திங்கள், 11 செப்டம்பர், 2017

பிரவேசம்



பிரவேசம் என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்யலாம்.

பிர என்பதொரு முன்னொட்டு என்பது இலக்கணியர் சொல்வது.  ஆனால் இது “புற(ம்)”  என்ற சொல்லின் திரிபிலிருந்து வருகிறது.
புற > ப்ர  > பிர

இதில் வரும் திரிபு  எளிதாக உணரக்கூடியது ஆகும்.    ஆனால்  வேசம்  (ஏசம் ) என்பதென்ன?

பிரவேசம் என்றால் வெளியிட்த்திலிருந்து ( புறம்)  உள்ளுக்குச் செல்லுதல்.  ( உள்ளே செல்லுதல் ),  ( உள்ளுக்கு என்பது பேச்சில்.  அதுவும் சரிதான்.  )

ஏசம் என்பது  ஏகு+ அம் என்பதன் திரிபு.  தானே வழக்கில் திரிதலும் திரிக்கப்படுதலும் ஒன்றுதான் என்று வைத்துக்கொள்க.  ஏகு என்பது ஏசு என்று திரிந்தது.   ஏகுதலாவது செல்லுதல்.

புற ஏகு = பிர ஏகு =  பிர ஏசு  >  பிரவேசு   வினையாக்க விகுதியாகிய இ என்பது சேர்த்தால் பிரவேசி  ஆகிறது.   அம் சேர்த்தால் பிரவேசம் ஆகும்.

இங்கு கூறப்பட்ட திரிபில்   கு என்பது சு ஆனது.  ககரச் சகரத் திரிபுகள் சிலவற்றை அடுத்தடுத்து வரும் இடுகை ஒன்றில் காண்போம். 

பிரவேசம் என்பது செந்தமிழுக்காகப் படைக்கப்பட்டது அன்று.  ஆனால் இங்கும் வழங்குகிறது.

.


ரஜினி Rajnikanth (21% support)



ரஜினி காந்தின் அரசியல் முயற்சி.

ஜெயலலிதா அம்மையார்  இருந்தபோதே  இவர்அரசியலில் புகப்போவதாகத் தாளிகைகள் எழுதிக்கொண்டிருந்தன.  ஆனால் அவர் புகவில்லை. புகாமையின் காரணங்கள் என்ன என்ன என்பது வரலாற்று ஆராய்ச்சி ஆகிவிடும். இப்போது புகுமுகமாய் இருக்கின்றார். மக்களாட்சி நடைமுறையில் பலரும் சென்று பங்குபற்றுவதென்பது ஒருவகையில் நல்லது என்றே சொல்லவேண்டும்.  யாருமே சென்று கலந்துகொள்ளாமல் வெளிநாட்டுக்கார்ர்களை வாடகைக்குக் கொண்டுவருமளவிற்கு உலகில் எந்த மாக்களாட்சியும் போய்விடக்கூடாது.   சேவை மனப்பான்மையுடன் நேரமும் திறனும் பக்கபலமும் உடையோர் கலந்துகொள்வதே  மக்களாட்சிக்குத்  தெம்பு  தரும். கலந்துகொள்வதா இல்லையா என்பதைக் கலந்துகொள்ளும் நிலையுடைய குடிமகனே தீர்மானிக்கவேண்டும்;  அக்குடிமகனை ஏற்பதா இல்லையா என்பதை மக்களே ( வாக்களிப்போரே) முடிவுசெய்யவேண்டும்.  இது மக்களாட்சியின் செயல்பாட்டு முறையாகும்.
ரஜினி கலந்துகொள்ள முடிவெடுத்தபின், அரசியல் களத்தில் அவருக்கு வரவேற்பில்லை என்று தாளிகைச் செய்திகள் பகர்கின்றன!  இலயோலா கல்லூரி மாணவர்கள் ஒரு கருத்துக்கணிப்பை  நடத்தினர்.. அதில் ரஜினிக்கு 21% தான் கிடைத்துள்ளது.  களத்திலுள்ள பிற அரசியல் சேவையினர்  இன்னும் அதிகம் பெற்றுள்ளனர்.  ஓபிஎஸ் ஸுக்கு  1% மட்டுமே கிடைத்துள்ளது.  ஆகவே அவர் ஈபிஎஸ்ஸுடன் இணைந்துவிட்டதே சரி என்று தோன்றுகிறது.
இந்த அரசியல் களத்தில்  எப்படி நிலவரம் இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.  அரசியல் கட்சிகளுடன் கொஞ்சவேண்டியவர்கள் வாக்காளர்கள்.  கொஞ்சியபடியே நெஞ்சிருந்துவிட்டால் கோடையென்றாலும் குளிர்காலமாகுமா? 

An external software (virus) supplies unwanted dots on this post and other posts as well. If the post appears bad on your screen, please reload your browser.  We have corrected some.

சனி, 9 செப்டம்பர், 2017

மறுவாழ்வு வேண்டிய உரோகிங்க்யர்.



இலக்கம்  இரண்டினைம் பத்தா  யிரமே

கலக்க மடைந்தவுரோ  கிங்க்யர்----நிலமகன்று

ஓடினர்மி   யன்மாரி  னின்றும் உயர்வாழ்வு

கூடுமோ கோதில் உலகு.


பொருள்:

இலக்கம்:  இலட்சம்;   ஐம்பத்தாயிரம் -  ஐம்பதினாயிரம்;
உரோகிங்க்யர் -  முஸ்லீம் அகதிகள்.   
கோதில் - குற்றமில்லாத.  உயர்வாழ்வு -  இங்கு மறுவாழ்வு
எனக் கொள்க.

பல்வேறு மதத்தினர் வாழ் நாட்டில், உம்முடன் நானிருக்க மாட்டேன் என்று விலக்கிக்கொள்வது, பின்  விளைவுகளை ஏற்படுத்திவிடும். சமய நல்லிணக்கம்  கடைப்பிடித்தல் நன்று.  உரோகிங்க்யருக்கு  நம் நல்லெண்ணம் உரித்தாகுக.

இந்தியாவின் கிழக்கிலும்  உரோகிங்க்யர் பலர் ஊடுருவியுள்ளனர் என்று
அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.  அவர்களுக்கும்  இடம் காணப்பபடுதல்
தேவையாகிறது.  ஐ.நா அகதிகள் அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். இதற்கான "விடிவு"  அங்க்சான்சுய்ச்சி அம்மையாரிடம்  உள்ளதாகத் தெரிகிறது.  மியன்மார் சென்றுள்ள தலைமையமைச்சர் மோடி மறைவாகப் பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.