சனி, 16 ஆகஸ்ட், 2025

குபேரன் என்ற சொல்.

 பலவாறு பிரித்துப் பொருள்சொல்லும் வசதி படைத்த சொல்தான் குபேரன் என்பது.  இதுபோல பல்பிரிப்பு வசதியுள்ள சொற்கள் பல உள்ளன நம் தமிழில்.

குபேரன் என்ற சொல்லில் முதலிற் பகவாய் இருப்பது  குவிதல் என்னும் வினையின் திரிபாகிய குபி என்னும் பகுதி.  குவி> குபி.  இப்பகவு   குபி என்பதன் பொருள் குவித்து வைத்தல்தான்.  குபேரன் என்ற சொல்லின் பழைய வடிவம் குவேரன் என்பது  குவி+ ஏர் + அன் என்று பிரிந்துவரக் கூடியது என்பது ஆய்வில் தெளிவாகிறது.  ஏர்த்தொழிலில் மிகுதியாய் விளைவித்து  செல்வர்களானவர்களைக் குறித்த சொல்லே இது. நாளடைவில் பிறதொழில்களால் பொருள் விளைத்துச் செல்வர்களாய் ஆனோரையும் அது குறித்தது.  இப்படிப் பொருள் விளைந்தமையினால் ஏர் என்ற சொல் பொருள் தெளிவினை இழந்துவிட்டது  என்ற கருத்து,  வலிவினை உடையதென்று கருதக்கூடும்  ஆனால் பின்வருவனவும் கவனிக்கவும்.

ஏர் என்ற சொல்லுக்குப் பல பொருள் உள்ளன.  ஏர் என்பது ஓர் உவம உருபாகவும் உள்ளது. எர்ப்பு என்பது ஈர்ப்பு என்ற சொல்லுடன் தொடர்பு உடையதாய் உள்ளது.

ஏர்பு என்ற சொல் எழுச்சி என்றும் பொருள்படும். வலனேர்பு திரிதரு என்ற தொடரைச் சிந்திக்கலாம்.  ஏர்தல் என்பதில் ஏர் என்பதே பகுதி.   வேளாண்மையால் வருஞ்செல்வம்  ஏர்ச்சீர் எனப்படும்.

ஏர்தல் என்பது எழுச்சி என்று பொருள்தருவதால்,  ஏர் என்று வரும் ஏரன் என்ற சொல்லுக்கு பொருளெழுச்சி உடையவன் என்ற பொருளே கூறவேண்டும்.

குவித்தல் என்பது பெருக்கம் உணர்த்துவதால் குபேரன் என்ற சொல் தமிழ்ச்சொல்தான். வகர பகரப் போலி தமிழிலும் உள்ளதே.

மேற்கொண்டு  ஆய்வு செய்யாமல் இதைத் தமிழென்று முடித்துவிடலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

பராக்கிரமம் என்றது

 இந்தச் சொல்லை இன்று அறிந்துகொள்வோம். 

இது வீரத்தையும் வலிமையையும் குறிக்கும் சொல். வேறு எந்தச் சொற்களால் இதனை விளக்கினாலும் இதன் இறுதியில் நாம்  இந்தப் பொருண்மையைத்தான்  அடைகிறோம். 

மக்கள் பராக்கிரமம் என்பதை மிகப் பெரியது அல்லது பரியது என்று நினைத்தனர்.  பருமைக்கும் பெருமைக்கும் இடையிலுள்ள நுண்பொருளை அவர்கள் கருத்தில் கொண்டனர் என்று சொல்வதற்கில்லை. நடைமுறையில் பெருத்தலும் பருத்தலும் ஒன்றாகவே பலரால் எண்ணப்பட்டது. 

இந்தச் சொல் பரு அல்லது பருத்தல் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்தது. உருவில் பரியது இறுதியில் மதிப்பீட்டிலும் தன்மையும் பெரியதாய் எண்ணப்படுவது உலக மக்களிடையே காணப்படும் இயல்பாகும். இந்தச் சொல்லமைப்பில் நாம் இதை முன்மை வாய்ந்த கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது.  பருமையானது பெருமைக்கு ஓர் உவமையாகக் கருதப்படுதலிலும் பெரிய தவறு ஒன்றுமில்லை..

இச்சொல்லுக்குரிய வினை பருத்தல் என்பதே.  

பரு+ ஆக்கு + இரு + அம்+ அம் என்ற சொற்கள் உள் நின்று பாராக்கிரமம் என்ற சொல் விளைந்தது.

பரியதாய் ஆக்கப்பட்டு இருந்து அல்லது நிலைபெற்று  அமைவதான தன்மை உடையது என்பது சொல்லமைப்புப் பொருளாகிறது.  அது யாது என்ற கேள்விக்கு வீரமென்ற தன்மை அல்லது வலிமை என்பது பதிலாகிறது.  இவ்வாறு அமைந்ததே இச்சொல்.

வீரமானது பரவலாகப் போற்றப்படுவது என்று பொருள் கொண்டு  பர என்ற வினையிலிருந்து வந்ததாகக் கொண்டாலும் அதனால் பொருளுக்கு அது எதிராக அமைந்துவிடாது. படைவீரரிடம் பரவலாகக் காணப்படும் தன்மை என்றிதற்குப் பொருள் கூறலாமென்றும் உணர்க.

வீரவுணர்ச்சி வீரனிடம் எழுந்து  அல்லது ஆக்கப்பட்டு,  நிலைத்துத் தங்கி ( இரு என்ற சொல்)  அம் என்பதால் நன்ஆகு அமைந்து  ஆவது என்று வரையறவு செய்யலும் ஆகும்.

எளிய சொற்களைக் கொண்டு தமிழில் உண்டான சொல் இது.  உடன் எழுந்த தொழுகை மொழிக்கும் உரியதாகிறது.. இவை எல்லாம் இந்திய மொழிகளே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

ஒரு தட்டச்சுப்பிழை திருத்தப்பட்டது. (பொருண்மை)

பகிர்வுரிமை உடையது.


வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

சீடன் என்ற சொல் எங்கிருந்து வந்தது.

 சீடன் என்ற சொல்லைப் பற்றி இன்று சிந்திப்போம்.

சிந்தித்தல் என்றாலே ஒரு குடத்திலுள்ள நீரை சிறிது சிறிதாகச் சிந்துவது போல மூளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணருதல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும் வெளிக்கொணரக் கொஞ்சம் நேரமும் ஆகலாம். ஆர அமர எண்ணிப்பார்த்தல்  என்றும் இதனைக் குறிக்கலாம்.  இப்படிச் செய்வது சீடனுக்கு நல்லது.   அவன் கற்றுக்கொள்ளவும் உணர்ந்து போற்றவும் வாய்ப்புகள் அதிகம் கிட்டும்.

சீடன் சிறிது சிறிதாகக் குருகுல வாசம் செய்யவைத்து ஆசானால் வளர்க்கப் பட்டு முழுமைப் படுத்தப்படுகிறவன்.  ஆனால்  சீடன் குரு சென்றுவிட்ட பிற்காலத்தில் சீடனும் ஒரு குருவாகித் தனக்குச் சீடர்களை வைத்துக்கொண்டு புகழும் பெறக்கூடும். அவன் இன்னாருடைய சீடன் என்று சொல்லப்பட்டாலும், குருவின் மறைவுக்குப் பின் அவருக்கு இணையாகக் கூட எண்ணப்படுபவன். குரு இருந்த இடத்தில் அமர்வதால் அவருக்கு இணையாகிவிடுகிறான் சீடன்.  குரு செய்தவை அனைத்தையும் சீடன் செய்வான்.

ஆகவே சீடன் என்றால் அவன் ஈடன் என்பவனே.  ஈடு> ஈடன் ( ஈடு+ அன்), >  சீடன். அமணர் என்ற சொல் சமணர் என்று வருவது போல் ஈடன் என்ற சொல் சீடன் என்று திரியும். அகர வரிசையில் உள்ள பல சொற்கள் சகர வரிசையினவாகத் திரிந்து வழங்கு இயல்பு.  ஆடி  என்பது சாடி என்று திரிந்து பின் ஜாடி என்றும் வந்தது காண்க. ஆலை> சாலை என்பதும் கருதத் தக்கது.  சோறு ஆகிவிட்டது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  அதாவது முடிந்து விட்டது என்ற பொருளில் இது வருகிறது. ஆனால் ஆகு> சாகு என்பது பின்னர் உயிர் உடலில் இல்லை என்பதைக் குறிக்க வருகிறது.   பொருள் சற்றே திரிந்துவிட்டது.  முடிதற் கருத்து இன்னும் அங்கு இருக்கின்றது. 

ஈடன் என்ற சொல்லுக்கு வலியோன், திடமானவன் என்று பொருள். இதுவே  பின் சீடன் என்ற திரிந்து குருவிற்கு ஈடனாவன் என்ற பொருளில் வழங்கி, பின்னர் சீடன் சிஷ்யன் என்று திரிந்து வழங்குகிறது.  இது சீஷன் > சிஷ்யன் என்று குறுகியிருத்தல் இயல்பே  ஆகும்.  நாளை குருவுக்கு ஈடாகுபவன் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.