புதன், 15 ஜூலை, 2026

அரம்பை, அரம்பையர், ரம்பை, ரம்பா

 இந்தச்  சொற்கள்  வழக்கில் சற்று  குறைந்துள்ளன என்று தெரிகிறது.

அரம்பை என்பவள் ஒரு தேவருலக மாது என்பர். இச்சொல் பன்மையில் அரம்பையர் என்று வரும். இச்சொல் தலையிழந்தபின்,  ரம்பை, ரம்பா என்றும் வழங்கும்.

அரம்பை என்ற சொல்லின் பகவுகள் ( உட்பிரிவுகள்),   அரு+ அம்+ பை  என்பன. இவற்றை இணைத்தால் ''அரம்பை''  என்ற சொல் வந்துவிடும். பாணினியில் சமஸ்கிருதச் சொற்பிரிப்பின்படி,  வேறு பிரிப்புகள் இருக்கும்.  பிற எழுத்தாளர்கள்,  வேற்று விளக்கங்களும் அளித்திருப்பர்.  அவற்றை  அவர்களின் நூல்களில் அறிந்துகொள்ளவும். அரம்பை -  பாற்கடற் பாவையருள் ஒருவர்.

அரு என்பதே முதற்பகவு.  அரிய என்ற பொருள்தரும்.

அம் என்பது அழகைக் குறிப்பது. அம் - அம்மை : அழகு.

பை என்பது இளமை குறிக்கும் அடிச்சொல்.   பை> பய் என்றும் வரும்.  பய்> பயில். பயிலுதல் -  தொடக்கப் படிப்பைக் குறிக்கும்.  பய்- பயிர்:  முளைப்பனவில் இளம்பகுதி.  பய் > பயம்:  ஒன்றை முழுமையாக அறியாத போது தோன்றும்  அச்ச உணர்வு என்று சொல்க.  பை > யையன்.  இந்தச் சொல்  boy என்று இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வரும். கிரேக்க மொழிச்சொல் ''பைஸ்'' என்பது உறவுச்சொல்லாகக் காட்டப்பெறும். இளநாட்களில் விளைதல் ''பயத்தல்''  என் க.  இந்த இளமைப் பொருள் நாளடைவில் தேய்வுற்றது -  பிறமொழிகளில்.

அரம்பை என்பதில் இறுதியில் இச்சொல்லே பகவாகும்.

பொருள்:  அழகுடன் இளமையும் உடைய பேரழகி. இது தமிழிலிருந்து வருவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்

பகிர்வுரிமை




திங்கள், 13 ஜூலை, 2026

காரன் சொல் - அப்பக்காரன், குருவிக்காரன் முதலிய பல

 குருவிக்கு  ஆர்  வந்தார்  >  குருவிக்கார் வந்தார்>   குருவிக்காரன் வந்தான் என்றபடி வந்த சொல்தான் இது.  இங்கு குருவிக்கு அவர்>   என்பதே குருவிக்கவர்> குருவிக்கார் என்றும் வரும்.  காரன் என்பது ,..கு+ஆர்+அன் என்பதன் பிறழ்பிரிப்பு.  ஆர் என்பது   ஆர்> ஆரன்,  இது  கு+ ஆர்+ அன் என்பதே.

அப்பத்துக்கு  அவர்>  அப்பத்துக்கவர்>  அப்பத்துக்கார்>  அப்பக்கார்>  அப்பக்காரன்.   இப்போது காரன், காரர் என்பன வந்தன.

இது போல் பிறழ்பிரிப்புச் சொற்கள் முன்னர் மொழியறிஞர்களால் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

வாழ்கு+ இன்று+ ஆன் >  வாழ்கின்றான் என்று வந்தது காண்க.

அன்றி,  கின்று என்பது ஓர் நிகழ்கால இடைநிலை என்றனர்.  அதன் மூலம் கு+ இன்று  என்பதுதான்.  இலக்கணியர் இதை மறைத்தனர்.  நன்னூல் இப்படிச் சொல்லும்.  தவறு ஒன்றுமில்லை.  விரைவாக உணர்ந்துகொள்வதற்காக இலக்கணம் இப்படிக் கையாளும்.

இது வடநாட்டில்  கார் என்று குன்றிவழங்கும்.

இன்னொரு விளக்கமும் உண்டு. பின் சொல்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

வியாழன், 9 ஜூலை, 2026

பரிபூரணானந்தம். பெயரமைவு



இந்தச் சொல்லை அல்லது சொற்றொடரை இப்போது கவனிப்போம்.

இது இறைவனுக்கு ஒரு பெயராகத் தாயுமான சுவாமிகள் பயன்படுத்துகிறார். பரிந்து -  இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி,  எங்கும் புகுந்து, ஆவிக்கு மகிழ்வினைத் தந்துகொண்டிருப்பது இறைமை என்னும் உடனறிந்திட இயல்பாக இயலாத நன்றான ஒன்றுதான் ''பரிபூரணானந்தம்'' .

''பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே'' என்ற பாடல் தொடரில் இது வருகின்றது.

பரிதல் என்ற சொல்லுக்கு கதிர்வேலுப்பிள்ளை எல்லாப் பொருள்களையும் விரித்துத் தருகிறார். இவற்றைச் சுருக்கமாக:

பரிதல் - அறுத்தல், அன்பு,  அன்போடு பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல்.

என்று சுருங்கச் சொல்லலாம். பரிதல் என்ற சொல், அதன் முன்வடிவில் பருத்தல் என்றிருந்தது. பரு> பரி. பருத்தது எல்லை கடப்பின் அறுபடும்; ஆகையால் அறுத்தல், அப்புறம் ஒடித்தல், ஒடிபட்டபின் இன்னொன்றுடன் இணைந்து நடத்தல், காதுதல் இன்ன பிறவும் அறிக

மனவுணர்வு கலந்து நடைபெறுதலும் இவற்றுள் வரும்.

புகு(தல்) என்பது பேச்சில் பூர்தல் என்றும் வரும். இதன் எச்சம் பூந்து என்று பேச்சில் வருவதுண்டு. இதைப் புகுந்து என்பதன் திரிபாகவும் கருதற்கு இடனுண்டு. புகு> பூர்> பூரணம் என்பதே இச்சொல்லின் அமைவு. சங்கதத்தில் (சமஸ்கிருதத்தில்) பூரணம் என்ற சொல் இருப்பின் இது தமிழ்த் திரிபுதான். பூர்தல் pūrtal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1065)
பூர்தல் - நிறைதல். என்பதும் கூறப்படுகிறது.

ஆக நன்று அம் > ஆ+ நன் + து + அம் > ஆனந்தமானது காணலாம்.

வினைச்சொற்கள் எங்கு இருக்கின்றனவோ. அந்த மொழிக்குரியவை சொற்கள்.  இங்கு சொற்கள் ஆவன:  பரிதல், பூர்தல், ஆதல், நன்று, அமைதல் என்பவை.

இவற்றைக் கூட்டிப் பொருளுரைத்துக்கொள்க.

சமஸ்கிருதம் என்பது சம + கதம். கதம் - ஒலி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 6 ஜூலை, 2026

இடைக்குறை இல்லாத மொழியா தமிழ்?

 இடைக்குறைகள், குறுக்கங்கள்  முதலியன இல்லாத மொழி தமிழ் என்று எவனாவது சொன்னால் அவனுக்குப் புகட்ட என்ன செய்வீர்?

பத்து    இது முழுச்சொல்.

ஆனால் ஒன்பது? 

ஒன் என்பது ஒன்று  என்பதன்  கடை எழுத்தில் வெட்டு.

இதைக் கடைக்குறை என்று சொல்வோம்.

அடுத்தது: பத்து என்பது பது என்றன்றோ வருகிறது.

இது ஓர் இடைக்குறைச் சொல்தான்.  ஒன்று பத்து >  ஒன்+ பது > ஒன்பது.


அடுத்து,  பன்னிரண்டு என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் சொல்லலாம்.

பத்து+ இன் >  பத்தின்>  பதின்> பன்+ இரண்டு >  பன்னிரண்டு..

பத்தொன்பது என்ற சொல் எப்படி வருகிறது.

கண்ணை மூடிக்கொண்டு படிப்பவர்கள்தாம்  அதிகம்.

அப்படியாவது படித்தால் நன்மைதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை.


வியாழன், 2 ஜூலை, 2026

சுவர் என்றது

 சுவர் என்பது எவ்வாறு வந்தது -   தமிழில்?

இதைச் சுருக்கமாக,  சுற்றிலும் இருப்பது என்று சொல்லிவிடலாம்.    சுற்றிலும் என்பது ,  சு என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.  இங்கு இருப்பது என்பதை இரண்டாவது பகவாக எடுத்துக்கொண்டால்,  இ  என்ற எழுத்தைப் போட்டு விளக்கலாம்.  சு+ இரு>  சு+ வ்+ இரு>   சுவிரு என்று வந்து .  சுவரு என்று திரிந்ததாகக் கொள்ளலாம் என்றாலும்,   இரு என்னாமல்  வரு என்று எடுத்துக்கொள்வதே இயல்பானதாகும்.   சு+ வரு >  சுவரு என் க.   வரு என்பது பேச்சுக்குச் சரியாகலாம் என்றாலும்,  வர் என்று குறுக்கியே இணைத்தால், அதிக விளக்கம் இன்றி முடித்துக்கொள்ளலாம்.   அரசுக்கு வருகின்ற வசூல் பணம்,    வரு என்பதினின்றே குறுகி,  வர்> வரி என்றே ஆக்கமுறும் சொல்.  சு+ வர் என்பதும் இவ்வாறே  '' சுற்றி வரும் அடைப்புத்தடுப்பு''  என்று  ஆகிறது. இதிலிருந்து சு+வர் >  சுற்றிவரும் வீட்டின் அடைதடுப்பு  என்று சுருக்கி முடிக்க.

வர் என்பதே மூலச்சொல்.  (வர்)> வரு>வந்(தான்)>வா    என்பவற்றுக்கெல்லாம்  முன்னது மூலம். இம்மூலத்தினின்று  வருடம் --இன்னும் பல உருவாகியுள்ளன. எம் பட்டியலில் தேடிக் காண்க.

இந்த உண்மையை,  எந்த நூலையும் பார்த்துத் தெரிந்துகொள்ளாமல் நாம் சரியாகச் சொல்லியிருக்கிறோம்.

சு+வர் என்னாமல் சு+ வம் என்றாலும் சரிதான்.   வரு என்ற சொல், வம் என்றும் திரியும்.   '' வம்மினோ''  என்றால்  வருமினோ என்று சொல்வதே  ஆகும். ''வம்மின் மக்காள்''  என்பது இவ்வாறும் திரியும் என்பது அறிந்துகொள்ள,  பழந்தமிழ் அறிந்திருக்கவேண்டும். பழந்தமிழ் உரையாசிரியர்களின் எழுத்துக்களையும் வாசித்து அறிந்திருக்கவேண்டும்.  இற்றை நாட்களில் இதை அறிந்தோர் சிலரே ஆவர்.

சுவரைச் செவர் என்ற பேச்சுத் தமிழ்  பொருந்தாது.   அது வெறுந்திரிபுதான். முதலெழுத்துக்களை வைத்தே ஒருவாறு சொல்லைப் படைத்துவிடலாம் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

செவ்வாய், 30 ஜூன், 2026

வெண்சாந்துக்கு வேறுபெயர் ''தான்-தோன்றி'' யானது அன்று

 சாந்து என்ற நீர்ப்பூச்சு போன்ற பொருள்,   வெண்மையாக இருக்குங்கால்,  அதை வெண்சாந்து என்று பெயரிட்டு அழைப்பது ஒரு திறமான செயல் என்றே ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் மனித சமுதாயத்தினர்  அல்லது குமுக உறுப்பினர்கள் எப்போதுமே இவ்வாறு வெளிப்படையாக நடந்துகொள்ள முடிவதில்லை.  சிலவேளைகளில் சிலவற்றை வெளிப்படைத்தன்மை குறைந்துச் சொல்வது எல்லா இனக்குழுவினரிடத்தும் காணப்பெறும் ஒரு பொது நடப்புத் தன்மை என்று கூறவேண்டும். அவற்றுள்ளும் அச்சாந்து போல்வன மனித உடலுள் இருந்தே வெளிப்பட்டிருந்தால்,   உடற்கழிவுக்கும் அதற்கும் வேறுபாடு குறுக்கமாகிவிடுகிறது.

வெண்சாந்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடு குறைந்துவிடுகிறது.  வெண்சாந்து உடலிற் பிறந்திட்ட பின் வெளிப்பட்டிருந்தால்,  அதில் காணும் வெண்நிறத்தை மறைத்துச் சொல்லி,  இடக்கர் அடக்கலாக்கி விடுதலே சிறப்பு ஆகும்.   வெண்து  என்பதை,  விண்து என்று திரித்தபின்,  விந்து என்று மாற்றுதலே சிறப்பு ஆகும்.  இத்தகு முறைகள், சொல்லாக்கத்திற் கடைப்பிடிக்கப்பட்டன.

சாந்து என்பது  (சுவர் முதலிய)   வீட்டின் சுவர்களைச் சார்ந்திருப்பனவே என்பதும் அதன் காரணமாக பெயர் பெற்றவை என்பதும் தெளிவே  எனினும், அதைச் சார்>  சா>  சாந்து என்று ரகர ஒற்றை ஒளித்து அமைத்தது ஒரு சிறப்பு ஆகுமென்க.  இஃதுபோலவே  வெண் என்பது மறைந்து  விண் என்ற மற்றொரு வெண்மைவெளித் தன்மை வெளிப்பட்டதும்   சிறப்பே என்று கூறிச்செல்க.   சொல்லாய்வில் இவை தற்செயலாக வெளிப்ப்பட்டவை என்று எண்ணுவது ஆய்வின்மை என்றே  முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்மை

பகிர்வுரிமை



ilavakam இலாவகம்

 ஒன்றைச் செய்ய விழைந்தவன்,   அவ் விழைந்த செயலின்பால் மனத்தைச் செலுத்தாமலும்,  உடல்முயற்சி செய்யமலும் அக்காரியத்தை  செய்து முடிப்பனாயின்  அவன் அதனை இலாவகமாகச் செய்து முடித்தான் எனல் சரியாகும்.

இப்படிச் செய்து முடித்தால்,  ( மனமுயற்சியும் செயல்முயற்சியும் இல்லாமல்  முடிப்பீரானால் ),  உண்மையில் அதைத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.

எளிதாக்கம்,  நுணுக்கம் காட்டுதல், சாதுரியமாகச் செய்தல், சீருடன் முடித்தல் என்று பலவாறும் கூறலாம்.

இனிச் சொல்லைப் பார்ப்போம்.

இலா+ அகம் >  இலாவகம்.

உள்ளிருந்து வெளிவந்து   செயலைச் செய்ய உதவுவது:  மனத் திட்பம் மட்டுமன்றி, உடலின் கைகளின் ஆற்றல் முதலியவையும் தாம்.   மனவலிமை மட்டுமின்றி உடல்வல்லமையையும் இது உளப்படுத்தும் என்பதறிக.

இற்றை நிலையில் செயலகத்தில் பணி செயவதில் திறமையானவர், வெளியிடங்களிலும் அவ்வாறு திறமை காட்டினால் அவர் செயலும் இலாவகம் என்று கொள்ளப்படுதல் கூடும்.  செயலகம் இல்லாதவிடத்தும் மனத்திட்பத்துடன் பணிபுரிவது.

(1) இலகுவாக, (2) இலாகுவாக என்றும் வழங்குவதாகத் தெரியும் சொல் இது.

இல் என்பதும் இலா என்பதும் ஒன்றுதான். இல் அகு, இலா அகு, இலா அகு அம், இவை ஒன்றுதாம்.  சுருக்கி எழுதவும் விரித்து எழுதவும் இயலும் மொழி தமிழ்.  இது ஒரு வசதி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


சனி, 27 ஜூன், 2026

நபர் என்னும் சொல் ( நண்பர் இடைக்குறை)

நண்பர் என்ற சொல்லை ஒரு சீனர், மலாய்க்காரர், இந்தோனேஷியர், வெள்ளைக்காரர் ஆகியோரிடம் சொல்லிக்கொடுத்து,  உச்சரிக்கச் செய்தால் அதைச் சரியாக வெளிப்படுத்த அவர்களால் இயல்வதில்லை. இதைப் போலவே நம்மில் பலருக்கு, பிறமொழியில் பல சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதனால் தமிழ்ச்சொற்கள் வேற்று மொழிக்காரர்களால் கையாளப்படும்போது வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.  இது எந்த மொழிச்சொல் என்ற கேள்வி வரும்போது, பதிலைத் தருகிறோம்.

ஒரு சொல் எந்த மொழிக்கும் சொந்த மாக இருக்கும்;  பிறமொழிச் சொற்களைக்   கற்று,  எவ்வெச் சொற்கள் எவ்வாறு  திரிகின்றன என்று கண்டுபிடித்துச் சொல்லலாம்.  அவ்  இருப்பினால் மட்டும் அந்தச் சொல்லுக்கென்று எந்த தகுதிமேம்பாடும் ஏற்படுவதில்லை. உச்சரிப்பினால்மட்டும் ஒரு சொல்லுக்கு  நிலையுயர்வு உண்டாகு மென்பது ஒரு வெற்றுக்கற்பனை.   பிறழ் பலுக்கினால் (தடுமாறி உச்சரித்தால்) சொல் புரியாமற் போய்விடும் இடர் உள்ளது என்பது மட்டுமே   உண்மை ஆகும்.

நீங்கள் உங்கள் கருத்தை இங்குப் பதிவிடலாம். இவ்வுரிமை யார்க்கும் உள்ளதே ஆகும்.   இதனை நாம் மதிப்போம்.   ஆனால் பின்னர் உண்மை இது என்றும் சொல்லவேண்டும். நீங்களும் இங்கு இதைச் சொல்லலாம்.

நண்பர் என்பது தமிழில் வழங்கிய சொல்.  இதை தமிழரல்லாதார் சொல்லும்போது,  நண் என்பதைச் சொல்வதற்கு இடர்ப்படுவர்.  அதனால் ண் என்பதை விடுத்து, நபர் என்றுதான் சொல்வர். ண் அப்படியே வந்தாலும் அரைகுறையாக வெளிப்படும்.  இப்படிப் பிறர்க்கு தொந்தரவு கொடுப்பதினும் நபர் என்று நாமும் சொல்லி அவர்களுடன் இணைந்துவிடுவது சிறப்பு   ஆகும்.  உங்கள் தமிழ் நாவிற்காக மற்றவர்களைத் தொல்லைப்படுத்தாமை நன்று.  அப்படி வந்தது தான் நபர்,   பின்னர் நபர் வேறு, நண்பர் வேறு என்று எண்ணிவிட்டனர்.

நபர் என்ற அதை ஒலித்ததனால் இன்னொரு சொல் கிடைத்துள்ளது என்று மகிழ்வு கொள்ளவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

28.06.2029 திருத்தம்.

பகிர்வுரிமை 











ர்ர

செவ்வாய், 23 ஜூன், 2026

சேதம் செது என்னும் அடிச்சொல்

 செது என்பது ஓர்  அடிச்சொல்.  தமிழில் உள்ளது. இழைத்தல் என்பதுp ஏறக்குறைய இச்சொல்லின் பொருளாகலாம். இச்சொற்கள் பருப்பொருள் ஒற்றுமையும் நுண்பொருள் வேறுபாடுகளும் உடையனவாயிருப்பது மறுக்கவியலாது. ஒன்று ஒருவருக்குக் கூடுதலான அல்லது குறைவான பொருண்மையை வழங்கலாம். நிகண்டுகள் எது கூறினும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தெடுக்கும் காரணங்களும் இருக்கும்..

செதுக்குவது வேறு  இழைப்பது வேறு எனலாம்.

கதுவுதல் என்றாலும் செதுக்குதல்தான்.   இதிலிருந்து கதவு என்ற சொல் வருகிறது. பழங்காலக் கதவுகள் செதுக்கிச் சேர்க்கப்பட்டவை.  இப்போது நெகிழிக் (plastic) கதவுகள் ஒரே வார்ப்பாக உள்ளன, இணைக்கப்பட்டவையும் உள,

கது > கதுவு > கதுவுதல்  ( வினைச்சொல்: கதுவு).

கது >  கதுவு >  கதவு.

ஒப்பு:

உது > உதவு  

உது என்பது முன்செல்லுதல் குறிக்கும் அடிச்சொல்.

மடை என்பது  மதகு   எனவும் படுவதாகும்,.இவற்றின் வேலை,  அளவோடு நீரை வெளியேற்றுதல்.

இனிச் செது.   இந்த அடியிலிருந்து,   

செது >  செதுக்கு.

செது > செத+ அம் > சேதம்.  முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.

ஒப்பு:  சா+ அம் > சவம்,  இங்கு முதனிலை குறுகிற்று.   தோண்டு > தொண்டை என்பதிலும் காண்க.

செது - ( செதும்பு )- செதும்பல்.   ( குழம்பிய மண்).

செதும்பல் தாமரை.

செதுகு என்பது குப்பை கூளத்தையும் உட்படுத்தும் சொல்.  செதுகாத படை என்றால் குற்றமற்ற படை என்றும் பொருள்.

செதுகை என்றால் தீமை என்றும் பொருள்.  சேதமில்லாத இந்துஸ்தான் என்று பாரதியார் பாடலில் வருகிறது.

செது என்னும் அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





சனி, 20 ஜூன், 2026

விமானம்தாங்கி (க் கப்பல்)

 வி என்பது சிறப்புடைய என்று பொருள்தரும் ஒரு முன்னொட்டு. வியன், விழுமிய, விரி(தல்)  முதலிய சொற்கள், விரிவு, சிறப்பு என்றெல்லாம் பொருள்தருவன.  இதைச் சுருக்கித்தான் வி- என்பது முன்னொட்டாக ஏற்படுத்தப் பட்டதென்பது உணர்க.

மானுதல் எனின் ஒத்திருத்தல். மன் என்ற சொல்லும் மன்னுதல் என்று வினையாகும். மன் - மன்+ இது+ அன் >  மனிதன்.  து என்பது அஃறிணை ஒருமை என்றாலும்,  பல சொல்லாக்கங்களில் ஆக்கத்துணைச்சொல்லாகப் பயன்பாடு கண்டுள்ளது. அழிதல், ஒழிதல் என்பனவில்  தல் என்பது  து+அல் >தல் என்பதே ஆகும். நரி ஓடியது என்பதில்  து என்பது அஃறினை ஒருமை காட்டினால்,  தல் என்பதில் அது  வினைச்சொல் என்று குறிக்கவந்து,  தொழிற்பெயராய்த் தெளிவிக்கிறது. எழுது என்பதில் அது வினையாக்க விகுதியாய் நிற்கிறது. எழுதல் வேறு, எழுதுதல் வேறு.  பொருது என்பதில் அது வினையாக்கம் செய்கிறது.  பொருந்து என்பதிலும் அது இன்னொரு சொல்லைப் பிறப்பிக்கிறது. தல் என்பது து+அல் இணைந்த நிலை அறிக.  து என்பது என்னவெனில், அதன் தொழில் அல்லது செயல் யாது என்பதைக் கணித்தே அதற்குப் பெயர் கூறவேண்டும்.

மான என்பது ஒரு உவமவுருபும்  ஆகும்.

மானம் என்றால் ஒப்பாகச் செய்யப்பட்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.

விழு+ மானம் >  விமானம்.  எல்லாம் தமிழ்தான்..   குறுகி ( வி என்பது விழு என்பதன் குறுகிய முன்னொட்டாக ) விமானம் என்ற சொல் ஆகின்றது.

சம+ கதம் > சம+ கிருதம் >  சமஸ்கிருதம் என்றால் சம ஒலி உடைய மொழி.  எதற்குச் சமம் என்றால், தமிழுக்குச் சமமான ஒலியை உடைய மொழி. இங்கு ஸ் வந்தது ஒரு மென்மையாக்கம். சமக்கிருதம் எனில் கடினமாக இருக்கும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.  1>

குறளை மனத்தில் இருத்துக.

சமம் > சமன் , இது  அறம் > அறன் போலும் திரிபு.

தமிழ் மொழியின் சொற்கள் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் உள.  And என்பது  அண்டு(தல்) என்ற வினைச்சொல்லின் திரிபுதான். எட் என்ற இலத்தீன், அடு(த்தல்) என்பதன் குறுக்கம்தான்.  தா என்ற சீனச்சொல்,  தாக்கு என்பதன் வினையாக்கவிகுதி நீங்கிய வினைதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


1>சமம் என்பது ஒப்பு என்று பொருள்படும்  தமிழ்ச்சொல்.  

வியாழன், 18 ஜூன், 2026

இரகசியம் (ரகஸ்யம், ரகசியம்)

 இரகசியம் என்ற சொல். தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் சொல்லே ஆகும்.

ஏகாந்தம் என்ற சொல்லும்  இரகசியம் என்பதனோடு ஒத்த பொருளுடையதாய்க் கருதப்படுதல் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் தமிழறிந்தாரிடை ஒத்த பொருளுடையனவாய் நாட்டில் வழங்கவில்லை. ஏகாந்தம் என்பது ஒருவன் தனித்திருக்குமிடத்தைக் குறித்ததென்பதும் தெரிகிறது.  அறிஞர் கதிர்வேலுப் பிள்ளை (  அகரவரிசைத் தொகுப்பாளர்) , தனியிடம், ஒருவந்தம், தீனியிடம், வேறிடம் என்றும் பொருள் கூறுவார்.

ஒருவந்தம் என்ற சொல்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்  (குறள் 563)

என்ற குறளில்  ஒருவந்தம் என்பது திண்ணமாக என்ற பொருளுடைத்தாகிறது. இங்கு ஒருவந்தம் என்பது ஏகாந்தம்  அல்லது இரகசியம் என்ற பொருளின் வேறுபடுவதாகத் தெரிகிறது.  வெறு (த்தல்) என்ற சொல் கூட்டுச்சொல்லாய் வந்தவிடத்து,  இதிலுள்ள றுகரம்  ருகரமாகிவிடும் என்ற எம் கண்டுபிடிப்பு சரியாகவே  உள்ளது.  இதைப் பிறரும் கூறியிருத்தல் கூடும். விரித்துணர்ந்துகொள்க.  ஒருவந்தம் எனின் ஒரேமுடிபாய் உள்ளது அல்லது உள்ளவை. ஒரு+ வன் + தம்  :  ஒரு -  ஒரே.  வல்> வன் > வன்+து> வந்து>  வந்து+ அம்> வந்தம்.  வன்- வன்மையானவாய் அமைவது,  அமைபவை.  முடிபு.  கெடுவது மிக்கத் திண்ணமானது என்பது இக்குறள் கூறுவது.  இது தமிழ்ச்சொல், வடசொல், கலப்புச் சொல் என்றெல்லாம் அலைவு தேவையற்றது.  சரியான பொருளே காண  வேண்டுமென்க. ஏகாந்தம் என்பது வேறு.  ஏகாந்தம் என்பது, ஒற்றைப்பொருள், ஏகும் பொருள் என்று இருவிதமாய்  வரவும் கூடும்.  ஒன்று ஏகின், இன்னொன்று வலிவாகும் என்பன போலும் கருத்துக்கள்.

பல்பொருள் ஒருசொல் என்றிருப்பவற்றில், ஒருசொல்லை இன்னொன்றுக்கு ஒத்த பொருளுடையது என்று சொல்ல முடிவதில்லை.  பயன்பாடு கருதியவிடத்து மட்டும் அவ்வாறு உரைத்தல் ஏற்புடைத்தாகலாம்.

இரகசியம் என்பது.

சிலர், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தியவை மட்டுமே தமிழ்ச்சொற்கள் என்ற பெயருக்குத் தகுதி உடையவை  என்று கருதுவர்.  அவ்வாறு கருதுவதாயின் ''சங்கத் தமிழ்ச் சொற்கள்''  என்று விதந்து  அவற்றை உரைக்க வேண்டும்.  அல்லது கழக இலக்கியச் சொற்கள்  என்று கூறவேண்டும். தமிழ் என்பது சங்க காலத்தையும் முந்தி இருந்த சொற்கள்.  அக்காலத்துக்கும் முன்னே சென்றால், பண்டைத் தமிழ் என்றோ, மற்ற பொருத்தம் நோக்கியோ சொல்லவேண்டும்.

இனி, இரகசியம். இச்சொல் ஆனது இவ்வாறு:

இரு +  அகம் + சி + அம் >  இரகசியம்.

நிகழ்வதைப் பற்றிய ஒரு கருத்து,   அகத்தில் இருப்பதாய்,  வெளியிடப் படாத சிறப்பு (சி)  உடையதாய்  அமைந்திருக்குமாயின்,  அது இரகசியம் என்பது சொல்லில் உட்பகவுகள் மூலமாய்த் தெளிவாய்த் தெரிகிறது.  அகத்தினுள் மறைந்து வெளிவராமைச் சிறப்புடன் இருப்பது இரகசியம்.  அதை வெளிப்படுத்துவோனே  '' இதுதான் இதன் இரகசியம்;  வெளிப்படுத்துகிறேன்'' என்று அதற்குப் பெயரிடத் தக்கவன். அதை முன் அறியாமல் கேட்ட பின்பே அறிந்துகொள்பவனும் அதை அவ்வாறு பெயரிட்டுக் குறிக்கலாம்.  ஒன்று ''தனிமைப் பண்பு''  உடைமையால் அவ்வாறு தகுதியுற்றதாகுமா எனின், அஃது அகத்திலிருத்தல், வெளிவராமை ஆகிய குணநலன்கள் இல்லாதவை ஆயின், இரகசியம் ஆகமாட்டா.  தனிமை என்பது வேறு , அகத்தினுள் மறைவாய் இருப்பது வேறு என்று முடிக்கவேண்டும்.

இச்சொல்லின் உள்ளிருப்பனவற்றால், இரகசியம் என்பது ஒரு தனிச்சிறப்புற்ற சொல்லாகிறது என்பது அறிக. இதை ஒரு பொதுச்சொல் என்று கொள்க. அதாவது இருமொழிக்கும் உரியவை,  ஆயின் தமிழ் மூலங்கள் உடையவை என்று விரிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 15 ஜூன், 2026

சீக்கிரம்

 இச்சொல்லை இன்று அறிவோம்.

முன்னர் வெளியிட்டது இதுவாகும்:

https://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_72.html

முன் எழுதியது இவ்வாறாயினும்,  அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் ஒரு சொல்லுக்கு எழுதினால் குழப்பம் உண்டாகுமென்பதனால்,  ஒன்றே வெளியிட்டோம்.  சில சொற்கள் உண்மையில் பலபிறப்பிகளாக இருப்பனவாதலால்,  யாம் சிறந்தது என்று கருதும் இன்னொரு கருத்தையும் இன்று வெளியிடுகிறோம்.

இது சீர்க்கு + இறும் >  சீர்க்கிறும் >  சீக்கிறம் என்றாகி,  சீக்கிரம்  என்பதாகும்.

இச்சொல்லில் ரகர ஒற்று மறைந்தது.

இன்னொரு சொல்லமைப்பில் புகுந்த காலை,  றகர மாவது,  ரகரம்  ஆகிவிடும்.

இத்தகைய திரிபு பல சொல்லாக்கங்களில் வந்துள்ளது.  அதை வேறு சில இடுகைகளில் யாம் சுட்டிக்காட்டி யுள்ளோம்.  கண்டு தெளிக.

சீர்க்கு இறும் என்னில்,   சீரை அடைந்து முடியும் என்பதுதான்.  இதில் வரும் இறும் என்ற சொல்  முடியும் என்ற வினைமுற்று.  இங்கு இது  புதிய சொல்லின் இறுதிப் பகவாக வருகிறது.  பகவு என்றால் சொல்லமைப்பின்  இன்னொரு பகுதி என்ற பொருளில் எழுதுகிறோம் என்பதறிக.

இரும்> இரம் என்று திரிவதாகக் காட்டினும்,  இருக்கும் என்ற பொருளில் சரியாகவே வரும் என்பதறிக.

முன் செய்த ஆய்வில், கிறங்குதல் என்ற வினைச்சொல் கவனம் பெற்றது.  சீர்க் + கிறம் -->  என்றால்,  சீரான எதிர்பார்ப்புக்குரிய வேகத்துடன் முடித்திடு என்பதே பொருள். முன் இடுகையில் நோக்கி அறிக. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

பகிர்வு




வியாழன், 11 ஜூன், 2026

பிரபலம் திரிபுச்சொல்.

 இன்று பிரபலம் என்ற திரிபுச்சொல்லைக் காண்போம்.. இதைத் திரிசொல் என்று சொன்னாலும், திரிபுச்சொல் என்றாலும் பொருள் ஒன்றுதான்.

சிலர் தம் குடுப்பத்திலே நன்கு மதிக்கப்பட்டு, சிறப்புடன் வாழ்வர்.  வெளியாரில் பலரும் இத்தகையோரை அறிந்திருப்பர்.  பலர் அகத்தும் புறத்தும் மிக்க அரிய புகழை அடைந்து,  நாடறிந்த நல்லவராக இருப்பர்.  இவரை மிக்கப் பிரபலமானவர் என்று சொல்வர்.

அறிமுக நிலை மிக்க விரிவடைந்து,  மிக்கப் பகழுடன் இருத்தலே பிரபலம்  என்பதறிந்தோம்.   இத்தகையோரின் பின்பு, பெருந்திரளாக மக்கள் இருப்பர். இந்தச் சொல்லும் நம் ஆய்வில் தமிழே  ஆகும்.   'பிறர்' , 'பலர்' என்ற சொற்களின் அடிப்படையில் அமைந்ததே இது.

'பிறர்' + 'பலர்' >  பிரபலம்.

குடும்பத்திலிருந்தோர் இருப்போர் மட்டுமின்றிப்  பிறர் பலரும் அறிந்த  நபர் என்று வரையறை செய்யவேண்டும்.

திரிசொற்களை அவை தமிழ் மூலமுடையன வாயினும்  சமஸ்கிருதம் என்று வகைப்படுத்தியது சரியென்றே சொல்க.  இதற்குக் காரணம் திரிசொற்கள் சமஸ்கிருத்திலிருந்தால் அதைத் தமிழ்ப்புலவர் எவரும் இலக்கணம் பேசி மறுக்கமாட்டார்,  தொல்லையும் குறைந்தது .  பாணினி  என்ற பாணர், இதற்குத் தனியாக இலக்கணம் வகுத்துவிட்டதால், அந்தத் தொல்லை ஒழிந்தது. தமிழ்ச் சொல்லமைப்பில்,  ஆதியில் எவ்வாறு தமிழ் வளர்ந்திருந்தாலும், அகத்தியர் தொல்காப்பியர் ஆகியோருக்குப் பின்வந்த காலத்தில்,  தமிழறிவு மேம்பட்டமையினால் இலக்கம் எழுதியோரும் பேசியோரும்  கவிதைப் புலமையைக் கொண்டு, சரிதவறு சொல்வோர் கூட்டம் விரிந்துவிட்டது.  இவர்களிடம்  இரண்டும் இருகண்கள் என்றோ, சமஸ்கிருதமே முந்தியது  என்றோ சொல்லிவிட்டால் வாய்மூடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். வடக்கே  தோன்றிய முந்தைய மொழி என்று சொல்வதை வாதம் செய்ய இவர்கள் போன்று கேட்போர் சொல்லாய்வு நிபுணர்களா என்ன?

உண்மையில் இவ்வாறு சொல்வதிலும்  உண்மை உள்ளது.  உங்கள் வீட்டுச் சட்டியில் பழைய  மற்றும் ஓரளவே பழகிய சட்டி பழம்பெருமை உடையதா,  போனவாரம் வாங்கியது பழம்பெருமை உடையதா என்றால்  பழம் பெருமை உடையது பழையதே ஆகும்.    ஆனால் சொற்களில் இது எளிதில் அறியத் தக்கதாய் இல்லை.  எது திரிசொல், எது இயற்சொல் என்பது சாதாரணப் பண்டிதனுக்குத் தெரிவதில்லை.  அவன் சில பட்டங்கள் பெற்றிருந்தாலும் தெரிவதில்லை. எப்படியாயினும், சொற்களைப் பயன்படுத்திப் பொருளை அறிவிப்பதுதான் பேசுவதன் நோக்கம்.

தொல்காப்பியம் நூற்பா சொல் 394:

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா

தெரியவேண்டுமே!

மொழியைப் பயன்படுத்துகையில் சில கலந்து பேசினாலும் மரணம் ஏற்பட்டுவிடாது.  

ஆனால் கவிதை, உரைநடை ஆகியவற்றைக் கையாளும்போது,  கவனமாக இருக்கவேண்டும் என்பதே உண்மை.

ஆனால் தமிழும் சமஸ்கிருதமும் மிகப் பழையவை. ஒரு திரிசொல், திரிவதற்குப் பலகாலம் ஆகவேண்டும். இயற்சொற்கள் திரிந்துதான் திரிசொற்கள் உண்டாகின்றன.  ஒன்று இயற்சொல்லாய் இருந்து பின்னர்தான் திரிகிறது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்துதான் சொல்லவேண்டும்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  12.06.2026

























செவ்வாய், 9 ஜூன், 2026

துருவாச முனிவர் பெயர்

 இவர் பெயரைச் சற்று சிந்திப்போம்.

இவர் மகாயோகி என்று போற்றப்படுபவர்.  விரதங்களின் மேன்மையை அடிப்படையிலிருந்தே நன்கு அறிந்து போற்றுபவர் அவரென்று இறைநூல்களிலிருந்து அறிகிறோம். துருவாச முனிவர் என்பதைத் தமிழால் பொருள் கூறவியலுமா என்பதைப் பார்ப்போம்.

இவர் பெயரைத் துரு(வுதல்) +  ஆசு + ( அ )  ;  முனிவர்.

நிகழ்வு,  வரலாறு,  இறைநிலை  ஆகியன நல்லபடி உணர்ந்தும்  துருவிப் பற்றுக்கோடு கண்டும், ஆனபடி நடப்பவர் என்ற அவர்பெயர்,   நல்ல காரணம் தருவதாக அமைந்துள்ளது.  ஆசு என்றால் ஆதாரம்,  சிறந்தவை கைக்கொள்ளுதல்  என்றெல்லாம் சொல்லலாம்.

ஆசு+ இரு+ இ + அர் >  ஆசிரியர் என்பது கற்கும் மாணவர்க்குப்  பக்கபலமாக இருப்பவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும்.  ஆசு+ ஆன் > ஆசான் என்பதும் ஏறத்தாழ அப்பொருளதே. ஆசி ( ஆசு+ இ)   ஒருவனின் வாழ்வில் நன்மை சென்று பற்றுக என்ற வாழ்த்துதலைத் தெரிவிப்பதாக இருக்கும்.  ஆக்கம் என்ற சொல்லும் ஆதல் என்பதன் அடியாகத் தோன்றிய சொல்லே ஆகும். ஆ என்பது வினைப்பகுதி.  சு என்பது விகுதி. முனிவர் என்ற பெயருடன் இணைய,  துருவாசு என்பது துருவாச என்று வந்தது,

முன்னரும் பாரதச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் தந்துள்ளோம்.  அவற்றையும் நோக்குக.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.














சனி, 6 ஜூன், 2026

ஆமைக்கு வந்த அருமையான பெயர்.

 தமிழில் பெருவாரியான சொற்கட்கு மூலம் கண்ட பெருமை, தேவநேயப் பாவாணர்க்கு உரியது என்பதே உண்மை.  இவர்தம் பெருமையை பிற பல அறிஞர்கள் கண்டு வியந்துள்ளனர்.  ஆமைக்கு அந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்கையில்,  அஃது  ஏமம் என்ற தமிழ்ச்சொல்லினின்று வந்தது என்று தேவநேயர் கூறினார்.  இது எனக்குச் சரியாகவே தோன்றுகிறது. அறிஞர் அப்பாத்துரை அவர்களும் இவரை புகழ்ந்துள்ளார். தேவநேயனாரால், தமிழ்ச் சொல்லாய்வு மிக்க வளர்ச்சி பெற்றது.

ஏம் என்றால் பாதுகாப்பு.  அமணர் என்பது சமணர் என்று திரிந்ததுபோலவே, ஏமம் என்பதும் சேமம் என்று திரிந்தது. ஆடி என்ற ஏனப்பெயர்,  சாடி என்று திரிந்தபின்,  ஜாடி என்றும் திரிந்தது. ஆடியில் இருக்கும் நீர் சற்று ஆடினால், சாடியிலும் ஆடுமாதலின், அதற்கு இதன் மூலம் பெயர் வந்தது பொருத்தமே ஆகும். சாடுதல் என்பது அடித்தலையும் குறிப்பதுதான். சாடியைத் தட்டினால் உள்ளே நீரும் ஆடுவதால் அந்தப் பெயர் வந்தது என்று கூறினும் அதனால் இப்பொருள் தொய்வுறாது என்னலாம்.

எம் பொருளை யாம் எப்போதும் காத்துக்கொள்வோம்.  ஆகையினால் எம்- ஏம் என்பதிலிருந்து பாதுகாவல் என்ற பொருள் வந்தது பொருந்துவது. அவர் பிறன் பொருளையும் அவ்வாறே காப்பதற்கு ஏதேனும் கூடுதல் காரணமிருக்க வேண்டும்.  இச்சூழ்நிலையில் பாதுகாவலைச் சிந்தனை செய்யுங்கால் இதனை மேற்கொண்டு ஆராயலாம்.  இப்போது ஏமம்  சேமம் எல்லாம் தமிழில் ஆழ்ந்த கற்காலத்துக்கும் முன்பு உண்டான பொருள் உடையன என்பதை மட்டும் கவனித்துக்கொள்வோம்.

ஆகையினால் ஆமைக்கு இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் சொற்களை ஆய்வு செய்கையில்,  ஒன்றுக்கு  மேற்பட்ட காரணங்களால் பெயர்கள் ஏற்படக்கூடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிலேடை முதலிய மேற்பட்ட அலங்காரங்கள் தவழணி செய்யும் தமிழ்மொழியில்,  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இயல்பானவை  ஆகும். ஒன்றுக்கு ஒரே பொருள் என்பது தமிழறியாதவனுக்கு ஏற்புடையதாய் இருக்கலாம்.  ஒரு பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அணிசெய்வது,  மிக்க இயல்பானது ஆகும். வேறுமொழிகளிலும் உள.  ஆனால் குறைவு ஆகும்.

இனி ஆமை.   ஆமை என்பது ஓர் ஓட்டினகத்துத் தன் மெய்யை ( உடலை) ஒளித்து வைத்துக்கொண்டு வாழும்  ஓர் உயிரி  ஆகும்.  ஆகையினால்,   அகத்து மெய் >  அகமெய் > ஆமெய்>  ஆமை என்றும் பெயர் விளைந்திருத்தல் கூடும். சங்கு என்ற உயிரியும் இவ்வாறு வாழ்வது  ஆயினும்,  இது இடுகுறியாக வந்து சங்கு முதலியவற்றைக் குறியாது என்று வரையறுத்துக்கொள்ளலாகும்.

சங்கு ஓட்டை அண்மி வாழ்வது.   அண்> சண்> சம்+கு> சங்கு  ஆகும்.  சம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும்  சேர்ந்திருத்தலைக் குறிக்கும்.  தமிழில் இணைமொழி யாகித் தமிழரால் வளர்க்கப்பட்டது சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதம்.  பாணனாகிய பாணினியாலே இலக்கணமும் கூறப்பட்டது.. இந்திய மொழி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது

















புதன், 3 ஜூன், 2026

கந்தல் என்பதற்கு விளக்கம்

 கந்தல் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிப்பதாகக் கூறினோம். இந்த முன்பகுதி இங்கு உள்ளது.

கிழிந்த /  கழிந்த என்ற வினை எச்சங்கள்:

கிழிந்த >  கழிந்த + அல் (விகுதி) >  கழிந்தல்.

கழிந்தல் என்பது இடைக்குறைகிறது.

கழிந்தல் >  க(ழி)ந்தல்>  கந்தல்.

கந்தல் >  கந்தை.

கழித்த என்ற எச்சத்துடன் அல் என்பதை இணைப்பது  வழக்கமில்லை. கழி என்ற வினை ஏவல்வினையே இதற்கு ஏற்றதாகக் கொள்வர்.  ஆதலால் இதை வேறுவழிகளில் காட்ட முனைதல் இயல்பே.  கிழி> கழி > கழிதல்>( கதல்)> கந்தல் என்று காட்டலாம். இங்கு ஒரு விகாரம் தோன்றிற்று.  கிழிதல்>  கழிதல்  என்றதில்,  ஒரு மெய்தோன்றிற்று என்பதை மறைக்கமுடியாது.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்தும்  சொற்கள் தோன்றக்கூடும் என்பதை மறைத்தலாகாது. தேவை என்பதே ஆக்கத்தின் தாய் என்பது முற்றிலும் உண்மை.

ஒப்பு நோக்குக:

ஆண்டு  > (ஆண்டுகொண்டிருப்பவன்)  எச்சவினை.

ஆண்டு >  ஆண்டவன்.

பண்டு என்பது கவனிக்கவும்:

பண்டு நம்மைக் காத்தவன்.

பண்டு>பண்டு + இ+ அன்> பாண்டியன்.

இதில்  பண் எனற முதலசை பாண் என்று முதல் நீண்டது.  

பல சொற்கள் நீண்டாலும் பொருள் தொடர்பு அற மாட்டா.  வினைகளில் தரு என்பது  திரிபு பலவுடைத்து.

பாண்டவர் என்பதும் இவ்வாறு அமைந்த சொல்லே ஆகும்

இதைப் பண்டு>பாண்டு>பாண்டியன் என்றும் காட்டுவர். 

வேறுபாடு ஒனறுமில்லை.

கிழிந்தல் - கழிந்தல் :  கிழிந்ததாக இருந்தது பின்னர் பயன்பாடு குன்றி, கழிந்ததாகிவிடுகிறது.  இன்னொரு சொல்லைக் காட்டுகிறோம்.   இடித்தல் - அடித்தல். இரண்டும் ஏற்படும் மோதுதலைக் குறிக்கிறது.  இணைத்தல் - அணைத்தல், இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கவனத்தில் கொண்டால், தொடர்பு புரிதலை அடைகிறது.  பழைய இடுகைகளில்  யாம் காட்டியிருப்போம்.  எனினும் தொகுத்து வழங்க நேரமில்லை ஆதலால்,  படிக்கும் நீங்கள் தொகுத்து எடுத்து உணர்ந்து கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.  

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



சனி, 30 மே, 2026

ஜனாதிபதி

 மக்கள் தலைவர்,   (குடியரசுத் தலைவர்) என்னும் பொருளில் ''ஜனாதிபதி'' என்ற சொல் இப்போது வழங்கி வருகிறது. இதில் சிலருக்கு  மறுப்பு இயல்வதற்குக் காரணம், குடி என்ற சொல் மக்களையும்  குடிபானத்தையும் குறித்தலாகும். குடிமகன் என்ற சொல் குடித்துத் திரிகிறவனைக் குறிக்கிறது என்பது இன்னொரு தொடர்புடைய மறுப்பாகும். சனாதிபதி என்ற வடவெழுத்து நீங்கிய சொல் பலருக்குப் பிடிக்கவில்லை.

மனிதனிறந்த பின்பு,  அவனது உயிர்,  மீண்டும் இன்னோர் உடலில் புகுந்து மறுபிறவி உண்டாகின்றது என்ற கருத்தின் காரணமாக,  சா(தல்)> ஜா> ஜன்> ஜனி என்று ஒரு சொல் உண்டாகி,  அதுவே பிறத்தல் என்ற பொருளுடைய சொல் (ஜனித்தல்)  ஏற்படக் காரணமானது என்ற கருத்து,  புலவர் சிலரிடைத் தோன்றலானது என்று எழுதப்படாத கருத்தாக ஆசிரியரிடையே வழங்கி வந்தது என்று அறிகிறோம்.

இதன் மூலம், ஜனி(த்தல்) என்ற சொல் பின்னர் உண்டாகி பிறப்பு  குறிப்பதாக‌ இனறு உணரப்படுகிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. கருவினுள் பின்னர் உயிர் செல்கிறது என்பதால்,  செல்> செல்நீ>  செனி> செனித்தல் > ஜெனித்தல் என்று சொல் உண்டானது என்றும்  பொருந்துகிற இன்னொரு கருத்து உள்ளது.  பழம்நீ என்ற முருகனின் பெயர் பழனி என்று சுருங்கி அமைந்தது போலும் ஓர் ஒப்புமையே இதுவாகும்.  வயல்களின் நடுவில் உள்ள குளம்,  நீரினால் வயல்களைக் கழுவிச் செழுமை அடையச் செய்கிறது  என்ற கருத்தால்,   கழுநீர்> கழனி என்ற சொல் சரியாகிறது.  தமிழாயினும் எந்த வேறு மொழியாயினும், இலட்சக் கணக்கான சொற்களுடன் உடனே உண்டாகிவிடவில்லை.   கழிபல வூழிகளாக வளர்ந்துதான் மொழிகள் நம்மிடையே வந்து எட்டியுள்ளன. மொழிநூல் (philology) (கருத்தும்) அதுவே ஆகும்.

ஆகவே இச்சொல்  ( ஜெனி, ஜனி)  ஒரு பல்பிறப்பிச் சொல் ஆகும். இதற்கு வேறு மூலங்களும் கூறப்படுதல் உண்டு.  சமஸ்கிருதம் என்பது தமிழுடன் வழங்கி வளர்ந்த இணைமொழி ஆகும். இரண்டு மொழிகளிலும் ஒன்றை மற்றொன்று வளப்படுத்திய சொற்கள் பல.

சமஸ்கிருதம்  (  சம + கதம் >  சம+ கிருதம் > சம ஸ் கிருதம்  [ ஸ் என்பது இந்த இரண்டு சொற்களையும் இணைத்து ஒன்றாக்கி,  க் என்ற வல்லெழுத்து வராமல் மென்மையாக்கி, ஒருசொன்னீர்மையை உண்டாக்கி இணைப்புறுத்துகிறது என்று அறிக.  ]  > சமஸ்கிருதம்  என்ற சொல் பிறந்தது.  சமஸ்கிருதப் புணரியல்  ( சந்தி இலக்கணம் ) வேறு சொல்லிணைப்புக் கூறினாலும் யாம் கூறும் காரணத்துக்காகவே  ஸ் என்ற ஒலி எழுகிறது.  பாணினி என்ற இலக்கண ஆசிரியன் இதற்குக் கூறும் முறையை யாம் இங்கு கூறவில்லை.  அதனை அவர்தம் நூலில் கண்டு தெளிக.   பாணினி என்பவர் வட இந்தியாவில் சமஸ்கிருத மொழிக்குச் சிறந்த இலக்கணம் இயற்றிய ஒரு பாணர் வழிவந்த பெரும் புலவர்  ஆவார்.  பாணர் என்பது குடிப்பெயர்.   இது வள்ளுவர், காப்பியர் ( தொல் காப்பியர்) என்பன போலும் குடிப்பெயர்.

குத்துச் சண்டை வகைக்குக் குஸ்தி என்று பெயர்.    குத்து> குத்தி > குஸ்தி என்று சொல் மென்மைப்பட்டது.  விரி தருதல் > விரிதாரம் (விரிவாக அமைவது),  >  விஸ்தாரம் என்று திரிந்தது  சம ஒலிச்சொல்.  அதாவது சமஸ்+ கிருதம்.    கிருதம் என்பது,  கத்து (ஒலித்தல்), >  கத்து > கது  (இடைக்குறை)> கது+ அம் > கதம்> கிருதம்.  சமஸ் கிருதம் என்றால் சம ஒலி  உடைய மொழி.  தமிழுக்குச் சமமான ஒலிகளை உடைய மொழி.  இந்தோ ஐரோப்பியம் என்பது பிற்காலத்து வெள்ளையன் தந்த பாகுபாட்டு மொழியியல். கத்து என்பதே, தமிழிலும் கத்து> கது> (நீண்டு) காது என்று வந்து செவி என்று பொருள்படும்.  அறிக.

தேவநேயப் பாவாணரும் பல தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத்திலும் ; இதற்கு எதிர்மாறு செய்யும் வளர்ச்சிகளும் இருமொழிகளிலும்,  இருப்பன என்பதையும் கண்டு,  எழுதியுள்ளார்.  ( முதல் தாய்மொழி என்னும் நூல்).  ஆனால் சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  அது ஆரியன் மொழி என்பது சரியான கருத்து அன்று.  அதை வெள்ளைக்காரன் மேற்கொண்டு தம் ஐரோப்பிய மொழிகளை வளப்படுத்திக் கொண்டான். தேவைக்கு ஏற்ப எதையும் பயன்படுத்திக்கொள்வது உலக வரலாற்றில் ஒன்றும் புதிது அன்று.  நாடு, மொழி எதுவும் பிறர் மேற்கொள்ளக் கூடியதுதான். கணவன், மனைவி உட்பட எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வது கடமை  ஆகும்.

ஜனம் என்ற மக்களைக் குறிக்கும் சொல்லும் இவ்வாறுதான் முளைத்தது.  அதிபதி என்பதும் தமிழ்தான்.  இதை இடுகை இன்னொன்றில் கூறுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை










 

வியாழன், 28 மே, 2026

விருத்தி என்பது.

 விருத்தி என்பதன் சொல்வரவியல். இப்போது சொன்னூல், சொல்லமைப்பியல், என்று பலவகையில் கூறலாம்.  தமிழில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை.

விர் என்பது அடிச்சொல்.

விர்+ உ.   உ என்ற அடிச்சொல் முன்னிடத்தில் விரிதல் என்று பொருள்.  உ > உம்> உன்> உங்கள் என்பனவெல்லாம் முன்னிடத்தில் உள்ளோரையே குறிக்கிறது. படிக்காதவராக  ஒருவர் இருந்தாலும்,  இவை யெல்லாம் முன்னிடத்து உள்ளவரைக் குறிப்பதால்,  விர்+உ என்பதிலும் அதுவே பொருள் என்று கூறிவிடுவார்.

விர்+ இ .  இ என்பது இங்கு என்று பொருள்தருவதால்,  இங்கு விரிதல் என்பதன் இதன் பொருள் என்று அறிந்து கொள்ள அவ்வளவு இன்னல் உறார்.

விர் + அ.   விர.  அங்கு விரிதல்.  விரல் என்ற கையில் கடைக்கோடியில் (அ)  விரியும் உறுப்பு என்பதை அறிய அவ்வளவு கடினமா? விரியவும் செய்து அல்லாமல் சுருங்கவும் செய்து கையிறுதியில் இருப்பது விரல்.  இதற்கு அல் விகுதி புணர்த்தல் மிக்கப் பொருத்தமே.  இன்னொரு சொல்லைப் பார்ப்போம். 

ஈரல் என்ற சொல் காற்றையோ அரத்தத்தையோ  ( blood) உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதும் செய்யும் உறுப்பு.  செரிமானம் செய்யும் கல்லீரலும் இவ்வாறே குறிக்கப்பெறும். ஈர்ப்பதும் அல்லாமல் தள்ளுவதும் செய்வதால் அல் என்ற விகுதி பொருத்தமே என்க..

கந்தல் என்ற சொல்லைப் பார்ப்போம். கண் என்ற சொல்,  சிறு பொத்தல்களையும் குறிக்கும்.   சேலையில் பூச்சி கடித்துக் கண்கண்ணாகப் போய்விட்டது என்று சிற்றூர்களில் சொல்வர்.  உடல்துவாரங்களில் கண்ணும் துவாரமே. ஒன்பது வாசல் என்றும் சொல்வதுண்டு. இவை எல்லாம் பண்டை மக்கள் மொழியை நன்கு கையாளும் திறனுடையோராய் இருந்தனர் என்பதையே காட்டுகிறது.  புதிய தலைமுறையினர்க்குப் படித்தாலும் தெரியப்போவதில்லை.  கண்+து+ அல் >  கண்தல்> கந்தல்.  கண் என்பது இடம் என்றும் பொருள்படும். பழைய நூல்களை எல்லாம் நாம் இழந்துவிட்டால், இந்த மொழிநலங்களை எல்லாம் இழந்துவிடுவோம். கண்கள் உடையதும் அல்லாமல் இடை இடை வருவதும் உடைய துணி - கந்தல்.  ஒரு ''கந்தல்'' அல்லது கிழிசல் துணியை எடுத்தால்,  அதில் கிழிந்து பயனில்லாத பகுதியும் இருக்கலாம். கிழியாத ஏறக்குறைய நல்லதென்று கருதத்தகும் பகுதியும் இருக்கும். இதுபோல் கிழிந்தும் அல்லாமலும் இருக்கும் ஒன்றை,  அல்விகுதி கொடுத்து அமைத்தல்  தமிழின் திறனே  ஆகும்.  பந்தல் என்பதும் இப்படித்தான். பரவலாக நாலு அல்லது மேற்பட்ட கால்களுடன்,  அங்கு விரிக்கப் பட்டிருந்தாலும் காரியம் முடிந்ததும் அது கழற்றி அகற்றப்படும்.  ஆகவே பரப்பி வைத்துப் பின் சுருட்டி வைக்கப்படும். பரப்பியும் பின் அல்லாமலும் வைக்கப்படுவது  ஆகும்.

கந்தல் என்பதற்கு வேறு விளக்கங்கள்  அடுத்த இடுகையில்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை













ஆங்கை

செவ்வாய், 26 மே, 2026

சஹாரா என்ற அரபியிலிருந்து திரிந்த சொல்.

 சஹாரா என்ற சொல்லைக் கவனிப்போம். அரபிமொழியில் சாரா என்ற சொல் உள்ளது.  ஆனால் ஆய்வுகளில்,  சில தமிழ்ச்சொற்கள்  ஆப்பிரிக்க மொழிகளிலும் இருப்பனவாகக் கண்டுபிடித்துள்ளனர். கருப்பர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஆசியாவிற்கு வந்தவர்கள் என்பதும் சொல்லப்படுகிறது. மிக்க கருப்புடையோரும் சற்றுப்  பொன்னிற மானவர்களும் கலந்துதான் தமிழர் தோன்றினர் என்ற கருத்துக்களும் உள்ளன. இந்த ஆய்வுகளில் முடிந்த முடிபுகள் உண்டாகிவிடவில்லை என்ற கருத்தும் உள்ளது. இவை தெரிவியல்கள் ( theories)தாம் என்பர்.  சொல்லாய்வில் நாம் இந்த முடிபுகளுக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை.

அகத்தில்  ( உட்பகுதியில்)   தாவரங்கள் மிகக் குறைவாகிய இடமே பாலைநிலம் என்று குறிக்கப்பெறும்  இதையே தமிழில்  அக அறவு என்போம்.  அக அறா என்பதும் அது.  அக அறா  -  அகத்தில் தாவரங்கள் அற்ற என்று பொருள். பழந்தமிழில்,  இறுதியில்  ஆகார விகுதி பெற்ற சொற்கள் பல இருந்தன,  இன்றும் இவற்றுட் சில உள்ளன.  நிலா ( நில்+ஆ),  கல்+ஆ (கலா),  பல்+ஆ ( பலா, அதாவது பல சுளைகள் உள்ள பழம்), உல்+ ஆ  ( உலா). கலா என்பது தமிழ்ச்சொல் என்பார் பேராசிரியர் அனவரத விநாயகம் பிள்ளை. சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான் என்பதால்,  அது தமிழன்று  என்பது வலுவற்ற கருத்தாகிவிடுகிறது.  எம் முன் இடுகைகளில் இக்கருத்துகளின் விளக்கம் பரிமாறியுள்ளேம்.  அதாவது, அறா என்பது அறவு என்று வருதலும் உடைத்து. எதிர்மறை வினை எச்சமுமாம்.

அக எனற்பாலது,  சக என்று வரும். இது தமிழிலும் உளது.  அமணர் என்பதைச் சமணர் என்பதுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்க.  சக அறா>  சகாரா என்று வந்தது தெளிவாகிறது. காதிப் என்ற அரபிச்சொல்  காதை முதலிய சொற்களுடன் தொடபுற்ற சொற்கள். இந்தத் திரிபைச் சில இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

சகாரா என்ற சொல் அரபியில் பாலை என்று பொருள்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

இப்படித் திரிந்த சொற்கள் பல உள்ளன. இங்கு ஒன்றிரண்டு காட்டினோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை