சனி, 2 பிப்ரவரி, 2019

சங்கட ஹற சதுர்த்தியும் தமிழ்த் தொடரும்.

எல்லோருடைய வாழ்க்கையிலும்  செயல் தடைகள் தாமதங்கள் ஏற்படுகின்றன.  தடை என்பது  நாம் முன்செல்வதைத் தடுப்பது போன்ற நிகழ்வுத் தடைகள்.  தாமதமென்பது:

தாழ்  + மதி +  அம் =  தாழ்மதம் >  தாமதம்.

பத்து நாட்களில் முற்றுப் பெற்றுவிடும் ஒரு செயல் திட்டத்தை ஐந்து நாட்களில் முடிப்பதாக நீங்கள் வாக்குறுதி கொடுத்தீர்கள்.   ஆனால் ஐந்து நாளில் முடியவில்லை.  ஆறு ஏழு என்று நீண்டு செல்கிறது.  இது நீள்வதற்குக் காரணம் குறைத்து மதிப்பட்டதுதான் என்று நமது முன்னோர் கண்டுபிடித்தனர்.  அது உங்களுக்குக் கால நீட்டிப்பு என்றாலும் அடுத்த குழுவினர்க்குத் தாமதம் தான்.  இந்தத் திட்டத்தில் ஐந்து நாட்களில் பயனை எதிர்பார்த்து  அது முடியாமல் பத்து நாள்வரைகூடக் காத்திருக்கவேண்டியுள்ளதே.   அது தாழ்மதிப்பீட்டினால் வந்த தாழ்மதம் > தாமதம்.

இங்கு மதம் என்பது மதி + அம் = மதம்.. இதேபோல் அமைந்த இன்னொரு சொல்: பதி + அம் =  பதம்.  அம் என்பதுபோலும் விகுதி வர,  சொல்லிறுதியில் நின்ற உயிர்கள் கெடும்.   எ-டு:  அறு + அம் =  அறம் (  அறம் பொருள் இன்பம் ).
இகரம் இறுதி கெடும்; உகரம் இறுதியும் கெடும்  -  அம் அல்லது உயிர்முதலாகிய எந்த விகுதி வரினும்.

தடை தாமதம் முதலியவை கடந்து செல்லற்குரியவை; கடினமானவை.  ஆகவே  இவை கடங்கள்.  வெம்மை மிக்கக் கடின வழிகளையுடைய மலை வேங்கட மலை.   வேகும் > வேம்;    கடு + அம் =  கடம்.   கடமாவது கடினமானது;  கடத்தற்குரியது.   கட + அம் =  கடம்  எனவும் ஆகும்.  முதனிலைச் சொல்லீற்று உகர அகரங்கள் கெடும்,  உயிர் வரின்.

தனக்கு வந்த கடின நிலையே கடம்;  மற்றவனுக்கு வருவது அவனுக்குக் கடம்.  ஆகவே ஒவ்வொருவரும்  தம் கடத்தை நினைந்தே துயர் கொள்வர் அல்லது  தாண்டிச் செல்ல முயல்வர்.

தம் கடம் > சம் கடம் >  சங்கடம்.   ( தகரம்   சகரமாகும் ).




இதுபோலும் த > ச திரிபுகள் முன்னர் விளக்கப்பட்டன:

தனி >  சனி.  ( சனிக் கோள் )
தங்கு > சங்கு   ( ஓட்டினுள் வாழும் உயிரி )
தங்கு >  சங்கு > சங்கம்.

த + தி >  தத்தி > சத்தி >   சக்தி.    தன் > த:  கடைக்குறை.  தி: விகுதி.

இனிச் சங்கட ஹர சதுர்த்தி என்பதில்  ஹர என்பது:

அற > ஹர.

தங்கடம் அறுபடச் செய்யும் பூசை அதாவது சங்கடம் அறச் செய்யும் பூசை.  


கடு + அம் =  கட்டம்  ( கடின நிலை).
கட்டு + அம் = கட்டம்.  குறுக்கு நெடுக்காக கோடுகளால் அமைந்த வரைவு.
நிலை.  டகரம் இரட்டித்தது.

கட + அம் =  கடம் (  கடத்தற்குரிய இடம் அல்லது நிலை ).

கடம்  > கஷ்டம் ( மெருகூட்டல்)
கட்டம் > கஷ்டம் ( மெருகூட்டல் ).

கஷ்டம் என்பதில்  ஷ் என்பது அயல் ஒலி. அதை விலக்க:

கஷ்டம் >  க(ஷ்)டம் > கடம்.  ( சொல் பழைய நிலைக்கு வந்துவிட்டது).

தமிழிலிருந்து அமைந்த வடசொற்கிளவி  கஷ்டம்.
வடவெழுத்து ஒரீஇ  :  ஒருவி;  அதாவது விலக்கி:
பழைய கடம்  என வந்துவிட்டது.

கடு  கட என்ற அடிச்சொற்கள் இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.

பின் தோற்றப் பிழைகள் திருத்தம் பெறும்.



பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி என்ற  பெயர் எவ்வாறு அமைந்தது? இதனை  நாடுவோம்!

 பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும்.  வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து"  என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப்  பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம்.  இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா:  இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.



பைத்தியம் சொல்.

பைத்தியம் என்ற சொல்லை முன்பு விளக்கியதுண்டு.  அதற்கான பழைய இடுகை இங்கில்லை  யாதலின் அதிலடங்கியிருந்த கருத்துகளை நோக்கி இப்போது  மறுசெலவு மேற்கொள்வோம்.

பைந்தமிழ் என்பது  இளமை வாய்ந்த தமிழ் என்று பொருள்படும்.  தமிழ் என்ற சொல்லை எடுத்துவிட்டால் இதில் மீதமிருப்பது பை என்பதே.  பசுமையே பைம்மை.

பசுந்தமிழ் என்பதே பைந்தமிழ்.

பைந்தமிழ் போற்றும் பாகேசுவரி பாலன்  என்ற சொற்றொடரில் இச்சொல் பதிவாகி இருப்பதனைக் காண்க.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெளிந்து ஆய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

என்ற திருவிளையாடற் புராணப் பாடலிலும் பசுந்தமிழ் என்பதைக் காண்க.  பைந்தமிழ்  பசுந்தமிழ் எல்லாம் ஒன்றுதான்.  முதிராமை என்பதே பசுமை.

முதிர்தல் என்பது பல்வகைப்படும்.  அறிவு முதிர்ச்சி,  உடல்முதிர்ச்சி,  என இரண்டைக் குறிப்பிடலாம்.  இவை மனித வளர்ச்சியின்பாற் பட்டவை,

பைத்தியக் காரன் என்பவன் அறிவு வளர்ச்சி பெறாதவன் என்பதே இச்சொல்லமைப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்வது  ஆகும். பைத்தியம் என்றால் என்ன என்பதற்கு மருத்துவ நூல் ஒரு விளக்கம் தரலாம்;  சட்டம் ஒரு விளக்கம் தரலாம்; இன்னுமுள்ள அறிவியல் மற்றும் ஆய்வுகள் இன்னொரு விளக்கம் தரலாம்.   அவை தம்முள் வேறுவேறு கோணங்களில் அதனை அலசலாம்.  அவைகளில் எதுவுமன்று நாம் சொல்வது.  சொல்லில் பெறப்படும் பொருளே நாம் கருதற்குரித்து ஆகும்,

பை  =  பசுமை,  பொருள்:  முதிராமை.
து  =  உரியது, உடையது என்ற பொருள் தரும் இடைச்சொல்.
இயம் என்பது ஒரு விகுதி.  இது இ,  அம் என்ற  இருவிகுதிகள் இணைந்த கூட்டு விகுதி ஆகும்,  இந்த விகுதி இ மற்றும் அ என்ற சுட்டுச்சொற்களின் வளர்ச்சியிலிருந்து போதருவது ஆகும்.

பை + து + இயம் =  பைத்தியம்,   முதிராமை காரணமான ஒரு மனநோய்.

பைத்தியம் என்ற சொல்லின் உள்ளுறைவை அறிவாளிகளும் மக்களும் மறந்துபோய்ப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இன்று நோக்குவார்க்கு அது ஒன்றும் தெற்றெனப் புலப்படப் போவதில்லை.  ஆய்வு செய்தாலே அது புலப்படும்.  முன்னரே முடிவுசெய்துவிட்ட கருத்தினடிப் படையில் அதை அணுகுவோன் அதன் பொருளை அறியப்போவதில்லை.  அது அவனை ஏமாற்றிவிடும். அவன் தொடங்கிய இடத்திற்கே வந்து  கருத்துக் காணாமையில் உழல்பவன்.

நாம் இன்று இச்சொல்லை அமைப்புப் பொருளில் பயன்படுத்தவேண்டியதில்லை.  அதன் வழக்குப் பொருளிலே அதனைப் பயன்படுத்தலாம்.  அமைப்புப் பொருள் அது தமிழ் என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டது,  அறிந்தபின் வழக்கில் என்ன பொருளோ  அதற்கே திரும்பிவிடுக.

பிழைகள் பின் தோன்றக்கூடும். அவை உரியவாறு
திருத்தமுறும். கள்ளப்புகவர்கள் நடமாடுவதால்.