வியாழன், 20 நவம்பர், 2025

சகோதரம், சகோதரன், சகோதரி தமிழ்மூலம்.

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று ஆய்ந்து அறிந்து கொள்வோம்.

அகர வருக்க முதலாயின சொற்கள் சகர வருக்க முதலாய்  ஆகித் திரியும் என்பதைச் சொற்களை ஆய்வோன்  அறிந்திருக்க வேண்டும்.  இக்கருத்துக்கு ஆசிரியர்கள் பெரும்பாலும் காட்டும் உதாரணம் :  அமணர்> சமணர்  என்ற சொல்தான்.  அடுத்தடுத்து மண் குழைத்து இறுக்கமாகச் செய்யப்படுவது  அடு> சடு> சட்டு>  சட்டி   என்போம்.   அடு> சடு>  சடு+ இ>  சட்டி என்று சுருங்கக் கூறிவிடலாம்.  பொருள்விளக்கம் தானும் முன்செய்தபடியே  செய்தல் கூடும்.

அகம் என்பது உள் என்று பொருள்தருவது.  மேற்கூறிய விதியின்படியே,  அகம் என்பது சகம்  ஆகும்.  சகோதரர்கள் தமக்குள் ஒத்தவர்கள்.  ஒருதாய் உடைமையால் பிள்ளைப்  பருவத்திலிருந்து வளர்ந்தவர்கள்.  ஒரு வீட்டில் வாழ்ந்து வளர்ந்தவர்கள் என்றும் விளக்கினும் இழுக்கில்லை.  அக > சக என்றாகிறது.   சக + ஒ >  சகொ >  சகோ என்று திரித்தாலும்  சகோ என்றாகும்.  ஒ+இயம் > ஓவியம் என்ற இன் தமிழ்ச் சொல்லையும் கண்டுகொள்க.  உண்மைப் பொருளை  ஒத்து இருப்பதுதான் ஓவியம்.   ஓ+ அம் > ஓவம் என்றுமாகும் என்றறிக.

அக+ ஓ .>  அகோ>  சகோ.   தரு + அன் >  தரன். தரப்பட்டவன்,  அதாவது தாயினால் தரப்பட்டவன். பிள்ளைகளைத் தருவதனால்தான்,  தா> தாய் என்ற சொல்லும் பொருள் சிறக்கிறது.

சகோதரி என்பது பெண்பால் எனல் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ்வாறு சுருங்கச் சொல்வதால் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


 

புதன், 19 நவம்பர், 2025

வயிறு - சொல்லும் பொருளும்.

 வயிறு என்றால் இறுதியில் வைக்கப்பட்டது என்று பொருள்.  முன் காலத்திலே இச்சொல் அமைந்து நெடுங்காலமாக வழங்கி வருகிறது.  

வை  -    வைக்கப்பட்டது. இந்தப் பகவு,  வ்+ ஐ என்ற ஈரெழுத்துக்களால்  ஆனதாம். இங்கு வை என்பது நெடில்.  குறுகி  வ என்று நின்றது.

இறு  என்பது இறுதி என்ற பொருளது.   இறுதல் என்ற வினை, விகுதி பெறாமல் பகுதி மட்டுமே பகவாக நின்றது.  இறு என்றபடி.

வ+ இறு >  வயிறு  ஆனது.   யகர ஒற்று,  இரு பகவுகளையும் உடம்படுத்துகிறது,  அதாவது இணைக்கின்றது.

உதரம்  என்பது வயிற்றுக்கு இன்னொரு பெயர்.  இது உது + அரு+ அம் என்ற மூன்று பகவுகளைக் கொண்டு ஆன சொல்.

உ - என்றால் முன்.  து என்ற விகுதி இணைந்து உது -  முன்னிருப்பது என்ற பொருளில் வரும்.  நீ > உன் என்ற சொல்லில் உன் என்பது முன்னிருப்பவனுக்குப் பதிற்பெயர் ( pronoun).[ in the possessive case]. இது  ஊன்> உன் என்று குறுகிற்று என்று இலக்கணியர் உரைப்பர். நீ என்ற சொல், நீங்கற் பொருளது ஆகும்.  தன்னின் நீங்கி நிற்பவன் என்று பொருள்.'' உன்னில்'' முதுகுக்கு அருகில் இருப்பதால்  '' அரு'' என்ற  பகவு வந்தது.  ஆகவே உன்னில் முதுகுக்கு அருகில்  அமைந்தது   அரிய பல உள்ளுறுப்புகளைக் கொண்டிருக்கும் இடம் என்று பொருளுரைத்தல் கூடும்.  இவ் வுதரம் என்ற சொல் ஒரு காலத்தில் வழக்கில் இருந்து பின் வழக்குக் குன்றியிருக்கலாம்.

'' உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்''  என்ற மனோன்மணீயம் வழக்கினைக் கண்டுகொள்க.  உது அரு என்னாமல் உ+ தரு என்றும் விளக்கலாம்.  இஃது '' முன் வைக்கப்பட்டது''  என்று பொருள்படும். 

ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளை உடைய சொல் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


திங்கள், 17 நவம்பர், 2025

கேதாரம் இராகம். சொல்லமைப்பு

 கேதாரம் என்பது 29-வது மேளகர்த்தா இராகம் என்பர்.  இது ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதனால்,  இந்த ஒழுங்குமாற்றம்  ''கேடு'' என்ற சொல்லால் அறியப்படுகிறது.  தமிழ் இலக்கணத்திலும் விடுபாடுகளைக் கேடு, கெட்டது என்ற சொற்களால்தாம் குறிப்பிடுவர்.  எடுத்துக்காட்டாக என்னில் என்ற சொல்  எனில் என்று வரின்,  னகர ஒற்றுக் கெட்டது என்று சொல்வர். எதையும் விடாமல் தொகுக்க முடியாதாகையினால், இதைக் கெடு என்ற வினை சரியாகவே குறிக்கிறது.  தொகை (தொகுத்தல்) என்பதும் அது. புலவர்கள் பாடியவை பல இருந்திருக்கலாம்.  நானூறு பாட்டுகள் தாம் வேண்டின் பலவற்றை விடவேண்டியதாகிறது.  பல நூறுகளை விட்டிருக்கலாம்.  இல்லாவிட்டால் தொகுக்கமுடியாது.  எட்டுத்தொகை நூல்கள் அவ்வாறு தொகுக்கப்பட்டவைதாம். ஆனால் விடப்பட்டவை கெட்டவை என்பது பொருளன்று. விடுபாடு என்பதே இங்குப் பொருளாகும்.

கேடு+ தாரம் >  கே+ தாரம் >  கேதாரம்.

தரு+ அம் > தாரம்,  அதாவது விடற்பாலவற்றை விட்டு மிஞ்சியவை தருதல். இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

கேது என்பது ஒரு நிழற்கிரகம். ஒளி கெட்டமையால்,  கேடு+ து > கேது எனப் பெயர் ஏற்பட்டது.  கேடு என்ற முழுச்சொல்லில் டுகரம் விடுபாடு ஆனதனால், இதை இலக்கணத்தில் கடைக்குறை என்பர்.

இதுபோலும் எழுத்துக் கெட்ட செற்களை,  பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை