செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

வை: வசம்; வாய்: வசம்.

 மனிதராயினும் மற்ற விலங்குகள் ஆயினும் சில சூழ்நிலைகளில் வசமிழந்து தம்போலும் மற்றொரு பிறவிக்குப் பணிந்துவிடுகின்றன(ர்) . இதை வசம் என்று முன் கூறும்வழியே கூறுகிறோம்.

வசம் என்ற சொல்லுக்கு வை என்பதே அடிச்சொல்.

வை -  சொல்லாக்க நெறி நிற்குங்கால் வய் என்று வரும்.

வய் >  வய்+ அம் > வயம்.

யகர சகரப் போலியால்  வயம் > வசம் ஆகும்.  ( ய - ச).  வாயில் -  வாசல் போல.

வை என்பது மேற்குறித்தவாறு வய் என்று ஒலியொற்றுமைத் திரிபு அடையாமல் வை என்றே நின்று  அம் விகுதி பெறுவதுமுண்டு.  அப்போது:

வை > வை+ அம் > வையம்  ஆகும்.  அப்போது வைக்கப்பட்டதான உலகம் என்று பொருள்படும்.  இறைவனால் வைக்கப்பட்டது,  இயற்கையால் வைக்கப்பட்டது என இருவகையாகவும் பொருள்தெரித்துக் கொள்ளலாம்.  தெரிதல்> தெரித்தல் (பிறவினை).  தெரித்தல் என்பது தெரியும்படி செய்தல். தெரிவித்தல் - பிறர் தெரிந்துகொள்ளுமாறு செய்தல்.

வையம் என்பது அம் விகுதி கொள்ளாமல் அகம் என்னும் விகுதி பெற்று வையகம் என்றும் வரும்.

ஒரு பொருளை ( பழத்தை ) எடுத்துக் குரங்கினிடம் வைத்தால்,  பழம் குரங்கின் வசமானது என்க.   ஆகவே வசமென்பது  ஒன்றன்பால் அல்லது ஒருவன்பால் வைக்கப்பட்ட நிலை.  தானே தன்னை வைத்துக்கொள்வதும் பிற ஆற்றலால் வைப்புறுவதும் அடங்கும்.

உயிர்கள் ஓரு கவர்நிலையில் வைக்கப்பட்டுக் கிடக்கும் பருவமே வசம்+தம் ஆகும்.   இங்கு தம் என்பது து+ அம் கலவை விகுதி.   வசம் + து + அம்.  வசத்ததாகி அமைதல்..   வசம் +து : வசத்தது (ஆகி)  அம் - அமைதல், விகுதியும் ஆகும்.  து  இடைநிலை எனினுமது. 

மாலை நேரம் உயிர்களை வயப்படுத்துகிறது. வயந்த ( வசந்த) காலமும் வயம் செய்கிறது. 

இனி வாய் என்ற சொல்லாலும் இதையே விளக்கலாம்.

வாய்  - இது இடம் குறிக்கும்.  எ-டு: தோற்றுவாய் :  தோன்றுமிடம்.

ஓரிடத்து வைப்புற்றுக் கிடத்தலே வாய் + அம் >  வய் + அம் > வயம்.

சாவு + அம் என வந்து குறுகிச் சவமானதுபோல,   வாய் + அம் > வயமென்றும் குறுகுதற் குரித்தேயாம்.

வை, வாய் என்பன ஏனை மொழிகளிலும் பரவியுள்ளது. இதனை இன்னோரிடுகையில் பார்ப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





திங்கள், 16 ஆகஸ்ட், 2021

பத்தியும் பரவசமும்

 பத்தி (பக்தி) என்பதையும் பரவசம் என்பதையும் ஆய்வு செய்வோம். அதன்முன் இந்தக் காணொளியைக் கண்டு மகிழுங்கள். இதைப் படமெடுத்தவர் யாரென்று தெரியவில்லை. பதிப்புரிமையும் தெரியவில்லை. அவர் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டால் இதை அப்புறப்படுத்திவிடுவோம்.  அதுவரை இது இங்கிருக்கும்.

இது எந்த இடம் என்பதும் தெரியவில்லை. இப்படி விவரம் அறிய இயலாத படங்கள் பல வருகின்றன.  நன்றி.

பின்னூட்டம் செய்து தெரிவிக்கவும்.




















ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

அந்தி, மந்தி, அந்தம் , அன்று முதலிய

 அனந்த என்பது ஒரு சொல்.  ஆனந்த என்பது இன்னொரு சொல். இவற்றின் ஒலிக்கிடையே உள்ள முன்மையான வேறுபாடு  அகரமும் ஆகரமும் ஆகும், அதாவது ஒன்று குறில் தொடக்கமானது, மற்றொன்று நெடில் தொடக்கம் ஆகும். இசைப்பாடல்களில் பாடகர் வேண்டியாங்கு வேண்டியபடி வேறுபடுத்தாமலும் ஒலித்துக்கொள்வதால்,  இரண்டும் ஒரு மாதிரி செவிக்குக் கேட்கலாம், என்றாலும் நாம் கவனமாகவே பொருள்கொள்ளவேண்டும்.

இரண்டும் தமிழிலிருந்து திரிந்த சொற்கள்.  தமிழிலும் வழங்குவன ஆகும். ஆனந்த என்ற சொல்லை இங்கு அலசவில்லை.

அனந்த:

அன் + அந்த.   அன் என்பது இங்கு அல்  ( அல்லாதது) என்பதைப் பொருளாகக் கொண்டது.  அல் - அன் என்பது லகர 0னகரப் போலி.   (ஒரு மாதிரியாக இருப்பவை ).  இதை உணர்ந்து கொள்வது எளிதே.

அடுத்திருக்கும் சொல்  அந்த (இங்கு நாம் இந்த அந்த என்ற சுட்டுச்சொல்லைக் குறிக்கவில்லை ).  அந்த என்ற எச்சச்சொல்லைக் குறிக்கிறோம்.)  என்பது. இதன் முழுமை அந்தம் ,  இது முடிவு என்று பொருள்படும்.  ஆதி அந்தமில்லாதவர் கடவுள் என்பார்கள்.  முடிவு மில்லை, தொடக்கமும் இல்லை என்பது இதன் பொருள். இதை உணர்ந்து கொள்ள முதலில் அன்று என்ற தமிழ்ச்சொல்லை அறியவேண்டும்.

அன்று, அந்தம்

இன்று, அன்று என்பவை நாட்களைக் குறிப்பவை.  அன்று என்பது முடிந்த நாளைக் குறிக்கிறது.  இதை அன் + து என்று பிரிக்கவேண்டும்,  பிரித்தால்,  அல்லாதது,  என்ற பொருள் கிட்டும். அதாவது இன்று அல்லாத நாள். அப்படி என்றால் நேற்று, அதற்கு முன்னே என்று பொருள் கிடைக்கும். ( மலையாளத்தில் "இன்னல" என்பது போல் ).   இன்று தான் இருக்கும் நாள்.  நேற்று,  அதற்கு முன் என்பவெல்லாம் முடிந்து போனவை. இதை உணரவே  அன்று என்பதும் ஒரு முடிவையே குறிக்கிறது என்பது தெரியும்.  அன்று என்பதில் அம் விகுதி இல்லை. இருந்தால் அது அன்றம் என்று வந்து, அந்தம் என்பதனுடன் ஒலியணுக்கம் உண்டாகிவிடுமென்பதைக் காணலாம்.  ஆனால் அன்றம் என்ற சொல் மொழியில் அமையவில்லை.  அன்று மட்டுமே உள்ளது,  ஒப்புமை உணர, அதுவே போதுமானது ஆகும்.  வேண்டுமானால் அன்றம் என்ற புனைவையும் வைத்துக்கொண்டு அறிய முற்படலாம்.

என்ன வேறுபாடு

அன்று என்பது அன் து என்பதுதான்.  அது "அன்று" என்று வந்தது புணர்ச்சித் திரிபு. There is no substantial difference.  அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை.  இவ்வாறு புணர்ச்சித் திரிபு ஏற்படாமலே முந்தி, பிந்தி என்ற சொற்கள் உள்ளன.  முன் தி > முந்தி;  பின் தி >பிந்தி.  முன்றி, பின்றி என்று வரவில்லை. ஒப்புப்பேறுக்காக முன்றி பின்றி என்பவற்றை வைத்துக்கொள்ளலாம், ஆயினும் அது அவ்வளவாகப் பயன்படாது. அதிலிருந்து புதிய கருத்தமைவுகள் கிட்டமாட்டா.

அன் து என்பது முடிதலையே குறித்து நிற்பதால், அன் து அம் > அந்தம் என்பது முடிவு என்றே குறித்து நிற்பதை உணரலாம்.  

இதற்கு முடிபு:  அந்தம் என்று உருக்கொண்டு, முடிவு என்ற பொருள்பெற்ற இச்சொல்,  புணர்ச்சித் திரிபு கொள்ளாமையினாலேதான் அன்று ( அல்லது நாம் புனைந்த அன்றம் ) என்பதனுடன் வேறுபாடு அடைகிறது.

ஒப்பீடுகள்

அந்தி என்ற சொல் நாளின் முடிவைக் குறிப்பதுடன் தமிழிலும் நல்ல வழக்கு உடையது.  அது அன் + தி > அன்றி என்று வந்திடவில்லை.  ஆனால் பல் (தந்தம்) உடையது என்று பொருள்தரும் பன்றி என்ற விலங்கின்  பெயர், பந்தி என்று வரவில்லை.  பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் நிலையைக் குறிக்கிறது. அல்லது உணவருந்துகையில் வரிசைகள் பலவாக இருந்துண்ணுதலைக் குறிக்கவும் செய்யலாம்.

ஆகவே,  பல் என்ற வாயுறுப்பை குறிக்கும் போது பல் தி> பன்றி என்று விலங்குப் பெயராகவும்,  உணவு ஏற்பாட்டைக் குறிக்கும்போது  பல் + தி > பந்தி என்று பன்றி என்பதில்போல் புணர்ச்சித் திரிபு இன்றியும் வருதலை அறியலாம். புணர்ச்சிமுறைகளை நோக்கிடுங்கால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல் இச்சொற்களைப் படைத்திருக்கிறார்கள். 

இவ்வாறு சொல்லமைப்புப் புணர்ச்சிகளெல்லாம் ஒரு திட்டத்தில் தான் வரவேண்டும் என்ற உறுதிநிலை கடைப்பிடிக்காதது, அதிக சொற்களை உண்டாக்கிக் கொள்ள உதவியுள்ளதைக் காணலாம்.  மன் > மான் என்ற மனிதற் குறிச் சொற்களை எடுத்துக்கொண்டாலும் இது விளங்கும்.  மன் < மன் இது அன் > மனிதன்;  மன் + தி என்பது மந்தி என்றே வந்தது; மன்றி என்று வரவில்லை. மந்தி சிந்து கனிகளுக்கு வான் கபிகள் கெஞ்சும் என்பது பாடல் வரி.

முடிவுரை

இவ்வாறு, அந்தி என்பது தமிழொலி உடையதும் தமிழ்ச்சொல்லுமாகும்.  அந்தம் என்பதும்  அஃதே.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.