திங்கள், 27 ஜூலை, 2015

அறிவியற் பேரறிஞர் அப்துல் கலாம் condolences

அறிவியற்  பேரறிஞர்  அப்துல் கலாம்  இந்தியா   ஷில்லோங்க்கில்   காலமானார் .  ஆழ்ந்த இரங்கல்.

அறிவியற் சாதனை  அன்புகெழு  உள்ளம்
புரிவியலால் வென்றோன் புவியை ----- கருவில்
திருவமைந்த தீந்தமிழன் தேன்போல் தெளிந்த
பொருவிலாப் பேச்சினனைப் போற்று.

புரிவியல் -  practice as opposed to theory,
பொருவிலா -  ஒப்பிலா


இராமே  சுவரம்   இராமபற்  றாரோ
டுறாமக்  களையும்   ஒருபரிசால்  உய்க்க ,
கலாமைக் கொடுத்த  கலைசேர்    புரட்சி
நிலாவானும் தந்ததற்  கொப்பு .

இராம பற்றாரோடு :   இராம பக்தரோடு.
இராமப் பக்தர் என்று எழுதார் ஆதலின்  இராமப் பற்றார் என்று  அமைக்கவில்லை . வழக்கு நோக்கியது 
உறா  மக்களையும் :  இராமரைப்  பின்பற்றா மக்களையும் .
உய்க்க :  முன் செலுத்த 
கொடுத்த :  ஆண்டவன்  அல்லது  இராமேசுவரம்  தந்த 
நிலா வானும் :  வானம் நிலாவினை 

வானம்  நிலவைப் பரிசாகத் தந்ததுபோல,  இராமேசுவரம் என்ற  இப்புகழ் பெற்ற தலம்  இராம பற்றர்களுக்கும்  அல்லாதாருக்கும் சேர்த்து  ஒன்றாக  ஒரு பரிசைத் தந்தது.. யாவரையும்  உய்க்க  அது தந்த பரிசு  " கலாம்"  என்னும்  மாமேதையாம். என்றபடி.


கனிவுமனம்  இனியமுகம் பனிகுளிர்ந்த நகையே
துணிவுபெறும் தொனியில்வரும் நனிசிறந்த குரலே
பணியிலுறும் அணியினொடு  கணிதவறாப் புரிவே
இனியுலகில் நினைவில்பிற  நனவில்வரல் உறுமோ

துணிவு பெறும் -  கேட்போர் துணிச்சல் பெறும்படியக .
நனி =  நல்ல.
நகையே -  சிரிப்பே
பணியிலுறும்  அணி  -  வேலையில்  ஈடுபடும்  அவர்தம்  குழுவினர்.
கணிதவறா -   கணிப்பில்  தவறாத  (. துணைக்கோளம் ,  ஏவுகணை  முதலியன செய்து  மேல் எழுப்ப, கணக்கு  நன்கு  போடவேண்டும்.  தவறக்கூடாது.  இதில் கலாம்  வல்லவர். )
புரிவே -  செயல் புரிதலே.
இனியுலகில் நினைவில் :   இனி அவர் நம் நினைவிலேயே  வாழ்பவர்.
பிற  -  மற்றபடி.
நனவில் வரல் உறுமோ -  உண்மை வாழ்வில் மீண்டு வந்து தோன்றுதல் கூடுமோ  என்றவாறு.


















கருத்துகள் இல்லை: