திங்கள், 16 பிப்ரவரி, 2026

சுதர்சன் என்பதன் பொருள் தமிழ் மூலம்

 சுதர்சன் என்ற சொல், தொன்றுதொட்டுத் தமிழிலும் வழக்குடைய  சொல். பெரும்பாலும் விட்ணுவையும் குறிக்கக்கூடும்.  அழகுடையது,  தோற்றப்பொலிவு கொண்டது என்பர். இதில்  சு, தர்ஷன் என்ற இரண்டு சொற்கள் உள.  

தெய்வ தெரிசனம் என்ற தொடரில் தெரிசனம் ( தெரி+ சன்+ அம்) என்றால் தெய்வம், தெய்வச்சிலை முதலானவை கண்ணுக்குத் தெரிவது அல்லது காட்சி தருவது.  தெரிதல் என்ற வினை தமிழ். இது தர்ஷன் என்று தமிழல்லாத இந்திய மொழிகளில் திரியும்.  சன் என்பது  சு விகுதியும் அன் விகுதியும் இணைந்த இணைப்பு.  சு என்பது சுற்றிலும் அல்லது சூழவும் என்ற பொருளது. அதன் ஒரு சொற்குறுக்கம்:  இங்கு கடைக்குறை போல்வது,  முன்னொட்டாக நின்றது. சு என்பது நாளடைவில் சுபம் அல்லது தீங்கற்றது, மேலானது என்று பொருள்வரத் திரிந்தது. இரண்டும் இந்திய மொழிகள் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது.

இங்கு கண்டவற்றை  விரித்து உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வியாழன், 12 பிப்ரவரி, 2026

சர்வம் என்பது

 இதைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு எழுதியுள்ளோம்.

https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_8.html

ஒரு சரிவில் கொட்டிய நீரனைத்தும் சரிவினடிக்குச் சென்றுவிடுவதால், அடியிற் சென்று மீட்டாலன்றி, எல்லாம் ஓடிவிட்டது என்றுதான் சொல்வர். சரிவிலிருந்து மீட்டல் அரிய ஒன்றே ஆகும்.  இதன் அடிச்சொல் சரு என்பதுதான்.  அரு> சரு> சருவு> சருவம்> சர்வம் என்றானதுதான் இச்சொல். சரு என்பதற்கு முந்திய அடி அரு என்பது கூறினோம். மீட்டல் அரிது  என்பதை அரு என்ற அடி காட்டுகிறது. சரிதல் என்பது  சொன்னவன் பக்கம் சாய்ந்துகொள்வது என்ற பொருண்மையால் ஒத்துக்கொள்ளுதலும் உணர்த்துகிறது.

சர்வம் என்பது சமஸ்கிருதம் என்று வைத்துக்கொள்வோம்.  அப்படியானால் அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லா நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம் என்றாகும்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஜீவன் என்ற சொல்.

 ஜீவன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது சீவித்தல் என்று வினையாகவும் வரும். இதற்குப் பல சொல் தோற்றங்கள் சொல்லப்பட்டிருந்தாலும்,  இதைத் தமிழ் மூலத்தது என்று  ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.

மனிதன் இறந்தபின் மீண்டும் மறுபிறவி கொள்கிறான் என்பது ஒரு கொள்கையாகும். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதார் பலராயினும், நம்புவோரும் பலராவர்.  Lobsang Rampa முதல் பலர் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மறுபிறவி உண்டென்று கூறுவர்.  தமிழ்ச் சங்க காலத்திலும் மறுபிறவி நம்பிக்கை உடையோர் பலர் இருந்தனர்.

உயிர் >  யிர் >  ஜிவ் > ஜீவன்,  ஜீவித்தல் என்று வருதல் கூடுமென்பர். இது இலங்கை ஆய்வாளரின் கருத்து.

சீர் வருந்ந >  சீவன்ன  > சீவன் என்று வருதலும் கூடுமென்க.

சீர் மிக்கது என்பது புவி வாழ்வே என்பது இதன் கருத்தாக,  உயிர்> உசிர்> சீர்> சீர்வன்ன >  சீவன் என்றாகுமென்ப.

சிர் > சீர்,  வருந்ந என்பது வருகின்ற  என்பது. இன்று என்ற சொல் இன்னு, இன்னக்கி என்றெல்லாம் பேச்சுமொழியில் வருகிறது. ஆகவே வருகின்ற என்பது வருகின்ன -  வருன்ன ,  இதில் வரு என்பது வ  என்று குறுகும்.  வரு என்ற மூலவடி,  வந்த என்ற இறந்தகால வடிவத்தில், தன் ருகரமிழந்து, வந்த  எனவாதல் அறிக. சீவன் என்பதில் இந்த வன் மட்டும் உள்ளது.  வந்> வன். இதில் அன் விகுதிபோலும் அழகு வந்துவிட்டபடியால், அதையே இறுதிநிலை ஆக்கிவிட்டனர்.

வரு என்ற வினைப்பகுதியும்  வருந்து என்ற வினைப்பகுதியும் இவற்றின் காலவினைத் திரிபுகளுடன் கலந்து மயங்குமாறு விளைதல்,  தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

உயிர் என்ற சொல்லே ஜீவன் என்று வந்தது என்று பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

தலைச்சொல் இழக்கை பல சொற்களில் வந்துள்ள காட்சி ஆகும். எ-டு:  அரங்கன் - ரங்கன். இனி ரங்கா என்பது விளிவடிவம்.  பண்டை நாட்களில் கீழே நெடுஞ்சாண்கிடையாக  விழுந்தோ, நின்று முன்வாட்டாகச் சாய்ந்தோ வணங்கிய கடவுள், ''சாய்மி''   என்பது சாமி  ஆயிற்று.

சமஸ்கிருத மொழிச்சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திலும் கலந்துள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சந்தா வாய்தா

 இப்போது சந்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

இந்தச் சொல்லில் இரண்டு பகவுகள் உள்ளன.  ஒரு சொல்லின் பகுதிச் சொற்களைத் தாம் பகவுகள் என்று குறிக்கின்றோம். பகவுகள் ஆவன:

அண்> சண்> சண்+தா> சண்தா > சந்தா  ஆகும்.  இதைச்

சண்> சம்>  சந்தா  என்று குறிக்க, இன்னும் தெளிவாகும்.

முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்கையில்  சண்+தா> ச ண்டா என்று வல்லொலி மிக்குப் புணரும்.  சொல்லாக்கத்திலும் கூட இவ்வாறும் வருவதுண்டு. எடுத்துக்காட்டாக,  அண்> சண்>  சண்டை.  இறுதியில் வந்த ''தை'' விகுதி: சொல்லாக்கப் புணர்வில், டை என்று மாறிவிட்டது. தை என்பது இதில் விகுதி யன்று, விகுதி டை தான் என்று வாதிட்டாலும்,  இந்த வாதத்தினால் எந்தப் பெரும்பயனும் விளையப்போவதில்லை. இருவழிகளிலும் இதனை விளக்குதல் கூடுமென்று வைத்துக்கொள்வதில் ஒன்றும் இழுக்காது என்றுணர்க. மொழியில் போதுமான சொற்களின் தொகுதி வேண்டுமென்று முயற்சி செய்யும்போது, இதை எல்லாம் நுணுகி  ஆய்தலினால் பயன் இல்லை. 

''நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் 

பயனில  சொல்லாமை நன்று''

என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கினை சிரமேற் கொள்க.

சண்+தை,  சண்+டை என்ற இரண்டு சொற்களிலும், ஒரே அடியிலிருந்து இரண்டு சொற்களைப் படைத்தளித்தல்  திறனே என்று கொள்க.  விகுதிகள்தாம் மாறின.   அடுத்துச்செல்லாமல் சந்தையு மில்லை,  சண்டையும் இல்லை.

பண்டைக் காலத்தில்,  அடுத்துச் சென்றுதான் பணம் கட்டினர்,  சந்தா என்பதற்கு அதுவே பொருள்.  வாய்தா என்பதற்கும் அதுவே பொருள்.  இடம் என்றால் அதற்கு இன்னொரு சொல்: வாய்.  இச்சொல் பலபொருள் உள்ள சொல். இடத்திற்குத் தந்தது  வாய்-தா.   தா என்பது முதனிலைப் பெயராய்த் தருபொருள் குறித்தது.

வாய்தா என்பது  :  வாய் - இடம்;  தா-  தருவது. முதனிலைத் தொழிற்பெயராய், இங்குச் சொல்லின் பகவாய் வந்தது.  நிலவரிக்கு இது பெயராய் வந்து,  இங்கு வாய் - என்பது இடம் என்று பொருள்படும் தமிழ்.   அப்புறம் வாய் என்பது வாயென்னும் முக உறுப்பையும் குறிப்பதால்,  வாயினால் கேட்டுப்பெறுவது என்றும் பொருள்பட்டது. இது அரபுக்களினுடன் ஏற்பட்ட தொடர்பினால்  அங்கும் சென்று வழங்கி,  அரபுச் சொல் என்றும் நினைத்தனர்.

பல தமிழ்மூலங்களை அரபு மொழியிலும் காணலாம்.  அல் காதிப்  என்போர் முன் காலத்தில் தமிழரிடை இருந்த காப்பியக் குடியினர் போல,  நூல்கள் ஓதும் வகுப்பினர்.   ஸ்க்ரைப்  (scribes)  என்று ஒரு குடியினர் இஸ்ரவேலரிடம இருந்தமை போலும் இது. பழைய யூத புராணத்தையும் படித்து இதை அறிந்துகொள்ளலாம்.  பாரிசிகள்,  சாதுசிகள் என்றவர்களும் இருந்தனர்.  Dead Sea Scrolls என்ற நூலையும் படியுங்கள். C J Buckle SJ  எழுதியவையும் படிக்கலாம்.

Sadusee என்ற சொல்லுக்கும்  சதை என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஏதும் நீங்கள் தொடர்பு அறிகிறீர்களா என்பதை எமக்குச் சொல்லுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 2 பிப்ரவரி, 2026

விளக்கமார் என்னும் பேச்சுச் சொல்

 விளக்கமார் என்னும் பேச்சுச்சொல் .

இந்த ''விளக்க-மார்''  என்னும் சொல்  நாம் தமிழ் பேசுகின்ற போது நாம் வழங்கும் சொல்லாகும்.  இந்தச் சொல் பிடிக்கவில்லை என்றால், இதே போன்ற பாணியில் அமைந்த ''கூட்டுமார்''  என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலா9ம். செவிக்கினிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற  கொள்கை உடையவர்களும் உள்ளனர். மனிதன் பேசும் அனைத்துச் சொற்களும் நாவிலிருந்து அல்லது அஃது இயங்கும் வாயிலிருந்து வரும் சொற்கள்தாம். அதாவது இவை நாவொலிச் சொற்கள். இவற்றை ஒலிவடிவச் சொற்கள் என்று இலக்கண நூலார் கூறுவர்.

இந்தச் சொல்லில் வரும் மார் என்ற வடிவம், மலார் என்று அகரவரிசை யுடையாரால் பதிவு செய்யப்பட்டுளது.  மாறு என்பதும் காணப்படுகிறது.  ஆகவே கூட்டுமாறு, கூட்டுமார், விளக்கமார்,  விளக்கமாறு என்று பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. மாறு என்பதும் துடைப்பத்துக்கு வழக்கில் இருந்துள்ளது. 

மலார், மலாறு, மிலாறு என்பவற்றோடு மார் என்பதையும் கூட்டியுரைக்கத் தோன்றுகிறது. மிலார் என்ற வடிவமும் உண்டு.  ''மிலார்கள் தம்மில் பொலிந்தன பவளக்காய்கள்'' என்று பாரதிதாசனார் கவிதையில் வருகிறது. இந்த வடிவமும் அகரவரிசையில் இருந்திருக்கக் கூடும்.  மாறு என்றால் துடைப்பம் என்ற பதிவும் காணப்படுகிறது. எல்லா அகரவரிசைகளையும் பார்க்குமளவுக்கு நூல்கள் கிட்டவில்லை.

மலார் என்பது சிறு கிளைகளை அல்லது குச்சிகளைக் குறிக்கும் சொல். இது மிலார் என்றும் திரியும் என்பது கூறப்பட்டது. மலார் என்றது   பேச்சில் மார் என்று திரிந்துள்ளது. பாத்திரங்களை விளக்குவதற்கு அல்லது துடைத்து அழுக்ககற்றி  வைப்பதற்கு மலார்கள் பயன்பட்டன.  இந்தச் சிறிய இணுக்குகள் மென்மையானவை.  மெல் என்ற அடிச்சொல்லினின்றே  மலார் என்ற சொல்லின் தொடர்பினதான  மில் வருகிறது.  மெல்-மல்- மலார் என்ற திரிபு காணக்கிடக்கின்றது.   அர் என்பது அரு என்பதன் திரிபு.  அரு>அர்.  அரு என்பது சிறு வடிவினவாயவற்றையும் குறிக்கும். மெல்>மில்>மிலார்.   அர் இங்கு ஆர் ஆனது.  அர்> ஆர்: வந்தனர் (அர்> ஆர்) என்பதால் வந்தார். ஆர் என்பது, பன்மையும் ஆகும்.  வந்தார் என்பது பண்டைத் தமிழில் பன்மை, இன்று ஒருமையையும் குறிப்பது  வழுவமைதி என்றனர். மிலார்கள் அருகருகில் இருப்பவை,  அதனால் பொருந்துகின்றன. மிலாறு என்பது மலார் என்றும் வந்துள்ளது.

பழைய இடுகைகளில் பல திரிபுகள் காட்டப்பெற்றுள்ளன.  மெல்>மில்>மிலார்>மிலாறு என்பவற்றோடு கூறப்பட்ட பிறவும் தெளிவாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 30 ஜனவரி, 2026

சமர்ப்பித்தல் என்பது.

 சமர்ப்பித்தல் என்ற சொல் எவ்வாறு அறிந்துகொள்வது.

அமைத்தல் என்ற சொல்லின் அடியுடன்,   அருமை குறிக்கும் அர் என்ற அடிச்சொல்லும் இனைந்திருப்பதுதான் அமர்(தல்) என்ற சொல்.  அர்> அரு> அருமை, அரிய, அரிது என்பவெல்லாம் உண்டாயின.  அர் என்ற சொல் உயர்ந்தோருக்குரிய பன்மை விகுதியாகவும் வழங்கிவருகிறது. தகுதியான முறையில் ஓரிடத்திருத்தலைத்தான் அமர்தல் என் கிறோம்.

அம் > அமை> அமைதல்.

அம்>  அம்மை> அம்மா( விளிவடிவம்).

அம்> அமிழ்.  அமிழும் போது பொருள் கீழ்நோக்கி இறங்குகிறது.    அம் > அமர்: அமரும்போது நிற்பவன் கீழ் நோக்கி உடலைக் கொண்டுபோய் உட்காருகிறான். அமையும்போது நன் கு இருப்புக்கொள்வதாக வரும் போது, அமைந்தது என்று சொல்கிறோம்.  அம் என்பதுடன் ஐ என்ற உயர்வு குறிக்கும் பழைய அடிச்ச்சொல்லும் சேர்ந்து வருவதை உணர்ந்துகொள்க.

அமர்தல் என்ற சொல்லில் அம், அர் என்ற பழைய அடிகள் உள.  அமர்ந்தால், உடல் தரைக்கு அருகில் செல்கிறது.  ஆகவே தரைக்கும் தலைக்கும் உள்ள இடம் குறுக்கமடைகிறது.   அரு> அருகுதல் என்பது குறைதலைக் குறிக்கும், குறுக்கத்தைக் குறிக்கும்.  ஆணவமுதலிய கேடுகள் குறைவதும்  இதில் குறிப்பாக  உள்ளது. உட்கார் என்ற சொல்லிலும்  ஆர் என்பதும்  அரு> ஆர் என்று திரிந்து அமைந்ததே.   உட்கு என்பது உள்+கு என்பதுதான். நிலம்நோக்கி உடல் செல்வது உட்செல்வது போன்றதே.  உள்+ கு  என்பது இக்கருத்தே. இதிலிருந்து அமர் என்பதில் வரும் அர் என்பதற்கும்  உட்கார் என்பதில் வரும் ஆருக்கும் உள்ள உறவினை நல்லபடி அறிந்தின்புறலாம்.

அமர் என்ற சொல்லே சமர் என்றபடி வருகிறது.    அமணர்- சமணர் என்பதுபோல் வரும் திரிபே இது.  சமர்> சமர்ப்பி என்பது,  ஒன்றைப் பெரியோனின் இடத்தில்  அமரும்படி  செய்வதுதான்.  அதாவது இயல்பான மொழியில் சொல்வதானால்  அமர்விப்பது.  இருப்பிப்பது.  இவ்வாறு அமைந்த சொல்தான்  சமர்ப்பித்தல் என்பதாகும்.

சமர்ப்பித்தல் என்பது அருமையான தமிழ்ச்சொல் ஆகும். இந்த  உயர்வான வழக்கில் இது பயன்பாடு காணும் சொல்லாய் இருப்பதால்,  இது ஒரு அரசவைச் சொல் ஆகும்.  பண்டை அரசவைச் சொற்கள் எல்லாவற்றையும் நாம் அறிந்துகொண்டுவிட்டோம் என்று சொல்வதற்கில்லை.  அதற்கு இன்னும் ஆய்வுகள் முடுக்கிவிடப்படுதல் வேண்டும்.

இச்சொல் சமகதம் அல்லது சங்கதம் என்னும் சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது.  சமஸ்கிருதம் என்ற தமிழுக்குச் சமமான ஒலிகளையுடைய மொழி என்பது பொருள். ஒலிமேம்பாடு என்று கருதாமல் அடிப்படை ஒலிகளை மட்டும் கொண்டால்  சம ஒலி மொழிதான் சமஸ்கிருதம்.  சம ஒலி என்பது பெரும்பான்மை பற்றி வந்த பெயர். எல்லாம் ஒன்றாக இருந்தால் அது வேறு மொழியாக இருக்காது.  ஆகவே வேறுபாடுகள் இருக்கும்.

மொழியின் அமைப்பு பற்றிய முழு அறிவும் திரிபுகளைப் பற்றிய தெரிவும் இல்லாத காலத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் குறையுடையவையாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இங்கு சொல்லப்பட்டதுபோன்ற தெளிவுரைகள் அப்போது எழுதிற்றிலர் என்பதையும் உணர்க. உணரவே, இங்கு சொன்னவற்றின் ஆழம் அறியலாகும்.

தமிழ் அரசாட்சி நெடுங்காலம் நடைபெற்றது என்றாலும்,  தமிழ் அரசியற் சொற்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை.  விளக்கங்கள் இன்னும் எவரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.  ஆனாலும் சமர்ப்பித்தல் என்பது ஓர் அரசியற் சொல். அதனை இங்குக் காட்டியுள்ளோம். உமக்கு இதைப்பற்றிய ஆய்வறிவு உண்டாயின் நீர் உம் கருத்துக்களை எழுதி ஒரு நூலாக வெளியிடுக. அதனால் தமிழுலகு பயன்பெறும்.

யாம் மேற்கோள் காட்டுவதற்கு தமிழ் அரசியற் சொற்கள் என்ற பெயரில் ஒரு நூலிருப்பதாகத் தெரியவில்லை.  இருந்து உமக்கும் தெரிந்தால்  அதனை எமக்குத் தெரிவிக்கவும். வெற்றுவாய் வீச்சினால் பயன் ஒன்றும் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

செவ்வாய், 27 ஜனவரி, 2026

சிறிய வீடானாலும் சிறந்த பூக்கூடை ( கவிதை)

 சிறிய வீடானாலும் 

சிறந்தபூக் கூடையிலே

நறியபூ தமைநிறுத்தி

நாற்புறமும் மின் தீபம் 

உரியகண் பார்த்திடவே

உலையாத நன் கவினாம்

அரியவித் திருநாளில்

அகமகிழ்வு பெருகுவதே.


பொருள்:-


நறிய - நறுமணம் வீசுகிற

மின் - மின்னாற்றலினால் ஆன

உலையாத -  கலையாத, அழிதலில்லாத

அரியவித் திருநாள் -  வரும் 2026 புத்தாண்டு





பொம்மைகள் அலங்கரிப்பு

சனி, 24 ஜனவரி, 2026

பிரளயம் இது பிறழ் வினையிலிருந்து.

 பிரளயம் என்ற சொல் சமஸ்கிருதமா?

பிரளயம் என்பது இயற்கை நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு, அழிவும் ஏற்படுவது ஆகும்.  பிரளயங்களில்,  தினப்பிரளயம் என்பது பிரம்மனின் ஆயுளில் ஒரு நாளின் முடிவில் ஏற்படுவது  ஆகும். தினந்தோறும் நிகழ்வதால் நித்தியப்பிரளயம் என்றும் கூறப்படுவதாகும். நைமித்திகப் பிரளயம் என்பது பகல் முடிந்ததும் நிகழ்வது.  அவனது வயதில் நூறாண்டுகட்கு ஒருமுறை ஏற்பட்டால் பிர்மப்பிரளயம் எனப்படும். அழிவுகள் ஏற்படும் முறைகளை அறிந்துகொள்ள மனிதன் முற்பட்டது மிக்கப் பாராட்டுக்குரியது என்று சொல்வோம்.  நமது பண்டை மக்கள், ஆய்வு மனப்பான்மை உடையவர்களாய் இருந்து இப்படிச்  சொற்களைப் படைத்திருப்பது நமக்கும் ஒருவழிகாட்டுதல் என்றே கருதவேண்டும்.

தற்போது நடைபெற்றுவரும் ஆய்வுகளில் முற்செலவை  இம்முறை கைக்கொண்டு அவற்றுக்குரிய சொற்களைப் படைக்கும் திறத்தை நாம் பெறுவது நிகழ்தல்,  இன்றியமையாது வேண்டப்படுவதென்க.

பின்றுதல் என்ற வினைச்சொல் பின் என்பதிலிருந்து வருகிறது. பின்றுதல் என்பதற்கும் பிறழ்தல் என்பதற்கும் பொருண்மைத் தொடர்பு மிக்குள்ளது என்று அறிக, உன் செலவுகள் பின்றாமல் பேணிக்கொள் என்றால் ''பிறழாமல் பேணிக்கொள்''  என்று பொருள்.

பிறழ்தல் என்பது புரள்தல் என்றும் வருவதுதான்.  இது பேச்சுவழக்கில் நன்கு வழங்குகிறது என்பது நீங்கள் அறிந்தது ஆகும்.

பிறழ் என்பது பிரள்(தல்) என்று மாகும்.   பிரளயம் என்ற சொல்,  பின் காட்டிய சொல்லினின்று வந்தது ஆகும்.  பிறழயம் என்று வருதல் இல்லை யாதலால்,  பிறழ் என்பது பிரள் என்று மாறிய பின்பே பிரளயம் என்ற சொல் உருவாகும் என்பதை அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 19 ஜனவரி, 2026

புராணம் என்பதென்ன

 புராணம் என்பதென்ன என்று வினவிக்கொள்கிறோம். இதற்கு நாம் கண்டுபிடிக்கும் விடையிலிருந்து  புராணம் என்ற சொல்லுக்கு  அந்தச் சொல் புனைந்த காலத்தில் என்ன பொருளில் வழங்கியது என்று அறிந்துகொள்வோம்.

ஓர் இறைக்கதையை எடுத்துச் சொல்கிறவன்,  உரிய நிகழ்வினைக் கேட்டறிந்து கூறுகிறவனாகில், தான் அறியாமற் கழிந்தவை போக எஞ்சியவற்றைக் காதில் வாங்கிக்கொண்டு,  அந்தக் கதையைப் புனைந்து உரைப்பவனாகிறான்.  

புனைதல் என்பதென்ன?  புனையரணம் புராணம்.இந்தச் சொல்,  னை என்னுமெழுத்தும் யகரமும்  கெட்ட ( அல்லது நீக்கப்பட்ட) சொல்லாகும்.  இந்தச் சொல்லும் புனைவுச்சொல்லே. அல்லது தானே மக்களிடம் திரிந்த சொல்லெனினும் அதுவும் கூடுவதே. பு(னைய)ரணம்>> புரணம்>  புராணம்  ஆனது.  இது இரண்டு எழுத்துக்கள் மறைந்த இடைக்குறைச் சொல். எழுத்துக்கள் வேண்டுமென்றே விடுக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை என்பர்.  மூவுழக்காழாக்குத் தினைதந்தாள் என்றதை மூழாக்காழாக்கு  என்று திரித்தால், அது தொகை ஆகும். இவ்வாறு சொல்லின் முழுமையும் அறிந்தோர் தமிழரே. பிறர் சொற்பர் ஆவர்.

இனி இன்னொரு பிறப்பும் இச்சொல்லுக்குக் கூறலாம்.  இலக்கியத்தை, கவிதையை, இறைவரலாற்றை, நடந்தனவற்றை உள்ளபடி காத்து வைப்பதற்கு ஆனவற்றை  எழுதிவைக்க ,  புர+ அணம் >  புராணம் என்று சொல்லமைந்தது என்னில்,  அதுவும் கூடுவதே.  

இச்சொல்லை முன்னரே  ஆய்ந்தோ ஆயாமலோ, அமைப்புக் கூறினவர்களும் உள்ளனர். அவர்கள் பழையன காத்தல் என்ற பொருளில் புராணம் ஆகும் என்றனர்.  அதையும்  சிந்தித்துக்கொண்டால்,  இச்சொல் ஒரு பலபிறப்பி என்று கொள்ளவேண்டும். பிற கூறினோரும் உளர். அவற்றை அவர்தம் நூலிற் காண்க.

புராணம் என்றால் பழமையானது, பொய்யுரை என்ற பொருளில் இங்கு எதுவும் கூறப்படவில்லை என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 16 ஜனவரி, 2026

மூலியம், மூலிகை ( அவன் மூலியமாய்....) சிறு அலசல்.


கதிர்வேலுப் பிள்ளை என்பவர் ஒரு சிறந்த அகரவரிசைத் தொகுப்பாளர். அவரை நினைவு கூர்வோம்.

========================================================================
தமிழர் நாகரிகத்தின் பழமையான சான்றுகள் இப்போது தமிழ்நாட்டில் அகழ்வாய்வின் மூலமாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

சொல்:  முல் > முன்.  சொல்லாக்கங்கள்:

முல் >  முலை  (முன்னிருப்பது)

முல் > முன் ( லகர னகரப் போலி)  

முன் >  முனை ( முன்னிருப்பது). 


சொல்லின் முதல் நீளுதல்:

முல் >  மூல் > மூலம்.    மூலம் என்பதில்  அம் விகுதி வந்தது.  பழு> பழம் என்பது போலும்.

மூல் >  மூலிகை.  ( இ, கை).

மூல் > மூலியம் ( பேச்சு வழக்குச் சொல்). வழக்கு என்றால் பயன்பாடு.

(மூலியம் -  வழியாக, மூலமாக என்று பயன்பாட்டுப் பொருள்)

இது பலபொருட் சொல்.  through, means, price, payment  (see dictionary). etc.

மூலிகன் -  செடி. ( தவசி).

இப்போது மூலிகை என்ற சொல் மட்டும் வழங்குகிறது.  மூலிக்கை என்ற சொல்லும் உள்ளது. இது மருந்து மூலிகைகளைக் குறிப்பது.

மூல்+ இ+ அம் என்பவற்றில் இ - இடைநிலை, அம் - இறுதிநிலை;  இறுதிநிலையாவது விகுதி.   மிகுதி =  விகுதி  ( மி - வி  திரிபு).

விகு - விகுத்தல் என்ற சொல் இருக்கலாம் என்றாலும் பழைய நூல்களிக் கண்டுபிடிக்க முடியவில்லை.  விஞ்சு > < மிஞ்சு திரிபு எனில் அமையும்.

வியாழன், 15 ஜனவரி, 2026

அகஸ்துமாத்து, அல்லது அகஸ்மாத்து

 காரணம் இல்லாமல்  என்பதை அகஸ்துமாத்தாக அல்லது அகஸ்மாத்தாக  என்பர்.

ஒரு காரணம் என்பது  எப்போதும் மனத்தில் இருப்பது.  அந்தக் காரணத்தை,  காரியத்தைச் செய்பவன் அல்லது காரியத்தினால் பாதிப்புற்றவன் வெளியில் சொன்னால்தான் பிறரும் அதை அறிந்துகொள்ளவேண்டிவரும்.  நடப்பிலிருந்து ஊகித்துக் கொள்வதாய் இருந்தாலும் ஊகித்தவன் வெளியிட்டாலன்றி பிறர் அறிதல் கடினம்தான்.

இந்தச் சொல்லில் மாற்று என்பது  மாத்து என்று வந்தது,  மக்கள் பயன்படுத்தும் முறையில் சொல்லமைந்ததைக் காட்டுகிறது. காரணம் இருக்கும் என்னும் மனத்தினருக்கு அதற்கு மாறாக சம்பவம் நடந்ததையே இது காட்டுகிறது.

அகத்து -  உள்ளமைந்த காரணம் உண்டென்று எதிர்பார்ப்பவருக்கு,  மாத்து =  மாற்றமாக  ( நடந்தது  என்பது_.

அகத்து என்பதே அகஸ்து என்று வந்துள்ளது. பேச்சுத் திரிபு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

துவைத்தல் ஏசுதல் இரண்டையும் வைத்து ஒரு சொல் புனையமுடியுமா?

 சொல்புனை  பயிற்சி ஒன்றை இப்போது நடாத்தி, தமிழை மேலும் அறிந்துகொள்வோம்.

துவைத்தல் என்பதொரு சொல். இதைச் சொன்னவுடன் துணியைத்  துவைத்தலென்பதே நினைவுக்கு வருகிறது.  இந்தச் சொல் ஒலி எழுப்புதல் என்பதையும் குறிக்கும்.   ஒலி எழுப்புதலைக் குறிக்க மட்டும்  ஐம்பதுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுடன் துவைத்தல் என்பதும் சேர்ந்து தமிழ் வளம் காட்டுகின்றது. உலகில் மிகப் பழைய மொழி,  உலகின் மிக்கச் செழுமையான மொழி என்பதில் எந்த ஐயப்படுமில்லை.

ஒலித்தல் - அரற்றல், அரம்பல், அலறல், அழுங்கல், அர்த்தல், ஆலல், இசைத் தல், இடுத்தல், இமிர்தல், இமிழ்தல், இயம்பல், இரங்கல், இரட்டல், இரைத்தல், இணைத்தல், உறற்றல், உறைத்தல், உலம்பல், உழம்பல், உளைத்தல், ஏங்கல், கதித்தல், கரைதல், கலித்தல், கறங்கல், களைத்தல், குமுறல், குரைத்தல், குளிறல், சலித்தல், சிதைத்தல், சிம்பல், சிரத்துதல், சிலம்பல். சிலும்பல், சிலைத்தல், ஞெள்ளல், தழங்கல் , துவைத்தல், தெவிட்டல், தெழித்தல், தொளித்தல், நரலல், நரற்றல், பயிறல், பிளிறல், பிறங்கல், புலம்பல், முரவல், முரற்றல், முழங்கல், விம்மல்.

மொழியைப் பண்படுத்தி வளமாக்கி வைத்துக்கொள்வதற்கு வேண்டிய அரசியல் நிலைத்தன்மையும் ஆட்சி ஒழுங்கும் தமிழ்மக்களுக்கு இல்லாதிருந்தால் இந்த வளத்தை எட்டிப் பிடித்திருக்க இயலாது.

அரட்டுதல் என்ற சொல் ஒலிஎழுப்புதலுடன் அதை அதிகாரத்துடன் செய்தலையும் குறித்ததால்,  ஆட்சியாளனைக் குறிக்கும் அரசன் என்ற சொல் அதிலிருந்து வந்தது.  அரட்டன் என்பது அரசனுக்குத் தமிழில் பழைய பெயர். அதிலிருந்து உலகின் பல மொழிகளில் அரசனுக்கான பெயர்கள் அமைந்தன. ரெக்ஸ் என்ற இலத்தீன் சொல் இதிலிருந்து வந்தது.   ராணா,  ராணி என்பவையும் இதிலிருந்தே வந்தன.  ராவ் என்ற பட்டப்பெயருக்கும் இதுவே அடிப்படை. ராவ் என்பதும் ராய் என்பதும் இவற்றினின்று புறப்பட்டன.

சரியான தண்டனை போல ஒருவனைப் புடைத்து ஒன்றைத் தெளிவாக்கினால் வெளுத்துக் கட்டிவிட்டார் என்று சொல்வது வழக்கமாய் உள்ளது. துவைத்தல் என்பதும் இப்படி ஒருவனைத் தண்டிப்பது போல் அறிவுறுத்துவதைக் குறிக்கும்.  ஆனால் அத்துடன் அவனை ஏசவும் செய்தால், அதற்கு இன்ன்னொரு சொல் வருகிறது.  துவேசித்தல் என்பது அது.  ஏசித்தல் என்பதை ஏச்சினையும் சேர்ப்பித்துக்கொள்வதைக் குறிக்கும்.  துவை+ ஏசித்தல் > துவேசித்தல் என்ற சொல் இதற்கு வருகிறது..  இச்சொல் சமஸ்கிருத ஒலியமைப்பில் நன்கு ஒளிசெய்கின்றது என்பதைக் காணலாம்.

துவை + ஏசுதல் >  துவை+ ஏசித்தல் > துவேசித்தல்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 9 ஜனவரி, 2026

அதிசயம் என்பது தமிழ்?

 அதிசயம் என்னும் சொல்லை ஆய்வு செய்வோம்.

பொருள்கள் உலகில் தோற்றமளிப்பது மூலப்பொருள்கள்  அல்லது ஆக்குவதற்குரிய பொருள்கள் இசைந்து அல்லது இணந்து  சிறத்தலாலேதாம்.

தண்ணீரில் தீ எரிவது ஓர் அதிசயம்  ஆகலாம். அது நடைபெறுவதற்கு எவ்வெப் பொருள்கள் சேர்ந்தன அல்லது கலந்தன என்பதே கேள்வி ஆகும்.

அதி + இசை(வு) +  அம் >   அதி + இசை+ அம் >  அதிசயம்  ( திரிபுச்சொல்).

அதி +  சை + அம் >  அதிசயம்  ஆகும்.

அதி இசை என்பதில் உள்ள இகரம்  ஒழிந்தது.

சை என்பது ச என்றானது ஐகாரக் குறுக்கம்.

அதிகம் என்ற சொல்லும் தமிழ்தான்.   அது இகத்தல்  என்றால் அது மீறுதல் அல்லது  கூடுவது.   மிகுதியாவது.  அது இக >  அதிக.

இது குறைச்சொல்லாய்  அதி என்று முன்னொட்டாகும்.   சொற்களிலும் வரும்.

தமிழ் இயன் மொழி.  மிக்கத் திரிசொற்களை  சமஸ்கிருதத்துக்குக் கொடுத்துவிடுவது இயன்மொழிக்கு உயர்வு தரும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது.  ஆனாலும் தொல்காப்பியர் காலத்திலே திரிசொற்கள் புகுந்துவிட்டன. 

இயற்சொற்கள் மட்டுமே கொண்டு மொழி நடைபெறுமானால் அஃது நல்லதுதான்.  தனித்தமிழ்   இனிமை மேலோங்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.


செவ்வாய், 6 ஜனவரி, 2026

குஞ்சு, கிராமம், சமஸ்கிருதத் தொடர்புகள்.

 தலைப்பில் கண்ட ''குஞ்சு''  என்ற சொல்.

ஓரெழுத்து ஒருசொல் என்று யாம் இங்குக் குறிக்க விரும்பும் சொற்கள் பெரும்பாலும் நெடில்  ஆனவை.   வா,  தா , போ முதலிய ஓரெழுத்துச் சொற்கள் இவற்றுள் அடங்கும்.  நாம் குறித்தவை.  நீ என்ற சொல்லும் இத்தகு சொல்லே எனினும், இது வினையன்று.  பதிற்பெயர் ( pronoun )  ஆகும்.  முன்னிலைப் பதிற்பெயர் என்றும் கூறுதற் குரியது இச்சொல். நான் என்பது ஒரு பதிற்பெயர் என்றாலும் இரண்டு எழுத்துக்கள் உண்மையால், அதைத் தனியாகச் சொன்னோம். நான் என்பது இப்போது பேச்சில் மூக்கொலியாக வந்து, ஓரெழுத்துச் சொல் போலவே ஒலிக்கும்.

சங்கதத்தில் பதில் என்பது  தன் இறுதி மெய்யை இழந்து,  பதி என்றாகி,  முதலெழுத்தாகிய ''ப''  என்பது  ''ப்ர''  என்றாகும்.  இறுதியில் ''ப்ரதி''  என்றாகும்.  இதைத் தமிழாக்க விழைந்தால் பிரதி என்னலாம். படி என்பதுதான் ப்ரதி என்றானது என்றும் சொல்வதுண்டு. எனவே ப்ரதி என்ற சங்கதம், சமவொலிச்சொல்.

சங்கதம் அல்லது சமஸ்கிருதம் என்பது சமவொலிச்சொல் என்றால்,  அது ஒரு தனிமொழிச் சொல்  என்பது பொய்மையே. ஆகவே பண்டிருந்தவர்கள், இதை ஒரு வேற்றினத்தவரின் பேச்சு என்று கருதவில்லை. ஒரே இனத்தாரின் வெவ்வேறு வகையான ஒலிப்பு முறை என்று கருதினர் என்பது தெளிவு. ஆகவே சமஸ்கிருதம் எனபது வெளியாரின் மொழி அன்று. அது வெளியாரின் மொழி என்பது வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்ட புளுகல். இதை நம்பியே மறைமலையடிகள்,  தேவனேயப் பாவாணர் முதலானோர் தங்கள் வரலாற்று ஓட்டத்து உரைகளை அமைத்திருந்தனர். அப்போது அவர்கள் இருந்த நிலையில் வெள்ளைக்காரன் புளுகிலிருந்து மேலெழுந்து  உரைபகர அவர்களாலும் இயல்வில்லை.  அவர்கள் நிலையில் நாமிருந்திருந்தால் நாமும் அந்தக் கதையில் தான் ஆழ்ந்திருந்திருப்போம்.

ஓரெழுத்து ஒருசொல்,  பல நெடிலானவை.  தனிக்குறில்களும் ஓரெழுத்தாகவே நின்று,  தனிப்பொருள் தரும்.  எடுத்துக்காட்டாக இங்கு கு எனற்பாலதைக் காண்போம்.  கு என்பது குறுக்கம் என்று பொருள்படும்.  கு என்பது சமஒலிச் சொல்லாக ( சங்கதம் அல்லது சமஸ்கிருதம்)  குறுக்கம் என்று கூறினோம் அல்லோமோ?  குக்கிராமம் என்ற சொல்லின் கு என்பது  ஒரு முன்னொட்டாக நின்று '' மிக்கச்சிறிய'' சிற்றூர்  என்று பொருள்படும்.  கிராமம் என்பது பழந்தமிழில் கமம் என்று வரும். கமம் என்பது பல்பொருளொரு சொல். தற்போது கமம் என்பது வேறுசில மொழிகளில் எவ்வாறு வருகிறது என்பதைப் பிற்பாடு கூறுகிறோம்.  கமம் ஒன்றிருந்தால் விளைநிலங்கள் நடந்து சென்றடையும் தொலைவில் அருகிலே இருக்கும். மலாய்மொழியில் கம்-போங் என்ற சொல்லில் கம் - கமம் உள்ளது. கம் என்ற ஆங்கில முன்னொட்டில் கமத்தின் தாக்கம் உள்ளதா?

குன்று என்ற சொல்லிலும் இந்தக் குறுக்கம் உள்ளது.   குன்> குனி என்பதிலும் இந்தக் குறுக்கம் உள்ளது  (குனிதல்).

குன்> குன்+சு >  குஞ்சு  வயதுக் குறுக்கம். உடற்குறுக்கம்.

விரிந்து நில்லாமல் கூடி நின்றாலும் இதுவும் ஒரு குறுக்கம்தான்.  கும் > கும்மி.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.













சனி, 3 ஜனவரி, 2026

உற்பத்தி :

 உற்பத்தி என்னும் சொல்.

இயற்கையில்,  ஒரு கரு தாயின் கருப்பையில்  '' உள் பற்றி'' யபின்  வளரத் தொடங்குகிறது.   இதனை ஆய்ந்துணராமல்,  உற்பத்தி என்பது தமிழன்று என்று மயங்கியோரும் உளர். சரியான சிந்தனை செய்யாமையே காரணம் ஆகும்.  உற்பத்தி என்பது இந்த இயற்கை விதியை அறிந்த சிற்றூரான் அமைத்து வழங்கிய சொல். 

இதையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். https://sivamaalaa.blogspot.com/2013/11/blog-post_20.html.

இதற்கு வேறு வகைகளிலும் அமைப்பு அறிவிப்பாருண்டு.  எனினும் இதுவே இதன் உண்மைப் பொருளை நன்கு  அறிவிக்கும் விளக்கமாகும்.

விதைகள் கொட்டைகளிலும் உள் பற்றிய பின்புதான் வளர்ச்சி உண்டாகிறது.

சிலர் வெளியில் பற்றியபின் வளர்வனவும் உண்டு என்னலாம்.   சில நுண்மிகள் ஒன்றன் வெளியில் பற்றியபின் வளர்கின்றன என்னலாம்.  வழக்கில் வெளியில் பற்றுதலும் உற்பத்தியில் அடங்கும். இதைத் தனியாக விளக்கவேண்டின் ''வெளிவளரி''  என்று ஒன்று வழங்கிக்கொள்ளலாம்.  ஏற்புழி அவ்வாறு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.







புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டே வருக வருக.

புரண்டுவரும் செல்வங்கள் பொன்னும் மணியும்

இரண்டா  யிரத்திருபத் தாறில் ----- திரண்டுவரும்

இம்மா நிலம்படைத்த    இன்தெய்வம் ஆசிதர

நன்மா நிலம்செழிக்கும்  நாள்.


இது புத்தாண்டை வரவேற்கும்  நேரிசை வெண்பா .

பொன்னும் மணியும் புரண்டுவரும் செல்வங்களும்  இந்த 26-ம்  ஆண்டில்

செறிந்து வரும் என்று இப்பாடல் வாழ்த்துகிறது.  இதற்கான  ஆசிகளை  

கடவுள் கொடுப்பார். குற்றம் முதலிய மிக்கில்லாத நாடுகள் தமக்கு இந்த 

புத்தாண்டு நாள் வளம் தருவதாகும். புத்தாண்டு நாளையும் சிறப்பித்தவாறு. 


சிவமாலா.

திங்கள், 29 டிசம்பர், 2025

இலாயக்கு

தமிழர் நாகரிகத்தில் இல்லமும் அதனுடன் தொடர்புபட்ட பொருள்களும்  முதன்மை வாய்ந்தன ஆகும்.  புறத்தனவாய் வாழ்வில் இணைவனவினும்  அகத்தனவாய் மிளிர்வனவே மிக்க விரிவுடையன  ஆகும். சங்கத் தொகை நூல்களில்  அகவொழுக்கமே மிக்க விரிவாக விளக்கப்படுகிறது. காதலித்து மணம் புரிந்துகொண்டு வீட்டுடன் வாழும் வாழ்வே தமிழன் விரும்பிய முழுமையான வாழ்வு ஆகும்.  புறவாழ்வின் வெற்றியும் விரிவேகமும் அகவாழ்வினை அமைத்துக்கொள்ள உதவினவே  ஆகும்.

இலாயக்கு என்ற பேச்சுவழக்குச் சொல்.  அகவாழ்வில் அவன் அடைந்த அமைதியினை நன்கு உணர்ந்துகொள்ள உதவிடும் வழக்குச் சொற்களில் சிறந்த ஒன்றாகும். இலாயக்கு என்பதைப் பிரித்துப் பார்த்தால்.  அகவாழ்வுக்கு உடையவை என்ற  கருத்து  மேலெழுந்து நிற்பதனை அறியமுடிகிறது.

இலாயக்கு என்ற  சொல் இன்று தலையிழந்து,  லாயக்கு என்றே வழங்குகிறது. இந்தச் சொல்  மூன்று பகவுகளை உடையதாய் உள்ளது.  இந்தப் பகவுகளை ஒவ்வொன்றாக அறிந்து இன்புறுவோம்.  இல்,  ஆய்,  அ, அக்கு என்பன இவை. இல்லத்துக்கு ஆன உரிமையை அடையாதவை,  ஒன்றுக்கும் தகுதி இல்லாதவை  ஆகும். ஆகவே உரிமை உடையவை என்பதைக் குறிக்க '' இலாயக்கு'' என்ற சொல் வழங்குகிறது.

இக்காலத்தில் உதவாதவற்றைக் குறிக்கவரும்போதுதான்  தகுதி என்ற பொருளில் லாயக்கு என்பது வழங்குகிறது.  '' இ--லாயக்கு இல்லை'' என்று இச்சொல் வந்துவிடுகிறது.

அக்கு என்பது சொல்லின் இறுதிப் பகவு  ஆகும்.  அக்கு என்றால் உரிமை.  இந்தச் சொல் நெடுங்காலமாக ஓர் இணைத் தொடரில் பொதிந்துள்ளதைக் காணலாம்.  இச்சொல்லுக்கு உரிமை என்ற பொருள் எவ்வாறு வந்துற்றதென்பதை கண்டுகொள்வோம்.   அக்கு என்ற சொல்லில் இரண்டு மிக்கப் பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. எவை எனில்   ''அ'' (அவை) என்னும் சுட்டுச்சொல்லும் கு என்ற சேர்வு குறிக்கும் சொல்லுமாகும்.  சென்னைக்குச் சென்றான் என்ற வாக்கியத்தில் வரும் கு என்னும் சொல் சேர்தலைக் குறிக்கும் சொல். அக்கு என்பதில்   இவை இரண்டும் அதற்குச் சேர்ந்தது என்ற பொருள்தரவே,  ''உரிமை'' என்ற பொருள்  போதருகிறது.  அக்கு வேறு ஆணிவேறாகக் கழன்றது என்ற வாக்கியத்தில்,  உரியன வேறு,  அல்லாதன வேறாகக் கழன்றுவிட்டது  என்ற் பொருள் கிட்டுகிறது. புல்லுக் கட்டில்,  உரியவை  புல்லும் தழையும்.  கயிறு  மாட்டுக்கு உணவாகாத வெளிப்பொருள் ஆகும்.

இல் -  இல்லிற்கு என்று பொருள்தரும். ஆய் -  ஆக என்று பொருள்.  அ -  சேர்ந்தன என்று பொருள்.  

இலாயக்கு என்றால்  இல்லாத்திற்கான உரிமை என்று பொருள்.

இச்சொல் முன்னாளில் வீட்டுக்குத் தேவை என்பது குறித்து, பின் இல்லாதவை என்ற சொல்லால் அவ்வுரிமை இல்லாதவை என்று பொருள் தந்தது.

இது அரபிச்சொல் என்று கொள்ளப்பட்டிருப்பினும் தமிழில்  இருந்த இந்த வழக்குச்சொல்,  பின்னர் அரபியர்களால் பெரிதும் கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று தெரிகிறது.  .  சில தமிழ்ச்சொற்கள் வெளிநாட்டினரால்  விரும்பி வழங்கப்படுகின்றது..  கடித்துக்கொள்வதற்கான உணவு என்ற பொருள்தரும் ''கறி''.  இன்று உலகப்புகழ் பெற்ற சொல்லாகி விட்டது

இலாயக்கு என்பது தமிழாகவும்  ''லாயக்''  என்பது தொடர்பற்ற சொல்லாகவும் ஓர் உடனிகழ்வு  காரணமாக (coincidence)  ஒலியொற்றுமை உடையனவாக இருக்கின்றன என்பதாகவுக் கூறலாம்.  ''லாயக்'' என்பதன் அடிச்சொற்கள் அரபியில் ஆய்வுக்குரியது ஆகும். இலாயக்கு என்பது தமிழ் என்பதில் ஐயமில்லை.

அரபியில் லாயக்  என்றால் பொருத்தமானது. தமிழில் இலாயக்கு என்றால் இல்லத்துக்கு உரிமையானது அல்லது வேண்டப்படுவது என்பது. பொருள்வேற்றுமை சிறிது உள்ளது.  அடிச்சொற்கள் அரபியில் வேறு. (عدم اللّياقة)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

.பகிர்வுரிமை





அக்கு -  உரிமை.

இல் -   இல்லலம்  உரி

ஆய்  ஆய் - உரிமை



வெள்ளி, 26 டிசம்பர், 2025

சூடு இயல்விக்கும் விண்கருவி சூரியன் ஆன தமிழ்மொழிப்பண்பு

 அடு மற்றும் அரு என்ற இருசொற்களையும் முதலில் எடுத்துக்கொள்வோம். அடுத்தல் என்றால் அருகிற் செல்லுதல்.  அருகுவைத்தல் என்றால் சூடு ஏற்றும்  ஒரு சட்டியையோ மற்ற வெப்பமேற்றியையோ அடுத்து வைத்தல் என்று பொருள்.  குழந்தைக்கு இசிவு வரும்போது இது செய்யப்படுகிறது. இதுபோழ்து இதற்கு மின்னாற்றலால் இயங்கும் கருவிகள் ஏற்பட்டுவிட்டன. அருகுவைத்தல் என்பது இப்போது யாருக்கும் நினைவிலிருக்கும் என்று யாம் நினைக்கவில்லை. அதற்கான ஆங்கில மருத்துவச்சொல் வழங்கிக்கொண்டிருக்கும். சூரியன் எத்துணைக்கல் தொலைவி லிருந்தாலும். அருகிலிருப்பவன் போல் நமக்கு வெப்பமளிப்பதால்,  அவனுக்கு ''அருக்கர்''  என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.  அருகு+ அர்>  அருக்கர் என்ற பெயர் உள்ளது.. சிலம்பு+ அதிகாரம் >  சில்ப்பதிகாரம் என்று பெயர் ஏற்பட்டதுபோல் இது ஒரு வலித்தல் விகாரம். மிகு+ ஆர்+ அம் > விகாரம் என்றாகும்.  மிஞ்சு> விஞ்சு என்று திரிதல்போல் விகாரம் இது.. 

உடு - உரு என்ற இணையும் இத்தகு பொருளணுக்கத்தை முன்நிறுத்தும்.  சொற்கள் வெவ்வேறு விகுதிகளைப் பெற்றுச் சொல்லமைந்தாலும்,  பகுதிகளையே ஒப்புநோக்கி இதை உணர்ந்துகொள்க. உடு > உடல்,  உரு- உருவம் என்பன காண்க. பொருள் சற்று வேறுபடுதல்,  ஒப்புமை எவ்வாறு எழுமென்பதைத் தெளிவாக்குகிறது. மனிதன் உருவிற்கு உடை அணிவிக்கப்படுகிறது.  உரு என்பது உடலின் புறக்காட்சி;  உடை என்பதும் புறக்காட்சிக்கு உதவுவதே  ஆகும்.  தமிழ்மொழிக்கு ஒரு சொல்லாக்கப் பண்பு மேவுவது  இதன்மூலம் தெளிவுபடுத்தப் படுகிறது.

மடி - மரி என்பன டகர ரகர திரிபியலுக்கு எடுத்துக்காட்டப் பெறும் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.  இவை பொருத்தமான விகுதிகளைப் பெறும்,  மடிதல், மரித்தல் என்பவற்றில் ஒன்றில் வலிமிகாதும் இன்னொன்றில் வலிமிக்கும் வரும்.  மரிதல் என்ற சொல் அமையவில்லை போலும்.  அதற்குப் பதிலாக, மருவுதல் என்ற வினைச்சொல் அமைந்துள்ளது. மடிதல், மரித்தல் இன்னும் மருவுதல் ஆகிய எல்லாம் மாறுதல் கருத்துக்கள் என்ற அளவில் ஒருமைப்பாடு உடையவை. இங்கு நாம் இத்துணை சொல்லமைப்புப் பண்புகளை எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவற்றுக்குள் செல்லாமலே,  ஒரு சொல் திரிபைக் காட்டிவிட்டு,  சூடியன் - சூரியன் என்பதைக் காட்டலாம்.  அது போதுமானதாகவே இருக்கும் என்றாலும்,  சிறிது அதிகச் சர்க்கரையை இங்கு தந்துள்ளோம்.

சூடு தருவதே சூரியனின் வேலை.  இது ஒரு நாட்டுப்புற வழக்கி லிருந்து வந்த ஒரு சொல்.  வெப்பி என்று பெயரைக் கூட வைத்திருக்கலாம்.  வழக்குப் பெற்றுவிடுமாயில் மொழியில் இடம்பெற்றுவிடும். சூடு கொளுத்தினும்  கொளுத்தி என்றும் அமையவில்லை. கொளுக்கி என்ற பெயர் கொளுவிக்கு அமைந்தது.   கொளுக்கி என்பது இடைக்குறையாய் கொக்கி என்று வந்தது.  இவை வேறு பொருட்களுக்கு அமைந்தன.

சூரியனுக்கு அமைந்த பெயர்கள் பல.  அவை நீங்கள் அறிந்தவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை














சிப்பந்தி

 பலர் உண்ணும்  அமர்வூட்டு முறையை,  பந்தி என்று சொல்கிறோம்.  இந்தப்  பந்தி என்ற சொல்லினை,  நம் பவணந்தியாரின் முறையைக் கையாண்டு பிரித்துப் பார்த்தால்,  எளிதிற் பொருள்கண்டு மகிழ்வினை எய்தலாம்.  சொல்லினை ஆய்வுசெய்கையில் மகிழ்வு அடைந்துகொள்வது,  மனப்பதிவு ஆய்வு முறைக்கு வித்திடும் என்று எதிர்க்கலாகாது.. எதைச் செய்தாலும் செய்வதில் மகிழ்வு கொள்ளுதல் என்பது ஒரு பங்காற்று முறையாகும்.  

பன்மை+ தி >  பன்+தி >  பந்தி என்று எளிதாக அமைத்துக் காண்க.  மைவிகுதி இணைத்து விலக்கிப் புணர்த்துவது பவணந்தியார் பண்புப்பெயர்கள் அமைவதற்குச் சொன்ன முறை.  இங்கு எளிதிலுணர்தல் என்ற பெறுதல்முறைக்காக இதைப் பரிந்துரை செய்கிறோம்.

பல வேலைத் தலங்களில் ஊழியர் பலர் இந்நாளில் வேலையிலிருப்பர்.  இவர்கள் பெரும்பாலும் பலராயிருக்கும் சிறிய வேலைக்காரர்கள் தாம். சிறு வேலைக்காரர்கள் என்பது தோன்றும் வண்ணம் சிறு என்பதை முன்னில் இட்டு,  சிறுப்பந்தி என்று இணைத்தால் சிறுவேலைப் பலர் என்று பொருந்தும். சிறுப்பந்தி என்பதற்கு  சிற்பந்தி என்று போட்டு,  இன்னும் எளிமையாக்கி, சிப்பந்தி என்று ஆக்கிவிட்டால் என்ன?  வேலை எளிதில் முடிந்து ஒரு புதுச்சொல்லும் கிட்டிவிட்டது.

இயற்றமிழின் இனிமை கண்ட புலவர்-- இதனை ---பகுதிச் சொல்லை மிக்கக் கடிய முறையில் வெட்டி எடுத்துச் சொல்லை இயற்றுவதை,-------  இயற்றமிழ்ப் புலவர்கள் விரும்பார். அவர்களுக்கும் எரிச்சலின்றிச் சொல்லாக்குதல் கடனாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை












செவ்வாய், 23 டிசம்பர், 2025

தனயன் என்பதும் மற்றும் சமஸ்கிருத மொழிப்பண்பும்

 ஐகாரம் இடையில் வந்த சொற்கள் சில,  அந்த ஐகாரம் அகரமாக மாறிவரும். இது ஒரு குறுக்கம்.   சொல்லாக்கத்தில் மட்டுமன்று,  கவிதையிலும் இத்தகு குறுக்கங்கள் வரும்.  இன்னும் பேச்சு வழக்கிலும் ஐகாரம் இடையில் நிற்கும் சொற்கள் அந்த ஐகாரம் அகரமாகத் திரியும்.  வடையில் எண்ணெய் அதிகம் என்பது வடயில் எண்ணெய் என்பதுபோல் ஒலிக்கும்.  டை என்பது ட ஆயினும்  கெடுதல் இல்லாமல் தோன்றும்.

தனையன் என்ற சொல்  தன் ஐயன் என்ற இருசொற்கள் புணர்ந்து ஏற்பட்டிருந்தாலும்  தனயன் என்பதுபோல் ஒலித்து.  சம ஒலியாகத் திகழும். தனையன் என்ற சொல்லும் தனயன் என்று திரித்து எழுதப்பெறுவதும் நடைபெறும்.

தனயன் என்பது சமஸ்கிருதமா என்றால்,  ஆம் என்று சொல்லலாம்.  ஏன் என்றால் இவ்விரண்டு வடிவங்களும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லாதவையாகவே  தோன்றுகின்றன.  பேச்சில் இவ்வாறு  திரிந்து ஒலித்தால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.  பேசுகிறவன் ஐகாரத்துக்கு உள்ளது ஒலிக்கும் நேரத்தில் குறுக்கம் விளைந்ததை அறியாமலேகூடப் பேசுகிறான்.  நெடுங்காலமாக் இப்படித் திரிந்து வழங்குவதால் தனயன் என்பதே சரி,  தனையன் அதன் திரிபு என்றுகூடத் துணிந்துவிடுகிறான்.

சங்கதம் என்பது சமஸ்கிருதத்துக்கு மற்றொரு பெயர்.   கதம் என்ற இரண்டாவது பகவு,  கத்து என்பதிலிருந்து வருகிறது.  கத்துதல்  என்றால் ஒலி செய்தல். கத்து என்ற பகுதி  கது என்று ஆனபின்,  அம் விகுதி பெற்றுக் கதம் ஆகிறது. சங்கதம் என்றால்  சமமான ஒலி என்று பொருள்.  இப்போது இந்தப் பொருள் மிகச் சரியானதாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்து இன்புறலாம். இம்மொழிக்குச் சரியாகவே பெயர் வைத்திருக்கிறார்கள். ''சமஸ்`¬ கிருதம்'' என்பதற்கும் அதுவே பொருள். ஆனால் வெள்ளைக்கர ஆய்வாளன் '' நன்றாகச் செய்யப்பட்டது'' என்று பொருள் கூறினான்.

தன் ஐயன் என்பதே தனயன் ஆகிவிட்டது. மகனை அப்பா என்று அழைக்கிறவர்களும் உள்ளனர். அப்பாகவே இல்லாத ஒருவனை '' அட என்னப்பா இது''  என்று குறித்துப் பேசுவதும் காணலாம். பல மலைகள் ஏறித் தவமிருந்து பெற்ற மகனை மிக்க அன்புடன்  ஐயன் என்று சொல்வோரும் உளர்.  அண்ணனை ஐயன் என்போரும் உள்ளனர். தனையன் என்பது அன்பினால் அமைந்த சொல் ஆகும்.  ஐயன் என்றால் தலைவன் என்பதே பொருள் ஆகும். ஐயா என்பது இன்று பெரியோரைக் குறித்த போதும்  அது ஐயன் என்ற சொல்லின் விளிவடிவம்தான்.

சமஸ்கிருதம் என்பது வெளிநாட்டிலிருந்து வந்த மொழியன்று.  உள்நாட்டில் தோன்றிச் செறிந்து வழங்கிய மொழிதான். ஆதலால் தனயன் என்பது தமிழ்தான்.  சமஸ்கிருதமும்  ஆகலாம். சம ஒலி மொழிச் சொல். நாளடைவில் சமஸ்கிருதம் என்ற பொருள் மறையும்படி  விரிந்து வளமடைந்தது.  பலசொற்கள் இன்று சம ஒலி  அல்லாதனவாய்த் தோன்றலாம்.  அஃது பிற்பாடு விளைந்த மாயை ஆகும். இந்தோ ஐரோப்பியம் என்பது வெள்ளைக்காரன் பிற்பாடு ஏற்படுத்திய இன்னொரு மாயை.  

தன் + ஐயன் >  தன்னையன் >  தனையன் > தனயன்> தநயன்.

இன்னொரு வகையில்:

தன் + நயம்>  தன் நயன்> தநயன்> தனயன்

அப்பன் பெரிதும் விரும்புவதால் மகன் நயமுடையவனாகிறான்.

தனக்கு நயம் சேர்ப்பவன் மகன்.

மகனை உயரியோனாய் அப்பன் போற்றுவான் என்பதும் காண்க.

துவட்டா ஈன்ற தனயன் ( திருவிளையாடற்புராணம். இந்திரன்பழி.8)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது