வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

செல்வத்துப் பயனே....


தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய  ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

புறநானூறு 189

இது, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடியது.

இதன் பொருளை  அறிந்துகொள்ள உள்ளோம். ஈதல்  (தருமம்) செய்தல்பற்றிய பாடலென்பது படிக்கும்போதே அறிந்துகொள்ளலாம்,

தெண்கடல் வளாகம் = கடலால் சூழப்பெற்ற இவ்வுலகின்  பல நிலப்பகுதிகள்,

பொதுமை இன்றி =பிறருக்கு உரிமையுடையதல்ல, எமது தனியுரிமையே என்று,

வெண்குடை  நிழற்றிய     = அரசு ஓச்சிய,

ஒருமை யோர்க்கும் =  பேரரசர்களுக்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் = இரவிலும் பகலிலும் உறங்காமல்,

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் = குதிரையைப்
பார்த்துக்கொள்ளும் கல்வியறிவில்லாத ஒருவனுக்கும்,

உண்பது நாழி =  உண்பதற்கு வேண்டியது, ஒரு நாழியே;

  உடுப்பவை இரண்டே = உடுக்க வேண்டியது மேலாடையும் இடுப்புத்  துணியும் ஆகிய இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே = பிற எல்லாமும்
எல்லார்க்கும் சமமே;

செல்வத்துப் பயனே ஈதல் =  சேர்த்தவற்றின் பயன் யாதென்றால், தருமம் செய்வதே;

துய்ப்பேம் எனினே தப்புந பலவே.= எல்லாம் யாமே அனுபவிப்போம் என்றால், இப்படி எண்ணி பிழைபட்டு நினைத்தது நடவாமல்போனவர்கள்,  துயர்வலையில் வீழ்ந்து கழிந்தோர் பலராவர்  என்றபடி.

ஈதல், இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு என்றார் பெருநாவலரும்.



ஒரு நாழி என்பது, 8 உழக்கு ஆகிய முழுமையில் நாலில் ஒரு பகுதி, எனவே இரண்டு உழக்கு அளவு என்பர்.   நால் > நாழி என்று சொல்லமைந்தது என்
று தெளியலாம். தமில் > தமிழ் என்று அமைந்தது என்று கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் கூறியுள்ளதனால், நால் > நாழி என்பது பொருத்தம் என்று தோன்றுகிறது. ல்>ழ் திரிபு.


 நடு நாள்:   ஒரு பகலோன் உதயத்திற்கும் அதற்கடுத்த உதயத்திற்கும்  நடுவானதால், நடு நாள் - நள்ளிரவையும் குறிக்கும்.  யாமம் - ஆழ்ந்த  உறக்கத்தில் உயிர்களைப் பிணிக்கும் நேரம். யாத்தல் -கட்டுதல். யாமம் : உறக்கம் கட்டும் நேரம்.
நடு நாள் யாமம் - நள்ளிரவு யாமம் என்றறிக.இக்காலத்தில் இவ்வழக்கு இல்லை.

"ஒருமையோர்" -   பன்னாடுகளையும் பிடித்து ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசரை "ஒருமையோர்" என்றது இனிய சொல்லாட்சி. Emperors, empire builders.

will continue in the next post


கருத்துகள் இல்லை: