது  சம ஒலி அமைப்பு ஆகும்.  அதுவே சம(ஸ்) கிருதம் என்பது.  கத்து> கது> கதம்> கிருதம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


புதன், 19 ஆகஸ்ட், 2026

திவாகரன்

இந்தச் சொல்:  '' திவாகரன்''  என்பது.  இவனுக்கு ( சூரியனுக்கு),  ஆதித்தன் என்ற பெயரும் உள்ளது.

இதைத்  தீ+வார்+ கு+ அரு+ அன்:   தீயைத் தொலைவிலிருந்தே வாரிக் கொணர்ந்து அருகில் சேர்த்துச்  (சூட்டைத்) தருபவன் என்பது எமக்கு நன்றாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவிடலாம்.  சூட்டைத் தருபவன் சூரியன் என்பதற்கு இது இனிய இணைப்பைத் தருகிறது.  சூரியன் என்பது  அன் விகுதி இல்லாமல் சூரியா என்று இருந்தாலும்  அதுவும் நலமே.  மடி> மரி என்ற இரண்டும் ஒருபொருள் தரும் போலிகள்.  டி என்பது ரி என்பதற்குப் போலியாக வரவில்லை?  என்ன வேறு ஆதாரம் வேண்டிக்கிடக்கின்றது.

இந்தச் சொல்லைப் பலவழிகளில் விளக்கலாம்.  இச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கமுடையது ஆகும்.    பல ஆயிரக்கணக்கான அடிச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி.  இதிலுள்ள மூலங்கள் எல்லா உலக மொழிகளிலும் பரவியுள்ளது.  சமஸ்கிருதம் என்பது இன்னொரு மொழி.  அதுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்பதைச் சிந்திக்கவேண்டும்.   சமம்+ கதம்> சமக்கதம்> சங்கதம்.  என்றால் சமஸ்கிருதம்.   சமம் + ஸ்+ கதம் >  சமம்+ ஸ்+ கிருதம்>  சமஸ்கிருதம்.  இது என்ன பொருள் என்றால் சமமான ஒலியமைப்பு உடைய மொழி என்று பொருள்.  தமிழின் அடிச்சொற்களுடன் ஓரொலி உடைய மொழி சமஸ்கிருதம்.   ஏன் கிருதம் என்று  சொல் வந்தது என்றால் மகம்> மிருகம் என்பதுபோல்,  கதம்> கிருதம் என்று முடிந்தது.  அவ்வளவுதான் தெரியவேண்டியது.  

கதம் என்பது, கத்து என்பது ஓரெழுந்துக் குறைந்து,  கது என்று வந்தது. அம் விகுதி வந்தது. கது என்பதே நீண்டு காது என்று வந்து ஒலிவாங்கி என்ற பொருளைத் தந்தது.  இன்னும் பல. இது நிற்க.

திவாகரன் என்பது சமஸ்கிருதம் என்றாலும் சரிதான்.  தமிழ் என்றாலும் சரிதான். திவாகர் என்றாலும் வேறுபடாது.

திருவாகும் அரன் >  திருவாகு அரன் >  திருவாகரன் >  திவாகரன் என்றும் வரும். இப்படி வந்தால் அது ஒரு சொற்றொடராய் வந்து,  ஒரு சொல்லாகி,  ரு என்பது இடைக்குறையாகி,  திவாகரன் என்று வரும்.   யாரைக் குறிக்கிறது.  சிவனைக் குறிக்கும்.  சூரியனையும் குறிக்கும்.   பண்டைத் தமிழரின் வரலாற்றின் அவர்கள் இயற்கை எழிலர்களான சூரியன், சந்திரன், உடுக்கள் என இவற்றையும் தேவர்கள் என்றே கொண்டனர். நாளடைவில் சிவனைத் தனியாக அறிந்துகொண்டனர்.  

அர்> அரு> அருகுதல்  ( பலவாக இல்லாமை).  அர் > ..   இது சிவப்பு என்றும் பொருள்.  எ-டு:  அர்> அரத்தம் >  இரத்தம் > ரத்தம் ( சிவந்த நீர்,  செந்நீர் என்றும் கூறுப.  மனிதர்கள் பெருகியதுபோல் சொற்கள் பல பின் தோன்றின. தொடக்கத்திலே இலக்கக் கணக்கில் தோன்றிவிடவில்லை. அர் என்றால் ஒலி என்றும் பொருள்.  அர்> அருச்சனை> அர்ச்சனை என்பதில் ஒலிப்பொருள். அர்> அரசன் என்பதில் ஒலிசெய்து மக்களை ஒன்றுகூட்டுவோனைக் குறித்தது. படைநடத்துகையில் இன்றும் இதை உணர்ந்துகொள்ளலாம். இது நிற்க.

இனித் தீ(ய்)வு + ஆகு+ அரன் >  தீவாகரன் > திவாகரன் என்று பார்ப்போம். தீய்வு ஆகுமாறு அருகில் இருப்போன்.   சிவனும்  தீமை செய்வோரை தீய்ப்பதற்கு  அருகில் இருப்பவன் தான்.  அரன் என்பதற்கு தீயோரை அரித்தெடுப்போன் என்ற பொருளும் கூறியுள்ளனர். அரி+ அன் >  அரன் என்பதில் ரி என்பதன் இகரம் கெட்டது.

மற்றொன்று:  தீ+ வா( ர் )+ கு + அரன் >  திவாகரன்  ஆகும்.  தீயை அல்லது அதில் வரும் ஒளியை வரச்செய்து அல்லது வாரித்தந்து செயல்புரிவோன் என்க. 

இன்னும் உள.  இன்னொரு பதிவில் வெளிப்படுத்துவோம். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

[இதை வரையும்போது சில பாகிகள் முன்னுக்குப் பின்னாக மாறிவிட்டன. இது யாம் செய்யாமல் கணினி தானேகவே செய்துவிட்டது.  எனினும் யாம் இதில் ஏதும் மாற்றாமல் விடுத்துவிட்டதே நலம் என்று கருதுகிறோம். ]

சனி, 15 ஆகஸ்ட், 2026

''பெலக்கப் பேசு'' என்றது -. கோஷம் என்பது



''பெலக்க'' என்ற எச்சவினை, இன்னும் வழக்கில் உள்ளது. '' தம்பீ, கொஞ்சம் பெலக்கப் பேசினால்தான் எல்லாருக்கும் கேட்கும்'' என்னும்போது, இச்சொல் வந்துவிடுகிறது. இந்த எச்சத்துக்கு உரிய முழு வினைச்சொல், '' பெல(த்தல்)'' என்பதுதான்.

எடு> எடுக்க. கெடு> கெடுக்க, வெறு> வெறுத்த என்பனபோலும் வினையின் போந்த எச்சமே இதுவாகும். தொழிற்பெயர்கள் எடுத்தல், கெடுத்தல், வெறுத்தல் என்பனவாம். இளை> இளைத்தல் என்பதும் காண்க. ஆகவே பெலத்தல் என்பது நன்றுதான். பெலக்குதல், பிலத்தல் என்ற வடிவங்களும் கிடைக்கின்றன. இவை ஏற்புறவே, பலத்தல் என்ற சொல் ஏற்புறாது போகுமோ. வலத்தல் என்பது பொருள் திரிபுடன் வருகின்றது. இது சொல்லல், நினைத்தல், வளைத்தல் என்றும் பொருள்தரும்.

இருநூறு முன்னூறு ஆண்டுகட்கு முன் வெளிவந்த அகரவரிசைகள் ஆய்வுக்கு வேண்டியவை ஆகும். அவற்றைக் காத்து வைப்பதற்கு நடவடிகைகளை தமிழரசுகள் உதவவேண்டும்.

வல் என்பதே அடிச்சொல். வல்- வலம்> பலம் என்பது திரிபு. ''பலத்த கைதட்டல்'' என்பது இன்றும் வழக்கில் உள்ளது.

கோடு என்றால் தமிழில் வளைவு என்று பொருள். சங்கப் பாடலில் '' கோடுயர் உச்சி'' என்றால் வளைவான உச்சி( மலை) என்பதுதான். பண்டை மக்கள் வளைவாக நின்றுகொண்டு ஒலி எழுப்பியதே அடிக்கடி நிகழ்வாகும். கோடு> கோடம் என்பது வளைந்து நிற்றல். இது ஒலி எழுப்புதலையும் குறித்தது. பின்னர் கோடம்> கோஷம் என்று மெலிந்தது. கோடித்தல் > கோஷித்தல். கோடித்தல் என்பது வழக்கிறந்தது. கோஷம் தான் கோடம் ஆனது என்று பிறழ நினைத்தனர். வேஷம் என்பதற்கு யாம் தந்த விளக்கத்தைப் படிக்கவும். வேய்ந்துகொள்ளுதலே வேஷம். மேலிட்டுக்கொள்ளுதல். ட என்பது ஷ் என்பதன் சம ஒலி ( சமகதம் > சங்கதம் > சம(ஸ்)கிருதம்).

கோடு என்பது எல்லையாதலால், கோடம் என்றும் சொல்வர். ஆனால் இது பெரிதும் வழக்குப்பெறவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

சனி, 8 ஆகஸ்ட், 2026

அபலை என்பது. ஆண்பால் அபலன்.

 அபலை என்பது  கைவிடப்பட்ட பெண்ணைக் குறிக்குமென்பர்.  இந்தப் பொருளை இங்கு ஆய்வு செய்வோம்.

இதில் வரும்  பலை என்ற இறுதி,  பலம்+ ஐ <  பல+ ஐ <பல்+ ஐ  எனவரும்.  பல்  என்பது பலம் என்ற சொல்லின் அடிச்சொல். இது வழக்கில் பலமில்லாதவன் என்பதில் பயன்பாடு காணும்.   ஆளும் கட்சி பலமிழந்தது என்ற வழக்கைக் காண்க.  அபலன் என்பது அபலை என்பதன் ஆண்பால் வடிவம்.

பலம்   என்ற சொல்,  பிற்காலத் திரிபு.  முன் அது  வல்- வலம் என்றே இருந்தது.  பகர வகரப் போலியை உணர்ந்துகொள்ள வகு> பகு என்பதைக் கண்டுணரலாம்.

வந்து இரு  என்பதே  வந்திரு >  வது இரு>  ( ரு குன்றி) >  வது இ > வதி என்றானது. இதை வந்திரு> வந்தி> வதி என்றும் காட்டலாம்.  வந்தி இடைக்குறை வதி என்பதுணர்க.  ரு மறைவு கடைக்குறை ஆகும்.  பின் வகு > பகு போல வதி > பதி என்று சொல்லமைந்தது. இது வகர பகரப் போலி.

அல் என்பது கடைக்குறைந்து,   அ+பலை  என்று சேர்ந்து அபலை ஆயிற்று.

வதிதலாவது,  குடியிருத்தல்.  பதி என்ற கணவனைக் குறிக்கும் சொல்,  வந்து பெண்வீட்டில் தங்கிக் குடித்தனம் செய்தவனைக் குறிக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

தனுஷ் என்பது (வில்)

 வில் என்று குறிக்கப்படும் கருவி,   பழைய தொடக்கத்தின்போது,  மரத்தண்டுகளால் ஆனவைதாம்.  நல்லபடி வளைந்துகொடுக்கும் தண்டுகளால் இந்த வில்கள் அமைக்கப்பட்டன.

தண்டு என்ற  சொல்:  தண் என்பது அடிச்சொல். இதில் வந்த டுகரம்,  உண்மையில் '' து''  என்பதுதான்.  பின்னர் '' டு''  என்பதே ஒரு விகுதியாகக் காட்டபட்டிருக்கலாம்.  எதுவாயினும் சொல்லமைந்தபின் அது பயன்பட்டு, புழங்கப்படுகிறதா என்பதுதான் அந்தச் சொல்லின் நீடிப்புக்குக் காரணம்.

தண்+ து >  தண்டு.

தண்+ டு > தண்டு. 

மேலது புணர்ச்சி காரணமான திரிபு  ஆகும்.

தண் என்பது தண்மை அல்லது குளிர்ச்சிக்கும் வரும் அடிச்சொல்  ஆகும்.

தண்டுவடம்,  தண்டுக்கீரை என்ற சொற்களில்,  தண்டு என்பது தண்மை என்னும் குளிர்ச்சியைக் குறிக்கவில்லை.  கம்பு, கம்பம் என்பனவும் தண்டு குறிக்கும்.

தணுஷ் என்ற சொல்லில் டு அல்லது து என்பதற்குப் பதில் ஷ் வந்தது.  தண்> தணு> தணுஷ்.     தணு என்பது உகரத்தில் முடிந்த சொல்.   கண்> கணு என்பது போல.

தணுஷ் என்பது வில் குறித்தமையால் இது ஒரு கருவிக்குப் பெயராய் வழங்கியுள்ளது.

தண்டு என்பது படையினர் வைத்திருந்த ஆயுதம் ஆதலால்,   அது படையையும் குறித்தது. தண்டு என்பது வில்  (தணுஷ்).  தண்டெடுத்தல் என்பது படையை இயக்குதலையும் குறித்தது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

புதன், 5 ஆகஸ்ட், 2026

வாக்கு

 வாக்கு என்பதன் சொல்லாக்கம்  அறிவோம்.

வாக்குதல்  என்ற வினைச்சொல்லும் உள்ளது.  இதன் பொருள் வார்த்தல் ( வார்த்தெடுத்தல்) என்பதாகும். 

வார்த்தல் என்பது, தனித்தனியாக வகைப்படுத்தி ஒவ்வொரு வார்ப்பையும் ஒரு குறித்த அளவுடன் எடுத்தல் என்று சொல்வர். இதைச்செய்ய ஏனங்கள் இருக்கும். இவை பலகார வகையாக இருக்கலாம்.  உலோகக் கட்டிகளாகவும் இருக்கலாம். இவ்வாறு செய்தல் ஒருவகை வகுத்தமைத்தலே ஆகும். வார்த்தல் என்பது ஒருபக்கம் நீளமாக வரச்செய்தல் என்றும் கொள்ளலாம். வார்த்தலில் வேறுபாடுகள் உள.

வகு> வாகு> வாக்கு.

வகு > வார்.

வகு > வகை> வாகை   (வாகை என்பது வகைகளை உடைமை என்றும் பொருள்தரும்.)

வகு> வாகு> வாகை.

இவற்றின் பொருளை நிகண்டுகள் வாயிலாக அறிந்துகொள்க.

சொற்களும் பலவேறு வகையின  ஆதலின்,  வகுக்கப்பட்டவை எனலாகும்.

வாய்>  வா>  வாக்கு என்று அமைதலும் ஆகும்.  இது நா> நாக்கு என்றபடி அமைதலே.

ஆகவே இச்சொல் இருபிறப்பி என்று முடிக்கவேண்டும். வாய் என்பதை வா என்று யகர மெய் விடுத்துப் பேசுவோரும் உளர்.  வாய்ப்பேச்சு>  வாப்பேச்சு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

திருநாமகரண அழைப்பிதழ்

 


1940 வாக்கில்  இலங்கைப் புலவர் திரு. சேகரம் பிள்ளை ஒரு விழா எடுத்து எமக்குப் பெயரிட்டார்.  அவர் இட்ட பெயர் மாசிலாமணி என்பது. இதுநாள் வரை இதுவே எம் பெயர். இதன் அசல் திருட்டுப்போய் விட்டது.  இவர் பத்திரிகை ஆசிரியர் ஆதலால், இவர் நடாத்திய இதழ் பற்றிய வரலாறு  அரசு பதிவகத்தில் இருக்கும். (1935 முதல் 1940 வரை). இவ்விதழின் பெயர்: ''புதிய உலகம்''   என்பதாகும்.

திரு சேகரம் பிள்ளை அவர்கள் இலங்கையிலிருந்து வந்து முதன்முதலாகத் தங்கிய இடம்:  சிறம்பான் என்ற நகரம். இங்கு ஒரு தமிழர் சங்கீத சபா  ஒன்று இவரது  ஆதரவில் நடைபெற்று வந்தது என்று தெரிகிறது.  இதை இளநாட்களில் எம்மிடம் பழகிய பெரியோரிடமிருந்து யாம் அறிந்துகொண்டோம். 

அப்போது ஒரு பாட்டுப்புத்தகமும் கிடைத்தது.  அதன்  ஆக்கியோர் கவி காருண்யம் என்பவர். அவர் கவிதை நூலுக்கு சேகரம் பிள்ளை ஒரு மதிப்புரை வழங்கி இருந்தார்.  அதில் அவர் பாடிக்கொடுத்த ஒரு சாற்றுகவி இவ்வாறு இருந்தது.  

உயர்ராக நாதபுரம் தனிலேதான்
ஓங்குபுகழ் தாங்குகீழைச் சீவல்பட்டி, 
தயவுநிறை மக்களுறை மாங்கொம்பாம்
தங்கபுரி மங்களம்சேர் சிங்கமான
புயவலியன் கருப்பையா தந்தபுத்ரன்
பூதலத்துச் சமுகச்சீர் திருத்தவல்லன்,
நயமாகத் தருசமத்வ கீதமீந்த
நாட்டவர்கள் கேட்பதற்கோர் நல்லநூலே.

 இவர் இலங்கை சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் மாணவர். கொழும்பு பலகலை அல்லது கல்லூரியில் தமிழ்ப்புலவராகத் தேறித் தமிழ்ப்புலவர்ப் பட்டம் பெற்றவர்.   இவருக்கு  திரு வி. கல்யாண சுந்தரனாரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன என்று திரு அடைக்கலம் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டேம்.  எனது மாணவப் பருவத்தில் இவர் பதிப்பித்த இதழின் படிகள் ( பிரதிகள்) சில இருந்தன.  அவற்றில்  வெண்பாக்கள், விருத்தங்கள் , விடுகதைகள், குடும்பக்கதைகள் முதலிய பல இருந்தன. இவற்றைக் கற்றறிய ஆவலும் இருந்தது. இவற்றின் காரணமாகவே,  ஆரிய சமஜத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த திரு  அப்பாத்துரைச் செட்டியார் என்பவரிடம் சென்று யாமும் தமிழ் கற்றுக்கொண்டோம். அப்போது யாம் சிங்கப்பூர் செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்தோம். இது ஓர் அரசு உதவிபெற்ற கிறித்துவ உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.

எமக்குப் பெயரிட்ட காலத்தில் எம் அம்மாவின் பெயர் எதுவும் இந்த அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.  யாம் ஜோசப் பள்ளியில் சேருங்காலத்தில்  என்னிடம் இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் இருந்தன. இவற்றில் பெயர் முதலியவை கையெழுத்தால் எழுதப்பட்டவை. இவற்றை பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஒரு வெள்ளி கட்டணத்துக்குப் பதிலாக ஐந்து வெள்ளி மாதம் வசூலிக்கப்பட்டது என்பதும்  எம் நினைவில் உள்ளதாகும்.