வெள்ளி, 5 டிசம்பர், 2014

வயது அகவை

ஆங்கிலத்தில் ஏஜ் என்பதற்கு நேரான பொருளுடைய வயது, மற்றும் அகவை என்ற இரு சொற்களையும் இப்போது நுணுகி அறிவோமே.

காலச் செலவின் பிடிகளுக்குள் இடையீடின்றிச் சிக்கித் தவிப்பவன் மனிதன்.அதன் வயப்பட்டு இருப்பதும் இறுதியில் இறப்பதும் அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.  இந்த விதியை மதியால் சற்று அகற்றி வைக்கலாம் எனினும் முற்றிலுமாக நீக்கிவிடுதல் இயலாது.


ஆகவே காலச்செலவு, அல்லது காலக் கழிவுக்கு அவன் வயப்பட்டுக் கிடக்கிறான். அது அவனை ஆட்டிப்படைக்கின்றது.  

காலத்தை வென்றவன் என்பது காலம் கடந்து மக்களின் நினைவில் வாழ்கிறவன் என்று புலவர் புனைந்துரைப்பதுவாகும். 

காலக்கழிவில் வயப்பட்டுக் கிடப்பவனுக்கு, அங்ஙனம் அவனை வயப்படுத்தும் ஒவ்வோர் ஆண்டும்  ஒரு வயது என்றனர். வயம் > வயது.
வை > வய் > வய்+அது > வயது.  வய் + அம் = வயம். 
அதாவது மனிதன் வயமாய் வீழுங்காலை, ஏதோ ஓர் ஆற்றல், அவனைப் பிடித்து அங்கே வைக்கின்றது. வைக்கப்படுவதே, வயப்பட்டுக் கிடப்பதாம்.
காலச் செலவுக்கு வயப்பட்டுக் கிடப்பது, தேய்வது, அழிவது என்று பலவாறு 
விரிக்கலாம். எல்லாம் அதுதான்.வயப்படுவது மட்டுமன்று, காலக் கழிவில் அவன் அகப்பட்டுக் கொள்கிறான்.
விடுபடுதல் இல்லை. இதற்கு அகவை என்ற சொல்லும் மிக்க அருமையாய் அமைந்த சொல்லாகும்,  வயது என்பதுபோலும் அதே கருத்தினடிப்படையில் அமைந்ததே அந்தச்சொல்லும்.

அகம் > அக > அகவை.

அகம் : உள்ளே. வை : வைக்கப்படுகின்றான்.  அகவை --. வை என்பதோ  எனின், அது ஒரு விகுதியாகவும் மற்றும்  உள் இடப்படுதலின் ஒரு குறிப்பாகவும் விளங்குதல், தமிழினிமை ஆகும்.

நாளை வைப்பதாகவும் காலத்தினை வைப்பதாகவும் கூறலாமோ?
வைப்பது என்பது ஏதேனும் ஒரு பருப்பொருளை வைப்பதுதான், அந்தப் பருப்பொருள்  வைப்பிலிருந்து நுண்பொருள் வைப்புக்கும் கருத்து, காலம் முதலிய கையில் பிடிக்கமுடியாதவற்றை வைப்பதற்கும் மொழிகள்
முன்னேறி பன்னெடுங்காலம் ஆகிவிட்டது தோழியரே!

விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கின்றானே ஒரு மறவன். அதனைக் குறளில் கண்டின்புறலாமே!


There is much philosophy in many of our Tamil words.  Well, other languages too. 

கருத்துகள் இல்லை: