வியாழன், 29 ஜூலை, 2021

முகம் மூஞ்சி தமிழ்தான்

 ஒரு காலத்தில் தமிழில் முகம் என்ற சொல்லைப் பற்றிச் சந்தேகம் அல்லது  ஐயுறவு சிலரிடை இருக்கவே செய்தது. அவர்கள் அச்சொல்லைத் தமிழன்று என்று எந்த ஆய்வும் ஆதாரமும் இன்றிக் கூறினர்.

முகம் என்பதைத் தமிழ் என்று அறிய வெகு எளிதான வழி::

மு  - இது முன்னிருப்பதைக் குறிக்கும்.

கு - என்பது தமிழ் தோன்றிய காலத்திலிருந்து  (  அது எக்காலமோ ) [முன் பக்கத்தில்] சேர்ந்திருப்பது எனல் குறித்தது.  அது (முகம்)  தலையில் அமைந்துள்ள பகுதி.

அம் - இந்த விகுதி பெரும்பாலும் அமைந்தருத்தலைக் குறிக்கும்.

அம் >  அமை > அமைதல் > அமைத்தல்.  அம் என்பது இவ்வாறு (பல சொற்களின்) வினைச்சொல்லின்/ வினைச்சொற்களின்  முதனிலை  அசையாக வுள்ளது.

முகுஅம் >  முகம்.

பண்டைப் புலவருள் சிலரும் மூஞ்சி என்பது தமிழ் ஆனால் முகம் என்பது தமிழன்று என்றனர்.  இவர்கள் ஏன் "முகுஅம்" என்று சிந்திக்கவில்லை?  செய்யுள் பல கற்றனரே அன்றிச் சிந்திக்கவில்லை என்றுதான் நாம் முடிவு செய்யவேண்டும்.  அவர்கள் புலவர் என்பதனால் நாம் இதைக் கூறாமல் விடமுடியாது.

முகம் என்பது பிடிக்கவில்லை என்றால்  முன்+ கு+ அம்  என்று சொல்லைப் புனைந்து,  முன்கம்    என்பதையே பயன்படுத்தியிருக்கலாம்.  அது முங்கம் அல்லது முற்கம் என்று திரிந்திருக்கும்.   அதுவும் ஏற்புடையதாகவே இருந்திருக்கும். முங்கம் இடைக்குறைந்து முகமாகும் வாய்ப்பு அதிகம்.

முகு + இன் + சி >  மூ +ன்  + சி >  மூஞ்சி என்பதையும் அவர்கள் அறியவில்லை. மனிதனுக்குக் காதுகள் தலையின் பக்கலின் உள்ளன.

மூக்கு, கண்கள், வாய் எல்லாம்  முன்னே உள்ளன. இவை மூன்று  உறுப்புகள். அதனாலும் மூ + இன் + சி >  மூஞ்சி   (மூன்று உறுப்புகளை உடைய தலையின் பகுதி) என்பது தெளிவாகவே உள்ளது. [ மூன்று + சேர்ந்தது >   மூன்சே>  மூஞ்சே  மூஞ்சி  எனலும் பொருள்தரும் விளக்கமே ]  முகு என்பது மூ என்று திரியும்.   மூன்று என்பதும் மூ  எனலாகும்.  இருவழிகளிலும் மூஞ்சி என்பதில் எந்த ஐயப்பாடும் எழவில்லை.  காரணம் கூறாமல் ஐயப்பாடுகளை எழுப்பிக்கொண்டிருப்பவன் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  காரண காரணிகளுடன் இதைக் குறிப்பிட்டு எதிர்த்தவர்களை யாம் அறிந்ததில்லை. இருந்தால் பின்னூட்டமிட்டுத் தெரிவிக்கவும்.

முகு என்பது மூ எனலாகும்.  இதுபோன்ற திரிபுகள்:  பகுதி >  பாதி. இதில் பகு என்பது பா என்றானது.   மிகுதி >  மீதி.  இதில் மிகு என்பது  மீ என்றானது.  தொகு > தோ > தோப்பு.    நகுதல் : ஒளிசெய்தல். பாம்புத்தோல் சித்திர வேலைகளுடன் கூடி ஒளியுடைய விலங்கு.  நகுஅம் > நாகம்.  இதில் நகு  என்பது நா என்று வந்தது.  இனி,  நகர்வதனாலும் நாகமென்பர்.  நகர் > நாக > நாக+ அம் > நாகம். இது நகர் என்பதில் அர் கெட்டு, நக என்பது நாக என்று நீண்டு, அம் விகுதி பெற்று அமைந்ததென்பர் அறிஞர் சிலர்.  என்றிவை கூறினும் தமிழ் ஆகும்.

இதுகாறும் கூறியவற்றால் முகம் தமிழே.  சமத்கிருதமென்பது மந்திரங்கள் ஓதி வீட்டுமுன் வந்து  பூசைகள் செய்வாரிடைத் தோன்றிய இந்திய உள்நாட்டு மொழியே அன்றி  ஆரியர் என்று யாரும் வரவல்லை.  வெளிநாட்டினர்  லடாக்கில் வந்து எல்லையில்லாமையால் இடம்பிடித்தனர் பலர்.  அவர்கள் யாரும்   ஆரியர் எனலாகாது.  வெளிநாட்டினர் வருவது எல்லா நாட்டிலும் நடந்த ஒன்றாகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அகரவரிசை கொண்டுவந்தனரோ?  அவர்கள் கொணர்ந்தவை எங்கே?  

ஒரு அமைப்புறவும் இல்லாத சொற்களை நம்மவை என்று பெருமைப்படுவதாயின் நமக்கு தலைக்கிறுக்குப் பிடித்திருக்கவேண்டும். உலகில் கோடிக்கணக்கான மொழிகளில் சொற்கள் உள்ளன.  நாம் நமவென்று கூறுபவை இங்குக் கணக்கெடுத்தால் ஓர் ஆயிரம் இருக்கலாம். கோடியில் ஆயிரம் எத்தனை விழுக்காடு?  நமக்கு ஒன்றும் பைத்தியம் இல்லை.  வெகு நிதானமாகவே உள்ளோம், காண்பீர்.  தொடர்பு இருப்பவற்றைக் கூறாதொழிதலும் தவறு;  தொடர்பு இலாதனவை தொடர்பு கூறுதலும் தவறு. இதை நாம் அறிவோம்.

பிறர் கூறியன மேற்கோளானால் நாம் அவற்றை மேற்கோளாகக் காட்டுவோம்.   எம்மவை என மாட்டோம். யாமே சிந்தித்த கருத்துக்களையே எழுதுகிறோம்..  பிறர் கருத்துக்களாயின் அவர்கள் நமக்கு முந்திய அறிஞர் பெருமக்களாக இருக்கவேண்டும். தொல்காப்பியர், சங்கப் புலவர்கள், தலைசிறந்த தமிழறிஞர்கள் எனக்காண்க. அல்லாரை நாம் உள்கொணர்வதில்லை. நீங்களும் இவற்றை அறிவீர்.  நன்றி உரித்தாகுக.  யாம் எழுதத் தொடங்கியே 30 ஆண்டுகள் ஓடிவிட்டன.  1958 முதல் தமிழ் ஈடுபாடு உடையோரும் நம்முடன் உள்ளனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்


புதன், 28 ஜூலை, 2021

கங்கணம் - கயிற்றுக்கட்டு அல்லது காப்பு

 எடுத்துச் சொல்லவேண்டுமென்று பல சொற்கள் தலைப்பசைக்குள் போட்டி யிட்டுக் கொண்டிருப்பன வாகையால், இவற்றுள் எதை எழுதுவ தென்பது ஒரு போராட்டமே. இதில் இன்று நாமெடுத்துக் கொள்ள எண்ணியது  கங்கணம் என்ற சொல்லாகும்.  ஆனால் அது முன்னரே  வரைதரவு செய்யப்பட்டுள்ளது.  அது இங்கிருக்கிறது.  அதையும் படித்து மகிழுங்கள்:

கருங்கண்ணும் கடுங்கண்ணும்

கங்கணம் https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_3.html

கருங்கண் என்பதுபோலவே, சிலருடைய கண்கள் " கடுமை" யான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று அஞ்சுவோருண்டு.  இந்த கடுங்கண்ணை மாற்றுவதற்குக் காவற்கயிறு கட்டிக்கொள்வதுமுண்டு.  அதுவே காப்பு.   உண்மையில் கருங்கண் என்றாலும் கடுங்கண் என்றாலும்  ருகரம் மற்றும் டுகரம் இடைக்குறைந்தால் கங்கணம் என்றே ஆகும்.  ஆகவே இவற்றுள் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை என்பதை அறிவீர்.

ரகர டகரத் திரிபு விதி

மேலும் ரகர டகரத் திரிபு விதியுமுண்டு.  ஒன்று மற்றொன்றாகத் திரிய வல்லது. இதற்கு இன்னொன்றை எடுத்துக்காட்டாக முன்வைக்கலாம்.  மடி> மரி என்பது காண்க.  மடிதலும் மரித்தலும் ஒருபொருளன.  மடிதல் என்பது உயிருடைப்பொருள் இறத்தலுக்கும்  மடித்தல் என்பது உயிரற்ற பொருள், காலக்கழிவினால் கெட்டுப்போவதற்கும்  பயன்பாடு பெறும்.  ஆதலின் இவை வழக்கில் வந்த வேறுபாடுகள்.  சொல்லமைப்பில் பெரிய வேறுபாடுகள் ஒன்றுமில்லை. கடமென்ற பதம்  கட என்ற வினையடித் தோன்றிய சொல்லெனினும்,  கடு என்ற அடியுடன் தொடர்புள்ளதே.

கடங்கணம்:

இனிக் கடங்கணம்  என்பது ஒரு கடமை பூண்டு செயல்படுதலையும் குறிக்கும்.  கடம் என்பது கடமை.   கணம் -  கண்ணுதல் என்பது கருதுதல்.  கண்+ அம். (கண்+ நுதல் என்பது வேறு.)   கடங்கணம் என்பது இடைக்குறைந்தாலும் கங்கணம் என்றே வரும். இது: கடமை மறவேன் என்று கழறிக் கையிற் கயிறேற்றிக் கொள்ளுதல் குறிக்கும்.  சிலேடையாகக் கவிபாட வல்ல பெரும்புலவர் கையில் இச்சொல் கிட்டினால் இதைப் பயன்படுத்தி  அவர் நல்ல செய்யுளை யாத்துத் தந்திடுவார் என்பதில் ஐயமில்லை.  சீவகசிந்தாமணி ஆசிரியர் இத்தகு பெரும்புலமை உடையவர்.  அவர் போன்றோர் இச்சொல்லைக் கூறியவாறு கையாளும் திறலர்.

அடிச்சொற் பல்பொருள்:

கண் பல்பொருளொருசொல். கண்: 1. விழி. 2  இடம் ( உருபு).  "ஒண்டொடி கண்ணே உள" என்ற தொடர் காண்க.  3.  கண்ணுதல் என்ற வினைச்சொல். கண் என்பதே வினைப்பகுதி. கருதுதல் என்பதே பொருள். இச்சொல் எவ்வாறு பொருந்துகிறதென்பதே மேலே விளக்கப்பட்டது.

கை, கால் ஆகிய உறுப்புகட்கு ஓரம் உள்ளது.  எடுத்துக்காட்டு: கணுக்கை, இது ஓரம் .  இந்த ஓரத்திற்கு இன்னொரு சொல்:  கங்கு என்பது.  கங்கில் அணியப்படுதால் கங்கணம்  ( கங்கு+ அண்+ அம் ) என்று வரும்.  அணிதற்கு அடிச்சொல் அண்.  அணவி நிற்பது எனினுமாகும்.  

இவை எல்லாம் தமிழ் அடிச்சொற்களே.  கள் என்பது மூலச்சொல். அதை இங்கு விளக்கவில்லை.  அதனை ஆய்ந்தக்கால், இந்த அமைப்புப்பன்மை என்பது ஒரு தோற்றமே என்று புலப்படுமாதலின்,  இங்கு கூறப்பட்டவையுள் எதனை மேற்கொள்ளினும் எம் துருவலில் போந்த விளக்கங்களில் பேதம் காணப்படவில்லை என்று தெளிக. ஆதலின் எதைக் கொள்ளினும் ஏற்புடைத்தாம். 

எவ்வாறாயினும் இச்சொல் மூன்று அல்லது அதனின் மிக்க பிறப்புடைய சொல் என்பதை அறிந்து மகிழ்க.

அறிந்து இன்புறுவீர்.

மெய்ப்பு பின்னர். 

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  29072021 0732


கவசம் அணிந்து

மனித இடைவெளித் தொலைவு கடைப்பிடிக்கவும்.

நாமும் வாழ்க, பிறரும் வாழ்க.

செவ்வாய், 27 ஜூலை, 2021

அங்கீகாரம்

 அங்கீகாரம் என்ற சொல்லுக்கு முன்பு யாம் கருத்துவெளியிட்டதும் உண்டு; எழுதியதும் உண்டு.  இங்குத் தேடியதில்,  அதைக் காணவில்லை.  அஃது அழிந்துபோயிருக்கலாம்;  அல்லது வேறு எங்காவது அதை யாம் எழுதியிருந்திருக்கலாம்.  அதைத் தேடி நேரத்தை வீண்செய்யாமல், இப்போது ஆய்வு விவரங்களைச் சுருக்கமாக எழுதிவிடலாமே என்று எண்ணுகிறோம்.  இதை மறந்ததில்லை.  காரணம், இச்சொல் எளிமையான உட்பகவுகளைக் கொண்ட ஒன்று என்பதுதான்.

இங்கு என்பது நாம் இருக்கும் இடம்.  அங்கீகாரம் இங்கு இல்லை.  இதன் காரணி யாதென்றால்,  நாமே ஒன்றை அங்கீகரித்துக்கொள்வது ஒரு குறிக்கத்தக்க நிகழ்வு ஆகாது.

அங்கீகாரம் என்பது அங்கிருந்துதான் வரவேண்டும்.   அங்கு என்பது ஓர் அரசுச் செயலகமாகவோ நம் அப்பன் அம்மாவாகவோ அல்லது ஏதேனும் ஓர் இணக்கம் தரத்தக்க அதிகாரம் உள்ளவராகவோ  இருக்கவேண்டும்.  அங்கீகரிக்க வேண்டும் விழைவு அல்லது வேண்டுதல்மட்டுமே இங்கிருந்து செல்வதாகும்.

நம் வேண்டுதல் அங்குச் சென்று  ,  ( அங்கு )  ஆமென்ற இசைவை இங்கு ஈர்த்து வருதல்.  ஈர்த்து  என்றால் "இழுத்து". 

அங்கு  +  ஈர் + கு + ஆர் +ஆம்.

கு  என்பது சேர்விடம் குறிக்கும் சொல்.  எ-டு:  மதுரைக்கு.

ஆர்தல் -  இங்கு செயலைக் குறிக்கிறது.  வந்து பொருந்தும் செயல்.

அம்   விகுதி.

எல்லாம் புணர்த்த, அங்கீர்காரம்  ஆகி,  ர் இடைக்குறைந்து  அங்கீகாரமாகும்.

பேச்சுமொழியில் தள்ளுபடி என்பது " ஈர்ததல்" [ " ஈ(ர்)காரம் " ] என்பதற்கு எதிர்ச்சொல் ஆகிவிடுகிறது  எனக்காண்க.

இது அழகிய சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.