ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தும்பியும் தம்பியும்.

 வண்டுகள் பறந்துகொண்டே முரல்கின்றன.  முரலுதலாவது ஒலி எழுப்புதல்.  முரல் என்பது குரல் என்பதற்கு எதுகையாகிறதே  என்று ஆனந்திக்கலாம். அது கவிஞனுக்கும் கவர்வரிகள் வரைவோனுக்கும் பயன்படும்.

முரலும் வண்டுகள் முர்ர்ர்ர் என்று ஒலியெழுப்புவன.    அவை ரீ .......ரீ  என்று ஒலிசெய்வதாயும் நாம் சொல்லலாம்.  (ரீ என்று )+ (இங்கு )+  (ஆர்தல்)  இது வாக்கியத்தின் உட்குறிப்பு.  இதிலிருந்து ஆர்தல் என்ற  சொல்லின் பொருளைத் தேடலாம்.  ஆர்தல் - ஒலித்தல்.   ரீ + இங்கு+ ஆர் + அம் = ரீங்காரம் ஆகும்.  ரகரம் மொழிமுதலாகாது என்று தொல்காப்பியனார் சொல்லிக்கொண்டிருப்பதால், அவருக்கும் ஒரு வணக்கம் செலுத்திவிட்டு,  ஓர் இகரத்தை முன்வைத்துக்கொள்ளலாம்.  அப்போது அது  இரீங்காரம்  ஆகிவிடும். ரீங்காரம் தமிழன்று. சரி. அப்புறம் ஏன் உள்ளுறைவுகளெல்லாம் தமிழாக இருக்கிறது? நான் இட்டிலி சாப்பிடமாட்டேன் , எனக்குத் தோசைதான் வேண்டுமென்று அழுதால் தாய் என்ன செய்வது?  நீ தோசையே சாப்பிடு என்று விடவேண்டியதுதான்.  நீ வேண்டுமானால் தோசை சாப்பிடு. நான் இட்டிலியே சாப்பிடுகிறேன்.

தம் தாம் என்பன சந்தங்கள். தம் தம் தம் > தம் தம் > சம் தம் > சம் தம் > சந்தம்.  த - ச போலி.   ஆனால் அந்த வண்டு  தும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று ஒலித்துக்கொண்டே பறக்கிறது.    தும்மை எடுத்துக்கொண்டு,  ஒரு ~பி என்னும் விகுதியைச் சேர்த்துவிட்டால்  அது தும்பி  ஆகிவிடுகிறது.

தும்பியும் காமரம் செப்புகிறது என்கின்றது சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க நூல்.  காம் -  விரும்புகின்ற (ஒலி) .  அர் ...ர்...-  ஒலி.   அம் - விகுதி.    அந்த அர் .......தும்ம்ம்ம்ம்ம்ம் என்று சூழ்புறத்து  ஆர்கின்றது.

ஆனால் தம்பி என்ற சொல்லில் வரும் பி  என்பது பின் என்ற சொல்லின் கடைக்குறை.  தம்பின் வருபவன் தம்பி.   இங்கு வரும் ~பி விகுதியன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கம்பி - சொல்லுக்கு எளிய விளக்கம்.

கம்பி என்ற சொல் மிக்க விரிவாக விளக்கப்பட்டுள்ளது,  முன்னர் நாம் கண்ட இடுகையில்.  அஃது:

கம்பி   https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_13.html

ஆனால் இதை இன்னும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம். இது ஒரு குறுக்கென்றே சொல்லவேண்டும்.:

கடு + பு + இ  >   கடும்பி.  இது இடைக்குறைந்து கம்பி   ஆகிவிடும்.

இது மெலித்தல் உத்தி ஆகும்.

[  இங்கு,  பி என்ற இறுதிக்கு  ஒரு விகுதியென்னும் தகுதியை வழங்கலாம்.  அவ்வாறாயின்  பு + இ என்று பிரித்து இடைநிலை + விகுதி என்று விவரிக்க வேண்டியதில்லை. விவரிப்பது  என்றால் விரித்து வரிப்படுத்துவது .  இந்தப் பயிலாக்கத்தில் அடிச்சொல்லைக் கண்டுபிடிப்பதே நோக்கம். விகுதி இடைநிலைகள் எல்லாம் ஆக்கிய சொல்லை வேறுபடுத்தும் ஒலிகளின் உருக்களே.   அவற்றில் பெரிதும் பொருண்மை இருப்பதில்லை .  இது சொல்லாக்கத் தத்துவம்.  உணராதோன் உண்மை அறிந்து மேலெழுவதில்லை ] 

பல சொற்களில் கடின இடையொலிகள் குறைந்துள்ளன.  இன்னோர் எடுத்துக்காட்டு:  கட  வினைச்சொல்.  : கடப்பல் >  கப்பல்.  கடந்துசெல்ல உதவும் மிதப்பூர்தி. மற்றொன்று:  அடங்கு + அம் = அடங்கம், இடைக்குறைந்து அங்கமானது. ( உடல்).

இதில் வந்த புணர்ச்சித் திரிபு:

கடு + கை >  கடுங்கை என்பதுபோலுமே இது.  கடுங்கை என்றால் கடுமையானது என்று பொருள். எமன் என்னும் உயிர்குடிப்போன்,  கடுங்கைக்கூற்றுவன் என்பதும்  காணலாம்.  இது  தேவாரத்தில்  (. 167, 1)  வந்துள்ளது.

கொடு + கோல் +  அன் என்பது கொடுங்கோலன் ஆகும்.  கொடு> கொடுமை,  மை விகுதி கெட்டுப்புணர்த்தல் என்பது இலக்கணியர் உரைப்பது.

இனி, கடு > கடும்பு > கடும்பி என்பது எளிதான விளக்கம்.

கடும்பு +இ  = கடும்பி >  கம்பி.

கடுமையானது என்பதே பொருள்.  பு, இ என்பன வெறும் விகுதிகளே.

இகர இறுதி இல்லாமல் கடும்பு என்று இடைக்குறையாமல் வருங்கால் அது  வேறுபொருள் கொள்ளும்

இதற்கு இன்னொரு காட்டு.   மை என்பது ஒரு கரிய கறைநீரைக் குறிக்கிறது. அது அப்பொருளை இழந்து, இர் என்ற விகுதி பெற்று மை இர் > மயிர் என்னும் போது  தலைமுடியைக் குறிக்கும், பிற மயிரும் குறிக்கும்.   மை + இல் என்று இல் இணையும்போது மை இல் > மயில் என்று மைதெளித்தது போலும் இறகுகளின் நிறமுள்ள ஒரு பறவையைக் குறிக்கும்  மை என்ற தனிச்சொல்லுக்குள்ள பொருள் மற்ற அமைப்புகளில் இல்லை.  ஆனால் ஒரு பொருள் தொடர்பு இருக்கிறது. அது கருமைநிறம் என்பது..  கடும்பு என்பது தனிச்சொல்லாய்,  கடும்புப் பால் குறிக்கும்.   அது இகர விகுதி பெறுகையில் அந்தப் பொருள் தொலைந்து,  கடுமைப்பொருள் மட்டுமே எஞ்சியபடி " கம்பி" ஆகி, கடும் இரும்புத் தடி  என்ற பொருள் பெறுகிறது. பல்வேறு விகுதிகளை ஏற்கையில் மூலப்பொருள் மட்டும் எஞ்சும்.

இவற்றுள் பெரும் வேறுபாடுகள் எவையும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சனி, 7 ஆகஸ்ட், 2021

மருவற்குரிய மருத நிலமும் சில மருவற் சொற்களும்.

பண்டைக் காலத்திலும் சரி, இன்றும் சரி.  மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் முன்மை வகிக்கும் பொருளென்றால்  அது உயிர்களுக்கு உணவே அன்றிப் பிறிதில்லை என்பது மிக ஆழ்ந்து சிந்திக்காமலே யாவரும் ஒப்புக்கொள்ளக்  கூடிய கருத்தாகும். மனிதற்கும் மன்னுயிர்க்கும் உணவளிப்பதே ஒரு பேரறம் என்பர் அறிந்தோர்.

எனவே, உலகனைத்தும் மருவிச் செல்லற்குரிய நிலப்பகுதி என்றால் அது மருத நிலமாகும். இவ்வுலகில் எங்கெங்கு நெல்லும் பிற கூலங்களும் விளைகின்றனவோ அவற்றை யெல்லாம் மருதம் என்றே சொல்லவேண்டும். மருதமானது உலகின் முதன்மை.

மருதம் என்ற சொல் மருவுதல் என்ற சொல்லுடன் மிகுந்த  தொடர்புடைய சொல்.

இதன் அடிச்சொல் மரு என்பது.

மரு >  மருவு >  மருவுதல்  ( வினைச்சொல்).  தல் - தொழிற்பெயர் விகுதி.

மரு >  மருது:    உலகம் மருவுதற்குரிய ஒன்று,  அல்லது மருதமகன்.

மரு > மருது >  மருதம்   ( அதாவது மரு + து + அம் = மருதம் ).   மருதநிலம் .  பயிர்செய்யும் நிலம்.  உலகத்துயிர்கள் உணவுக்காக மருவி -  தழுவிச் செல்லும் நிலம்.  மற்ற நிலங்கள் இதனையே  மருவி நிற்கும் பெருமையுடைய நிலம்.

பிறர் தொழுதுண்டு செல்லும் பெருமையுடைய நிலம்.

மரு என்னும் சொல் மார் என்று திரியும்.

கரு என்ற சொல் கார் என்று திரிவது போலுமே இது.

மரு > மார் > மார்+ அன் > மாரன்.  காதலியரால் தழுவப்படும் ஈர்ப்பு உடையவன்.

குறு என்ற சிறுமை குறிக்கும் சொல் தன் இறுதி எழுத்தை இழந்து கு என்று நிற்கும்.  அப்போது அது குறுக்கம் குறிக்கும். 

கு+  மரு + அன் >  குமரன்.  இளமை உடையோன்,  அகவை ஆகாதவன்.

கு + மரு >  கு + மார் >   குமார்.  இளையவர்.

இவ்வாறு சொற்கள் பல வுளவாதலின்,  அவற்றைப் பின்பு நோக்குவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.