செவ்வாய், 29 மார்ச், 2016

புலவர் பெற்ற அதிகாலைச் செய்தி (புற நானூறு.....).

முடியுடை மூவேந்தர்களில் ஒருவரல்லாத  குறு நில மன்னர்களில் ஒருவன் எவ்வி.  வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் என்னும் புலவர் பாடிய பாடல் இதுவாகும்.  புறப்பொருளில் இது பொதுவியல் துறை. கையறு நிலைத் துறை. அதாவது அவனுக்கு மரணமாகிய துன்பம் நேர்ந்தது எனக் கேட்டு அது பற்றிப் பாடிய துயரப் பாடல்.

எவ்வி பாணர்கள் கூட்டத்துக்குப் பெரிய நண்பன்.  அவர்களின் தலைவன் என்று கொண்டாடத் தக்க புகழுடன் வாழ்ந்தவன். இரும்பாண் ஒக்கல் தலைவன் என்று பாடல் அவனைப் புகழ்கின்றது.  அவனுடைய படை, வியக்கத் தக்க ஆயுதங்கள் பூண்ட, போரில் பகைவனைத் தண்டிக்கத் தகுதியுடைய படை.
பாடல் பாடிய போது,  அவன் மார்பில் போரில் விழுப்புண்கள் பல ஏற்பட்டு வீழ்ந்தான் என்று அதிகாலையில் புலவர் கேள்விப்படுகிறார். அச் செய்தி அவருக்குச் சொல்லொணாத் துயரை விளைத்தது. "இந்தக் குரலில் எனக்குக் கிடைத்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா...."  என்று அவர் மனம் கவல்கின்றது.

யானை நடக்கும்போது அளவிட்டதுபோல கால்களை வைத்து நடக்கின்றது.  இது பாவடி என்று குறிக்கப்பெறுகிறது. பகு அடி ‍  பகுத்து ப் பகுத்து வைப்பது போலும்  காலடி  பாவடி. அத்தகைய யானைகளைப் பரிசிலர்கட்கு (பாணர்களுக்கும் புலவர் பெருமக்கட்கும்) தருகின்ற சீர் சான்ற வேள் ‍இந்த எவ்வி. அவனை எதிர்த்துப் போரிட்ட அகுதை ஏவிய இரும்பு ஆயுதங்கள் பொருந்திய திகிரி பாய்ந்தது என்று சொல்வ‌து பொய்யாய்ப் போகட்டும் என்கிறது பாடல்.

இத் திகிரி வட்டமான ஓர் ஆயுதம்.  சக்கரம் அல்லது ஆழி எனவும் படும்.
பொன் புனை திகிரி என்றதனால்  அந்த வட்டக்     கருவியுடன்  வேறு
இரும்பு ஆயுதமும் பூட்டப்பெற்று விடப்பட்டது என்று அறிகிறோம்.  தமிழர்கள் போரிட்ட ஆயுதங்களின் மாதிரிகள் ஏதும் இதுபோது எங்கும் காட்சிக்குக் கிடைக்கவில்லை. கிட்டினால் அவற்றை எட்டுங்கள்.  பொன் என்பது இரும்பை.  தங்கம் எனப்படும் பொன்னினும் பெரிது இரும்பு. அதானால் அதற்கு இரும் பொன் (பெரும்பொன்) என்ற பெயர் வந்தது.
இதுபின் இரும்பு என்று இறுதி குறுகிற்று என்பது அறிக.   இரு  - ‍ பெரிய‌

 இது புற நானூற்றுப் பாடல் 233.  பாடல் இப்போது:

பொய்யாகியரோ பொய்யாகியரோ
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்தாள்  அகுதைகண் தோன்றிய‌
பொன்புனை திகிரியின் பொய்யாகியரோ
இரும்பாண்  ஒக்கல் தலைவன்  பெரும்பூண்
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என‌
வைகுறு விடியல் இயம்பிய குரலே


திகிரி விடப்பட்டால் சுற்றிக்கொண்டு போய் எதிரியைத் தாக்கும். அதில் வேறு பொன் (இரும்பு) புனையப்பட்டால் அது சுற்றுவதற்கு ஏற்றபடி அமையவேண்டும். சிறு கோவைகளாக எடையைச் சீராக்கிப் பொருத்தினாலே சுற்றும். "திகிரியின் பொய்யாகியரோ" என்றதனால், இந்தப் பொய் போல, எவ்வியின் ,மறைவுச் செய்தியும்   பொய்யே ஆகுக  என்பார் புலவர். " திகிரியின்" என்பதற்கு இது பொருளாகும்.


திகிரி பற்றிய கூற்று பொய்யானது போல எவ்வியின் மறைவும் பொய்யாகுக‌

 An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss   

cannot edit. will do later.

  

கருத்துகள் இல்லை: