புதன், 13 செப்டம்பர், 2023

மிலேச்சர் (வெளிவரவினர்) சொல்லமைபு --- மற்றும் கபாலம்

 இன்று மிலேச்சர் என்ற சொல்லையும் அதன் அமைப்பையும் தமிழின் வழியாக அறிந்தின்புறுவோம்.

சொல் அமைந்த காலமும்  அதன் பயன்பாடு குன்றிவிட்ட பிற்காலமும் ஒன்றுக்கொன்று தொலைவு உடையதாய்  ஆகிவிடுவது,  கால ஓட்டத்தில் அடிக்கடி நிகழ்வதாகும். பயன்படுத்துவோர் கூட்டமும் அவர்களுக்கான சுற்றுச்சார்புகளும் சில வேளைகளில் வெகு விரைவாக மாறக்கூடியவை ஆகும். இது வெளிநாட்டினர் வருகைகளில் ஏற்படும் மாற்றங்களாலும் உள்நாட்டினர் வெளிநாட்டில் தங்கித் திரும்புதல்  அடையும் வேறுபாடுகளாலும் நிகழ்தல் இயல்பு  ஆகும்.

மிலேச்சர் என்ற சொல் பண்டை நூல்கள் சிலவற்றிலும்  சோதிட நூல்கள் சிலவற்றிலும் வருவதுண்டு.  பிறப்பாய்வுக்குரியவன்  (ஜா/)சாதகத்துக் குரியோன் ) ஒரு மிலேச்சப்பெண்ணைத் திருமணம் செய்வான் என்று கணியர்கள் கூறுவது அடிக்கடி கேட்கக்கூடியதே.

தம்மைப் போல் தோற்றமுடையரல்லாதாரையும்  தூய்மையிலும் கடைப்பிடிகளிலும் வேறுபடுவோரையும் சிலர் மென்மையாகக் கடிந்துகொண்டு,  விலகுதல் உண்டு.  இந்த மென்கடிதலிலிருந்தே இந்த மிலேச்சர் என்ற சொல் வருகிறது.  அடிப்படை  அமைப்புப் பொருள்,  மெல்லிய ஏச்சுக்குரியவர்கள் என்பதாகும்.

மிலேச்சரைத் தலையில் நெய்பெய்து அடக்கியதும் உண்டு,  அவர்கள் தமிழரசர்களை எதிர்த்து வந்த காலை,  இது இலக்கியத்திற் காணப்படுவது. ஒரு தீமையும் விளைக்காத போது,  இப்பபடித் தண்டிப்பதற்கு முயலாதவர்கள் தமிழர்.  அன்பின் வழியது உயிர்நிலை என்பதை அறிந்தோர் தமிழர்.

மேல் ஏச்சு  அர்  என்பது சொல்லாகி  நாளடைவில்   மிலேச்சர் என்று திரிந்தது. மே  -  மீ என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய திரிபுகள்.   மேலாயிற்று -  மிகுந்தது என்பவற்றுள் உள்ள தொடர்பினை அறிந்துகொள்க.  மே -  மீ.  ஒருவர்மேல் ஏச்சுரை செய்தல்.  ஒருவர் மீது என்றும் கூறலாம்.  இவ்விரண்டனுள் மேல் என்பது பேச்சு வழக்கில் மிகுவரவிற்று ஆகும்.  மேசை -  மிசை >  மீசை என்பனவும் ஆய்வுக்குரிய சொற்கள்.

தம்பால் ஏச்சுரை பெறும் தொகுதியின  ரென்பதே தமிழ்ப்பொருள்  ஆகும்.

மெல் என்பது மென்மையான என்ற பொருளைத் தருதல் கூடும். இது மென்மையான ஏச்சுரை என்பதைத் தருவது ஆகும்.

மேலும் அறிய:

சொல்:  கபாலம்.


உறுப்புகளிற் கடிய தன்மை உடையது எனின் அது  கபாலம் அல்லது தலையே  ஆகும்..  கடு + பால்  +  அம் = :  இது  கபாலம் என்று புனையப்பட்டது.  டுகரம் மறைக்கப்பட்டது.

இன்னொரு வழியில்:  https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_3.html

இரு வழிகளில் தமிழ் மூலமே காணப்படுகிறது.

சமஸ்கிருதம் என்பது வீட்டுக்கு வெளியில் -   பிற்காலத்தில் கோயில்களில்-- வளர்ந்த வழிபாட்டு மொழி.   இதிலிருந்து பல சொற்கள் எடுக்கப்பட்டு  இந்தோ ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன.  கோகினூர்  வைரமும் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்டதே ஆகும்.  நன்னூல் இலக்கணத்தையும் மொழிபெயர்த்து அறிந்துகொண்டனர் ஐரோப்பியர்.  இவற்றை யெல்லாம் அவர்கள் மேற்கொண்டது தம்மை நீண்ட மொழிமரபும் வரலாறும் உடையர் என்று காட்டிக்கொள்ளவே  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்







கருத்துகள் இல்லை: