செவ்வாய், 6 நவம்பர், 2018

வில் என்னும் அடிச்சொல்.

ஒன்றிலிருந்து இன்னொன்று அகன்று செல்வதையே "விலகு" என்னும் தமிழ்ச்சொல் குறிக்கிறது.

இதில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  இதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்த்தி அதைச் சொல்லித்தர வேண்டும்.  அதாவது வாய்ப்பாடமாகச் சொல்லிக்கொடுப்போனே வாய்த்தி.  அது பின் தன் யகர ஒற்றினை இழந்து வாத்தி ஆகி, பணிவு கருதி வாத்தியார் ஆயிற்று.   உப அத்தியாயி என்ற சொல் உபாத்தியாய என்றானது வேறு. குழப்படி பண்ணாமல் கு என்ற விகுதியை அறிவோம்.

விலகு என்பதில் வில்+ அ + கு என்று மூன்று துண்டுகள் உள்ளன.  கு என்பது சேர்விடம் குறிக்கும்.   கோலாலம்பூருக்கு,  அமெரிக்காவிற்கு என்று நாம் போமிடம் குறிப்பது.   வேற்றுமை உருபு ஆனாலும் அங்குமட்டும்தான் வருமென்று தடையேதும் இல்லை.  ஆகையினால் சொல்லாக்கத்திலும் பயன்பட்டு அது மொழியை வளர்த்துள்ளது.

பழ -   பழகு
உரு  -  உருகு
பெரு - பெருகு.
இள -  இளகு

என்பவை போதும்.

இடைநிலையாக நிற்பது   அ என்ற சுட்டுச்சொல் ஆகும்.  ஒரே எழுத்து,   அதற்குப் பொருளிருக்குமானால் அது ஒரு சொல்லுமாகும்.  இங்கு இடையுற்று  முழுச்சொல்லை ஆக்குவதனால் சொல்லிடைநிலை.   இந்த அகரம் சுட்டுச்சொல் ஆதலால் இதற்கு அங்கு என்று பொருள். இடத்தைக் காட்டுகிறது.

ஓர் இடக்குறியினின்று அங்கு சென்று சேர்வது  "  விலகு"  என்ற சொல்லால்
குறிக்கப்பெறுகிறது. அங்கு என்பது எவ்விடத்துப் போகுமோ அவ்விடம், அது ஒரு விரற்கடையாகவும் இருக்கலாம்.  நூற்றுக்கணக்கான கல் தொலைவாகவுமிருக்கக்கூடும்.

விலகு என்பது வேறிடம் மாறிச்செல்வது ஆகும்.

இதை அறிந்துகொள்ளுங்கள்.  தொடர்வோம்.


பார்க்கவும்:
29.6.18 விற்றலும் வாங்குதலும்.:https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_67.html

சாப்பாட்டு ராமர்களைக் காணவில்லை

ஓருசீமை நல்லிலந்தை  ஒற்றடியாய்த் தின்னத்
திருவமை ஐவராலும் ஆமோ ---- அருந்திறலீர்!
தன்னொரு வன்மை இழந்ததோ இவ்வுலகம்
முன்னிரு உண்ணுலகே மேல்.

புரிந்துகொள்ள:

சீமை இலந்தை:   ஆப்பிள் பழம்.
ஒற்றடியாய் -  சளைக்காமல்
திருவமை -  உயர்வு பொருந்திய
ஐவர் - ஐந்து நபர்கள்.
ஆமோ :  ஆகாதோ - முடியவில்லையோ
அருந்திறலீர் -  அரிய வலிமை உடையவர்களே!
தன்னொரு வன்மை - தனது ஒன்றான வலிமையை;
முன்னிரு =  முன்பு இருந்த; அல்லது முன்னைப் பெரிய;
உண்ணுலகே -  சாப்பாடுராமர்கள் உலகமே
மேல் -  உயர்ந்தது போலும் என்றபடி.

நபர் :  இது ந(ண்)பர் என்பதன் இடைக்குறை,
உருது அன்று,

யாப்பியற் குறிப்புகள்

ஒரே அடியினுள்:

தன்னொரு வன்மை:  எதுகைத் தொடர்.
இழந்ததோ இவ்வுலகம் : மோனைத் தொடர்
முன்னிரு உண்ணுலகே: எதுகைத் தொடர்.

தீபாவளி முடிந்ததா? பொங்கல் வந்துவிடும்........

கவலை வேண்டாமே..!


ஒருதிகதி  ஓடியிற்ற தீபா- வளி
ஓராண்டில் இனிவருமே தீர்வ-- திலை;
மறுபடியும் மறுபடியும் பலகா- ரமே.
மாந்தமிலை மகிழ்வுகொளீர் மாலை -- வரை;
இருவரிங்கு விருந்தோம்பி மகிழ்வு-- கொள
இனிப்பொங்கல் தனிவசதி மாறாப்--- புகழ்!
ஒருபடியாய் நாளனைத்தும் ஒடுங்கி-- நிலை
உற்றுவிடின் வாழ்விதுவும் வெற்றுக்--குழை

அரும்பொருள்:
திகதி:  தேதி, நாள்.
ஓடியிற்ற :  சென்றுமுடிந்த.
கொளீர் : கொள்ளீர் = கொள்வீர்
கொள -  கொள்வதற்கு
மாறாப் புகழ் -  வயிறார உண்டு மகிழ்ந்து
வாழ்த்துவதால் வரும் கீர்த்தி.
ஒருபடியாய் =  ஒரே மாதிரியாய்  வேறுபாடுகள்
இல்லாமல்;
ஒடுங்கி -  விரிவு இழந்து;
நிலை உற்று =  மாறாமல் அமைந்துவிட்டால்
வெற்றுக்குழை = பயனற்ற துளைத்தண்டு.
அணிகலன் இல்லாத கூந்தல் என்பதுமாம்..

உரை:

தீபாவளி ஒரே நாளில் ஓடிவிட்டதே என்று கவலைப்
படவேண்டாம், அது மீண்டும் வந்துவிடும் - அதுவும்
ஒரே ஆண்டிற்குள்ளாகவே.  அப்போதும் அடுத்தடுத்து
பல இனிப்புணவுகளை உண்டபடியே நீங்கள் மகிழலாம்.
காலையிலிருந்து மாலை வரும்வரை அப்போதும்
மகிழுறுவீர்கள். ஓராண்டா காத்திருக்கவேண்டும் என்று
அயர்வு கொள்ளாதீர். அதற்குமுன்பே பொங்கல்
வந்துகொண்டே இருக்கிறது! குடும்பத்தில் கணவன் மனைவி
இருவருமே விருந்தோம்புதலில் ஈடுபட்டு எல்லையில்லாப்
புகழை அடைந்துவிடலாம். அதுவும் வசதியான பண்டிகைதான்.
இவ்வாறு இல்லாதபடி ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாய்
மாற்றமொன்று மில்லாமல் இருந்தால் அதுவோ அணிகலன்கள்
அணிந்து அழகுகாட்டாத பெண்ணின் கூந்தல் போலும்
கிளர்ச்சிதராத வெறுமை வாழ்க்கை ஆகிவிடுமே. அத்தகை
உணர்வு அற்ற வாழ்க்கையோ நமக்கு வேண்டாம்,,



யாப்பியற் குறிப்புகள்

ஒவ்வோர் அடியிலும் இறுதிச்சீர் நிரையசையில்
முடியுமாறு தொடுக்கப்பட்டது.  பாடிமகிழ்க.

ஆக்கியோன் தனிக்குறிப்பு:

காலை ஐந்திலிருந்து வேலையாய்ப் போய்விட்டபடியால்.
வாயில்வந்த கவிதையை எழுதிவிட்டு ஓய்வு கொள்வேன்.

தன்-திருத்தப் பிழைகள் முளைப்பின் திருத்தம் பின்.