சனி, 26 ஜனவரி, 2019

அடிச்சொற்கள் மூலங்கள் வேறுபாடு.

சென்ற இடுகையில் பேதி,  பேதா என்ற சொற்களைப் பற்றி உரையாடினோம்.

இவற்றின் அடிச்சொல் பெய்தல் ( உடலிலிருந்து வெளியேற்றுதல்,  அல்லது வானிலிருந்து பொழிதல் ) எனற்பாலது உணர்விக்கப்பட்டது.

இதன் தொடர்பில் வேறு சில சொற்களையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

பேதம் (  அதாவது  வேறுபாடு ) குறிக்கும் சொல்லும் உள்ளது.  இதுவும் பே என்ற சொல்லினின்றுதான் வருகிறது என்றாலும்  இவற்றின் மூலச் சொற்கள் வேறுபட்டவை என்பதை இப்போது புரிந்துகொள்வோம்.

பெய்தல் (  அடிச்சொல் .)

இது பெய் > பே  என்று திரிந்து பேதி, பேதா முதலிய சொற்களைத் தோற்றுவித்தது.

பெய் > பே > பேதி:  உடலினின்றும் வெளியேற்றுகை.

பெய் > பே >  பேதா :   கண்டவுடன் கழிச்சலாகிய அச்சத்தைத் தருபவன்.

இவற்றுள் இரண்டாவது குறித்த சொல் போலும் இன்னொரு சொல் "வாய்தா" என்பதாகும்.

வருவாய் தா என்பதன் சுருக்கச் சொல்லே வாய்தா.  விளைச்சலிலிருந்து அரசனுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படும்.  அதைத் தருவதுதான் வாய்தா. தா என்பது ஓரெழுத்து ஒருசொல் ஆதலின் அதில் சுருக்கம் ஒன்றுமில்லை. வருவாய் என்பதில் வரு என்பது வெட்டுண்டு, வாய் என்று நின்று தாவுடன் புணர்ந்து சொல்லமைந்தது காண்க.

பேதா என்பதில் தாவென்பது தருவோன் என்று உயர்திணைப் பொருளையும் வாய்தா என்பதில் தரப்படுவது என்று அஃறிணைப் பொருளையும் குறித்ததனால் சொல்லில் இல்லாத பொருட்களைத் தழுவிய தாவென்னும் ஈற்றுச்சொல் இந்தச் சொல்லமைப்பில் இயற்சொல்லாகாது.  திரிசொல்லே.  தா என்பது ஏவல் வினையாகிக் கொடு என்பதற் கீடாய் வருமிடத்து அது இயற்சொல் ஆகும்.  இத் திரிசொற்களின் ஒரு பாதி அடிச்சொல் பெய் என்பதன் திரிபாதலின் இயற்சொல்லன்று என்பதற்கு அதுவும் ஒரு கூடுதற்  காரணமும் ஆகும்.  முடிபு இவை திரிசொற்கள் என்பதேயாகும்.

தமிழிற் திரிசொற்கள் பலவாதலின் திரிசொற்களெல்லாம் தமிழன்று   என்ற வாதம் மடமை ஆகும்.

ஆனால் பேதம் என்பதன் அடிச்சொல் வேறு.  அது பெயர்தல் என்பதன் அடிப் பிறந்ததாகும்.   பெயர் என்பது பே என்று திரியும்.   பெயர் என்பது பேர்  ( எத்தனை பேர்?  உன் பேர் என்ன? ) என்பதாய் மாற்றம் கொள்ளுதல்  பேச்சு வழக்காதலின் இப்போது:

பெய் >  பே;
பெயர் > பே;    என

இருவாறு வருதல் அறிந்து கொள்க.

அடுத்த பேபே என்ற அச்சக்குறிப்புக் கிளவியும் அடிச்சொல்லாகிப் பிற சொற்களைப் பிறப்பிக்கும்.  இப்படி அமைந்தது பே> பேய் என்ற என்ற சொல்.

பேபே என்பது மழுப்பல் கருத்திலும் வரும்:  " உனக்கும் பேபே, ங்கொப்பனுக்கும்  பேபே "  என்ற சிற்றூர்த் தொடர் காண்க.


அறிந்து மகிழ்வீர்.

பிழைகள் பின் திருத்தம்பெறும்.


கழிச்சலைத் தந்த பேதா.

தமிழ் நாட்டில் சிற்றூரில் வாழும் மக்கள்  பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சி நடுங்கினோர்தாம். சங்க இலக்கியங்களில் எந்தக் குழுவினரும் எங்கேயும் போராட்டங்கள் செய்ததனைக் குறிக்கும் பாடல் எவையும் யாம் படித்ததாக நினைவில் இல்லை.  இருந்தனவெனின் அவற்றைப் பின்னூட்டம் செய்து உதவவும்.  இல்லை என்றே நினைக்கின்றோம்.

கணவன் கள்வனல்லன் என்பதை மெய்ப்பிக்க மதுரைக்கு எழுந்த கண்ணகி ஒரு தனிப் போராளியே யன்றி  அவளுக்குப் பின் ஒரு பெரிய படை திரண்டு மன்னனை எதிர்த்தல் போன்ற செய்திகளை  யாமும் கேள்விப்படவில்லை.  அக்காலத் தமிழகத்தில் போராட்டங்கள் மிகக் குறைவு அல்லது இல என்றுதான் முடிக்கவேண்டும்.

போராட்டம் மறியல் கறுப்புக்கொடி காட்டுதல் எழுச்சிப் பேரணி எல்லாம் இற்றைத் தமிழில் ஏற்பட்டுள்ள தொடர்கள்.

தமிழர்கள் பெரும்பாலும் அச்சவுணர்ச்சி கூடுதலாக உள்ளவர்கள். சாதிச் சண்டைகளை வைத்து அவர்களில் எத்தரப்பினரும் வீறு உடையோர் என்று  கூறுதற்கில்லை.  இத்தகு அச்சவுணர்ச்சி உடையோர்க்குப் பயிற்சி அளித்துப் படைநடத்தி வெற்றிகள் பல பெற்ற இராச இராச சோழன் போன்றவர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர்கள்.  ஒரு சிறந்த படைத்தளபதியின் கடமை திறமை என்பன வெல்லாம் கோழைகளை வீரர்களாக்கிப் படைநடத்துவதுதான். இப்படித் திறன்பல உள்ள மன்னர்கள் தமிழருள் ஏராளமாக இருந்துள்ளனர் என்பதைப் புறம்,  சிலம்பு முதலியவை மிக்க  நன்றாக எடுத்துக்காட்டுகின்றன.

உடல்நலத்துறையினர் ஊசிபோட வந்துவிட்டால் ஓடி ஒளிந்துகொள்வோர் இன்னும் நாட்டில் உள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு போலிஸ்கரன் அல்லது காவல்துறைஞன் ஊருக்குள் வந்துவிட்டால் ஓடி ஓளிந்துகொள்வது இவர்கள் இயல்பு. கொஞ்ச காலத்துக்கு முன் காவல்துறைஞனுக்குப் பேதா தாணாக்காரன் என்ற பெயர்களெல்லாம் இருந்தன.  இன்று கோவிலில் நடப்பது பேதாமார் உபயம்,  நேற்று தாணாக்காரன் வந்தான் என்பன போலும் உரையாடல்கள் அந்தக் காலத்தில் மிகுதி.

அவன் வந்தவுடன் சிலருக்குக் கழிச்சல் வந்துவிடும்.  அல்லது சிறுநீரை அடக்கிக்கொள்ள முடியாமல் போய்விடும்.  அப்படிப் பட்ட அவனுக்குத்தான் பேதா என்பது பெயர்.

பெய் + தா >  பெய்தா > பேதா.  (  பெய்தலை அல்லது பேதியைத் தருபவன் )

பெய் என்பதிலிருந்தே பேதி என்ற சொல்லும் அமைந்தது.  பெய்  தி >  பேதி.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  பேதியாவது கழிச்சல்.

செய்தி என்பது சேதி என்று திரிந்தன்ன மாற்றமே  பெய்தி எனற்பாலது பேதி என்று திரிந்தமையும் என்று உணர்க.

தட்டச்சுப்பிழைகள் காணின் பின் திருத்தம் பெறும்.




வெள்ளி, 25 ஜனவரி, 2019

நாளைத் தமிழ் மணம்

நித்தலும்  வளரும் கருத்துகளை
நிறுத்தம் இலவாய் எழுதிடுவேன்
மெத்தவும் மகிழ்வு தருமிதனை
உத்தமம் செய்பொழு தின்றிலதே;

நேற்றும் தருணம் வாய்த்திலது
நினைப்பு மட்டும் உறுத்தியது;
காற்று வாங்கும் படிநேர்ந்த
கரிசில் பயணம்  பொருத்தமுற.

இன்றும் ஓய்ந்த வாறிருந்து
நாளைக் கருத்துகள் தந்திடுவேன்;
பொன்றாப் புகழ்சேர் தமிழ்மலரும்
பூத்துப் பொலிந்து மணம்தருமே.