வியாழன், 16 நவம்பர், 2017

மாலாவின் பெயர் தமிழ்

மாலாவின் (சிவமாலாவின் ) பெயர் அழகான தமிழ்ப்பெயர்,

இந்தப் பெயர் எப்படி அமைந்தது என்பதை இங்கு
எழுதியுள்ளோம்.

இங்குக் காணலாம்:

https://sivamaalaa.blogspot.sg/2016/08/blog-post_21.html

மாலுதல்

மாலுதல் என்பது வினைச்சொல். ஒரு வினைச்சொல் எந்த
மொழியில் இருக்கிறதோ,  அவ்வினைச்சொல்லினின்றும்
திரிந்தமைந்த சொற்களும் அம்மொழிக்கே சொந்தமானவை.
சில சொற்கள் அடுத்தார் மொழிகளில் சென்று கொடிநாட்டும்.

மாலுதல் என்றால் மயங்குதல்.  மயங்குதல் என்றால் கலத்தல்.
இருளும் ஒளியும் கலந்த நேரம் மாலை ஆகிறது.
மால் -  அடிச்சொல். ஐ என்பது தொழிற்பெயர் விகுதி.

மாலை:

மலர்கள் கலந்து அமைக்கப்பட்டதும் மாலை.



ஒரே விதப் பூக்களினால் தொடுக்கப்பட்டதும் மாலை
ஆகும்.  ஒரு விதமானாலும் பலவகைகள் ஆனாலும் கலந்தே
கட்டப்படுவதும் மாலையே.
மாலை என்ற சொல்லும் மாலா என்று திரியும்.

மாலை என்ற இந்தச் சொல்வடிவம் ஓர்* ஆளின் பெயராகும் போது அதன் விளி வடிவில் அதாவது கூப்பிடும் போது மாலா என்று திரியும்.  எடுத்துக்காட்டு: கண்ணன் > கண்ணா.  ஐயன் > ஐயா.  மாலை > மாலா .

பல பிற மொழிகள் இந்த விளிவடிவத்தை மேற்கொண்டுள்ளன. They have adopted or borrowed.  இறுதி  ஐகாரம் அம்மொழிகளுக்கு ஒத்துவரவில்லை.  இதை முன் விரித்து  எழுதியதுண்டு. 

மணிமேகலையில் வயந்தமாலை 

மணிமேகலைக் காப்பியத்தில் வயந்தமாலை என்றொரு
பாத்திரப்படைப்பு  காணப்படுகிறது.  இதனை
இற்றைப்புதுமை வடிவத்துக்கு மாற்றுவதாயின்
அஃது வசந்தமாலா என்று வரும்.

வை > வ+அம் > வயம் (யகர உடம்படு மெய், அம் விகுதி ) >
வயம்+தம் > வயந்தம் > வசந்தம்
( ய - ச திரிபு,  வாயில் - வாசல் போல).  உயிர்களைத்
தன் வயப்படுத்தும் காலம்.  தம் என்பது து+அம்.  அ
ம்மென்னும்  விகுதிமட்டும் இருமுறை பயன்படுத்தப்
பட்டுள்ளது.  இது புனைவுச்சொல்.

ஒரு பொருளை  யார் வைத்திருக்கிறானோ அது அவன்
"வயம்"  உள்ளது.  வை>வயம். ஐகாரக் குறுக்கத் திரிபு.

பெயர்ச்சொல் ஆதல்:  Formation of Noun 
( supplanting the vocative case) 

மாலுதல் என்ற வினைச்சொல்லிலிருந்தும் நேரடியாக
 இது அமையும். அங்கனமாயின் அதன் இறுதி, ஆ
என்னும் தொழிற்பெயர் விகுதி (மிகுதி) பெறும் .

மால் > மால்+ ஆ > மாலா.

ஆ என்ற விகுதியின் பிறப்பை அறிவோம்.

ஆ = ஆதல்.  ஆதல் என்பதில் தல் விகுதி.  ஆ என்பதோ
வினையாகவும் விகுதி ஏதும் ஏற்காமல் பெயர்ச்சொல்லாகவும்
உள்ளது.  இப்படிப் பெயரானதும் அது தன் தனித்தன்மையை
இழந்து ஒரு விகுதியாவும் ஆகின்றது.  விகுதியாகிவிட்ட
நிலையில் மால் என்ற சொல்லுடன் சேர்ந்து மாலா
என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது.

மால் - வினைச்சொல்.
ஆ - விகுதி.
மால்+ ஆ =  மாலா.

ஆ விகுதி பெற்ற வேறு சொற்களைப் பார்த்து மகிழ்வோம்.

பல் > பலா.  பல சுளைகளை உடைய பழம். அது
காய்த்துப் பழுக்கும் ஒரு மரம்.

இங்கு "பல்" என்பது வினைச்சொல் அன்று.  அல்லாதவையும்
விகுதி பெற்றுச் சொல்லாகும்.

உல் > உலா.   (ஓ.நோ:  உல் > உலவு).

கல் (கற்றுக்கொள் என்னும் வினை)
கல் > கலா.
இது கல் என்ற வினையுடன் ஆ விகுதி பெற்று அமைந்தமையின் தமிழ்ச்சொல் என்பார் பேரா. அனவரத விநாயகம் பிள்ளை.

நில் > நிலா.     ( நில் > நிலவு). (  நிலவுதல் என்று
பின் வினையுமாம்).

இர் > இரா.    (  இர்+ உள் = இருள்).

வில் > விலா.  (வில் போன்ற வளைவு எலும்பு)

துல் > துலா.   (துல் > துலை).

விழு > விழா.    (விழு > விழைதல்)  (விழுமியதை விழைதல் இயல்பு).
ஆ என்பது விகுதியாகப் பயன்பட்ட சொற்கள் இவை.

செய்யுள் பாடல்களில்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.  (குறள்)

மால் என்பது கருமை என்றும் பொருள்படும்.

மாலானவர் அணிபென்னாடை கண்டு மகளைத் தந்து என்ற செய்யுள்வரியில் மால் என்ற சொல் காண்க.

கரியமால் உந்தியில் வந்தோன் என்ற வரிவரும்
ஔவையின் பாட்டில் வருவதும் காண்க.

சேலார் விழிமாதை மணம் செய்ய அருள்வாய் என்ற
கிட்டப்பாவின் பாடலில் “ மாலாகினேன் மாதவா “ என்று 
ஒரு வரி வரும். மாலாகினேன் = மயங்கிவிட்டேன் என்று பொருள்.

மால் என்ற சொல் கடைக்குறைந்து மா என்றும் வந்து 
கருமை குறிக்கும்.  மா நிறம் என்ற தொடர் காண்க.

மா என்பதற்கு வேறு பொருள்களும் உள்ளன.

மால் > மாலி.  (  மால்+ இன் + இ =  மாலினி).

(  மாலி -  வனமாலி).

மால் என்ற சொல் கருமை குறித்துப் பின் குற்றம் 
என்ற பொருளுக்குத் தாவியது.  இலத்தீன் மொழிக்கும் 
சென்றது.   mala fide (x bona fide )  என்ற 
தொடர்களும் காண்க.

மிக நீண்டுவிட்டதே.

I do not think you can find this information anywhere.

வேறோர் இடுகையில் சந்திப்போம்.

Edited but beware of postscript changes by third parties and virus. 



 

உகரத்திலிருந்து துகர வருக்கச் சொற்கள் திரிந்தமை. சில.


வெகுநாடகளாக நாம் சுட்ட்டிச் சொற்களை அணுகாமல் பிறவற்றைப் பேசிக் கொண்டிருந்துவிட்டோம்.  ஆகையால் இன்று உகரச் சுட்டிலிருந்து   தகர வருக்கங்களில் சென்று தோற்றமளித்துத் தமிழை வளப்படுத்திவரும் சொற்கள் சிலவற்றை ஆராய்வோம்.

ஆராய்வது:   உ > த -  தோ வரை.  இவை எல்லாவற்றையும் மூழ்கி முத்தெடுப்பது விரிவின் காரணமாய் மிக்க உழைப்பையும் சலிப்பையும் தருமாதலின்,  ஒரு சில காண்போம். பிற பின்னர்.

இவ் வட்டத்திலுள்ள முதன்மையான வினைச்சொற்கள்:

துதைதல். ( நெருங்குதல், படிதல், மிகுதல் இன்னும் சில).
துதைத்தல் ( நெருக்குதல்).
துத்தல்  (  நுகர்தல்)
துப்புதல் 

ஆகியன உ என்ற சுட்டடி முன்னிருப்பதைக் குறிக்கும்.

இது து என்று திரியும்.

ஏன் திரிகிறது?  ஆதாரம் ஏதும் இருக்கிறதா? என்று கேளுங்கள்.  உங்களுக்கு கிடைத்த தமிழ் நூல்கள் சிலவே. பெரும்பாலானவை  எரிக்கப்பட்டன;  ஆற்றுக்குள் வீசப்பட்டன;  பூச்சிகளால் அரிக்கப்பட்டன. இன்னும் ஒப்பிக்கமுடியாத பலவகைகளில் அழிந்தன.  ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகும்போது அல்லது ஓடும்போது தூக்கிக்கொண்டு போக ஆள் இல்லை, வாகனம் இல்லை! படை எடுப்புகளின்போது பல அழிக்கப்பட்டு இருக்கலாம். ஆரியர் வந்து அழித்தனர் என்று கூறப்படுவதுண்டு. அப்படிப் பெயருடன் யாரும் வரவில்லை. ஆரியர் இடப்பெயர்வுத் தெரிவியலானது Aryan Invasion and Migration Theories. மேனாட்டார் சொன்ன கதை. தமிழர்களுக்குள்ளேயே கவனிப்பின்றி அழிந்தவை அனந்தம்.  குகைவாழ் தொல்காலத்தில் திரிந்தவற்றுக்கு ஆதாரம் இல்லை. அறிவொன்றே கொண்டு அறியவேண்டும்.

ஒரு குகையிலிருந்தவன் உ எனப் புகல, இன்னொரு குகையன் து என்றான். இவர்கள் இப்படி வேறுபாடாக உச்சரித்ததே, மொழியில் சொற்கள் பெருகியமைக்குக் காரணம். அதுவும் நல்லதே’

உ > உது > துது.

துதிக்கை.  (முன் நீட்டிக்கொண்டிருக்கும் கை).

சொல்லமைப்பில் யானைக்கு இடமில்லை. அதை வழக்கில் அறியவேண்டும். இதற்குமேல் வழக்காற்றை ஆய்ந்துகாணல் உங்கள் பங்கு.
சொல்லின் கதை அப்படித்தான் இருக்கும்.

துதித்தல்

துதிப்பவன் முன் காலத்திலும் இன்றும் கூட ஒரு சாமிசிலையோ மனிதனோ இருக்குமிடத்துக்கு முன் சென்று  விழுந்து (சாய்ந்து, முன்பக்கமாகச் சாய்ந்து ) கும்பிட்டான். முன் செல்லுதலே இதில் சொல்லமைப்பில் கருத்தில் கொள்ளப்பட்டது.   ஆகவே உது > துது > துதி > துதித்தல் ஆனது.

மரத்தடிச் சாமியார் இதை ஸ்துதித்தல் என்பான். எல்லாம் அதே.  முன் ஒரு ஸ் போட்டுவிட்டால் வேறு ஆகிவிடுமோ?

துத்தம்

உ >  உது > துது > துத்தம் ( துது+ அம்).  தகரம் இரட்டித்தது.

துத்தம்  என்றால்:  கண்ணுக்கு இடும் மருந்து;  தீ, நாய், இசை,  நாணல், நீர்முள்ளி, பால்,  வீணை நரம்பு, வயிறு, துரிசு.

சில அகரவரிசைகள் வேறுபடுகின்றன.

இவற்றுள் சிலவற்றில் உள்ள முன்மைக் கருத்தைப் பார்ப்போம்.

நாய்  -   பெரும்பாலும் வீட்டின் முன் இருப்பது, திரிவது அல்லது கட்டிவைக்கப்படுவது.  அல்லது காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற வகையில் முதன்மை பெறுவது.

நாணல் -  தொழுகை மந்திரங்கள் சொல்லும்போது முன்மையான இடம்பெறுவது. குசை, தருப்பை

வயிறு  -  மனிதனின் உடலில் முன்னிருப்பது. சிலருக்கு வயிறே முன் செல்கிறது. (தொப்பை).

சென்னா என்னும் சீமையகத்தி அல்லது வண்டுக்கொல்லி. சில முன்னணியான மருத்துவ குணங்களைக் கொண்டது என்கிறார்கள்.

தீ -  இது ஐம்பூதங்களில் ஒன்று.  இந்து மதத்தில் முன்வரிசை பெறும் பொருளாகும். திருமணத்திலும் தீவலம் வருதல் இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐம்பூதங்களில் சிலவற்றைக் கையாள்வது எளிது.  நீர், காற்று ( வாயால் திருநீற்றை பற்றனின் தலையில் ஊதிவிடலாம்,  சில சாமியார்கள் செய்வர்), மண் (கையால் எடுக்கத்தக்கது,  நிலம் முழுவதையும் எடுக்க இயலாவிட்டாலும்),  தீ ந ன்  கு பயன்படுவது. காயத்தில்  ( கோள்கள் காயுமிடம். ஆகாயம் ஆனது பின்னர் ) பறக்கலாம், வானூர்தி கொண்டு.  விண்ணு என்பது விஷ்ணு வாகி தொழுதெய்வமாய் விளங்குவதாம்.

பால் -  முதன்மையான பொருள்.

யாழில் நரம்பு  -  நரம்பு இல்லாமல் வாசிக்க முடிவதில்லை.  ஆகவே யாழில் முதற்பொருளாகிறது.

இசை  -   இறைவனும் விரும்புவதாகச் சொல்லப்படும் முன்மைக் கலை. ஏழிசைகளில் ஒன்று. 

மேல்பூத்தல்  -  நாகம் அல்லது செம்பு முதலிய உலோகங்களில் மேலே பூத்து வருவது. இவற்றிலெழும் ஒருவகைக் களிம்பு.

இங்கனம் முன்மைக்  கருத்தை,   சொல்லை ஆய்ந்து உணரலாம்.

இவற்றைச் சொல்லமைப்பிலே கண்டு இன்புறலாம். (இவற்றுக்கு இலக்கியச் சான்றுகள் தருவது வீண்வேலை. நூல்களில் இருந்தமையால்தான் இவை நிகண்டுகளில் உள்ளன. அப்படித் தரப்பட்டால், எழுதுகிறவன் இலக்கியம் படித்தவன் என்று காட்டவே அது உதவலாம். )

  
துய்த்தல்  உ> து > துய்.

ஒரு பொருளைப்  (பழம்) பலர் பார்த்திருக்கலாம்.  அதில் ஒருவன் முன்சென்று எடுத்து உண்கிறான். அவனே அதைத் துய்ப்பவன். ஆகவே முற்செலவுக் கருத்து தெளிவாய்த் தெரிகிறது.  பொருள்களை நுகர்ந்தே மனிதன் வாழ்க்கை நடத்துகிறான்.  மனிதன் முக்கிய வேலை, நுகர்வதுதான். நுகர்தலிலிருந்து ஒதுங்கவேண்டிய சாமியார்களைப் பற்றி இங்கு நாம் பேசவில்லை.  மனிதக் குமுகங்கள் பண்பட்ட காலை நுகர்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்கின்றன. நுகர்ச்சி அல்லது துய்த்தலை ஆய்கின்ற வேளை பின்வந்த கருத்துக்களை எடுத்துக்கொள்வது மடமை.

து > துத்தல்  உ >து.

இது துய் என்பதன் கடைக்குறையாகவும்,  துய் என்பது து என்பதன் கடைமிகையாகவும் கருதத்தக்கது. முற்செலவுக்கருத்து தெளிவாய் உள்ளது.

இன்னோர் இடுகையில் பின்னர் தொடர்வோம். 

பிற்பார்வை செய்யப்படும்

  


புதன், 15 நவம்பர், 2017

அரசியல்: எவனும் எதிரியில்லை.



இது வெளிநாடொன்றில் நடைபெற்ற நெருங்கிவரல் முயற்சியில் ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியினரை எதிரியுடன் பேசேன் என்று ஒதுக்கியது அறிந்து,   மக்கள் தொண்டு புரிவார் என்றும் நட்பு நெறியே கடைப்பிடித்தல் வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்ட எழுந்த உள்ளக் கருத்துகளின்  வெளிப்பாடு. படித்து இன்புறுக.

இது அக்கட்சியினரை எட்டுமென்று நினைக்கவில்லை.  இருந்தாலும் பாடப்பட்டதனை நாம் பகிர்ந்துகொள்வோமே. 


அரசியலில் நிரந்தரமாய் நண்பர் இல்லை
அத்துறையில் நிரந்தரமாய் எதிரி இல்லை.
நிறுவியதோர் கூட்டாளி உண்டென் றாலோ
நிலைமாறா எதிரியவன் உண்டென் றாலோ
அருவியாறு கடல்களிலே மாற்ற மில்லா
அகிலமிதாம் என்றன்றோ பொருளே யாகும்?
திருவுகந்த தருணத்தில் எதிரி நண்பன்
தேர்ந்தவனோ டுறவாடல் ஓர்ந்து கொள்ளே!


மக்களுக்கே உழைப்பதொன்றே  கடனாய்க் கொண்டாய்
மாநிலமேல் எதிரிக்கும் இலக்கு வேறோ?
தக்கபடி பேச்சியற்றித் தகுந்த காப்பில்
தனிச்சிந்தை  மேலோங்க முடிவு சேர்ப்பாய்!
நக்கலுடன் களிப்பாட்டு  நீயோ செய்யாய்
நலமென்றும் விளைத்திடுதல் நோக்கம் அன்றோ
ஒக்கவுன தன்பருடன் உயர்ந்து நின்றே
உலகுபயன் கொண்டிடவே புரிவாய் தொண்டே.

வேறு சந்தங்களில் பாடவேண்டுமென்று எண்ணினாலும்
கருத்துகள் ஏனோ இந்தச் சந்தத்திலேதான் வடிகின்றன!
அடுத்த கவிதையை வேறு சந்தத்தில் பாட அம்மை அருள்புரிவாளாக.