வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ழகர ஒற்று மறைந்த சொ/ற்கள் சில.

மகிதலம்


மகிழ் என்ற வினை.  உவகை கொள்ளுதலைக் குறிப்பது. இதிலிருந்து மகிழ்தல், மகிழ்நன் எனல்தொடக்கத்துப் பல சொற்கள் அமைகின்றன.

மகிழ்நன் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்து,  நகரம் ணகரமாகி பின்வருமாறு  அமைகிறது.

மகிழ்நன் >  மகிணன்.

மகிழ்நன் என்பது தமிழன்றோ?  அதிலிருந்து அமைந்த  மகிணனும் தமிழ்தான்.சொற்களை அடையாளம் கண்டுகொள்வதில்  சிறிது முயற்சியும் கவனமும் வேண்டும்.

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்று தொல்காப்பியனார் அழகாக அறிவுறுத்துகிறார். விழித்தவுடன்  (ஒரு சொல்லின்மேல் உங்கள் விழிகள் பட்டவுடன் ) தெரிந்துவிடாது,  கவனமாய் ஆராய்வேண்டும் என்பது அவர் அறிவுறுத்துவது ஆகும்.

நாம் வாழும் இப்பூவுலகு, ஒரு மகிழ்ந்து வாழும் உலகம் என்றனர் நம் முன்னோர். காட்டு விலங்குகளையும் ஏனை இடர்களையும் வெற்றிகண்டு நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழும் வசதி உண்டான பின், மனிதன் இப்புவி மகிழ்வுக்குரிய தலம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டிருப்பான். இதை எந்த ஆய்வாளனும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. துன்பம் மிக்க உலக்ம் என்று சொன்னவன்,  துன்பகாலத்தில் ஊன்றியவன் என்பதும் தெளிவு.

மகிழ்தலம் > மகிதலம்.

மகிதலம் என்பதற்கு இப்போதுள்ள பொருள் "பூமி"  என்பதாகும். இதன்  சொல்லமைப்புப்  பொருள் "மகிழ்தற்குரிய இடம்"என்பதாகும்.  அச்சிறப்புப் பொருளை இழந்து இப்போது இச்சொல் வெறும் நில உலகு என்ற பொருளில் மட்டும் வருகிறது.

ழகர ஒற்று மறைந்து திரிந்த சொற்கள் பல.  அவற்றைக் கண்டுபிடியுங்கள்.

கருத்துகள் இல்லை: