திங்கள், 27 ஆகஸ்ட், 2018

மாந்தன் மனிதன் மானிடன் மந்தி

மனிதன், மாந்தன் என்ற சொற்களை நாம் முன் விளக்கி எழுதியதுண்டு.

மன் என்ற அடிச்சொல், பல் பொருளுடையது. அவற்றுள் மன்னன் என்பதுமொன்று.

முன்னு (முன்னுதல், சிந்தித்தல் ) என்ற சொல்லும் மன் என்று திரியுமென்பர்.

மன் -  நிலைபெற்றது என்ற பொருளும் இவ்வடிச்சொல்லுக்கு உள்ளது,

மாந்தன் அல்லது மனிதன்  ஒரு நிலைபெற்ற உயிர் ஆவான்,  மேலும் அவன் சிந்திக்கும் ஆற்றலும் உள்ளவன்.  எனவே மன் என்ற அடிச்சொல் பொருத்தமானது ஆகும்.

மன் > மான்.

மன்+ இது + அன் =  மனிதன்.

மன்> மான்+த் + அன் =  மாந்தன்.

இது என்பதும் த் என்பதும் இடைநிலையாக வருவதில் மாறுபாடு காண்பதற்கில்லை,

இது > இத்  > த்  என்று எப்படியும் தோன்றும்.

வெவ்வேறு சொல்லமைப்பாளர்கள் வெவ்வேறு இடைநிலைகளைக் கையாண்டுள்ளனர்.

மன் > மன் + தி >  மந்தி  ( மனிதன் போன்ற குரங்கு.)

மான் + இடு + அன் =  மானிடன்.  ( நிலைபெற்ற இடத்தினன்).

இது,  இடு என்பன இஷ், உஷ் என்று பிறமொழிகளில் பலவாறு உருக்கொள்ளும்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

நவீனம் அடிப்படைப் பொருள்.

நவீனம் என்ற சொல்   தமிழிலும் வழங்கும் சொல். இச்சொல் சிதறிப் பரந்து மேலை நாடுகளிலும் வழங்கும் சொல்லென்பதை அறிந்திருப்பீர்கள்.

தமிழில் புது என்ற சொல் தோன்றுதற் கருத்தில் அமைந்தது ஆகும். அடி வினை பூத்தல் என்பதே.  எது பூத்ததோ அது புதியது.   பூ > புது.. நெடில் குறைந்து சொல் தோன்றியுள்ளது.

பூ(த்தல்) >  புது ( து விகுதி).           பெரு> பெரிது என்பதுபோல்.
ஆனால் சில சொற்களில்போல் நெடில் இங்கு குறிலாகிவிட்டது.

நவ்வுதல் என்றால் ஆசையுடன் எதிர்பார்த்திருத்தல்.  இதனடி ந ( நல்ல) என்பதனுடன் சொல்லியல் தொடர்பும் உடையது ஆகும்.

ஒன்று புதியதாயின் அதைப் பலரும் விரும்பி எதிர்பார்த்திருப்பர். புதுப்பெண்ணை (  மணமகளை )  எல்லோரும் பார்க்க விரும்புவது போல.

நவ்வு + ஈனு + அம் =  நவீனம்.
வகர ஒற்று கெட்டது - இடைக்குறை.
ஈனுதல் -  உண்டாக்குதல்.
அம் விகுதி.

எடுத்துக்காட்டு:

நவீன சாரங்கதாரா.   

ஆசையுடன் எதிர்பார்த்திருந்த புதியதாகிய (  நாடகம் ).

அந்தக் காலத்தில் புதியவை அத்துணை தோன்றவில்லை. அவற்றை எதிர்பார்த்தமைக்கு  இதுவுமொரு காரணம்.

பழையது  பழுது என்பதனுடன் தொடர்புடைய சொல். 
புதுமை -  நவீனம்.  பழுதற்றது என்பதுமாம்.

நவ்வுதலை ஈனும் ( புதியது ) :  நவு+ ஈனு + அம்.

வடமொழி என்ற மரத்தடி மொழியானது எழுத்தின்றி  ஒருகாலத்தில் ஒருங்கு வழங்கிய மொழி.  அப்போது தமிழுக்கு எழுத்திருந்தது.  எழுத்தில் அமைத்தால் மொழி பலுக்குதல் தவறாகிவிடும் என்னும் அச்சத்தில்  அஃது வடமொழிக்கு அமைக்கப்படவில்லை.  மற்றபடி வீட்டுச்சொற்கள் மரத்தடிக்கும் வந்து நிறைவிக்கும். இதனால்தான் 1/3 பங்கு சொற்கள் திராவிடச் சொற்களாய் உள்ளன.

எழுத்தில் உள்ள வடமொழியை இன்றும் பலரால் சரியாக உச்சரிக்க முடியாது. அதற்குப் பயிற்சி தேவையாதலின்.


சனி, 25 ஆகஸ்ட், 2018

தமையந்தியும் ஆதிமந்தியும்.

இன்று நாம் இரு சொற்களை அறிந்தின்புறுவோம்.

ஒன்று :  தமையந்தி;   மற்றொன்று   "ஆதிமந்தி "  என்பது.

நாம் இரண்டாவது சொல்லை எடுத்துக்கொள்வோம்.   இது சோழன் கரிகால் வளவனின் மகள் பெயர்.   சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெயராகும்.

இச்சொல்லின் இறுதியில் இருப்பது தி என்னும் பெண்பால் விகுதியாகும். இதைக் கண்டுபிடித்துவிட்டால் முன் நிற்பது ஆதிமன் என்ற  சொல் என்பது எளிதில் புரிந்துவிடும்.

ஆதி:  இது உங்களுக்குத் தெரிந்த சொல். ஆக்க காலம் என்று பொருள்தருவது. ஒன்று ஆக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட காலமே  ஆதி ஆகும்,   இங்கு தி என்பது தொழிற்பெயர் விகுதி. ஆ என்பது ஆதல் ஆக்கம் என்பன குறிக்கும் சொல்.

அடுத்திருப்பது:  மன்.  இது மன்னன் என்பதன் அடிச்சொல். மன் என்பது பால் அறியப்படாத சொல். அதற்கு " அரசு  "  என்று பொருள்கொள்க. அஃது அரசனையும் குறிக்கும்:  " சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே" என்ற கையறு நிலைத்துறைப் பாடலை நினைவு கூர்ந்துகொள்க.

எனவே ஆதி மன் தி எனில் ஆதி அரசி என்று பொருள் பெறப்படுவது காண்க.
புணர்ச்சியில் ஆதிமந்தி ஆயிற்று.

இனித் தமையந்தி என்ற சொல். இதில் தி என்பது பெண்பால் விகுதியே. இதை அறிய, முன் நிற்பது தம் ஐயந்(தி) என்ற தொடராகும்.   தம் என்பது தன் என்பதன் பன்மை.

தம் =  தமது;
ஐய =  வியக்கத்தக்க;
அம் =  அழகிய;
தி =  பெண்ணாள்,

இதற்குத் தமிழ்மொழியின் வாயிலாகப்  பொருளுரைக்க.

தமையன் என்ற சொல் தம் ஐயன் என்று தெரிய நிற்கும்.

என் ஐமுன் நில்லன்மிர் தெவ்விர் என்பது காண்க.

அறிந்து இன்புறுக.