வியாழன், 2 ஜூலை, 2015

போருக்குப் புறப்படுமுன் .........

அரசன் ஒருவன்  போருக்குப்     புறப்பட எண்ணுகின்றான்.  அவன் என்ன செய்யவேண்டும்?  இதற்கான விடை யாரும் அறிந்ததுதானே! "போருக்குப் புறப்படுங்கள் " என்று உரத்த குரலில் கட்டளையிடவேண்டும். திரைப்படங்களில் அப்படித்தான் காட்டுவார்கள். காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்குக் கட்டளை யிட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

சிறந்த போர்க்கலை மன்னர்கள், பல முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். அதிலொன்று படைகளைப் பலவிதத்திலும் தயார்ப்படுத்துவது. அதில் ஒரு "விதம்": வரிசையறிந்து படையுறுப்பினர்களுக்கு விழுமிய பொருள்பல வழங்கிச் சிறப்பிப்பது.

முன் போரில் பல வெற்றிச் செயல்கள் புரிந்து தன் நாட்டுப் பற்றையும் அரசுப் பற்றையும் மெய்ப்பித்தவர்களுக்குச் செயல்தகுதிக்கேற்பப் பொருள்வழங்க வேண்டும்.  இதைத்தான் "வரிசையறிந்து" என்று சொன்னோம்.
பொருளுடன் பட்டம், பதவி முதலியவும் வரும்.

மறவர் சிலருக்குக் குதிரைகள் கிடைத்தன.  வேறு சிலருக்கு யானைகள்.
நிலங்கள் பரிசாகப் பெற்றோரும் உண்டு. இன்னும் சிலருக்குப் பொன்னும் மணியும். இப்படிப் போருக்குமுன் அளிக்கும் நிகழ்வுக்குத்  "தலையளி" என்றனர். அளிக்கும் மருத நிலத்துக்குத் "தண்ணடை" என்று பெயர்.

இதைக்கூறும் பாடலைத்  தும்பைத்திணை, தும்பை அரவத் துறை என்று வகைப்படுத்துவார்கள்.

பொன் புனைந்த கழலடியோன் 
தன்படையைத் தலையளித்தன்று.

என்பது கொளு. தலையளித்தன்று = தலையளித்தது .( புறப் பொருள் வெண்பாமாலை .)

சிவ பெருமானே முப்புரம் எரிக்கப்  ( போருக்குப்) புறப்படுமுன் புறப்பொருள் இலக்கணப் படி செய்வன செய்துதான் புறப்பட்டாராம்.    

அத்தகு சிறப்பு உடையது தமிழனின் புறப்பொருள் இலக்கணம். (என்பர் புலவர் )







கருத்துகள் இல்லை: