ஞாயிறு, 23 ஜூன், 2024

சகிப்பு என்ற சொல்லின் தோற்றம்

 சகிப்பு, சகித்தல் என்பன பலவாறு இவற்றின் தோற்றம்பற்றி விளக்கப்படலாம்.  இவை பலவாறு காட்டப்பெறும் தன்மை கொண்டு இலங்குதற்கு நாம் மகிழவேண்டும். அவற்றுளொன்றை இப்போது நாம் காணலாம்.

சகித்தல் என்பதாவது அகம் இயைந்து செல்லுதல். இந்தப் பொருள் செந்தமிழின் வழியிலே அறியக்கிடக்கின்றது.

அக இயைப்பு>  

அகரத் தொடக்கத்தன சகரத் தொடக்கத்தனவாய்த் திரியும். திரியவே:

சக இயைப்பு>  ச(க+இ)யைப்பு>  சகி[யை]ப்பு> சகிப்பு.

ககரம் இகரத்துடனிணைந்து கிகரம் ஆதலும் யை என்னும் கூடுதல் ஒலி ஒழிதலும் ஆன திரிபுகள் சகிப்பு என்ற சொல்லைத் தோன்றச்செய்கிறது.

சகிப்பு என்பது ஒரு திரிபுச்சொல்.

திரிபுகள் இல்லாத மொழி உலகில் இல்லை என்னலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கல்யாணம் என்ற சொல் மற்றும் அதன் வரலாறு

 கலியாணம் என்ற சொல் பற்றி நம் ஆய்வாளர்கள் செய்த ஆய்வு சொற்பமே.  அவர்கள் அறிந்துகொண்டது அது மற்ற வட இந்திய மொழிகளிலும் வழங்குகிற சொல் என்பதுதான். அது இன்னொரு மொழியில் வழங்கினால் அங்கிருந்து வந்திருக்கலாம் என்பது படித்தவன் படிக்காதவன் எல்லோருக்கும் ஒப்ப வந்துசேரும் எண்ணம்தான்.  இதில் ஒன்றும் ஆராய்ச்சி இல்லை. இதைக் கற்றோனின் கருத்து என்று சொல்லலாம். கல்லான் கருத்து என்றும் கூறலாம்.  ஆய்வதற்குரியது  சொல் ஒன்றுமட்டும்  அன்று.  கல்யாணம்,  கலியாணம்,  கல்யாண் எனப் பலவடிவங்கள்.  இவற்றுள் யாண் என்பதென்ன.  ஆண்டு> யாண்டு என்பதுபோலும் திரிபே  ஆண்> யாண் என்பது.

கலியாணம் என்பது கலயாணம் என்று வழங்கியிருத்தலும் உண்மை.  பெண் வழி பற்றிய பண்டைக் காலத்தில் ஆண்மகன் பெண்ணின் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு அவன் கலந்தமையின் கலயாணம்> கலியாணம்  என்ற திரிபு இருந்தமை சால உணரப்படும்.  கல> கலி> கல்.  தமிழர் இந்தியாவெங்கும் இருந்தமையின் இச்சொல்லும் பரவித் திரிந்து வழங்குவதாயிற்று.

இவ்வாறு அறிய, இச்சொல் கல யாண் > (கல ஆண்)   என்பதே.  கல இ ஆண் என்பது இந்த ஆணுடன் மணந்து வாழ்வாய் என்பதாகும்.  அது கலியாண் என்றே திரியும். இத்தொடர் வாக்கியப் பொருத்தம் உடையது.

பூசை மொழி என்பது வீட்டு மொழியின் திரிபே.  அது வெளிநாட்டு மொழியன்று. அதற்கெனச் சொற்கள் அமைந்திருக்கலாம்.  அப்படி அமைவதே இயல்பு ஆகும். வால்மிகி முனிவரும் உள்நாட்டவரே. அவரே முதல் பூசைமொழிப் பாவலர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

வெள்ளி, 21 ஜூன், 2024

மங்கலம் மங்களம்

 இன்று மங்கலம் மங்களம்  என்ற  சொற்களைச்   சிந்திப்போம்.

மங்கலம் மங்களம் என்பவை இரண்டும் ஒரே பொருளைத் தருதலால்,  இவை ஒரே அடியினின்று தோன்றிய சொற்கள் என்பது இன்று நிலவும் கருத்தாகும்.  மேலும் இவை தமிழன்று என்ற கருத்தும் சமஸ்கிருதம் ( பூசை மொழி அல்லது சங்கதம் ) என்ற கருத்துகளும் உள்ளன. மங்கலம் என்பது தமிழ்ச்சொல் என்ற கருத்தும் உள்ளது. மங்களம் என்றெழுதுவது வழுவென்று எண்ணுவோரும் உளர் என்று தெரிகிறது.

ஆரியா என்றால் அறிவாளிகள் என்பது பொருளாகும் என்று கூறியுள்ளனர். இதற்கான வேர்ச்சொல் என்னவென்பதில் ஐயப்பாடு முன்னர் எழுதினவர்களிடையே நிலவுகிறது.   

இதற்கான வேர்  ஆர்(தல்) அல்லது அறிதல்.  ஆர்யா என்றால் அறிந்தோர்.  இந்த வேர்கள் தமிழிலே தான் இருக்கின்றன.

ஆரியர் படை எடுத்து வந்தனர் என்ற தெரிவியல் இப்போது மெய்ப்பிக்கப்படவில்லை என்பதை மேலையர் ஒப்புக்கொண்டுள்ளனர்.  ஆனால் படை எடுத்துவராமல் மாடு ஓட்டிக்கொண்டபடி வந்த நாடோடிகள் என்ற கருத்தை இன்னும் வைத்துள்ளனர்.  இதை ஒப்பாதவர்களும் உள்ளனர்.

ஆரியா என்பது ஓர் இனப்பெயர் என்பதை இணங்குவோர் ஆய்வாளர்களில்   இல்லை.  அதை ஒரு மொழிப்பெயராக இன்னும் கருதுவோர் உள்ளனர். இந்தத் தெரிவியல்களைக் கருதிக் குழம்பாமல் இங்கு மங்களம், மங்கலம் என்ற சொற்களை ஆய்வு செய்வோம்.  இந்தியாவுக்குள் பலர் முன்காலத்தில் வந்துள்ளனர் என்றாலும் ஆரியன் என்ற பெயர் அவர்களைக் குறிக்கவில்லை என்பதே எமது கருத்தாகும்.

மங்களம் என்பது மங்கல் நிறத்தின் அடிப்படையில் வந்த பெயர் என்று ஆய்வறிஞர் சிலர் கருதுகின்றனர்.

மங்கலம் என்பதும் மங்களம் என்பதும் ஒருபொருளன என்று கருதப்படுகிறது.

இனி,  மனை,  மனைவி, என்ற சொற்கள்,  மன் என்ற அடியிலிருந்தே வருகின்றன.  திருவள்ளுவரும் தம் குறளில்:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

என்கின்றார்.

நன் என்பதற்கு மன் என்பதே நேர் எதுகை.  ஆகவே மன் நன் என்பதன் எதுகைத் தன்மையை மனைமாட்சி என்ற தொடரின்மூலம் அவர் தெளிவாக்கியுள்ளது தெரிகிறது.  எனினும் அவர் காலத்திலே அங்கு மன் கலம் என்ற வடிவிலிருந்து மங்கலம் என்று திரிந்துவிட்டது. எனவே அந்தத் திரிபையும் ஏற்றுக்கொண்டு மங்கலம் என்று வழங்குகிறார்.

இது தெளிவாகுவதால்:

மங்கலம்  என்பது மன்+ கலமே ஆகும்.  மன்னுதல் என்பது நிலைபெறுதல். மனிதர் நிலைபெறுவதும் பெண் அல்லது மனைவியினால்தான்.  மனைவிக்கும் அதுவே அடிச்சொல் என்பது முன் கூறினோம்.

மன் கலமே மங்கலம் என்று திரிந்துவிட்டது.  இதுபோல் திரிந்தவை முன்னர் நம் இடுகைகளில் கூறப்பட்டுள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்