ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஏன் அரசியலில் இத்தனை கட்சிகள்?



கட்சி அரசியல்

 கட்சி அரசியல் என்பது, நாடாளுமன்றம் போலும் பேசித் தீர்மானிக்கும் இடத்தில்,  ஆளுங்கட்சி. எதிர்க்கட்சி என்று பிரிந்து நாட்டு நிறுவாகம்
செயல்படும் நிலையைக் குறிக்கிறது.

மன்னர்கள் காலத்தில் இத்தகைய கட்சி அரசியல் தமிழ் நாட்டிலோ துணைக் கண்டத்திலோ நடைபெறவில்லை. இது இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்து இப்போது பல நாடுகளிலும் பரவியுள்ளது.
அதிலும் மிகுதியான அரசியல் கட்சிகள் இயங்கும் நாடு இந்தியாவே என்று தெரிகிறது.  புள்ளிவிவரம் எடுக்கவில்லை என்றாலும் மற்ற நாடுகளில் சற்றுக் குறைவாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
எதிர்க்கட்சிகள் பல இருந்து அவற்றுக்கு அரசு பதில்சொல்லிக்கொண்டே இருந்தால்  அரசு ஆட்சியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும் என்ற குறைபாடும் உள்ளது.
ஆனால் மக்களாட்சி அமைப்பில் எதிர்க்கட்சி இருக்கவேண்டும் என்பது ஆட்சிமுறை ஆகும்.  ஆனால் இத்தனைதாம் இருக்கவேண்டும் என்று கணக்கில்லையாகையால் (limit)  ,  பல உண்டாகிவிடுகின்றன. அமெரிக்காவில் உள்ளதுபோல இரண்டே இருக்கவேண்டும் என்பது அறிஞர் கருத்து  ஆகும். ஒரே பொருளின்மேல் பத்து எதிர்க்கட்சிகள் பத்து விதமான கருத்துக்களை வெளியிட்டால் மக்களாட்சி முறைப்படி இந்தப் பத்துக் கருத்துக்களையும் மக்கள் உள்வாங்கி ஆராய்ந்து தமக்கு இவற்றுள் எது பிடித்தமானது என்று முடிவுசெய்யவேண்டும். (அல்லது குழப்பம் அடைவார்கள் ) இதற்கு மக்கள் முழுநேரமாய் அரசியல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கவேண்டும். அப்படி மக்கள் ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்கும் உள்ள இடைவெளிக் காலத்தில், இக்கருத்துக்கள் பற்றி மக்கள் எதுவும் செய்தற்கியலாது. நாங்காண்டுக் கொருமுறையோ ஐந்தாண்டுக் கொருமுறையோ வாக்களிப்பதன்றி, மக்களால் எதுவுமாகாது.
எனவே மக்களுக்குப் பிடித்தமானது எது என்று அறிந்து செயல்பட, ஆட்சியில் உள்ள கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோதான் (யாராக இருந்தாலும் உள்ளவர்கள்தாம்) இடைக்காலத்தில் முயற்சி மேற்கொள்ளவேண்டியுள்ளது.  மன்னர்காலத்திலும் ஆட்சியில் உள்ள மன்னன் எது மக்களுக்குப் பிடித்தமானது என்று அறிந்துகொள்ள வழிகள் இருந்திருக்கலாம்.  அந்த வழிகள் மக்களாட்சியில் தேர்தலுக்கிடைப்பட்ட காலத்து வழிகளாகவும் மன்னராட்சி முறையில் என்றுமுள்ள முறைகளாகவும்  உள என்பது சிந்திப்பார்க்குப் புலப்படும்.
பதில்நிலையர்கள்  (பிரதிநிதிகள்) முறையிலேதான் தேர்தலுக்குப்பின் ஒரு மக்களாட்சி நாட்டில் ஆட்சி நடைபெறமுடியும். நாடாளுமன்றில் பதில்நிலையர்களே உறுப்பினராக இருந்து கருத்துமொழிதலை நடாத்த இயலும். எல்லா மக்களும் போயிருந்து பேசினால்தான் உண்மையான மக்களாட்சி, என்ற போதிலும், அது நடைமுறைக்கு ஏலாதது. எல்லாப் படிநிலையரும் பங்குபெறாததை மக்களாட்சி என்பது, வேறுவழி இல்லாமல்தான். நாட்டில் இரண்டே கட்சிகள் இருக்கவேண்டுமென்று சட்டமியற்றலாம்.  ஆனால் அது உரிமைப்பறிப்பு என்றும் மக்களாட்சிக்கு முரண் என்றும் தருக்கத்துக்கு உள்ளாகலாம் ஆகையால், இதற்கு ஒன்றும் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது.

 தலைப்புள்  ஏன் இத்தனை கட்சிகள்?



   .




 








சனி, 12 ஆகஸ்ட், 2017

கடி, கறி, கொறி, இவற்றுள் " கடி" : சொல் வண்ணம்.



-கடி.  கறி,  கொறி

கடி என்ற சொல்லை அணுகி அலசுங்கள்.  இதிலுள்ள இரண்டு எழுத்துக்களுமே வல்லெழுத்துக்கள்.  கடலையைக் கடிக்கும்போது, அதை  பற்களில் வைத்து நெருக்கி உடைத்து மென்று மெதுவாக்கி மனிதன் விழுங்குகிறான். அது சற்று கடுமையான வேலை.  அவன் கடிக்குங்காலை உங்கள் விரல் அங்கே போய்விடுமானால் அது துண்டாகிவிடக்கூடும். தமிழ்மொழியில் கடினமானதைச் செய்யும்போது, கடினமான ஒலிகளை உள்வைத்துச் சொல்லை அமைக்கிறார்கள்.  க என்பது வல்லெழுத்து. டி என்பதும் வல்லெழுத்து.  இந்தச் சொல் கடு (கடுமை) என்ற அடிச்சொல்லிலிருந்து அமைக்கப்படுகிறது.  இதைக் கடு> கடி என்று எழுதிக் காட்டலாம். இப்படி மட்டும் கூறினால் இதில் நான் உங்களிடம் சொன்ன மற்ற விடயங்களையும் நீங்கள் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று என்னால் அறுதியிட முடியவில்லை. ஆகவே கொஞ்சம், நேரம் செலவு செய்து சற்று விளக்கமாகச் சொன்னேன்.
கடின வேலைக்கு ஒரு சொல்லை அமைக்கும்போது அதற்கு உரிய வண்ணம் கொடுக்கவேண்டும். ஒரு மென்மையான உணர்வினை வரணிக்கும் ஒரு கவி, மெல்லெழுத்துக்களை உடைய சொற்களைப் போட்டு வரணிக்கவேண்டும். இதனை மெலிபு வண்ணம் என்றார் தொல்காப்பியனார்.

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்.


என்பது வள்ளுவன் குறள். இதில் லனநீ முதலியன பயின்று வருமாறு பாடப்பெற்றுள்ளது. இவை மெல்லெழுத்துக்கள். லலொலெ வருகின்றன.  இனி ணிமொழிவாயி இடையின எழுத்துக்கள் வருகின்றன.  தாம் எடுத்துக்கொண்ட கருத்தை விளக்கியமை மட்டுமின்றி அதற்கேற்ற வண்ணமும் பயிலும்படி தெய்வப்புலமை நாயனார் அமைத்துள்ளார்.  நயமானவற்றை எடுத்துச் சொல்வோரை நாம் “நாயன்” என்போம். நய + அன் = நாயன்.  முதனிலை நீண்டு அன் விகுதி பெற்ற பெயர்.

சொற்கள் மொழியில் உருவான போதும் கடின வேலையைக் குறிக்கும்போது வல்லெழுத்துக்களைப் போட்டு “வலிபு” வண்ணம் பயிலும்படியாகச் சொல் அமைந்துள்ளது.

இனிக் கறி, கொறி என்பதையும் விளக்கவேண்டும். இப்போது நேரமில்லை. இன்னொரு சந்திப்பின்போது அதை விளக்குவோம்.  அப்போதுதான் தமிழ்மொழியின் இனிமை நன்கு புலப்படும்.

 .





அடுத்து :  நாதன் நாமகள்.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

சீனாவில் ஆண்டில் 260000 விபத்தில் இறப்பு.



எந்த மூலை ஆன போதும் உலகமீதிலே
இனிய மனித உயிர்கள் மாள்வ தோவிபத்திலே
உந்து வண்டி ஓட்டு நர்கள் சாலைமுத்தமோ
உடைதல் நெளிதல் வளைத லாகும் பொருளிழப்பிலே.

இரண்டி லக்கம் ஐம்ப  தாயி ரம்உ   யிர்களே
இறந்து போயி  னார்கள் என்ப வண்டிமுட்டிலே
திறந்த தேசம் எனறி டாத சீனநாட்டிலே
தெரிந்த புள்ளி விவரம் இங்குக் கூறப்பட்டதே.

இந்த உயிர்கள் தம்மைக் காக்க என்னசெய்தனர்
என்ப தொன்றும் யாம றிந்த செய்தி அல்லவே
வந்த செயதி கொண்டு சொல்லும் வாய்த்தளர்ச்சியே
வழக்க மான உளறல் அன்றிக் குதர்க்கமில்லையே.

சாவில் பாதி யேனும் குன்ற யாதும் செய்வரோ/?
செத்த நேர்ச்சி மட்டுக் கொள்ளு மாயின்நன்மையே
நோவி லாத குமுக மாதல் ஞாலப்பார்வையே
நூறு பாதி ஆயின் நொந்தும் இங்குசொர்க்கமே..



செய்தி விவரம் இங்கு:
http://www.chinadaily.com.cn/china/2016-05/24/content_25442984.htm 

உந்து வண்டி -motor cars (here accept this as all vehicles)
ஓட்டுநர் - drivers
சாலைமுத்தம் -  வண்டிகள் சாலையில் இடித்துக்கொள்வது

இரண்டிலக்கம் ஐம்பதாயிரம் 250,000
வண்டி முட்டு - சாலை விபத்து TRAFFIC ACCIDENT
அல்லவே - (  அன்று என்னும் ஒருமையைப் பயன்படுத்தவில்லை ) 
பேச்சு வழக்கு பின்பற்றப்பட்டது.  இலக்கணப் படி அன்று என்பதே சரி
எனவே ஒருமை பன்மை மயக்கம் ஆகிறது.
வாய்த்தளர்ச்சி - விசாரிக்காத பேச்சு.
குன்ற - குறைய
நேர்ச்சி - இங்கு விபத்தினால் இறப்பைக் குறிக்கிறது.
நோவு - துன்பம் 
ஞாலப்பார்வை - உலகநோக்கு
நொந்தும் - துன்பமிருந்தாலும்.