சனி, 12 செப்டம்பர், 2020

துட்டன் (துஷ்டன்)

 துள் என்பது  ஒரு தமிழ் அடிச்சொல்.

இது பின்னர் துண் என்று திரிந்தது.

துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது. பின் அதே துண் என்ற அடி பிரிவு, துண்டு படுதல் என்ற கருத்தையும் தழுவியது. இதற்கு இன்னோர் உதாரணம் தரலாம் என்று நினைக்கின்றோம், காண்க:

இல்   -  இடம்:    " கண்ணில் விழுந்த கரித்தூள்."   இங்கு இல் என்பது இடப்பொருள் தந்தது.  ( உருபு).

இல் -      இல்லை.  " அஃதொப்ப தில் "   உளதாகிய இடம் குறித்த இல் என்னும் சொல் ( உருபு,  இடைச்சொல் )  இங்கு இலதென்று இன்மைப்பொருள் தந்தமை ஒரு முரண் என்று கருதலாம்.

இல்  -   இல்வாழ்வான் மற்றோருக்கு நல்லாற்றில் நின்ற துணையாவான்.

இது இல் என்று வீடு குறித்தது.  உருபில்போல் இடமென்னும் பொதுப்பொருளில் வாராமல்  குறித்த இடமாகிய இல்லத்தையே சுட்டியது. ஒருவற்கு எல்லா இடனும் வீடாமோ?

உதாரணம் என்பது முன் நிறைவாய்ப் போன்றமைந்தது,  உது -   முன்னிற்பது. ( அது இது உது சுட்டடிச் சொற்கள்).  ஆர் (தல்) -  நிறைவு,  அண்+ அம் - விகுதி (  அணித்தான அமைவுப் பொருள் ). அணம் என்றும் ஒருவிகுதி என்று கொள்ளினும் அமையும்.  எனவே இல் என்பது உதாரணமாய்க் காட்டப்பெற்றது.  எடுத்துக்காட்டு,  காண்மானம் ( காமானம் என்பர் பேச்சில்.) எனவும் சொல்வர்.

இனி,  துட்டன் ( துஷ்டன்) என்ற சொல்லுக்கு வருவோம்.   துள் என்பது அடங்காமை குறிக்கும் அடிச்சொல். வேறு பொருளதுமாகும். " ரொம்பத் துள்ளுகிறான் என்பது வழக்கில் சொல்லப்படுவது. துள்ளுதல் பலவகை. மகிழ்வால் துள்ளுதல் ஒன்று.   அடங்காமல் துள்ளுதல் மற்றொன்று.  வேறு துள்ளுதல்களை வந்துழிக் காண்க. இந்தத் துள் என்ற அடி துடு என்று திரியும். ளகர ஒற்று டுகரமாதல் காண்க..பலவுள. ஒன்று:  பள் > படு > படுகை. இன்னொன்று: நள் > நடு.  நள்ளாறு = நடு ஆறு > நட்டாறு.

துடு >  துடு + கு =  துடுக்கு.  ( கு விகுதி ).

இன்னோர் எடுத்துக்காட்டு:   அடு >  அடுக்கு என்பது.  கு விகுதி.

பிடு > பிடுக்கு.

துடு  + அன் =  துட்டன்.  இங்கு டகரம் சொற்புனைவில் இரட்டித்தது.

துடு என்பது துடி என்று இகரம் இறுதியாகி மற்றொரு சொல்லாம்.கர்வம் (கருவம்), கோபம் என்/றும் பொருள்தரும்.

துடு > துடும்புதல் என்பது கூடுதல் ஆவது குறிக்கும்.

துடு > துடைக்குதல்  அழிவு செய்தல் பொருளதுமாம்.

துள் -  துட்குதல்,   வெருவுதல் என்பதுமாம்.

இவ்வழிச்சென்று துட்டகுணங்கள் அறிந்துகொள்க.  இக்குணங்கள் இவ்வுருவங்களில் படிந்துள்ளன.

இடு அம் இட்டமெனல்போல் துடு அம் துட்டமென இரட்டிப்பு ஆயிற்று,

துட்டம் துஷ்டமானது இட்டம் இஷ்டமானதுபோலுமே.  இட்டமாவது மனத்தை ஒன்றில் இடுவது,  இடு > இட்டம்.

"வடவெழு தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே" ( தொல்).


தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் திருத்தம்.



 





வியாழன், 10 செப்டம்பர், 2020

அரட்டுதல்: அரசனும் அரட்டனும்

 அரசன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். அதனை இங்குக் காண்க:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html

அரட்டுதல் அல்லது கத்திக்கொண்டு கட்டளையிடும் முறையின் மூலமே பட்டாளத்திலும் "ஆட்சி" நடைபெறுகிறது. அணிவகுப்பு முதலியவைகளில் இதனை நீங்கள் காணலாம்.

அரசன் அரண் உடையவன்.  அரணன் ஆன அவனுக்கு அரணன் > ராணா  ( மகாராணா)  என்ற பெயர்களும் வழங்கியுள்ளன.

ஒருவன் அரட்டப்படுவது அச்சத்தை விளைக்கிறது.  அரள் > அரளுதல் என்பது அச்சமுறுதல். அன்புடன் பேசி பல்வேறு சலுகைகளையும் வழங்கி வேலைவாங்குவது என்பதெல்லாம் இக்காலத்து நெறி.   பண்டை நாட்களில் கத்திச் சவுக்காலடித்து அல்லது உதைத்து வேலைவாங்கினர்.

நாளடைவில் இந்த ஒலி எழுப்புதற் கருத்தும் அச்சக்கருத்தும் அரசன் என்ற சொல்லினின்று மறைந்துவிட்டது.   அர் என்ற அடிச்சொல் ஒலி குறிப்பது.

இதையும் வாசித்து அறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

அரசனிலும் சற்றுக் குறுகிய அதிகாரமுடைய ஆட்சியாளன் அரட்டன் என்று குறிக்கப்பட்டான். இச்சொல் நேரடியாக அரட்டு என்ற சொல்லினின்றே புனையப்பட்டது தெளிவு.  அரட்டு + அன் = அரட்டன்.   திவாகர நிகண்டு அரட்டனைக் குறுநிலமன்னன் என்று குறிக்கின்றது.

அரட்டிப் பிறரை அடக்கியாள்பவனே ஓரிடத்தை ஆளவும் தகுதி உடையோன் என்று பண்டையர் எண்ணினர் என்பது இச்சொற்கள் மூலம் தெளிவாகிறது.

அறிந்து மகிழ்வீர்.


 

 



புதன், 9 செப்டம்பர், 2020

சேர்வில் தோன்றிய பிரிவுக்கருத்து. துண் - அடிச்சொல்.

 

துண் என்ற அடிச்சொல் சேர்ந்திருத்தல் என்ற கருத்தை மையமாகக் கொண்ட அடிச்சொல் என்பதை முன் இடுகையிலே கண்டோம். இந்த அடிச்சொல்லுக்கு ஒரே ஒரு பொருள்மட்டும்தான் உண்டு என்று எண்ணிவிடலாகாது. வேறு அர்த்தங்களும் உண்டு. இவ்வாறு இலங்கும் பொருள்களில் இன்னொன்றை இங்கு அறிந்துகொள்வோம்.


ஒன்றாய் அல்லது முழுமையாய் இருப்பதே உடையும், துண்டுபடும். இரண்டாய் இருப்பனவும் இரண்டு ஒன்றுகள் - இரண்டு தனிப்பொருள்கள் எனின், ஒவ்வொன்றும் ஒரு முழுமை எனக் கொள்ளவேண்டும். எது முழுமையாய் இருக்கிறதோ அது உடையவும் துண்டுபடவும் செய்யும். துண்டுபடுதற்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லாக்கத்தில் எப்போதாவது உள்வரும். பெரும்பாலும் வராமலும் போகும்.


காண ஒன்றாய் இருப்பனவெல்லாம் சேர்ந்திருக்கின்றவை என்று பொருள். அணு என்ற சொல்லை ஆதியிலேயே உடையது தமிழ்மொழி ஆகும். டால்டன் முதலிய மேலை அறிஞர் அணு பற்றிய தெரிவியலை ( theory) அறிந்து கூறுமுன்பே அதைக் கண்டுசொல்லிவிட்டனர் நம்மனோர். தனித்தனி முழுமைகளாய் ஒன்றையொன்று அண்மி ( அண்) நிற்பது அணு. இங்கு உ என்பது விகுதி. உகர விகுதிக்கு இன்னோர் எடுத்துக்காட்டு: வல் > வலு. இன்னொன்று: கொள் > கொளு. இவ்விகுதி வினையிலும் பெயரிலும் வரும். அணு இயற்கையில் தனித்தியங்குவது என்பது விளக்கம் இன்றியே புலப்படுவது ஆகும். மேலும் அணுவைக் காண இயலாது. மிக்கச் சிற்றுருவினவற்றுள் மேலும் சிற்றுருவை அடைய இயலாத ஒன்றுதான் அணு. அணுவையும் பிரிக்கலாம் என்பர் அறிவியலார். ஆனால் அக்காலத்தில் அணுவுடன் தமிழன் நின்றான். இதுவே அக்காலத்துக்குப் பேரறிவு ஆகும். ஆகவே சேர்ந்துள்ளது துண்டுபடும், அது இயற்கை; இதிலிருந்து துண் > துண்டு என்ற சொல் அமைந்தது.


துண் > துண்டு (துண் + து).

துண் > துணி > துணித்தல்.

( வெட்டுப்படுதல் ).

ஒன்றாய் இருப்பது வெட்டுண்டால், வெட்டுண்ட ஒவ்வொன்றும் தனித்தனி இயக்கம் உடையவை ஆகின்றன. பிரிந்தவற்றுள் ஒவ்வொன்றும் உள்ளடக்கத்தில் சேர்ந்து இருக்கின்றன. எனவே, பிரிதல் சேர்ந்திருத்தல் எல்லாம் சொல்லாக்கத்தில் ஒன்றுதான். சேர்வில் பிரிவும் பிரிவில் சேர்வும் ஒன்றே. ஆகவே சொல்லாக்கத்திற்கு ஒரே அடியைப் புழங்கியது பொருத்தமே.


பலர் ஒன்றுபட்டு இயங்கும்போது ஒருவன் துண்டுபட்டு நின்றுகொண்டிருப்பான். இவனைப் பெரும்பான்மையினர் நம்பாமையினாலும் அவன்றன் பின்செயல்பாடுகளாலும், அவனைக் கபடு உடையவன் என்று நினைத்தனர். அதனால் அவன் துண்டகன் எனப்பட்டான்.


துண்டு + அகம் + அன் = துண்டகன்;


அகத்துள் துண்டுபட்டு நிற்போன் எனினும் ,


துண்டு + அகல் > துண்டகல் > துண்டகன்


துண்டாய் அகன்று நிற்போன் எனினும்,( ல்-ன்)


துண்டு + (ங்)கு + அன் = துண்டகன்


ங் - இடைக்குறை எனினும்,

எவ்வாறு விளக்கினும் செய்துகொள்க.


விளக்கம் ஏற்பச் செயல். ஒரு பூனையைப் பலவாறு தோலுரிக்கலாம் என்பது ஆங்கிலப்பழமொழி. கபடு சூது வஞ்சகம் நெஞ்சகத்துடையான் துண்டகன். அதுவே பொருள்.


இனித் துண்டன் என்று சொல் நிறுவுற்று, அது கொலைஞனைக் குறிக்கிறது.


துண்டு > துண்டித்தல்.


இது இகர வினையாக்க விகுதி பெற்று, துண்டுபடுதலைக் குறிக்கிறது.


மூங்கில் பல இணைப்புகள் உடையதுபோல் உள்ளபடியால் "துண்டில்" என்பது மூங்கிலுக்கும் பெயராயிற்று.


திடுக்கிட்டவன் மூச்சு விடுகையில் மூச்சு விடுதல் பல துண்டுபட்டதுபோல் இழுப்புடையதாவதால் துண் என்ற அடியிலிருந்தே "துண்ணிடுதல் " என்ற சொல்லும் அமைந்தது.


தன் தந்தை கொலையுண்டதறிந்த அவன், தான் ஆடித் தன் தசையாடித் துண்ணிட்டான்


என்று வாக்கியம் செய்யலாம்,.


இனித் துண்டு என்ற சொல் முண்டு என்றும் திரியும். முண்டினைத் தலையிலணிய, முண்டு + ஆசு = முண்டாசு ஆகும். ஆசு என்ற சொல் பற்றிக்கொள்வு குறித்தது. தலைப்பற்றுத் துணி எனலாம். ஆதல் வினை. ஆசு என்பதில் ஆ -வினையடி. சு - விகுதி.


உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமிட்டு

மகிழ்ந்திருங்கள்.


அறிக. மகிழ்க.

 

குறிப்பு:

பிரியம் என்ற பற்றுதல் குறிக்கும் சொல் ,"பிரியோம்" என்ற  எதிர்மறை வழக்கினின்று தோன்றியதுஇவண் கூறிய வகையுட் படுமெனக் காண்கபிரியா என்ற பெண்பெயர் பிரியாள் என்பதன் கடைக்குறை. ( பிரியமாட்டாள் ஆதலின் "பிரியம்" உடையாள் ).


அச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.