திங்கள், 15 நவம்பர், 2021

பராமரிப்பு

 இன்று பராமரிப்பு என்ற சொல்லைப் பார்ப்போம்.  தமிழுலகப் பயன்பாட்டில் உள்ள இச்சொல்லின் பொருள் "௷ய்ன்டெனன்ஸ்" (maintenance) என்பதற்கு ஒப்பாகும்.

கெடுதலுற்ற ஒரு பொருளை ஒரு தரம் மட்டுமோ அல்லது ஒரு குறுகிய கால அளவிலோ பழுதுபார்த்தல் அல்லது சரிசெய்தல் என்பதை "ர்ப்பேர்" என்பர் ஆங்கிலத்தில்.  நீடித்த போக்கில் ஒன்றன் பயன்பாடு தேய்ந்து கெட்டுவிடாமல் போற்றிக்கொள்வது  பராமரிப்பு ஆகும்.  அதாவது பரவலான முறையில் அதனைக் கவனித்துப் பயன்படுமாறு வைத்துக்கொள்வது.

பராமரிப்பு  என்பதில் பர என்ற அடிச்சொல் வருகிறது.  இது பரவலாக - அதாவது நீடித்த நிலையில் செய்யப்படுவதைக் குறிக்கிறது.

ஆம் என்பது ஆகும் என்பது செயலாக்கத்தைக் குறிக்கவருகிறது.  ஆகும் என்பது ஆம் எனல் கு தொகுந்தது.

இதுபோலும் காரியத்தை அருகில்  சென்றுதான் நடாத்த முடியுமாதலால் அருகில் என்பதைக் குறிக்கும்  "அரு" என்பதும் அங்கு உள்ளது.

இக்காலத்தில் தொலைவிலிருந்துகூட ஒன்றைச் சிறப்புறுத்துகிறார்கள்.  ( updates,  remote configurations etc).  இந்தச்சொல் உண்டான காலத்தில் இவைபோலும் வசதிகள் இருந்ததில்லை. இச்சொல்லை உணர்ந்துகொள்ள நீங்கள் பண்டை மன்பதைக்குள் நுழைதல் வேண்டும்.  மன்பதை - குமுகாயம் - சமுதாயம்.

இ என்பது வெகுகாலமாகவே இயற்றுதற் குறிப்பாகவும் வினையாக்க விகுதியாகவும் வந்துள்ளது.

அசைஇ,  நிலைஇ , தழீஇ  என்று பண்டை வழங்கிய வினையாக்க விகுதி இது..

செய்வித்தல் என்ற பிறவினையிலும் வி என்பது பிறவினையாக்க விகுதியாகக் கூறப்படினும், உண்மையில் வ் என்பது வகர உடம்படுமெய்.  இ என்பதே வினையாக்கம் செய்கின்றது.  இலக்கணநூல்கள் இவ்வாறு பிரித்து உணர்த்துவதில்லை.  இலக்கணமென்பது மொழிநூலன்று, சொல்நூலுமன்று என்பதறிக..  நீங்கள் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்பிக்கும் நூலே இலக்கணம்.

இ எனபது ஒரு சுட்டுக் குறுஞ்சொல். இயற்றுதல் என்ற சொல்லும் இதிலிருந்து தோன்றியதே  ஆகும்.

ஆகவே   அரு+ இ என்று இணைந்து அருகில் நிகழ்த்து என்று பொருள்தரும் சொல்நெசவு இதுவாகும்,  அருஇ > அரி > அரித்தல்.  அருகில் போய்ப் பிடித்து இழுத்துச் சேர்த்தல் " அரித்தல்"  என்பதும் காண்க. " மிதக்கும் விதைகளை அரித்து எடு" என்ற வாக்கியம் உணர்க.

எல்லாம் இணைக்க,

பர + ஆம் + அரு + இ = பராமரி  ஆகின்றது.

மேலனவாய விளக்கங்களை மற்றுமொரு முறை வாசித்துக்கொள்ளலாம்.

இவ்வாறே பராமரிப்பு,  பராமரித்தல் என்பவை உண்டாயின.

பர + ஆம் > பராம்,  பர என்பதில் ஈற்று அகரம் கெட்டது. பர்+ஆம் என்று இணைந்து பராம் என்று பொலிந்தது.

அரு + இ எனபதில் அரு என்ற முதலின் உகரம் கெட்டது.  அர் இ > அரி என்று விளைந்தது.

பராம் அரி > பராமரி இயல்புச் சேர்க்கை. ம் அ > ம.

பரா மரிப்பு என்று பிரித்தால் பரவலாகச் செத்துப்போவது என்று பிசகான பொருள் கிட்டும்.  அது தவறு.

இது அயற்சொல் அன்று.  மூலச்சொற்களை அல்லது அடிச்சொற்களை மட்டும் கொண்டு உருவாக்கிய வினைச்சொல் இது.  பரவலான காலவட்டத்தில் அருகில் இருந்து இயற்றுவது என்று அழகாக இதன் பொருள் போதருதல் காணலாம்.

பர ஆ மரு(வு) இ என்று காண்டலும் பொருந்துவதால் இது இருபிறப்பி ஆகும். பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.


அறிக மகிழ்க.


மெய்ப்பு  பின.



ஞாயிறு, 14 நவம்பர், 2021

காப்பியில் சீனிபோல் கலப்பு இனம்

 கசக்கும்  குளம்பியில் உட்கலந்த சீனி

இசைந்த தெதோவொன்று  சாதி  ----  மசக்கையால்

மண்விரும்பும் கர்ப்பிணிபோல்  மங்கலுறல்  ஆகாதே

கண்தருமோர் காட்சியே கொள்.


அரும்பொருள்:  குளம்பி - காபி என்னும் பானம். குளம்பி - காப்பி( மொழிபெயர்ப்புச் சொல் )

  சீனி  ---சர்க்கரை.  இசைந்தது   -  பொருந்தி நிற்பது.

சாதி  -   முன்னோர் தொழிலடிப்படைப்   பிரிவுகள்.  

எதோ ஒன்று -  தீர்மானிக்க முடியாதது .  மசக்கை -  

கர்ப்பிணிகட்கு  வரும் நிலை.  கர்ப்பிணி - பிள்ளைத்

தாய்ச்சி.  மங்கல் -  அறிவுகுறைதல்.  

கண்தருமோர் காட்சி - கண்ணால் கண்டவைகயே  

நம்புதல்.  


இந்திய தேசத்தில் ஏற்பட்ட  போர்களில்,  உள்ள 

மக்களில் பலர் கற்பழிப்பு,  கைது, கடத்தல் 

எனப் பல காரணங்களால்  இனங்கள் 

கலந்துவிட்டனர் என்பதும்,  இப்போதுள்ள 

சாதிகளிற் பலவும் கலப்புகள் என்பதுமே உண்மை. 

 கருப்பு நிறம் வெகுவாகக் கலந்திருப்பதால்

கறுப்பினமாகிவிட்டதே  காணக்கிடக்கின்றது.   

வெளியார் கலப்பு என்பது காப்பியில் சீனிபோல  

ஏற்பட்டதுதான் .   இப்போதுள்ள   சாதிகள் 

பெயரளவில் உள்ளவையே ஆகும்.   சேர சோழ 

பாண்டியரின்   வழித்தோன்றல்களையே  

( வாரிசு ) கண்டுபிடிக்க முடியவில்லை.


ஒவ்வொரு போரின் பின்னும் இலட்சக்கணக்கில் 

கலப்புகள் பிறந்தனர்.  பண்டைக்காலத்தில் 

கருக்கலைப்பு வசதிகளும் மருந்துகளும் இல்லை. 

இதனால் சாதிகளும் பல்கிவிட்டன.  சங்க காலத்தில்

 9  சாதிகள் இருந்திருக்கக் கூடும்.


ஒரு ஓர் வடிவங்கள் கவிதையில் ஒன்றுக்கு இன்னொன்று

மாற்றீடாக வரலாம்.  இது இலக்கணம்.




சனி, 13 நவம்பர், 2021

ஆராதித்தல் வினைச்சொல்

தோற்றுவாய்:  ஆய்வு நலம்  

ஆராதித்தல் எனபது பூசை செய்தல் என்று பொருள்படுகிறது. உபசரித்தல் என்றும் இன்னொரு பொருள் உள்ளது.   ஆயினும் இதன் சொல்லமைபுப் பொருள் சற்று வேறுபட்டது.  மணம் என்ற சொல் வாசனை என்றுகூடப் பொருள்கொள்ளத்  தக்கதாய் இருந்தாலும், அது மண்ணுதல் ( நீரால் தூய்மைசெய்துகொள்ளுதல் ) என்ற வினையினின்று புறப்பட்ட சொல்லே.  வானவூர்தி ஓரிடத்தில் வானிலேறி இன்னொரு நாட்டில் போய் இறங்கிவிடுவதுபோல, சொற்களும் சில புறப்பட்ட இடம் வேறாகவும் இறுதி அடைவு வேறாகவும் இருத்தல் தெளிவு.  சில சொற்களுக்கு இருபதுக்கு மேற்பட்ட பொருள்கள்கூட இருக்கின்றன. நீங்கள் ஓய்வாக இருக்கையில் அவை எவ்வாறு இத்தனை பொருள்வேறுபாடுகளை அடைந்தன என்ற ஆய்வைச் செய்யலாம். இதனைச் செய்தால், தமிழுலகு உங்கட்குக் கடப்பாடு உடைத்தாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


வினைச்சொற்கள்

ஆராதித்தல் என்பதில் உள்ள வினைச்சொற்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

ஆர்தல் -   நிறைதல்.  ஆர என்ற எச்சவினை.

ஆதல்   -  ஆகுதல் என்ற வினை.   

தி என்னும் இடைநிலை. அல்லது வினையாக்க விகுதி எனினுமாம்.

~ தல் என்பது தொழிற்பெயர் விகுதி.

எனவே,  ஆர +  ஆதி   =  ஆராதி   ஆகின்றது.  "நிறைவாகு" என்ற பொருள்.

இது இரு வினைச்சொற்களை இணைத்து ஆக்கப்பட்ட கூட்டுவினை ஆகும். ஒரே சொல்லிலிருந்து இன்னொரு புதுவினை ஏற்பட்டதுமுண்டு.

அதனை இன்னோர் இடுகையில் சொல்வோம்.

நிறைவாக்கும் ஒரு பூசையைத் தொடங்கி  அதைத் தெய்வத்துக்குச் சாத்துதல் என்பதே இதன் பொருள் ஆகும்.

ஆமோதித்தல் என்பதில் ஆம் + ஓது + இ என, இறுதி இகரம் மட்டுமே வினையாக்க விகுதி ஆயிற்று. மூழ்கு, பழகு என்பவற்றில் கு வினையாக்க விகுதி.

நிறைவுக்கருத்து உள்ளபடியால் உபசரித்தல் அல்லது ஓம்புதல் என்பதும் மற்றொரு பொருளாயிற்று.

ஆர்தல் என்பது கலந்த மற்ற வினைகளும் உள்ளன. அவற்றைப் பின்பு காண்போம்.  பணிவும் கவனிப்பும் அலங்காரங்களும் நிகழ்வுடன் ஒன்றித்திருத்தலும் எனப்  பலசாயல்கள் இவ்வினையில் உள்ளன.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.