வெள்ளி, 22 அக்டோபர், 2021

போஷாக்கு என்ற அயற்பதம்

ஓர் அயற் பயன்பாட்டுக்காக ஒரு சொல்லைப் படைத்தளிக்கும்படி ஒரு தமிழ்ப் புலவனைக் கேட்பதாக வைத்துக்கொள்வோம்.  இது ஒரு வகையில் தமிழ் இலக்கண விதிகளைக் கவனிக்கவேண்டாத ஒரு கட்டற்ற கடமை என்றே சொல்லவேண்டும். இதற்குக் காரணம், பயன்பாடு வேறு மொழியில் என்னும்போது குடாப்பிலிருந்து வெளிவந்த கோழிபோல எப்படி வேண்டுமானாலும் செயல்படும் வசதி ஏற்பட்டுவிடும்.  தமிழென்பதோ பல இலக்கண விதிகள் உள்ள மொழி.  இதில் பலவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டுப்பாடு உள்ளது.  மற்ற மொழிக்கு எனில், அம்மொழிக்கு இலக்கணங்கள் இருந்தால் அவற்றை ஒரு வேளை கவனத்தில் கொள்ளவேண்டி வரலாம்.

போஷாக்கு என்ற சொல்லின் வினை,  போஷித்தல் என்பதாகும்.  ஆகவே போஷி என்ற சொல் எவ்வாறு வந்ததென்பதை முதலில் அறியவேண்டும். போஷித்தல் என்பது ஊட்டமளித்தல் என்ற பொருளது ஆகும்.

ஊட்டச்சத்துக்கள் என்று கருதத்தக்கவை எல்லாம் உடலுக்கு வெளியில்தாம் உள்ளன.  மனிதன் உடலுக்கு ஊட்டமளிக்க,  இவ் வெளியில் கிட்டும் உணவுகளைத்தாம் உட்கொள்ள வேண்டும். அதாவது உடலுக்குள் போகும்படிச் செய்தல் வேண்டும்.

போ > போ இ  > போ இத்தல் .

இது புது > புதுப்பி > புதிப்பித்தல் என்பது போன்றது.  ~பி  என்ற பிறவினை ஆக்க விகுதியானது, உண்மையில்  புது +ப் + இ  என்பதே ஆகும்;  அணிவித்தல் என்பதில் வி என்பது உண்மையில் வ் + இ  என்பதே.  ப் வ் என்ற இடைநிலைகள் உடம்படுத்துவன.  வசதியின்பொருட்டு  ~வி என்றும் ~பி என்றும் விளக்கப்படும்.

அசைஇ ,  காணி(~த்தல்)    என்று வருவனவற்றில் இ என்பதும் வேறன்று. 

இது பின்பு  போயி > போஷி > போஷித்தல்  ஆனது.  ( உடலினுள் போமாறு செய்தல் ).   அதாவது உண்ணுதல் மூலம் ஊட்டச்சத்தை அளித்தல்.

போஷக்கு என்ற தொழிற்பெயரில்,  போஷி + கு >  போஷாக்கு என்று சொல் அமைந்தது.  கு என்பதும் ஒரு சொல்லாக்க விகுதியே. எ-டு:  குறு > குறுக்கு. இதற்கு ஆக்கு என்ற தமிழ்ச்சொல் பின்புல உதவியாயிருந்தது.

இவ்வாறு போஷாக்கு என்ற சொல் அமைந்தது காணலாம்.

இனி, புசித்தல் :  புசி > புசி ஆக்கு > பூசாக்கு > போசாக்கு என்று வந்தது எனினும் அவ்வாறும் அமைதல் கூடுமாதலால், இஃது ஓர் இருபிறப்பி என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




வியாழன், 21 அக்டோபர், 2021

22102021 covid singapore

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 21]

 

அக்டோபர் 20, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,718 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 337 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 67 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.7%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.0%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 19 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 84%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 20 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,862 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


go.gov.sg/moh201021


🔹 தற்போது நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள், சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும் நிலைமையைச் சீர்ப்படுத்தவும், நவம்பர் 21 வரை நீட்டிப்பு


🔹 பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும்  நபர்களுக்கும் ஆதரவு நீட்டிப்பு


go.gov.sg/mohpr201021

சூளை என்பது மற்றும் கயிலை மலை

 கள் என்பது கருப்பு என்று பொருள்தரும் அடிச்சொல்.  இச்சொல்லை நம் முன் தமிழ் ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளனர்.  அவர்கள் ஆய்வின்படி,  காளி என்ற சொல்லும் கருப்பம்மை என்ற கருத்தறிவிக்கும் சொல்லாகும்.  கள் என்பது அடியானால் அது காள் என்று முதலெழுத்து நீண்டு, இகர விகுதி பெற்றுப் பின்னர்தான் காளி என்றாகும்.  முதலெழுத்தை இலக்கணத்தில் முதனிலை என்பார்கள். ( a technical term in grammar ). 

கள் என்ற அடிச்சொல்,  காள் என்று திரிந்தது போலவே, சுள் என்பது சூள் என்று திரிந்துள்ளது.   சுள் என்ற அடிச்சொல்லின் பொருள்  "வெம்மை" என்பதாகும்.

சுள் >  சுள்ளை.

இது மட்கலம் சுடும் சூளையைக் குறித்தது.  சுள் + ஐ என்று ஐவிகுதி பெற்றுள்ளது.  இது வெள் > வெள்ளை என்பதுபோலும் விகுதிப்பேறுதான்.

சுள் >  சூளை.  

இது மேற்குறித்தவாறே  நீண்டது, விகுதியும் பெற்றது.  சூளை என்பதும் சூடு மிகுத்து செங்கல் முதலியன சுடும் இடமே ஆகும்.  இதைக் காளவாய் என்றும் கூறுவதுண்டு.

காளவாய் என்ற சொல்லில் "காள்" என்ற ஒரு சொல்லும் வாய் என்ற இன்னொரு சொல்லும் கூடியுள்ளன. " வாய்" என்பது இடம் என்று பொருள்தரும் சொல்.  காள்+வாய் = காளவாய் என்பதில்,  அகரம் இடைநிலையாய் வந்துள்ளது.  இதை "அவாய்" என்று பிரிக்கவேண்டாம்.  நெருப்பு எரிந்து புகை எழும்பிக் கருப்பாவதால்,  கருப்பு என்ற பொருள்தரும் சொல்லுடன் வாய் என்பது இணைந்து இச்சொல் அமைந்தது பொருத்தமாகும்.  ( A furnace where bricks are made by heat.)

படுசூளை என்பது வட்டமான சூளை.   மூடியது போன்ற சூளை மூடுசூளை எனப்படும் என்று அகரவரிசைகள் தெரிவிக்கின்றன.  இப்போது செங்கல் செய்யும் தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  இந்தச் சொற்கள் இப்போது வழக்கத்தில் இருக்கக்கூடும்.  அறிந்தோர் பின்னூட்டம் செய்க.  மால் என்பது திருமால் என்னும் கடவுளைக் குறிப்பதுடன்,  காளவாயையும் குறிக்கிறது. மால் என்பது கருவலான நிறம்.  சூட்டினால் இந்நிறம் ஏற்படுவதால், மால் என்பது காளவாயையும் குறித்தது.  இது  (மால்) இப்போது இப்பொருளில் எங்கும் வழங்குவதில்லை என்று தெரிகிறது. 

சுள் - சுடு என்றும்  சூள் -  சூடு என்று திரியும் தொடர்புடையவை.  சுடுதல் என்ற வினை, முதனிலை நீண்டு சூடு ஆகும் என்றும் அறிக.

கிணறுபோல் வெட்டப்பட்ட காளவாய்  "கைக்காளவாய்"  என்பது.  

கை> கய் > கயம்.  கயமென்பது நிலக்குழியில் நீர் நிற்கும் பகுதியாகும். அதாவது குளம் ஆகும்.    கை என்ற சொல்லுக்கு உள்ள பல பொருளில் நிலக்குழிவு என்பது ஒரு பொருள்.  இப்பொருளைக்   "கைக்காளவாய்" என்பதன் மூலம் மீட்டெடுக்க இச்சொல் வசதி செய்கிறது.  இனிக் "கைலாசம்" என்ற சொல்லையும் காண்க.

கைலாசம் https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_26.html

ஒரு மலையிலிருந்து கீழ் நோக்கின்,  அதன் கை  -   அதாவது,   பக்கங்கள் கீழ்நோக்கி இறங்குவன ஆகும்.    இதுவும் ஒரு நிலக்குழிவே  ஆகும்.  கைலாசம் என்பது உச்சியிலிருந்து நோக்கக் கீழ்ப்பகுதியில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  மலையிறக்கம் என்பது.  ஆகவே கை என்பது குழிவு குறிக்கும் என்று தெரிகிறது.  மேலும் அது கயம் என்பதனுடன் பொருந்துகிறது.

குழி என்பது வட்டமாகவோ நாற்கோணமாகவோ இருக்கலாம்.  இஃது உண்மையில் தரையில் உள்ள குழிவுதான். நம் கைகளும் தோளிலிருந்து கீழிறங்குவனவே யாகும். கயம் அல்லது குளம், நிலமட்டம் ஒரு புறத்து இறங்கி இன்னொரு புறத்து மேலேறி வரும்.  நடுவிற் குழிவு.  கையுடன் ஒப்பிட , கைகளில் எலும்பு சதை நரம்புகள் முதலிய உள்ளன.  கயத்தில் நீர் இருக்கும். 

இதனால்  கை > கய் > கயம் என்பது உறுதியாகிறது.

எனினும், கைலை அல்லது கைலாசம் என்பது மலையின் இறக்கத்தில் உள்ள பகுதி என்பது முன்னர் இருந்த எழுத்துரைகளில் காணப்பட்டது.  அது இப்போது கிட்டவில்லை. கைலாசம் என்பது மலையுச்சியைக் குறிக்கவில்லை. தாழ்வான பகுதிகளில் மக்கள் செல்லத்தகும் நிலப்பகுதிகளையே குறித்தது.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்

குறிப்பு:

[ ஒரு கலைச்சொல்லையோ அறிவியற் சொல்லையோ பயன்படுத்தினால் அதை எப்படி அவற்றைக் கற்றோர் பயன்படுத்தினரோ அப்படியே பயன்படுத்தவேண்டும்.  வேறு பொருளில் அதைப் பயன்பாடு செய்வது தவறே ஆகும். காரணம் பொருளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் தவிர்க்கப்படவேண்டும். எடுத்துக்காட்டாக, mutatis mutandis, prima facie, fee simple முதலான சட்டத்துறைச் சொற்கள்.]