வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பல்சுவைத் துணுக்குகள்


இவை சென்ற ஆண்டில் எழுதப்பட்டவை. இங்கு மறு வெளியீடு காண்கின்றன

Date of composition is given as well.

(ஒரு கதை சொல்லத் தொடங்கிய இணையக் கவி யொருவருக்கு, அவர் சற்று விரைவு குறைந்தபோது  சிவமாலா சொல்லிய குறள்:- )

எல்லாம் அழகென் றெடுத்தகதை செல்லுகமேல்!
உள்ளாரே கேட்கப் பலர்!

18th September 2011, 08:59 PM

நடிகை தேவிகா ஓவியப் பாவை,  நடிகை  காஞ்சனா தீஞ்சுவை என்றவர்க்கு யாம் சொல்லியது :


மழுக்கட்டில் தந்த மயக்கிதுவோ நும்கண்
விழக்கட் டழகியர்தம் வேடு.

மஸ்கட் என்னும் நகரை "மழுக்கட்டு" என்று திரிபு செய்துள்ளேன் .

(மஸ்கட்டில் உள்ள கட்டழகியர் முக்காடிட்டு மறைத்துக் கொள்வதால், அந்தக் குழப்பத்தில், வேறு சிலரைப் பாராட்டுகிறீர்களோ? )
vEdu = veil.

மழுக்கட்டில் = in the city of Muscat.

திரைக்காதல் ஒப்பதோர் தேம்பாயும் தன்மை
உரைத்திட்ட உங்கள்பா ஒண்மை -- அரைத்திட்ட
சந்தனம்போல் வீசும் சலிக்கா எழுத்து நடை
வந்திணைவோர் வாய்போற்று வார்.


14th September 2011, 04:37 PM

துணுக்குக் கதைத்திறன் தோய்த்துவெண் பாவில்
இணக்கி இன்புறுத்து முறையும் --- இனிக்கிறதே
பாணி தனிச்சுவையில் பளிச்சிடவே மேற்சென்றீர்
ஏணிப் படிகளிலே நீர்.

இன்னும் எழுதி இவணுலவு நேயரைப்
பின்னும் மனமகிழச் செய்வீரே -- பன்னும்
கவிதை சிறக்க; கருத்தாழம் காணும்
நவைதீர் பயணம் செல.

10th September 2011, 02:51 AM

வயதாகிவிட்டது, முன்போல் எழுத இயலவில்லை, என் வயது எட்டு தாண்டி ஒன்பது ஆகிவிட்டது என்றார்க்கு இப்படிப் பதில் எழுதினேன் :  


எட்டு ஒன்பது என்பவை என்னவென்று தெரியவில்லை. ஒரு வேளை  40 அல்லது 50 இருக்கலாம் என்பது என் கணிப்பு:  8 x 5 =40,  9x5=45 !!

எட்டகவை வெண்பா புனைகலை எட்டித்தேன்
சொட்டுவபோல் பாக்கள் சொரிந்திடலாம்!-- எட்டுடன்
ஒட்டினால் ஒன்றினைக் கொட்டிக் கவிமழையால்
முட்டும் சுனாமி முனை.

அருஞ்சொற்பொருள்::  எட்டகவை  = எட்டு வயதில் ' எட்டி  = அடைந்து , எட்டுடன்  ஒட்டினால் ஒன்றினை  -  ஒன்ப,து வயதில்.  புனை  கலை  -  புனையும் அல்லது பாட்டுக்கட்டும் கலை. கவி மழை கொட்டி நில முனையில் சுனாமி போல் வந்து கரையை முட்டும் என்பது பொருள்

12th September 2011, 06:01 PM

வருடம் பலமுன் வருடிவழி வெண்பா
நெருடேதும் இன்றி நிகழ -- மருள்தீரத்
தந்தவர்க்கு நன்றி தருகவே பல்சுவையால்
இந்தநாள் முன்போல் இனி.
8th September 2011, 07:23 AM

வருடம் பலமுன் வருடிவழி -=   பல ஆண்டுகளைக் கடந்தபின் வந்து இங்கு  தோன்றிய  ( வெண்பா )

 இது ஒரு காலமாகிவிட்ட  சிற்பியைப்  பற்றியது :  
இவர் வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர்  சிலை முதலியவை அமைத்தவர்.என்று அறிகிறேன்

செயற்கரிய நற்சிலைகள் செய்தார் அவர்க்குச்
செயற்குரிய நன்றி செயல்.


கலைவடிவம் காட்டி நலமே நயந்தார்,
நிலைபெறுக அன்னார் புகழ்.


உற்றார் உறவினர் உற்றார் துயரவரால்
உற்றிலரோ வற்றாப் புகழ்.


இரங்கும் மனமே இறப்பறிந்து நோவற்க
பிறங்கும் உலகில் புகழ்
8th September 2011, 07:34 AM

உரையாடிய கவிக்குப்  பாராட்டு :


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்

28th September 2011, 10:01 PM

கூ ல ம்  -  தானியம் ;   கோதகற்றி = உமி  அகற்றி .

கருத்துகள் இல்லை: