வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

சீடன் என்ற சொல் எங்கிருந்து வந்தது.

 சீடன் என்ற சொல்லைப் பற்றி இன்று சிந்திப்போம்.

சிந்தித்தல் என்றாலே ஒரு குடத்திலுள்ள நீரை சிறிது சிறிதாகச் சிந்துவது போல மூளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணருதல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும் வெளிக்கொணரக் கொஞ்சம் நேரமும் ஆகலாம். ஆர அமர எண்ணிப்பார்த்தல்  என்றும் இதனைக் குறிக்கலாம்.  இப்படிச் செய்வது சீடனுக்கு நல்லது.   அவன் கற்றுக்கொள்ளவும் உணர்ந்து போற்றவும் வாய்ப்புகள் அதிகம் கிட்டும்.

சீடன் சிறிது சிறிதாகக் குருகுல வாசம் செய்யவைத்து ஆசானால் வளர்க்கப் பட்டு முழுமைப் படுத்தப்படுகிறவன்.  ஆனால்  சீடன் குரு சென்றுவிட்ட பிற்காலத்தில் சீடனும் ஒரு குருவாகித் தனக்குச் சீடர்களை வைத்துக்கொண்டு புகழும் பெறக்கூடும். அவன் இன்னாருடைய சீடன் என்று சொல்லப்பட்டாலும், குருவின் மறைவுக்குப் பின் அவருக்கு இணையாகக் கூட எண்ணப்படுபவன். குரு இருந்த இடத்தில் அமர்வதால் அவருக்கு இணையாகிவிடுகிறான் சீடன்.  குரு செய்தவை அனைத்தையும் சீடன் செய்வான்.

ஆகவே சீடன் என்றால் அவன் ஈடன் என்பவனே.  ஈடு> ஈடன் ( ஈடு+ அன்), >  சீடன். அமணர் என்ற சொல் சமணர் என்று வருவது போல் ஈடன் என்ற சொல் சீடன் என்று திரியும். அகர வரிசையில் உள்ள பல சொற்கள் சகர வரிசையினவாகத் திரிந்து வழங்கு இயல்பு.  ஆடி  என்பது சாடி என்று திரிந்து பின் ஜாடி என்றும் வந்தது காண்க. ஆலை> சாலை என்பதும் கருதத் தக்கது.  சோறு ஆகிவிட்டது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.  அதாவது முடிந்து விட்டது என்ற பொருளில் இது வருகிறது. ஆனால் ஆகு> சாகு என்பது பின்னர் உயிர் உடலில் இல்லை என்பதைக் குறிக்க வருகிறது.   பொருள் சற்றே திரிந்துவிட்டது.  முடிதற் கருத்து இன்னும் அங்கு இருக்கின்றது. 

ஈடன் என்ற சொல்லுக்கு வலியோன், திடமானவன் என்று பொருள். இதுவே  பின் சீடன் என்ற திரிந்து குருவிற்கு ஈடனாவன் என்ற பொருளில் வழங்கி, பின்னர் சீடன் சிஷ்யன் என்று திரிந்து வழங்குகிறது.  இது சீஷன் > சிஷ்யன் என்று குறுகியிருத்தல் இயல்பே  ஆகும்.  நாளை குருவுக்கு ஈடாகுபவன் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஆயிரம் நாமங்கள் எங்கிருந்து வந்தன? சகஸ்ரநாமம்

 ஸகஸ்ர என்ற வடமொழிச் சொல்லே ஆயிரம் என்ற பொருளுடைய சொல்தான்.

இறை வழிபாட்டின் போது ஆயிரத்தெட்டு நாமங்கள் சொல்லி அவரை வழிபடுதல் பண்டை நெறி.  அதனால் கணபதி சகஸ்ரநாமம்,  லலிதா சகஸ்ரநாமம் என்றப்டி ஒவ்வொரு கடவுளுக்கும்  ஆயிரத்தெட்டு கூறப்படும்.

இந்த நாமங்களெல்லாம் பற்றனின் அகத்தில் சுரந்தவை தாம்.  அகத்தில் என்றான் மனத்தில்.  மனத்துள் குடிகொள்பவனே  ஆண்டவன்.

அக சுர >  சக(ஸ்)ர   என்று மாறிற்று. இது அமணர் > சமணர் என்பதுபோலும் அகர சகரத் திரிபாகும். நாமங்களின் பிறப்பிடத்தால் ஏற்பட்ட இனிய பெயர் இது.  எண்களின் பிறப்பிடமும் மனித மனமே ஆகும்.  எண்ணப்படும் பொருள் அகத்தின் வெளியில் இருந்தாலும் எண்ண அறிந்து வெளிப்படுத்தியது மனமே ஆகும்.

சகஸ்ர என்பதற்கு வேறு பிறப்பும் கூறுவதுண்டு,  அவற்றை இங்கு ஆராயவில்லை.

நாவினால் சொல்லி அறியப்படுதலால் நாமங்களுக்கு அப்பெயர் உணடாயிற்று.

நா + அம் > நாமம்,  இந்தில் ம் என்பது இடைநிலை. பழங்காலத்தில் எல்லா நாமங்களும் நாவினால் சொல்லப்பட்டவையே. எழுத்தில் உள்ளவையும் நாவினால் சொல்லப்பட்டுப் பின் பதிவுற்றவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

பத்து, நூறு, ஆயிரம் முதல் தசம், சதம் என்பன வரை

 தலைப்பில் கண்ட பத்து, நூறு, தசம், சதம் என்பவை பற்றி அறிந்துகொள்வோம்.

தசைத்தல் என்றால் ''பற்றிப் பிடித்தல்''  என்று சொல்லலாம்.  பிடித்தல் என்பதும் பற்றுதல் என்பதும் ஒரு பொருளன ஆயினும் விளக்கத்தின் பொருட்டு இங்கு இணைத்துக் கூறப்பட்டன.  பல்+ து > பத்து என்பதும் பற்றிக்கொள்ளுதல் என்ற  பொருளுடையதே.  ஒன்றுமுதல் எண்கள் ஒன்றை ஒன்று பற்றிப்  பெரிதாகி,  ( ஒன்றாகி என்பதால் பெரியனவாகி என்று கூறவில்லை.  )  உண்டான எண்ணேதான் தசம் என்பது. பத்து என்பதும் அதுவே.  இவை ஒரே கருத்துடையனவாக உள்ளபடியால்  கருத்தியல் ஒற்றுமை இவ்விரண்டு எண்களுள்ளும் காணப்படுகிறது.  இதுபோலப் பல சொற்களில் கருத்துகள் ஒன்றாய் உள்ளமை எம் இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது கண்டுகொள்க.

தசம் என்ற சொல்லை அமைத்தபின், சதம் என்ற சொல்லை அமைப்பதில் அவர்கள் அதிக முயற்சி மேற்கொள்வதைத் தவிர்த்தனர்.  எழுத்துக்களை மாற்றிப்போட்டு,  சதம் என்ற நூறு குறிக்கும் சொல் மேற்கொள்ளப்பட்டது.

தசம் >  சதம் :  இது எழுத்து முறைமாற்றுப் புனைவு என்று பெயர்பெறும்.

சிறிதானது பெரியதாவதுதான்  தசைத்தல் அல்லது கொழுத்தல்.  இவை ஒருவகைப் பெரிதாதல் என்றாலும்  சிலவிடங்களிலே பயன்பாடு உடையது.  கழுதை கொழுத்தது எனலாம்;  ஆனால் மரம் கொழுத்தது என்று பேசுவதைக் கேட்டதில்லை. எங்காவது யாராவது பேசியிருக்கலாம். தசைத்தல் என்பதும் அத்தகையதே  ஆம்.  ஆனால் கொழு என்ற சொல் கொள் என்பதிலிருந்து திரிந்ததுதான்.  முன் இல்லாத சதைப்பிடிப்பு இப்போது ஏற்படுவதை இது குறிக்கும்.  முன் இல்லாத ஒன்றினை இப்போது ''கொள்வதால்''  அல்லது உள்ளடக்குவதால்  கொள் > கொழு என்பது பொருத்தமான சொல்லமைப்பே ஆகும், இதன்மூலம்  சதம்  தசம் என்பன தெளிவாகின்றன.

ஆயிரம் அமைத்த காலத்தில் அதுவே பெரிய எண்ணாய் இருந்தது.  ஆகப் பெரியது என்ற பொருளில்,  ஆய் + இரு   =  ஆகப் பெரியது என்ற பொருளில் அதை அமைத்தனர். இரு என்றால் பெரிது என்றும் பொருள்.

இதையும் வாசித்தறியுங்கள்:

https://sivamaalaa.blogspot.com/2023/01/blog-post_4.html  இங்கு ஏகாதசி என்னும் சொல்லை விளக்குமுகத்தான் யாம் சொல்லமைப்புகள் சிலவற்றை விளக்கியுள்ளோம்.  தொடர்புடைய கருத்துகள் இவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.