வியாழன், 23 ஏப்ரல், 2026

மனம் என்னும் சொல்லும் போல்வனவும் உருபு ஏற்றல்

 மனம் என்ற சொல்லில் இல் என்ற உருபு வந்திணைந்தால், மனத்தில் என்று வரவேண்டும். இந்தக் குறளைப் பாருங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் இக்குறள் வெண்பாவை எவ்வாறு யாத்துள்ளார் என்று:-

மனத்துக்கண் மாசிலன்  ஆதல் அனைத்தறன்  

ஆகுல நீர பிற

என்பது  அது.

கண் என்பது உருபு.   மனத்துக்கண் என்றால் மனத்தில்.  இது மனம்+ அத்து+ இல் என்பதுதான்.

அறம் என்பதும் உருபு ஏற்க,  அறத்தில் என்று வரும்.  இது அறம்+ அத்து + இல் என்பதுதான்.  கண் என்பதை இணைப்பதாயின், முன் கூறியவாறே, அறத்துக்கண் என்று வரவேண்டும்.

அத்து என்பது சார்ந்தும் இயைந்தும் வரும் சொல்.  அதனால் சாரியை எனப்பட்டது.  இது அது என்பது தகரம் இரட்டித்து வந்தது ஆகும்.  அதாவது தகர ஒற்று இரட்டித்தது.  அ த்+த்+உ..

மனத்தில் என்ற சொல் பாடல்களில் இரட்டிக்காமலும் வரும். காண்க:

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை  கொள்ள,

உரலில் கட்டி,  வாய்பொத்தி, கெஞ்சவைத்தாய் ----  கண்ணனை.

இங்கு மனதில் என்று வந்ததும் சரிதான்.  இப்படிக் குறுக்குவதற்கு கவிஞனுக்கு உரிமை உள்ளது. இதனைத் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் தந்துள்ளன. இது தொகுத்துக்கொள்ளும் உரிமை.,

பிர-மனும்  இந்-திர-னும் மன-தில்-பொ  றா-மை-கொள்-ள

இங்கு த்  என்னும் வல்லொற்று நீங்கியவாறு  காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.



சனி, 18 ஏப்ரல், 2026

சுத்தம் சொல்லாக்கம்

 பழங்காலத்தில் மனிதன் காடுகளிலும் வாழநேரிட்டது.  நகரங்கள் இன்னும் உருவாகிவிடவில்லை. அரசன்  என்ற ஆட்சியாளன் ஏற்பட்டுவிட்டானா என்றும் தெரியாத நிலை.  காட்டை அழிக்கக் கூடாது, காட்டில் போய் மரம்வெட்டினால் தண்டனை என்னும் சட்டம் எதுவும் இன்னும் உண்டாகிவிடவில்லை.

ஒரு மனிதனும் அவனுடன் ஒருவர் இருவர் இருந்த சிறு குடும்பமும்  காட்டின் சில மரங்களை வெட்டி அப்புறப் படுத்திவிட்டுக் கட்டிய வீட்டில் அவன் வாழ்ந்தான். மரங்களை இணைத்து வீடு கட்டிக்கொள்வதற்கு  ஆணி கூட இருந்திருக்காது.  ஏனென்றால் இரும்பை உருக்கி ஆணி செய்துகொள்ளும் திறன் அவனுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இரும்புக் காலம் இன்னும் வரவில்லை. 

அவன் என்ன உணர்ந்து கொண்டான் என்றால் அவன் வீடு கட்டி வாழ்ந்த இடம் கொஞ்ச நாட்களிலே  பலவித அழுக்கும் உள்ள இடமாகிவிட்டது.  சுற்றுமுற்றும் பார்த்தால் பசுமையான நீண்டு வளர்ந்த மரங்கள். பச்சை பசேலென்ற இலைகள். காய்கள் கனிகள் எல்லாம் இருந்தன.  பக்கங்களில் எல்லாம் தூய்மையாகவே  அழகு காட்டிய வண்ணம் இருந்தன.

இதுபோலவே, சுற்றுப்புறம் என்பது,  சுத்தமாகவே  இருந்தது.  அதனால் சுத்தம் என்ற சுற்றுப்புறத்தைக் குறிக்கவேண்டிய சொல்,  அமைப்புப் பொருள் மாறி தூய்மை என்ற பொருளை அணைத்துக்கொண்டும் இணைத்துக்கொண்டும் இலங்கியது.

சுத்தம் என்ற சொல்லுக்கு  அழுக்கின்மை என்று பொருள் உண்டாகி இன்றுவரை நின்று நிலவுகின்றது. சமஸ்கிருதம் என்பது சம ஒலியினதாகிய மொழியாதலின், அதிலும் இச்சொல் வழங்கியது.  இருமொழிகட்கும் உரிய சொல்லே இதுவாகும்.

பொருள் மாற்றம் அடைந்த சொல். தமிழிலிருந்து தோன்றிய சொல்தான். சுற்றம் என்பது உறவினரைக் குறிக்க, சுத்தம் என்பது தூய்மைப்பொருளைக் குறித்தது.  காட்டுவாணர் சொல்.  காட்டுவாழ்நர்> காட்டுவாணர்  என்பது திரிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

பகிர்வுரிமை உடையது.



திங்கள், 13 ஏப்ரல், 2026

பவனியும் பரவணியும்.

 பரவணி என்றால் பரவலாக அணிவகுத்துச் செல்வது.  அணிவகுத்துச் செல்லும்போது  இரண்டிரண்டாக,  அல்லது  மூன்று மூன்றாக ஆட்களை நிறுத்தி, அணிவகுத்துச் செல்லலாம். இப்படிச் செய்யாமல் ( அதாவது எண்ணிக்கை வரம்பின்படி நின்று பின் நடந்துசெல்லாமல் அமைப்பு இன்றி நடந்து சென்றால் அதுதான் பரவணி ஆகும்.

இது புரியவில்லை என்றால், எமக்கு எழுதிக் கேட்கவும்.  யாம் ஒரு படம் வரைந்து இதை விளக்க முற்படுவோம்.

பரவணி என்பது பர(வு) அணி என்ற இருசொற்களால் ஆன கூட்டுச்சொல். இது திரிந்து பரவணி> பரவனி>பவனி என்று ஆயிற்று.

சமஸ்கிருதத்தில் (அம்மொழியில் இருந்தாலும்)  இச்சொல்லில்  ணகரம் இல்லை. இந்தத் திரிபு சமஸ்கிருத மொழிக்குச் சென்றால்,  பவனி என்றுதான் வரவேண்டும். அல்லாமலும்  இருசொற்கள் புணர்த்தி அமைத்த சொல்லில்,  ணகரம் என்பது னகரமாக மாறிவிடும்.  இது தமிழிலேயும் நடக்கும். சமஸ்கிருதம் செல்லாமலே நடக்கும்.  இதுபோன்ற திரிபுகளுக்கு யாரும் நூல் எழுதவில்லை.  ஆதலால் அவர்சொன்னார் இவர் சொன்னார் என்று காட்டமுடியாது.

ஒருவரை ஒருவர் அணுகிச் சென்று பாசமுடன் உறவாடாமல்  அன்பு செலுத்தமுடியாது. அண்> அணுகு.  இனி அண்> அன்> அன்பு என்று இதற்குச் சொல் அமைகிறது. அண்பு என்றுதான் சொல் அமையவேண்டும் என்று எந்த இலக்கணவிதியும் தமிழில் இல்லை.  சமஸ்கிருதத்திலும் இல்லை. உம்மாலும் காட்டமுடியாது.

இதை இங்குச் சொல்லக் காரணம், எதற்கும் ஓர் ஆதாரம் காட்டவேண்டும் என்று சிலர் சொல்வதுதான். உலகில் ஆதாரம் இல்லாத உண்மைகள் பலவுள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது



வெள்ளி, 10 ஏப்ரல், 2026

சரவணம், சரவணன், சரவணப்பொய்கை

 இச்சொற்களை இப்போது உணர்ந்துகொள்வோம்.

இதற்குரிய வினைச்சொல்: சரிதல் என்பது.   இதிலிருந்து சரம் என்ற சொல் தோன்றுகிறது.  சரிதல் மற்றும் சரம் என்பன அசைவுக் குறிப்பின ஆதலின்,  அசரம் என்னும் சொல்  அசைவின்மையைக் குறிக்கிறது.  அசர்தல் கவனக்குறைவைக் குறித்தாலும்  இஃது ஒருவன் இடைநேரத்தில் அசைவின்றி இருத்தலையே குறிக்கின்றது.  கவனத்துடன் இருத்தல் -  அசைவுண்மை என்று கொள்ளப்படும்,  ஆகவே அசைவின்மை அசையாமையைக் குறிக்கும். அதாவது ஒன்றும் செய்யாதிருத்தல். கொஞ்சம்  அசந்துவிட்டால்,  திருடிவிடுகிறார்கள் என்ற வாக்கியத்திலிருந்து இது தெரிகிறது. . '' அசந்தா மிளகாய் அரைச்சிடுவானாம்''   என்பதும காண்க.

அயர்வு என்பது இயற்சொல்லாக  இருப்பதால்,  அசர்தல் என்பது திரிபு  என்னலாம்.  அசர்தல் என்பதை  அசைதல் என்பதனோடும் தொடர்பு படுத்தலாம் என்றாலும் பொருள்முரணால்,  அசை+ அறுதல் > அசறுதல் > அசர்தல் என்னலாம்.  இன்னொரு சொல்லுடன் சேர்கையில்  றுகரம் என்ற வல்லினம்  ர் என்ற இடையின மெய்யாய்த் திரிகின்றது.   அசை அறு  > அசறு> அசர்தல் > அசரம்.   இவ்வாறின்றி,  சரம்> அல் சரம் > அசரம் என்றுமாகும்.   அல்=   அல்லாதது. இது கடைக்குறைந்து : அ என்று முன்னொட்டு  ஆயிற்று.  

இனிச் சரவணம் என்பது:  

சரிதல் வினையிலிருந்த் பிறந்த இச்சொல், இயக்கம் குறிப்பது தெளிவு.  இது இச்சொல்லின் ஆதிப் பொருள்.  ஆனால் இற்றை வழக்கில் இது ( சரம் என்பது)  ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருத்தலையே குறித்தது. இதற்குக் காரணம் அறிய இயலாத ஒன்றன்று.  சரிந்த பொருள், சரிவான நிலையிலே இருந்து கெட்டி நிலையை அடைந்துவிடுதலும் இயற்கையில் காணப்படுகிறது. இந்நிலையில் இயக்கமின்மையையே இச்சொல் குறிக்கிறது.  சரிந்த பொருள் சரிவு நிலையிலிருந்து படுக்கை வாட்டமாக மாறாமை,  இயக்கத்திலிருந்து இயக்கமின்மை நிலைக்கு வருவதுதான். சரவெடி என்பது ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தல் என்று பொருள்படும்.

சரிந்த நிலையில் மேலும் சரியாமல் வரிசையாக நின்று நிலை காட்டுகின்றது. இந்நிலையில் வண்ணம் அல்லது நிலைபெறுதலை  சரவணம் என்கிறோம். வரிசைநிலை அடைதல்.  இவ்வாறு பூக்கள் இருக்க அழகுபெற்ற நீர்நிலை, சரவணப் பொய்கை  ஆகிறது.  இவ்வாறு நிலைபெற்று துதிக்கப்படுவது பராநிலை  ஆகிறது. பலநிறங்களில் இருப்பதும் ஒரே நிறத்திலிருப்பதும் இதனுள் அமையும்.   வண்ணம் என்பது நிலை என்ற பொருளிலும்  நிறம் என்ற பொருளிலும் அமைவதாம்.  ஏற்ப நாம் பொருளுரைத்தல் தக்கது.  சொற்கள் அமைதலுக்குப் பின் பொருள் மாறுதலும் பெறும், மாறாமலும் இயலும். இங்கு நாம் அமைப்புப் பொருளே கருதினோம்.  பின் அடையும் பொருளை விரித்துக்கொள்க.

எடுத்துக்காட்டு:  சரப்பலகை, வரிசையாக உள்ள  பலகை என்ற பொருளே தரும்.  அவை கடைகளில் அடைப்புப் பலகை என்பது,  விரிபொருள்.  தாமே அறிந்துகொள்ள வேண்டிய பொருளாகும்.

''சரவணம் சமஸ்கிருதம்'' என்றால் எப்படி? என்ன?

சரவணம் சமஸ்கிருதம் எங்கிறீர்களா?  அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லாம் நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் (முன் இடுகை)  என்பதும் சரவணம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கவையாகும்..

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.







புதன், 8 ஏப்ரல், 2026

சொல்: கோதா, கோதாட்டு, ஹோதா

 இவற்றைக் கவனிப்போம்.

இடைக்காலத்தில் உருவான சொற்களில்,  வாய்தா,  சந்தா, சாதா ( ordinary) முதலியவும் பிறவும் உள்ளன.  அவற்றில் சிலவற்றைத் தனித்தனியாக விளக்கியுள்ளோம். பேதா என்ற சொல்லையும் மறந்துவிடலாகாது. இங்கு கோதா என்ற சொல்லை எடுத்துக்கொண்டுள்ளோம்.

கோதா என்பதில் கோத்தல் என்பது வினைச்சொல்.  தா என்பது தருதல் வினை. இவ்வாறு இருவினையொட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியோர்  இடைக்காலத்தோர் என்று நாம் அறிந்திருந்தாலும், இவர்கள் யாரென்று தெரியவில்லை.  அவர்கள் ஏதும் எழுதிவைக்கவில்லை யாதலின், இவர்களை அறியமுடியவில்லை. இஸ்லாமிய மக்களிட மிருந்து இவை வழக்குக்கு வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.  தமிழ் மூலங்களைப் பயன்படுத்தியோர், தமிழ் இஸ்லாமியராய் இருந்திருக்கவேண்டும்.  இவற்றுள் ஹோதா என்பது வேதகாலம் தொட்டு வழங்கியதால் இஸ்லாமுக்கு முந்தியதாகும்.

கோத்தல் என்ற வினையும் அதனோடு தா ( தருதல்) என்ற சொல்லும் இணைந்து, கோத்துத் தருதல் என்று பொருள்படுகிறது:  எனவே  அமைப்பு என்பது பொருள். இது பின்னர், ஹோதா என்றும் திரிந்துள்ளது.  கோத்துத் தரு(தல்) என்பது  கோத்துத்தரு> கோத்தரு> ஹோத்தரு> ஹோத்ரு என்று மாறியமைந்தது. இவ்வமைப்பு முதலில் தீயினை வணங்கும் வழிபாட்டு அமைப்புக்கு வழங்கியது என்பது வரலாறு ஆகும்.

அமைப்பு என்ற பொதுப்பொருளில், இது அமைத்தல்  அல்லது அமைப்பு என்றே பொருள்பெற்றது.

கோதாட்டு என்பது கோதா+ ஆட்டு என்பதுதான்.  இது பாவமன்னிப்பு சடங்குகளையும் அவ்வமைப்பையும் குறித்து வழங்கியுள்ளது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



 



சனி, 4 ஏப்ரல், 2026

அகந்தை என்பது

அகந்தை என்பது தமிழ்ச்சொல் அன்று என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நம் எண்ணக்கோட்டம் தவிர.

இதில்  அகம்+ தை என்ற இரு பகவுகள் உள்ளன.   அகம் என்பது உள் என்று பொருள் தருவது.  தை என்பது ஒரு பெயராகவும் வினையாகவும் உள்ள சொல்.  தைத்தல் ஒரு வினை.  தை என்ற மாதம், இயற்கை வளத்தின் நிலைகளுடன் மக்கள் வாழ்வு செய்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுசென்று தைத்தல் அல்லது இணைத்தல் என்ற பொருளில் அமைந்த பெயராகும்.  தைத்தல் என்ற நூல்கொண்டு தைத்தல் மட்டுமன்று,  தடவுதல் கூட ''தைத்தல்'' என்பதில் அடங்கும்.  தை+ இல்+ அம் >  தை+ ல் + அம் > தைலம்,   அல்லது  தையிலம்> தயிலம்> தைலம் என்றும் காட்டலாம்..  இது சிற்றூர்ச் சொல். தைவருதல் என்றால் தடவுதல். '' நரந்தம் நாறும் என் தலை தைவரு மன்னே'' என்று ஒளவையின் புறநானூற்றுப் பாட்டில் வருதல் கண்டு கொள்க.(  புறம் 235)

தையல்காரன் என்ற சொல்லில் வரும் தை என்ற சொல்லையும் கவனிக்கவும். taugo என்ற செருமானிய மொழிச்சொல்லும்  டை என்ற ஆங்கிலச்சொல்லும் அறியத் தக்கனவாகும். கழுத்துக்கட்டுக்கு ''டை'' என்பர்.  டையும் தையும் ஒன்றுதான்.

அகந்தை என்ற சொல்லில் தை என்பது ஒரு விகுதி என்று சொல்லலாம்.  தை என்ற விகுதிக்கு இணைப்பு என்ற பொருளும் காணற்குரியது ஆகும்.  தா+ இ என்ற இருபகவுகள் பழங்காலத்தில் இணைந்தபடி ''தை'' என்றும் ஆயின என்பது  அறிதற்குரியது. குழந்தையைத் தாய் தருகிறாள்.  தா என்ற சொல் தருவதைக் குறிப்பதுடன் தாய் என்பதற்கும் விளக்கத்தைத் தருகிறது.  ய் ஏன் வந்தது? என்று கேட்டாலே சிந்திக்க இயக்கம் உண்டாகும்.

அகந்தை: அகத்துடன் இணைந்தியங்கும் தன்மை உடையது இறுமாப்பு.   ஆகவே விகுதி அழகாக  அமைந்துள்ளது.

ஒருபொருட் சொற்கள்

அகங்காரம்

இறுமாப்பு 

தன்மதிப்புமிகை

உட்கரணம்

செருக்கு

இடும்பு

சமுன்னதி

சளுக்கு

கற்பம்

காட்டிகம்

தெறிப்பு

பெத்தரிக்கம்

தற்பெருமை

மமதை

மேட்டிமை

வாமிலம்  (வாயினால் மிலைந்துகொள்ளுதல்)------  முதலியவை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை




வியாழன், 2 ஏப்ரல், 2026

சரித்திரம் பிறழ்ந்துரை அல்லது பொய்யினைப் பரப்புதல்

 : நீ,

 பித்தனைப் போலவே அவன்சொல் கேட்டுப்

பிதற்றுவ தெற்றுக்கடா

மத்தினைப் பிடித்து  மண்ணில் கடைந் திடில் 

மதுரத்    தயிர்மறுத்தே,

மெத்தச்  சுவைதரு  மோர்வரு   மோசொல்க!

மென்மேல்  பிழைசெய்கிறாய்

எத்தனை ஆண் டுகள் அடிமைப்  புத்தியில்

இருந்ததனால் அழிந்தாய்.


ஆரியர் என்றது  சங்கத்  தமிழரை

அறிவாளிகள்  அவரே;

சீரியகல்விப் பெருக்குடைப் பிறரையும்

குறித்திடும்  தொடரதுவே!

ஆரியன் என்றது இனப்பெயர் என்பவன்

அறிவுடையான்  அல்லனே!

ஆரென்ற பலர்பால் விகுதியும் தமிழிலே

பிறரொன்றும்  அறியாததே.


பொருள்:

எற்றுக்கடா -  எதற்கடா

மென்மேல்  -  மேலும் மேலும்

மத்து -  சிலுப்பிக் கடையும் கோல், 

மதுரத் தயிர் மறுத்து -  இனிய தயிரைக் கடையாமல்

மெத்த - மிகுந்த

சுவைதரு-  சுவையான

ஆர் என்ற...  -  வந்தார் சென்றார் என்ற பணிவுப் பன்மை விகுதி.

பிறர்  -  தமிழ்ப்புலவர் அல்லாதவரும் தமிழறிவு இல்லாதவரும்.

இனப்பெயர் -  ஓர் இனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்

சரித்திரம் என்பது சரியாகவும் திறமாகவும் சொல்லப்பட்ட வரலாறு. திறம் என்ற சொல் விகுதியாய் வரும்போது றகரம் ரகரமாகும்.

புனைவுகளுடன் சொல்லப்படுவது சரியாகச் சொல்லப்படாதது.  திறம்படச் சொல்லப்பட்டிருந்தாலும். திறம் என்பது ஒளிவு மறைவு இன்மை குறிக்கும்.  புனைந்து சொல்வதிலும் ஒளிவு மறைவு இன்மை கடைப்பிடிக்கப்படுதல் கூடுவதே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





செவ்வாய், 31 மார்ச், 2026

கொடுங்கோளூர் பெயர்க்காரணம். அஞ்சலி என்பது.

 இந்த ஊரின் பெயர், இப்போது திருவஞ்சைக்களம் என்பதாகவும் இது கேரளத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. இங்கு முன்னிருந்தவர்கள், அரசரின் அஞ்சலியைக் கண்டு இன்புற்றனர் என்று தெரிகிறது.

இது திருச்சூர் மாவட்டத்திலுள்ள மகாதேவசாமி கோயிலாகும். இது அஞ்சைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. அஞ்சைக்களத்தப்பனே  என்று தேவாரப்பாடலில் வருகிறது. தேவாரம் (913.1)

அஞ்சலி என்பது அகஞ்செலி  என்பதன் திரிபு.   அஞ்சை என்பது அகஞ்செய் என்பதன் திரிபே.  அஞ்சைக்களம் என்பது அஞ்சைக்குளம் என்று திரிந்துவிட்டதென்று தெரிகிறது.

அரசர்கள் அரியன மேற்கொள்தற்கு இங்கு வந்து வணங்கிப் பின் செயல் கொண்டனர் என்று அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

வெள்ளி, 27 மார்ச், 2026

நிபந்தனை என்பது

 நி என்பது ஒரு சங்கத முன்னொட்டு என்றாலும்,  அது நில் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறைச் சொல்தான்.  நில்- நி. அதாவது ஒரு நிகழ்வின் அல்லது எதிர்நோக்கும் நிகழ்வின் முன்நிற்பது.

பந்து என்பது பற்றி நிற்பது என்னும் பொருளது.  பல் + து.  இது தமிழ் முறைப்படி பற்று என்று வரும்.  ஆனால் சமஸ்கிருதச் சொல்லாக்கத்தில்  பல்> பன்  ஆகிறது.  இது எழுத்துத் திரிபு அமைப்பின்படி தமிழிலும் வரக்கூடியது.  பன்+து > பந்து என்று விளையாடும் பந்து என்ற சொல்லிலும் வருகிறது. இதற்குக் காரணம், பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பட்டன.  அவ்வாறு கட்டி அதை அடித்து விளையாடினர். தேய்வை ( ரப்பர்)ப்   பந்துபோல் அடித்தவுடன் அமுங்கி எழக்கூடிய திறன் இதற்குக் குறைவு.

சங்கதத்தில் இது  முன் பற்றி நிற்கும் நிலையைக் காட்டுகிறது.

அன், ஐ என்பன விகுதிகள்.

அன் என்பது அண்டி நிற்பது,  அணுகி நிற்பது என்று பொருண்மை தரலாம்.  ஏற்ற முறையில் விளக்கி இதை மற்ற இரு பகவுகளினோடும் இணைக்கவேண்டும்.

எனவே முன்னரே பற்றி நிற்குமாறு  சொல்லப்படும் அல்லது விதிக்கப்படும் ஒரு நிலைப்பாடு ஆகிறது.

இதில் என்ன தெரிந்துகொள்கிறோம் என்றால் தமிழிலும் சங்கதத்திலும் எத்தகு உறவு உடையவை சொற்கள் என்பது. இதை மிக்க நெருங்கிய உறவு என்னலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

புதன், 25 மார்ச், 2026

கற்சிதைவில் உண்டான சொற்சிதைவுகள்.--கச்சிதம் என்பது ஒன்று.

 கல் சிதைவு என்றால் கல் உடைந்து சிறியதாகி அல்லது தேய்ந்து  சிறியதாகி பிற கற்கருவிகளை உண்டாக்கிக்கொள்வது என்பதுதான்.  இது கற்காலத்திலிருந்த நம்மிடையே நடைபெற்று வருவதாக இருந்தாலும், எல்லாச் சொற்சிதைவுகளையும் ஒரே இடுகையில் கவனித்துவிட முடியாது. நேரம் என்பது தேவைப்படும்.

இத்தகைய சொற்களையெல்லாம் பொறுக்கிச் சேர்த்து ஒரு நூலாகவும் எழுதலாம். நீங்கள் எழுதி ஒரு சேவையைச் செய்யலாம்,

இந்தத் தஅலிப்பு எமக்கு பிடித்துப்போய்விட்ட படியால் இதை மாற்றாமல் வைத்துக்கொண்டு இங்கு சில் கூறுவேம்.

கல் உடைந்து சிறிதாகிவிட்டால், அதையும் சில கருவிகட்கோ பொருட்களுக்கோ பயன்படுத்த வைத்துக்கொள்ளலாம்.. கற்காலத்தில் இதைச் செய்து மகிழ்ந்திருப்பார்கள்.

இன்று கச்சிதம் என்ற சொல்லை மட்டும் கவனிப்போம்.

முதலில் சிதைவு என்ற சொல் கவனிப்போம்.  சில்> சிறு> சிறிது > சிது> சிதை> சிதைவு  என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு திரிகையில், சில முழுச்சொற்கள் போல் தோன்றும்.  சிது என்பது சிறிது என்பது நடுகெட்டு அல்லது இடைமறைந்து,  அவ்வாறு வந்தது.  அதிலிருந்து இன்னொரு சொல் வந்ததைக் கண்டுகொள்வீர்.

கல் சிதை>  கல் சிதம்>  கச்சிதம்.   ஒரு கல் சிதைந்து நன்றாக அமைந்துவிட்டால் மனிதன் அதை எடுத்து, கொஞ்சம் சரிசெய்து கருவியாக்கிக் கொளல். மிக்கச் சரியாக அமைந்தது என்று பொருள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


சனி, 21 மார்ச், 2026

சில் என்ற அடிச்சொல். சின் என்று மாறுகிறது.

 சில் என்ற அடிச்சொல், ஒன்றுக்கு மேற்பட்டன என்று பொருள்படும். மணல்போல் நுண்மையாக இல்லாமல், சற்று பெரியனவாய் ஆனால் ஒரு பெரிய துண்டிலிருந்து பிரிந்து விழுந்து இருப்பனவைக் குறிக்கும்.

லகர மெய்யீறு,  னகர மெய்யீறாகத் திரியும்.  சில்> சின்> சின்ன > சின்னது என்பன காண்க.

சின்>  சினை  ( விலங்குகளின் கரு முட்டைகள்). சினைகளில் முட்டைகள் பலவாய் இருக்கும்.  எ-டு: மீன் சினை.  பசு சினைப்பட்டிருந்தால், கன்றுபட்டிருக்கின்றது என்பர். (கருவுற்று என்ற எச்சவினை, மாடு முதலியவற்றிற்குச் சொல்லலாகாது.) 

சின்னம் என்பது.   சின் என்றது அடிச்சொல்.  அம் என்பது அமைப்பு என்பதைக் குறிக்கும் அடிச்சொல்,  இங்கு ஒரு விகுதியாக வருகிறது.  அம்> அமைப்பு என்ற பொருளைக் குறிக்கும்  தமிழ் அடிச்சொல்.  இந்த அம் வந்த ஒரு சொல்லை எடுத்துக்க்காட்ட வேண்டின், நிறம் என்பதைக் காட்டுக.  நிறு+ அம் >  நிறம். நிறு என்றால்  மாறிவிடாமல் நிற்கச் செய்வது என்பதே பொருள்.

நிறு > நிறுத்து.   ( வினைச்சொல் பகுதியில் உண்டாகிறது.  இங்கு து என்பது வினையாக்க விகுதி.).  பொரு> பொருத்து என்ற சொல்லில் பொரு என்பது வினையடியாகவும் து என்பது வினையாக்க விகுதியாகவும் இருத்தலை  உணர்ந்துகொள்வீர்   நிறு என்ற அடிச்சொல் எப்படி உண்டானது என்றால்,  நில்> நின்று ( வினை எச்சமாகி),  பின் ன் என்பது இடைக்குறைந்து, நிறு என்றாகி இங்கு மீண்டும் வினையாகிற்று.   நிறு என்பது முன்வடிவில் நின்று என்று எச்சமாகி இடைக்குறைந்து நிறு என்றானது என்பதைக் கூறுவதில்லை. இங்கு இதை விரிவாக விளக்கியுள்ளோம்.

நில் > நிறு என்று வந்ததுபோலுமே  சில் என்பதும் சிறு என்று திரியும். சில்லிடுதல் என்ற வினை, இடு என்ற துணைவினை பெற்று வரும். 

சில்லுதல், சின்னுதல் என்ற வினைவடிவங்கள் கிடைக்கவில்லை.

சிறுத்தல் என்ற வினை வழங்கியுள்ளது. சிறுப்பனவாதல் என்பதும் ஒக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


செவ்வாய், 17 மார்ச், 2026

நீர் என்பது

 நீரின் தன்மை  குளிர்ச்சியாகவும் இருக்கலாம்,  வெப்பமாகவும் இருக்கலாம்.  வெந்நீர்க் குளங்களும் இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகளில் காணலாம்.  பிற நாடுகளிலும் உள.

நீர் என்பது பள்ளங்களில்  தன்னை நிறுத்திக்கொள்ளும் தன்மை வாய்ந்தமையால் ஏற்பட்ட பெயர்.

நில்> நிறு> நிறுத்து.

நில்> நிறு > நீர்.. இதன் முதனிலையாகிய நி என்பது நீ என்று நீண்டுவிட்டால், று என்பது ஏலாமையால், ர் என்பதே வந்து ஈற்றில் நின்று பெயராகும்.  நீறு என்பது நீரின் வேறுபட்ட சாம்பற் பொருள்.

நில்> நிறு> நீறு> நீற்றல்  என்ற வினை அமைகிறது.  இது சாம்பலாகிவிடுதல் என்று பொருள்படுகிறது. மேலாகச் சாம்பல் பூத்திருத்தல்.

நீர் உள்ளதாவது நீர்த்தல் என்ற வினையினால் சுட்டப்படுகிறது. நீர்ப்பு என்பதும் அமையும். 

நீர் என்பது இணைமொழியாகிய  சமஸ்கிருதத்திலும் வரும். அது தமிழினோடு வந்த மொழி. அது இந்தோ ஐரோப்பியம்  ஆனது அதிலிருந்து கடன் கொண்டு ஐரோப்பிய மொழிகள் தம்மை வளப்படுத்திக் கொண்டதால்  அவர்கள் அவ்வாறு கொண்டனர்.  இக்கருத்துக்கு (  இந்தோ ஐரோப்பியம் என்பதற்கு)  தேவநேயப் பாவாணரும் உடன்படுவார். என்றாலும், சமஸ்கிருதம் என்பது தென்மொழியின் வழிப்பட்டது என்று தம் ''முதல்தாய்மொழி'' என்னும் நூலில் அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை




சனி, 14 மார்ச், 2026

சிற்பம், சிற்பி, சிலை முதலியவை

 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவும் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

-----------------------------------------------------------------------------------------------------------------------------

The following draft is temporarily retained by the Editing staff for reference.  Please do not read.  Will be discarded later when no longer required

 தலைப்பில் தந்துள்ள சொற்களை  ஆய்ந்து காண்போமா?

இந்தச் சொற்களுக்கு அடிப்படையான மூலச்சொல்,  சில் என்பதுதான்.  தமிழில் நாம் காணும் மூலச்சொற்களில் இது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னலாம்.

கண்ணாடிச் சில்,  சில்லை எற்றுதல், காலைக் குத்தின சில், உடைந்த சில், சில்லிகை, சில்லி துவாரம், சில்லிட்டுக் கனத்தது, சில்லபொல்லமாய், சில்லறை,சில்லறைச்செலவு,  கொட்டாங்காய்ச்சிச் சில்(லு),  இவை கண்டு பொருள் தெரிந்துகொள்க.

சில் -  சின்மை.  சில்+சில -  சிற்சில, சில்லோர் - பல்லோர், சில்லொண்டி, முதலானவ்ம் பிறவும் கண்டறிக.

பெரிய கல்லிலிருந்து  சில்லுகள் பலவற்றைப் பேர்த்து எடுத்தபின்,  மீதமுள்ள உரிய கல்லை வைத்துச் செய்யப்படுவது சில் - சிலை என்று ஆனது. சில்லெடுத்துச் செய்பவன் தான்  சில்>  சில்+பு> சிற்பு>  சிற்பு+ இ > சிற்பி.  பின்னர் அழகான கல்லுரு,  சிற்பு+ அம் > சிற்பம் ஆகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

புதன், 11 மார்ச், 2026

மூத்திரம் ( மீத்ததை இருத்தல்)

இது ஒரு திரிபுச் சொல். இதை இவ்வாறு அறிந்துகொள்க.

உடலில் மிகுத்த நீரை, நம் உடல் வெளியேற்றிவிடுகிறது.  நீர்க்கழிவுகள் வெளியேறுவதால் உடல் நலத்துடன் வாழ்கிறது என்பது நீங்கள் அறிந்ததாகும்.

பகுதி என்ற சொல், பாதி என்று திரிந்து வழங்குகிறது. பகு>பா,  அதுபோல மிகு > மீ என்று திரிகிறது.

மிகுதி> மீதி,  மீதி+ அம் >  மீதம்.  தி என்பதில் உள்ள இறுதி இகரம் வீழ்கிறது.  மீத்+ அம்> மீதம்.  மிகுத்து அமை> மீத் அமை>மீத் அம்> மீதம் என்றும் காட்டலாம். எல்லாம் எப்படி விளக்கினால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருக்கும் என்பதே நாம் காண விழைவது ஆகும்.

அஞ்சு > அச்சம் என்பதுபோல் மிஞ்சு > மிச்சம் ஆகிறது.

பகுத்துண்ணுதல் என்பது பகுத்துண்> பாத்தூண் என்று திரிதலைத் தெரிந்துகொள்க. பகு> பா.   அதுபோல்,  மிகுத்திரு> மீத்திரு> மூத்திரு+ அம் > மூத்திரம் ஆகிறது.  இது பேச்சுவழக்கில் விளைந்த ஒரு சொல்.

இதை வேறு விதமாகவும் ஆசிரியர்கள் விளக்குதலால், இது பல பிறப்பி  ஆகும். பலரும் கூறியவை அறிந்துகொண்டு இங்கு கூறுவதால்,  இதுவே சிறந்த விளக்கம் என்று உணர்க.

மிகுத்தது > மீத்தது.  'இருத்தல்'  இது பேச்சு வழக்கில் ''கழித்தல்''.  இருத்தல் என்பது கழித்தலைக் குறிக்கும் ஓர் இடக்கர் அடக்கல்  -  பேச்சு வழக்கு என்பதை உணரவும். இறுதியில் இன்றைய வழக்கு மூத்திரம் ஆகும்.  மீத்து இருத்தல் > மீத்திரு >  மூத்திரு> மூத்திரம்.

உடலும் அதிக நீரைப் பயன்படுத்துகிறது.  அதுபோக மீதமிருப்பதும் வேண்டாததும்  ஆவது.  மீத்தது > மூத்தது. பயன்பெறாமல் இருந்ததும்  ஒரு மூத்ததே ஆகும்.   அறிக.

மீத்தது, மிகுத்தது, மூத்தது,  என இவை முல் என்ற மூல அடியிலிருந்து பிறந்த தமிழ்ச் சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 9 மார்ச், 2026

கம்பி என்னும் சொல்.

 கம்பி என்ற சொல், முதனிலைத் தொழிற்பெயர்.  இரும்பினால் ஆன அசையும் தடிகளையும் குறித்தபடியால், பொருட்பெயருமாகும்.

கம்பித்தல் என்னும் வினைச்சொல் தமிழில் இருப்பதால், இது தமிழ்ச் சொல்லே ஆகும். கம்புபோல் நீளமாக  இழுக்கப்பட்டு  வளைக்கவும் அசைக்கவும் படும் நிலையினதாகையால்,  கம்பு> கம்பி  என்று இகர இறுதியுடன் முடிந்த சொல்லாகும்.

கம்பு என்பதும் தமிழ்ச் சொல்லே. கடுமை உடையது என்ற பொருளில் கடு> கடும்பு  என்று  புகர விகுதி பெற்று இச்சொல் முடிகிறது. பின்னர் டுகர இடைக்குறைந்து, கம்பு என்றாகி வர,  முன்னிருந்த சொல் கடும்பு, சற்று வழக்கிறந்துவிட்டது.

தொடக்கத்தில் வரும்பால் கடும்பால் என்றது,  கடும்பு என்று கடைக்குறைந்தது. இதில் பு விகுதி எனக்கொண்டு,  கடுமை> கடும்பு எனினும் இதனால் இச்சொல் ஏதும் இழுக்குறாது நிற்கும்.  இதனால் கடும்பு என்ற குச்சியைக் குறிக்கும் சொல் வேறானது என்று உணர்ந்துகொள்க.

பிடிப்பதற்குக் கடுமையாக இருப்பதால், கடும்பிடி என்பது  கம்பி என்று குறைந்தது எனினும் ஒக்குமெங்க.   ஆகவே இது ஒரு பலபிறப்பிச் சொல் என்று கொள்க.  

கம்பித்தல் என்பது கற்பித்தல் போலுமொரு சொல் எனலாம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 6 மார்ச், 2026

ரசம் என்பது

 சாப்பிடும் போதெல்லாம்  ரசம் என்பதை மறந்துவிடல் ஆகாது.  இது ஓர் இன்றயமையாத தேறலாக இப்போது இடம்பிடித்துள்ளது.

பலவித மருந்துக் குச்சிகள், இலைகள், இணுக்குகள், கொழுந்துகள், வேர்கள் இன்னும் இவை போல்வனவற்றை வேகவைத்து, இவற்றை இறுத்து, வரும் ரசத்தை மட்டும் ஒரு கோப்பையில் ஊற்றி அருந்தும் நீர்க்கலவைக்கு   ''இறசம்'' என்று சொல்வோம்; எனினும் இது ரசம் என்றே வழங்குகிறது.  எழுத்தில் வேண்டுமாயின் இரசம் என்று எழுதலாம்.  இதை இறசம் என்று எழுதினால் இது இறுத்துக் குடித்தலுக்கு ஏற்ற பெயராக  அமைகிறது.

இவ்வாறின்றி,  போட்ட குச்சி முதலியவற்றை நீக்க மீதமாக இருக்கும் நீரின் காரணமாக,  இரு+ சு+ அம் >  இரசம் > ரசம் என்றும் கூறினாலும் பொருந்துவதாகவே தெரிகிறது.

அரைத்து நீருடன் கொதிக்கவைத்து இறக்குவதால்,  அரை+ சு+ அம் >  அரைசம்> அரசம்> ரசம் எனினும் பொருத்தமே  ஆகும்.

அரிய மருந்துப் பொருள்களை வேவித்து இறக்குவதால்  அரு+ சு+ அம்> அரசம் > ரசம் எனினும் பொருத்தமே.

உரைத்து வழித்து நீரிலிட்டுக் கொதிப்பித்து இறக்கி,  அதைக் குடித்தாலும்,உரை+ சு+ அம்>  உரசம்  ( ரை என்பது ர என்றானது ஐகாரக் குறுக்கம்)  உகரம் அகரமான திரிபு வழியாக  ரசம் என்றே  ஆகும்.   உகரம் இகரமாக ஆகும் என்பதை முன்பு நிறுவியுள்ளோம்.  பழைய இடுகைகளில் கண்டு தெளிக.

உரிய மருத்துவம் என்ற பொருளில்,  உரி+ சு+ அம் >  உரிசம்>  உரசம் > ரசம் என்றும்  ஆகும்.

இன்னும் பலவிதமாக வரலாம்.  ஆகவே இதைப்  பல்பிறப்பிச் சொல் என்று முடிக்கவேண்டும்.

நாவில் சற்று உறுத்தலான சுவையுடன் வருவதால்,   உறு+ சு+ அம் > உறசம்>  ரசம் என்றுமாகும்.

உடன் உருப்பட வேண்டின் குடிக்கவேண்டும் என்ற பொருளில்,  உரு+ அ+ சு+ அம் > உரசம் > ரசம் என்றுமாகும்.

சம/ஸ்கிருதம் என்பது தமிழின் இணைமொழியாக வளர்ந்ததே ஆதலின்,  ஆரிய மொழி என்னும்  அயலார் மொழி அன்று.   ஆர் என்ற பணிவுச் சொல் உடையோரான பெரியோர்க்கு உரிய மொழி என்ற கருத்தில்  ஆரிய மொழியாகலாம். இங்கு அனைத்தும் தமிழ் மூலமாகவே கூறியுள்ளோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது


புதன், 4 மார்ச், 2026

அருமை என்பதன் உணர்ச்சி எப்போது வந்தது: அருமை, அரு> ஆர்

அருமை என்னும் உணர்வு:

 மனிதனுக்கு அருமையானது ஒன்று என்ற எண்ணம் எப்போது பிறக்கிறது? ஏதேனும் ஒன்று மிக்கத் தொலைவிலிருந்தால்,  அது  அருமை என்ற எண்ணம் எளிதில் வருவதில்லை.  அது அருகில் வந்தபோதே அது அவனைப் பாதிக்கிறது. இதை இன்னும் சிந்தித்து விரிவாக்கலாம்.  ஆனால் இதை விட்டுவிட்டோம். அருகு-  அது குறைந்த போதும் அதன் அருமையை உணர்கிறான்.  எடுத்துக்காட்டாக, குளிருக்குத் தீக்காய்தல் அருமை.  ஆனால் தீ குறைந்துவிட்டால் அதன் அருமை உணரப்படுவதாகிறது. ஒரு மனிதன் மதிக்கத் தக்க பல அருங்குணங்களை உரியவனாகிறான். அதனால் அவன் உணர்ந்து போற்றற் குரியவனாகிறான்.  

அரு என்பது ஆர் என்று திரிதல்:

இப்போது அரு> ஆர் என்று திரிந்து,  வந்தார் (ஆர்), போனார் (ஆர்) என்று அவன்றன் அருமை உணரப்படுகிறது. இதற்கு முன், ஒருவனே அல்லன், பலர் வந்த போது அந்த அருமை உணரப்பட்டது.  நம் வீட்டுக்குப் பலர் வந்தனரே, என்னே அருமை என்று எண்ணிப் பூரித்தான். அரு> ஆர் என்று பலரைக் குறிக்கும் விகுதியாய் அது இருந்தது.  வந்தார்.  (ஆர்).

இதற்கு மாற்றான சிந்தனை என்னவென்றால்,  மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் என்று எண்ணுவது ஒன்று.  கடல், உலகம் என்பன விரிந்தனவாகவும் தொலைவிலும் உள்ளனபோலும்.  மழையும் தொலைவில் பெய்தாலும் அருகில் பெய்தாலும் அன்ன (பன்மையில்).  கலி - மகிழ்வு என்ற உண்டுபண்ணுதற் குறிப்பில்,   ஆர்கலி என்ற சொல் படைப்புறுகின்றது..  ஆர்கலி வாரணம் என்ற தொடரைக் கவனிக்க.  வாரி+அண்+ அம்> வாரணம். இகரம் கெட்டது( தொலைந்தது).

அருணவம்  ( அரு, அண், அவம்).

அருகும்  தொலைவும்

அருணவம்:  அருமை,  அது அருகில் இருந்தாலும்,  (அண்> அண்மை);  அவம் -  அவ் அண்மை கெட்டுத் தொலைவில் இருந்தாலும்.  ஆகவே அருணவம் என்ற சொல் இரண்டையும் உட்படுத்தி அமைந்திருந்தாலும் என்று  அறிக.  அவி+ அம்- அண்மை கெடுதல் அல்லது மாறியமைதல்.

தனிமைச் சுவை உடைய சொற்களைக் கொண்டது தமிழ். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


திங்கள், 2 மார்ச், 2026

பாரியா என்பது

பாரியா என்பது மனைவி என்று பொருள்படும் சொல்.  தமிழில் பெருவழக்கு உடைய சொல்லன்று. அருகியே எழுத்துலகில் பயன்பாடுடையது ஆகும்.

ஆடவனை மணந்துகொண்ட பெண்ணின் உடன்வாழ்வு, கணவனின் உயிர்வாழ்வு முழுவதும்  தொடர்தல் மட்டுமின்றி,  அவனிறந்த பின்னும் தொடர்வதாகும். பிள்ளைகளையும் வளர்த்து மணம் செய்வித்து,  சிறப்புச் செய்வது மட்டுமின்றி அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பும் உடையவளாகிறாள்.

மணப்பெண் பெரும்பாலும் ஆடவற்கு வயது குறைந்தவளாய் இருப்பாள். அவன் உயிர்வாழ்க்கை முழுவதும் அவனுடன் ''பரவி'' நிற்பதுடன் அவள் கடமைகள் பின்னும் தொடர்வதால்,  ''பர(த்தல்)''  என்ற முதற்பகவு பொருந்துகிறது.  பர(த்தல்) என்பது பார் என்று முதனிலை நீண்டு அமைகிறது.

அவன் வாழ்விடம் இயைந்து செல்வதால்,   இயை - இயா என்ற இரண்டாவது பகவும் மிகப் பொருத்தமுடைய தாகிறது.

இச்சொல் ''பாரியாள்''  என்றும்   -ஆள்  பெண்பால் விகுதி  பெற்றும் வரும்.

பாரியா, பாரியாள், பாரியை என்ற மூன்று வடிவங்களும் ஏற்புடையனவே எனினும்,  பாரியை என்பது சிறந்த சொல்வடிவம் என்பது எம் கருத்தாகும்.

இது மலையாள மொழியில் நல்ல பயன்பாடு காண்கிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை

ஞாயிறு, 1 மார்ச், 2026

அலங்காரம்

 அலம் புரிதல்  ( அலம்புரிதல்)  என்றால்  அதிகமாகச் செய்தல் என்று பொருள். முகத்தை நன்கு கழுவித் துடைத்தால் அதுவே  அழகு செய்தல் தான்.  அத்துடன் அழகுமாவு அல்லது முகமாவு பூசினால்,  அது இன்னும் அதிகமாகச் செய்தல். ஒவ்வொரு முறையும் சற்று அதிகமாகத் தடவும்போது,  மிகுதி செய்தல் ஆகிறது.  அழகின் எல்லை விரிந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லை கடந்துவிட்டால், தேவைக்கு அதிகம் ஆகிவிடலாம்.  அப்போது அழகின்மை தோன்றவும் கூடும், அன்றி மிக்க அழகு தோன்றினும் தோன்றும். இதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அளவினைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அத்தொழிலில் இல்லாதவனுக்கு இது பற்றித் தெரிந்துகொண்டது ஓரெல்லைக்கு உட்பட்டிருக்கும். நமக்கே யாவும் தெரியும் என்று நினைப்பதும் தவறு  ஆகிவிடக்கூடும்.

இயற்கை அழகு என்பது எல்லார்க்கும் இருப்பதில்லை. சிலர்க்கு அழகின்மை சிலவிடத்து இருத்தல் கூடும்.  அழகுக் கலைஞர்கள் அவ்விடத்தையும் அழகுடைத்தாக மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள்.  ஆளையே வேறு ஒருவராகக் காட்டவும் வல்லவர்கள். நசுங்கிவிட்ட உந்துவண்டியின் மேற்கூட்டினை எவ்விடத்துத் தட்டினால் முன்போல வந்துவிடும் என்ற அறிவை உடையவர்க்கு நல்ல சம்பளம் கிடைப்பதை அறிந்துகொள்வீர்.  

ஆகவே அலம் என்ற சொல்லுக்கு அன்மை கடந்து மேலும் செய்தல் என்று பொருள் கூறுவது நன்றாகும்.

அல் -   அழகு அன்மை.

கு  -  கூட்டிச் சேர்த்தல்.   இது வேற்றுமை உருபாகவும் பயன்பாடு காணும் சொல்.

ஆர்(தல்)  -  நிறைதல். நிறைத்தலுமாம்.

அமை(தல்):   இது அம் என்ற விகுதியால் சுட்டப்படுகிறது.

அலம்+ கு+ ஆர் + அம் =  அலங்காரம் ஆகிறது.   இதன் பொருள்:  அன்மை அல்லது அழகு அன்றான / அல்லதான ஒன்றை  அதனோடு சேர்ப்பிக்கும் முறையினால் நிறைவு செய்து,  அமைவுறுத்துதல்.

தமிழில்,  அலங்கரித்தல் என்பதும் அலங்காரித்தல் என்பதும் காணப்படுகின்றன.  எனவே, அரு என்பதிலிருந்து தோன்றிய அரி,  ஆரி என்ற இரண்டும் கொள்ளற்குரியன. இதை முன்னர் --கரித்தல் என்று பிரித்தனர்.   இது உண்மையில் கு+ அரித்தல் அல்லது கு+ ஆரித்தல் என்பனவின் பிறழ்பிரிப்பே  ஆகும்.. கு என்பதன் உகரம் கெட்டது.  கு என்ற பழஞ்சொல், கெ, கி என்றெல்லாம் கீழை மொழிகளில் வரும். சிலவற்றை இங்கு தவிர்க்கிறோம். கண்டுபிடித்துக் கொள்ளவும். 

அலம்+ கு+ ஆரம்  என்றால் அழகு அல்லாதனவற்றுக்கு நிறைவு செய்தல் என்பது இங்கு கச்சிதமாக வருகிறது.  அதுதான் அழகுறுத்துதல்.  இச்சொல் அலம்+கு+ அரண்+ அம்  > அலங்கரணம் என்றுமாகும் என்பதுணர்க.

பழ > பல என்பதுபோல்,  அழ(கு) >அல என்றுமாவது கண்டுகொள்க.  இதை இங்கு விரிக்கவில்லை.  வேறு இடுகையில் இதை விளக்கலாம்.

புரியாதவிடத்து எழுதிக் கேட்கவும்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

அனுமான், அனுமானம்

 அனு என்ற முன்னொட்டு,  அணுகுதல் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு திரிபு  ஆகும். இதில் ணுகரம்  மாறி,  னுகரம் ஆயிற்று.  இது எதையும் மறைப்பதற்காகச் செய்யப்பட்ட திருட்டுத்தனம் என்று நினைக்கவேண்டாம்.  அப்படி நினைப்பதால் சொல்லியல் ஏதும் சிகரத்தில் ஏறிவிடுவதில்லை.  அணுகு என்பது மற்ற வடிவங்களுடன் இணைந்து சொல்லாகும்போது,  முன்னொட்டு வடிவத்தில் நின்று, இருசுழியுடன் திரிவதால், சற்று இலகு  நிலைபெறுகிறது.  அணு என்ற சொல்லின் பொருளையும் அணுகு என்ற சொல்லின் பொருளையும் நினைவுக்குக் கொணர்ந்து மூளைக்குச் சுமை ஏற்றாமல்,  புதிய சொல்லாக்கத்தின் புதுப்பொருளை முழுமையாகப் பெறுவதற்கு நல்ல வழியை வகுக்கின்றது என்பதை உணரவேண்டும்.  

அனுமான் என்ற சொல்லில்,    அணுகு> அனு- (முன்னொட்டு).  இது கூறினோம்.  மான் என்பதில் மகன் என்ற சொல்லானது, மான் என்று திரிந்தது.  இதற்குரிய சொற்பொருள்:   அணுக்கமான மகன் என்பது.  பிறப்பு என்ற பொருளுடைய மக என்ற அடிச்சொல்லிலிருந்து உண்டாவதால்,   அணுக்கப் பிறப்பு என்று பொருள்.  பழங்காலத்திலே, இவர் மனிதனுக்கு மிக்க நெருங்கிய உருவமைப்புடன் சிறக்கப் பிறந்தவர் என்ற நற்பொருள் கிடைக்கிறது.  அனுமான் என்பது உயர்வுப் பன்மை பெற்று,  அனுமார் என்றபடி வந்திடினும்,  இச்சொல்லை இழிவாக நோக்குவதற்கு எந்தச் சரியான காரணமுமில்லை. இராமபிரானுக்கு மிக நெருக்கமான அவர்,  மனிதருடன் நெருக்கமான உறவுடையார் என்க. இராமருக்கு நெருக்கமுடையார் ஆதலின், இறைப்பற்றினால் எந்த மனிதருக்கும் முன்னே உள்ளவர்.

மான் என்னாமல் மன் எனினும், மனிதன் என்பதன் அடிச்சொல் அதுவாகும். மனிதப் பிறவிக்கு நெருங்கியவர்.

அனுமானம் என்ற சொல்லிலும், அனு என்பது அணுக்கமே பொருளாகக் கொண்டது.   மானம்  என்பது அளவு என்ற பொருள் உடையது எனினும் ஒருவன் ஒன்றை அணுகி உள்ள தகவல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பொருண்மை அல்லது கருத்தளவு ஆகும்.  அனு என்பது அணுகுவதே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை