வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பறக்கவுமே சற்றியலாக்.....

பறக்கவுமே சற்றியலாக் கோழிக்குஞ்சு
பக்கத்து வந்தமலைப் பாம்புகௌவி
இரக்கமென ஒன்றின்றிக் கொன்று தின்னும்
இழிவான உலகமிதில் நீதி எங்கே?
உரக்க அது ஒலிசெய்தும் ஓடி வந்து
உதவுதற்குயாருமில்லை என்னசெய்வேன்?
பொறுக்கவினி இயலாத புவியை நீங்கிப்
புகுதற்கே ஓரிடமோ  புகல்வாய் எற்கே.

8.7.2017

வியாழன், 21 செப்டம்பர், 2017

வெட்சித் திணை ஆதாரம் ஆதரவு (தலைத்தோற்றம் தொடக்கம்)



ஆதாரம் ஆதரவு என்ற சொற்களை முன் நாம் விளக்கியதுண்டு.
இதை அறிந்து கொள்வதற்கு அப்துல் கலாம் போன்ற அறிவியல் மூளை வேண்டியதில்லை. இயல்பான அறிதிறனால் உணரலாம்.

வெட்சித் திணையில் படைத்தலைவன் பகைவரின் ஆக்களைக் கவர்ந்து வருவான். இதனை அறிந்த அவன் ஊர்மக்கள் மகிழ்வில் துள்ளுவர்.
இதற்குத் தலைத்தோற்றம் என்று பெயர். இந்நிகழ்வைப் புலவன் பாடலாக்கினால் அப்பாடல் வெட்சித் திணையில் தலைத்தோற்றம் என்னும் துறையின் பாட்டாக வரும்.

அதன்பின் படைத்தலைவன் கவர்ந்துவந்த ஆக்களை ஊரம்பலத்தே நிறுத்துவன். அதற்குப் பெயர் தந்துநிறை என்பர். தந்துநிறை நிகழ்கையில் துடி விம்மும்.  அதாவது பறையடித்து ஆரவாரம் செய்வர்.

இந்த ஆக்களெல்லாம் மக்களுக்கு ஆக்கப்பட்டன. விரைவில் அவை “பாதீடு”  செய்யப்படும். யார்யாருக்கு எத்தனை ஆக்கள் என்று பகிர்ந்து அளிக்கப்படும். ஊர்மக்கள் மகிழ்வர்.

இப்போது ஆதரவு கிடைத்துள்ளது.  அது அரசு தரும் ஆதரவு.   ஆ= மாடு.   தரவு = கொடுத்தல். தாரம் = கொடுத்தலே ஆகும்.
தமிழரசு போய் ஆநிரை கவர்தல் இல்லாதொழிந்த காலத்து “ ஆதரவு”  “ஆதாரம்”  எல்லாம் இல்லாமல் போயிற்று.  ஆனால் இச்சொற்கள் ஒரு புதிய பொருட்பொலிவு பெற்று பொதுவான அரவணைப்பை உணர்த்தின.  ஒன்றும் கிடைக்காதவன் ஆதரவில்லை ஆதாரம் இல்லை என்று புதிய பொருளில் இச்சொற்களை வழங்கினான்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

chAsvatham சாஸ்வதம் ( நிலையானது)



ஒரு பொருளைச் சுவைத்தல் என்பது அப்பொருளை நுகர்தல். நுகர்தலெனின் அதனைப் பயன்படுத்திக்கொள்ளுதல். முன் காலத்தில் சுவைத்தலென்பதற்குக் குறுகிய பொருண்மையே இருந்திருக்கக்கூடும்.  அது நாவாற் சுவைத்தலையே குறித்திருத்தல் கூடும்.  எனினும் இதுபோலும் பதங்கள் நாள் செல்லச்செல்ல பேசுவோனின் எண்ண விரிவால் பொதுப்பொருளை உணர்த்தத்தொடங்கிவிடும். இது எம்மொழிக்கும் பொதுவான இயல்பே.  இரசம் ( ராஸ ) என்ற மலாய்க்சொல், நாச்சுவையினைச் சிறப்பாகக் குறிப்பினும் நாளடைவில் மனவுணர்வினையும் குறிக்கத் தொடங்கிற்று. தமிழிலும் இரசம் என்பது உண்ணும் வேவித்த சாற்றைக் குறிப்பதோடு, நவரசம் என்கையில் தொண்சுவைகளையும் குறிக்கின்றது. ரசனை, ரசித்தல், ரசிகன், ரசிகை முதலிய சொற்களையும் அலசுவீர். அரைத்துச் சமைக்கப்பட்ட அரைசம் என்னும் ரசம் எங்கே,  ரசிகமணி எங்கே? பொருள்விரிவு வெகுதொலைவை எட்டிவிட்டது!  அரை(த்தல்)  >  அரைசல் > அரைசம் > அரசம் (  ஐகாரக்குறுக்கம் ) > ரசம் ( தலையிழப்பு ) > இரசம் (பிறதலை பெறுதல் ) .

இப்போது “சாஸ்வதம்” என்பதற்கு வருவோம். ஒருபொருளைச் சுவைப்போன் செத்தபின் அவனால் சுவைக்க இயலாவிடின், அது சாசுவதமில்லை.  அவனும் அழிவோன்.  பொருளும் அழிதக்கது.  நிலையற்றது. என்றுமில்லாதது.  சுவைபொருள் அழியினும் சாஸ்வதமில்லை;  சுவைப்போன் அழியினும் சாஸ்வதமில்லை. இது இருகூர் உடைய கத்தி.

நிலையானதெனின், இறப்பின்பின்னும் சுவைதக்கதாய் இருக்கவேண்டுமே!
சுவை :   ---   சா+ சுவை + தம் =  சா + சுவ + தம் = சாசுவதம்.
தம் அழிவின்பின்னும் தாம் சுவைக்கத் தக்க நிலையுடையது.
சுவை என்பது ஐகாரம் குறுகி சுவ என்றானது.

தம் என்பதைச் சொல் இறுதிநிலையாயும் “தம்” என்ற சொல்லின் சேர்க்கையாயும் கருதலாம்.  தாம் – தம்;  அல்லது து (விகுதி)+ அம்(விகுதி ).= தம்.  எங்ஙனமாயினும் பொருளில் வந்துற்ற மாறுபாடு ஒன்றுமில்லை.
இச்சொல் தமிழ் மூலத்தது.

குறிப்பு:ch
முன் காலம் என்பதைச் சேர்த்தெழுதினால் கணினி அதை “முங்காலம்”  என்று “தன்-திருத்தம்”  செய்துவிடுகிறது.  ஆகவே முன் காலம் என்று இடைவெளி தந்து எழுதவேண்டியுள்ளது. இவைபோல்வன பிறவும் இங்கனம் பாதிக்கப்படுகின்றன.  படிக்கும்போது கவனமாய்ப் படிக்க.  “தன்மாற்று” என்று எழுதின் பொருத்தம் என்று தோன்றுகிறது. இது கவனத்தில் உள்ளது. முன் காலம் – முற்காலம் எனில் மாற்றம் நிகழ்வதில்லை.