திங்கள், 6 ஆகஸ்ட், 2018

சவம் தொண்டை நுண்மாண் நுழைபுலம்


கட்புலம் கொண்டு நம் எதிரில் இருப்பதைக் கண்டுகொள்கின்றோம். நுழைபுலம் கொண்டு ஐம்புலங்களாலும் அறிந்துகொள்ள வியலாதவற்றிலும் உட்புகுந்து இது எப்பொருள், எத்தன்மைத்து, எப்பயனது என்று கண்டு அவ்வாறு கண்டதனை இருளிலிருந்து ஒளிப்பக்கத்துக்குக் கொணர்கின்றோம், பேரறிவாளர்கள் இப்படிச் செய்வதை நுண்மாண் நுழைபுலம் என்று சொல்வர்.

ஒரு மாந்தப் பிறவி தனக்குத் தானே இத்தகு நுண் மாண்  நுழைபுலம் இருப்பதாகக் கூறிக்கொள்ளலாகாது. ஆயினும் எப்பொருளையும் நுழைபுலம் கொண்டு அலசுதல் கடமையாகும். காரணம் எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்டல் அறிவன்றோ? நுழைபுலத்துடன் நுண்மாண் என்ற அடைமொழியையும் இணைத்துக்கொள்ளுதல் தற்புகழ்ச்சியாகி விடும். அதைப் பிறர் கூறலாம்.

சவத்தல் என்பதொரு வினைச்சொல்.  ஒரு பொருள் சவத்துப் போய்விட்டதென்றால் அதுதன் திடத்தன்மையை இழந்துவிட்டதென்று பொருள். இறந்துவிட்ட உடலொன்று தொடக்கத்தில் சவத்துப்போன நிலையிலே இருக்கும். அதற்கான நேரம் கடந்தபின் தான் அது விறைத்துப் போகும். இதனை அறிவியலார் ரிகோர் மோர்ட்டிஸ்  அல்லது மார்ட்டிஸ் என்பர். இது ஆங்கிலத்தில் பயன்பெறும் இலத்தீன் தொடர். ஆகவே இறந்தோனைக் குறிக்கும் சவம் என்ற சொல் உடல் விறைக்கும் வரை உள்ள நிலையைச் சிறப்பாகவும் பின்னர் அவனடையும் உடல் நிலையைப் பொதுவாகவும் குறிக்கின்றது, இப்போதுள்ள மொழிநிலையில் இது பொதுப்பொருளிலே வழங்குகிறது.  முன்னர் அது சிறப்புப் பொருளில் வழங்கியதென்பது அதன் வினைச்சொல்லினோடு தொடர்பு  படுத்திக் காண்கையில் நன்`கு புலப்படுகின்றது.  பல கிளவிகள் இதுபோது தம் சிறப்புப் பொருளை இழந்துவிட்டன.

சவ என்ற வினையோ சா என்ற இன்னொரு வினையுடன் சொற்பிறப்பில் தொடர்பு உடையது ஆகும். அதனால் சா > சாவு > சாவம் > சவம் என்று குறுகிற்று என்றும் இதனை நன்`கு எடுத்துக்காட்டலாகும்.  எனவே சா என்ற வினை குறுகி சவம் என்ற தொழிற்பெயர் அமைகின்றது என்பது இன்னொரு சாலைவழியே அம்மைய இலக்கை அடைதலாகும்,

இதுவேபோல் தொண்டை என்பதும் தோண்டு > தொண்டை என்று குறுகித் தொழிற்பெயர் அமைந்தது என்று முடிக்க இயலும் ஒரு சொல்லாம். ஆனால் தோண்டு என்ற சொற்கும் தொண்டை என்ற சொற்கும் பொதுவான முன் அடி வடிவமொன்று சொல்லியலில் உளது.  அது தொள் என்பது. தொள்> தொளை> துளை என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது. ஒகரம் உகரமாதல் இதுவாகும். பின் தொள் > தொள்+து > தொள் து ஐ > தொண்டை என்றும் முடியும்.  எனினும் தொள்ளுதல் தொண்டுதல் என்ற வினைகள் இன்று மொழியில் காணப்படவில்லை. இவை இருந்திருந்தால் மறைந்துவிட்டன என்றே கொள்க. இவற்றை மீட்க வழியிலது.  இவை பழையன கழிதற் பாற்பட்டவை யாகும். தொள் என்பது தொடு என்று திரியும்.  தொடுதலாவது தோண்டுதல். இச்சொல் தொட்டனைத் தூறும் மணற்கேணி என்ற குறளில் உளது. இது முதனிலை நீண்டு தோடு என்று இன்றும் தொழிற்பெயராய் உள்ளது. பெயரானபின் மீண்டும் வினையாவதைப் புலவர்கள் இயல்பாகக் கொள்வதில்லை. முயல் > முயற்சி > முயற்சித்தல்  என்ற வடிவத்துக்கு எதிர்ப்பு தென்படுகின்றது. தோடு என்று பெயரானபின் தோண்டு என்று நடுவில் ஒரு ணகர ஒற்றுப் பெற்று வினையாவது மொழியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று அறிக. ஆகவே தொடு(வினை)> தோடு (பெயர்) > தோண்டு (வினை) > தொண்டை ( குறுகி விகுதி பெற்று பெயர்) என்று வரும். இப்படிப் பெயரானபின் வினையானவற்றையும் தம் வினைத்திறம் இழந்த சொற்களையும்  ஒரு பட்டியலிடலாம்.

அப்போது முயற்சித்தலுக்கு உள்ள எதிர்ப்பு குறைவாகுமா என்று தெரியவில்லை.



ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

சுந்தரம் செட்டி சட்டி முதலிய சொற்கள்


அழகில்லாதார் பலர்.  அழகில்லாதாரிடத்தும் ஓர் அழகிருக்கும். அதைக் கண்டுபிடிக்கும் திறமுடையாரிடத்து அவ்வழகு வெளிப்பட்டு நிற்கும். அழகென்பது தோலளவுதான் என்பதும் ஓர் ஆங்கிலப் பழமொழி. அழகென்பது காண்பாருள் ஏற்புடையாரைப் பொருந்துவது என்றும் கூறுவதுண்டு.

உண்மையில் நாம் காணும் எல்லாரையும் அழகுடையார் என்று நாம் கொள்வதில்லை. சிலரைப் பிடிக்கும். சிலரைப் பிடிப்பதில்லை. ஒருவன் அல்லது ஒருத்தியின் மன அழகே அழகு என்பாருமுண்டு. ஆனால் அத்தகு தத்துவம் செயல்பாட்டில் இல்லாதது ஆகும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.  அப்படிப் பிறந்திட்ட காலையும் ,மயக்கும் அழகுடையாராய்ப் பிறத்தல் அரிது  பெண்ணைக் குறிக்கும் அரிவை என்ற சொல் அரு என்ற அடியினின்று தோன்றியதில் எந்த வியப்பும் இல்லையே.  அரு >  அரி > அரிவை.   இ, வை என்பன விகுதிகள். சொல்லில் மிகுதி காட்டுவது விகுதி.  மிஞ்சு விஞ்சு என்பது போல.

சில அழகுகள் உங்களைச் சும்மா இருக்கவிடாது.   அழகுக்குச் சொந்தக்காரனிடமோ சொந்தக்காரியிடமோ ஒரு வார்த்தையாவது பேசுமாறு உங்களை உந்திவிடும். அழகுக்கு உந்து ஆற்றல் இல்லையோ?

உந்திவிடும் அரியது அழகு.
உந்து + அரு + அ =  உந்தரம் >  சுந்தரம்.
உந்து அரு அன் :  உந்தரன் > சுந்தரன்.
உந்து  அரு இ  :  உந்தரி > சுந்தரி.

உந்துதல் சுண்டுதல் என்பன சுட்டடிச் சொற்கள். தொடர்புடையவை.

சுண்டு அரு இ > சுந்து அரு இ “ சுண்டி அருகில் இழுப்பது" என்பாரும் ஒரு மாற்றுப் பகர்பவர் ஆவார்.

இதன் மூல அடிகள் உல் சுல் என்பன சுட்டடிகள்.

இதை அறிஞர் உரைத்துள்ளனர்.

இனி அகர வருக்கங்கள் ஏற்ற சகர வருக்கங்களாகத் திரிவன ஆகும்,  அமணர் > சமணர் என்பது பலமுறை சொல்லப்பட்ட பழைய எடுத்துக்காட்டு, புதியவை எம் முன் இடுகைகளிற் காண்க.

சமையலுக்குதவும் சட்டியை மறக்கலாமோ?  அடு > சடு > சட்டி. (சடு இ )
அடுதலாவது : சுடுதல் ,  சமைத்தல்.  
அடு > அடுப்பு.
அடுசில் > அடிசில் :  உணவு,  சோறு.
அடிசிற்சாலை,  அடிசிற்பள்ளி.

எட்டி > செட்டி, எட்டிப்பூ சூடி அரசர்முன் தோன்றும் வணிகர்,

சந்திப்போம்,


மனிதனை விலங்குபோல் படைத்துள்ளார்.

மனிதத் தசையூண் மலைப்பாம்பு ---பூவின்
மதுவுண்ட வண்டாய் மயங்கியதே;

இனிதித் தசையே எனவிழுங்கி ---- ஓர்

எண்ணைந்  தடிக்குள் உறங்கியதே.



இவனுக் குணவாம் விலங்குகளே --- இவன்

எவ்விலங் கினுக்கும் உணவாகுவான்;

இவற்கும் அவற்றுக்கும் வேறுபாடு ----- உண்டோ

இறைவன் படைப்பினில் கூறுபாடு.



மாந்தனை நீயுண்க என்றுசொன்னான் ---பல

மாக்களும் பின்பற்றி வந்துள்ளன;

வாழ்ந்திட மாந்தனே உண்மாவினை --- என

மாந்தனும் வாழ்ந்திடப் பின்பற்றினான்.



ஆய்ந்திடில் மாந்தனுக் கென்ன இடம்--- அவன்

அருந்தலை மைக்கிங்  கறிகுறியோ  

சேர்ந்தெழுப் பிட்டதோர்  கூக்குரலால் ---- இவன்

சீர்பெற்று மேலான தெப்படியோ?

மா = விலங்கு
உண் மா =   விலங்குகளை உண்.


மலைப்பாம்பு விழுங்கிய பெண் கதை. சொடுக்கி வாசிக்க:

மேற்குறித்த செய்தியைப் பாருங்கள். மனிதன் 
விலங்குகட்கு உணவு.  விலங்குகள் மனிதர்க்கு 
உணவு. எல்லாம் இறுதியில் அழிவை எய்துவதும்
படிப்பகர்ப்புகளை உண்டாக்கிக்கொள்வதுமாகவே
உள்ளன. இந்தக் கவிதை இதனைச்  சிந்திக்கிறது.
மனிதன் எப்படி விலங்கினும் மேலானவன் என்று 
சொல்லிக்கொள்கிறான்.

மனிதன் தன் இயல்பினாலும் கடவுள் கட்டளையாலும்
மேலானவன். அப்படியானால் பல நிகழ்வுகளில் 
மனிதனுக்கு ===  குழந்தைக்கும் வளர்ச்சி 
பெற்றவளுக்கும் உள்ள வேறுபாடு ஏன் தெரியாமல் 
போனது? ஆட்டினுடன் ஏன் 
வன்புணர்வில் ஈடுபடுகிறான்?

மனிதனும் ஒரு விலங்கு அல்லனோ? மனிதன் 
தற்பயிற்சி மூலமாகவும் சிந்தித்ததன் மூலமாகவும் 
வேறுபாடுகிறான். மற்றபடி அவனும் விலங்குதான்.

உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். 

Previews failed to load.  Impedes editing. Read with necessary
corrections as you deem fit until we are able to edit. Thank you.