சனி, 12 செப்டம்பர், 2020

துட்டன் (துஷ்டன்)

 துள் என்பது  ஒரு தமிழ் அடிச்சொல்.

இது பின்னர் துண் என்று திரிந்தது.

துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது. பின் அதே துண் என்ற அடி பிரிவு, துண்டு படுதல் என்ற கருத்தையும் தழுவியது. இதற்கு இன்னோர் உதாரணம் தரலாம் என்று நினைக்கின்றோம், காண்க:

இல்   -  இடம்:    " கண்ணில் விழுந்த கரித்தூள்."   இங்கு இல் என்பது இடப்பொருள் தந்தது.  ( உருபு).

இல் -      இல்லை.  " அஃதொப்ப தில் "   உளதாகிய இடம் குறித்த இல் என்னும் சொல் ( உருபு,  இடைச்சொல் )  இங்கு இலதென்று இன்மைப்பொருள் தந்தமை ஒரு முரண் என்று கருதலாம்.

இல்  -   இல்வாழ்வான் மற்றோருக்கு நல்லாற்றில் நின்ற துணையாவான்.

இது இல் என்று வீடு குறித்தது.  உருபில்போல் இடமென்னும் பொதுப்பொருளில் வாராமல்  குறித்த இடமாகிய இல்லத்தையே சுட்டியது. ஒருவற்கு எல்லா இடனும் வீடாமோ?

உதாரணம் என்பது முன் நிறைவாய்ப் போன்றமைந்தது,  உது -   முன்னிற்பது. ( அது இது உது சுட்டடிச் சொற்கள்).  ஆர் (தல்) -  நிறைவு,  அண்+ அம் - விகுதி (  அணித்தான அமைவுப் பொருள் ). அணம் என்றும் ஒருவிகுதி என்று கொள்ளினும் அமையும்.  எனவே இல் என்பது உதாரணமாய்க் காட்டப்பெற்றது.  எடுத்துக்காட்டு,  காண்மானம் ( காமானம் என்பர் பேச்சில்.) எனவும் சொல்வர்.

இனி,  துட்டன் ( துஷ்டன்) என்ற சொல்லுக்கு வருவோம்.   துள் என்பது அடங்காமை குறிக்கும் அடிச்சொல். வேறு பொருளதுமாகும். " ரொம்பத் துள்ளுகிறான் என்பது வழக்கில் சொல்லப்படுவது. துள்ளுதல் பலவகை. மகிழ்வால் துள்ளுதல் ஒன்று.   அடங்காமல் துள்ளுதல் மற்றொன்று.  வேறு துள்ளுதல்களை வந்துழிக் காண்க. இந்தத் துள் என்ற அடி துடு என்று திரியும். ளகர ஒற்று டுகரமாதல் காண்க..பலவுள. ஒன்று:  பள் > படு > படுகை. இன்னொன்று: நள் > நடு.  நள்ளாறு = நடு ஆறு > நட்டாறு.

துடு >  துடு + கு =  துடுக்கு.  ( கு விகுதி ).

இன்னோர் எடுத்துக்காட்டு:   அடு >  அடுக்கு என்பது.  கு விகுதி.

பிடு > பிடுக்கு.

துடு  + அன் =  துட்டன்.  இங்கு டகரம் சொற்புனைவில் இரட்டித்தது.

துடு என்பது துடி என்று இகரம் இறுதியாகி மற்றொரு சொல்லாம்.கர்வம் (கருவம்), கோபம் என்/றும் பொருள்தரும்.

துடு > துடும்புதல் என்பது கூடுதல் ஆவது குறிக்கும்.

துடு > துடைக்குதல்  அழிவு செய்தல் பொருளதுமாம்.

துள் -  துட்குதல்,   வெருவுதல் என்பதுமாம்.

இவ்வழிச்சென்று துட்டகுணங்கள் அறிந்துகொள்க.  இக்குணங்கள் இவ்வுருவங்களில் படிந்துள்ளன.

இடு அம் இட்டமெனல்போல் துடு அம் துட்டமென இரட்டிப்பு ஆயிற்று,

துட்டம் துஷ்டமானது இட்டம் இஷ்டமானதுபோலுமே.  இட்டமாவது மனத்தை ஒன்றில் இடுவது,  இடு > இட்டம்.

"வடவெழு தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" ( தொல்).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் திருத்தம்.



 





கருத்துகள் இல்லை: