புதன், 8 ஏப்ரல், 2015

Ways of referring to poverty

எழுத்துமொழியில் வறுமைக்கு மற்றொரு சொல் தரித்திரம் என்பது

நல்குரவு என்பதும் அது.

வறுமையை நல்குரவு என்பது   ஓர்  இடக்கர் அடக்கல் ஆகும்.

வறியோன் ஒருவனைப் பார்த்து  அவன்றன் வறுமையைக் குத்திக்காட்டுதலைப் பண்டைத் தமிழர் வெறுத்தனர்/ அதனால் அதனை அடக்கிச் சொன்னார்கள்  நல்குரவு என்று.

வறியோன் நன்றாகவும் உடுத்திருக்கமாட்டான். அவன் உடுத்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

தரித்தல் என்றால் உடுத்தல்.  தரி+ திரம் :  தரித்திரம் ஆகும்.

வறுமையில் செம்மை கடைப்பிடிக்க வேண்டும்.  வறுமையும் ஒரு நோய் என்று கருதினர். உற்ற நோய் நோன்றல் என்றார் வள்ளுவனார்;  ஆதலின் அது பொறுத்தல் கடன். தரித்தல் என்பது பொறுத்தல் என்றும் பொருள்தரும் ஆதலினாலும்  தரித்திரம்  என்றது இரட்டைப் பொருத்தமானது. பொறுத்தற்குரிய துன்பம் என்ற பொருளிலும் இச்சொல் அமைந்துள்ளது.

மக்கள் வழக்கில் இது தரித்திரியம் என்றும் வழங்கும். இது ஏடுகளில் காணப்படவில்லை/
தரி :உடுத்தல்.
திரி:  மாற்றம்/
அம்:  அழகு மற்றும் விகுதியும் ஆகும்.
தரித்திரியமாவது:  உடுத்தலில் மாற்றம் என்றபடி.
இங்ஙனம் மக்கள் வேறுவகையில் வறுமையைக் குறித்தனர்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

தமிழ்த் தென்றலில் கலந்தவை

தமிழென்ப  தே ஒரு  தென்றல்---- அது
தரணியெல் லாமுலவும்  தடைதானும்  உண்டோ?
அமைந்துள்ள அரண்களுள் போகும்  --- பின்போ
அவைநீங்கிக்  கானகம் வெளிகளில்  ஏகும்.

உலவுதல் புரிகின்ற பொழுதில் --அதன்
உராய்வினில்  அயல் நின்ற பொருள்கூடி வீசும்
சிலவந்து கலந்திட்ட போதும் ---- அண்ணே
தென்றல் வேறாம்சேர்ந்த பிறவேறு கண்டீர்

தென்றலில் வருகின்ற இன்பம் --- அண்ணே
சேர்ந்துவீ     சும்மவற்  றிடைகண்ட   துண்டோ
மன்றிடும் மகரந்த  மணமோ---- அதன்
மாண்புவே   றாம்பிற   மாசுவே   றாகும்.

edited.

இத்தகைய கவிதைகளைப் பெரும்பாலும் வெண்டளையில் எழுதுவர். இதை யான்  கருதாமல் கைக்கு வந்தவாறு எழுதியுள்ளேன் .  செதுக்கி  வெண்டளை என்னும் உறைக்குள் இடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் செயல் படுத்தவில்லை. எப்படி வந்ததோ  அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்  இதன் விளைவு சிலவிடங்களில் சந்த முறிவு. முறிவு விலக்குவதாயின் :

(எ-டு )

"தரணி உலாவத் தடைதானும் உண்டோ ? " என்று இரண்டாம் அடியில் வரவேண்டும். பிறவும் அன்ன

தரணி உ /   லாவத் த /  டை  தானும் /  உண்டோ

என்று வகையுளிப் படுத்தி  அறிக.

Well if you are a grammar enthusiast, then I have left it in its crudest form. Just read, understand and discard.



வாசனின் வாச மங்கை a story

வாசன்  ஓர் கடின உழைப்பாளி.  இந்தியாவிலிருந்து  மலாயாவுக்கு ஜப்பான் போர்  தொடங்குமுன் வந்தவர். போர் முடிந்தபின் தன் சொந்தச் சிற்றூருக்குச் சென்று பார்த்தவருக்குப் பேரதிர்ச்சிதான் காத்திருந்தது. தான் அன்புடன் அணைத்து மகிழ்ந்த மனைவி இன்னொருவருடன் குடும்பம் பண்ணிக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் வழ்ந்துகொண்டிருந்தாள்

"நீ  மலாயாவில் ( இப்போது மலேசியா) குண்டுபட்டு இறந்துவிட்டதாகக் கேள்விப் பட்டுத்தான் அவன்  மறு புருசனை எடுத்துக்கொண்டாள். யாருடைய தவறும் இல்லை"  என்று ஊர்ப் பெரியவர்கள் சொல்லவே,  ஒரு தென்னை மரத்தடியில் இருந்து தனியே அழுதுவிட்டு,  அடுத்த கப்பலிலேயே ஏறி சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

நண்பர்கள் பரிந்துரையின் பேரில் நல்லவேளையாக அவருக்கு வெள்ளைக்காரனின் போர்க்கப்பல்களில் குழாய்கள் சீர்ப்படுத்தும் ஒரு வேலை கிடைத்தது. கொஞ்சம்  நல்ல சம்பளமும் கிடைத்தது.  கல்யாணமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம் என்றிருந்த்தவர்,  அங்கு இருந்த மணிமேகலை சாப்பாட்டுக் கடையில் நல்ல இலைச் சாப்பாடு சாப்பிடுவதும்
பாய்போட்டு நன்றாக உறங்குவதும் வேலைக்குப்போவதுமாக இருந்தார்.

"இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?" என்றொரு கண்ணதாசன் பாட்டு வானொலியில் வருவதுண்டு.  அந்தப் பாட்டு வானொலியில் யார்செவியிலும் ஏறாத அந்தக்காலத்திலேயே வாசனின் நண்பர்கள் வாசனிடம் வந்து உரையாடும் போதெல்லாம் "இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?"  என்று துளை துளை என்று துளைக்கத் தொடங்கிவிட்டார்கள். யாரும் மகிழ்ச்சியாகக்  காலங்கழித்தால்  விடமாட்டார்களே!
வாசனும்  அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காதவராய் " இந்தப் பொம்பிளைகளே எனக்கு உதவாது.  தனியாகவே இருந்து செத்துப் போகிறேன் " என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.  விட்டுவிடுவார்களா ?
ஒரு நாள் அவரை ஒருவாறு மடக்கிப் பிடித்து  அந்தக் காலத்து "ஆஸ்டின்" வண்டிக்குள் போட்டு  மலாயாவில்   பாலோ என்னும் இடத்திற்குக் கொண்டு போனார்கள்.  
ஒரு பெண்ணைக் காட்டினார்கள்.  சிவந்த மேனி,  பலாப்பழம் நிறத்து உதடுகள் ,இவருக்கு ஏற்ற நல்ல  உயரம்,  பிறை போலும் நெற்றியில் வாள் போன்ற கண்கள், முத்துப்பல்  வரிசை .........யாரும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாத வாட்டசாட்டம்...
என்ன கட்டிக்கொள் ... என்றார்கள் நண்பர்கள்.  பெண்ணின் தகப்பனார், தாயார் உடன்பிறப்புகள் எல்லாம் வாசன் எப்படி வாய்மலர்ந்து எல்லோரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்......பெண்ணுக்கும் வாசனைப் பிடிக்கத்தான் செய்தது.  சரி சொல்லமாட்டாரா என்று உள்ளே அறையில் கொஞ்சம் சரிந்தே படுத்துக்கொண்டிருந்தாள் பெண் .  அவருக்குக் காப்பி கலக்கிக் கொடுத்த போதே அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.

இரண்டாம்  பாகத்தில் தொடர்கிறது......

will edit as necessary later.