செவ்வாய், 16 ஏப்ரல், 2024

அதிசயம் என்று எதைச்சொல்வது, ஓர் ஆய்வு.

அதிசயம், வியப்பு இவற்றின் உள்ளீடுகள்


Wonder என்ற ஆங்கிலச்சொல்லின் மூலம்  செருமானிய மொழியின் அகரவரிசையில் wundran என்று தரவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் வியத்தல்  என்னும்  பொருண்மை பற்றிய உணர்ச்சியை  அது தொடக்கத்தில் குறிக்கவில்லை என்பர். பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னரே அந்த மனவுணர்வையும் குறிக்க அது வழங்கிற்று என்று ஆங்கில வல்லுநர்கள் கூறுகின்றனர். பார்த்து அல்லது அறிந்தவுடன் புன்னகை பூக்கச் செய்வது  என்பது மூல இந்தோ ஐரோப்பியத்தில் காணப்படுகிறது. நகைப்போரும் உண்டென்று சொல்லப்படுகிறது,  இத்தகு நடப்புக்கு ஸ்மர என்ற சமஸ்கிருத்தச் சொல்லே  உதவிய ஆதி மூலச் சொல் என்று கூறப்படுகிறது.

தமிழில் ஆச்சரியம் என்ற சொல்லும் வழங்குகிறது.  இச்சொல்லில் ஆ என்பது ஆ என்னும் வியப்பொலி யெழுப்புதலைக் குறிக்கிறது.  சரியம்< சரிதல் என்பது சழிதல் என்றும் வரும் சொல்  ஆகும். சழிதல் என்பது உண்மையில் சுழிதல் அல்லது சுழலுதல் என்றும் வரும் மூலத்திற் பிறந்தது.  இது உம்மை > அம்மை என்பது போலும் உ - அ திரிபு ஆகும்.  உம்மை என்பது குறுகி உமை என்றும் ஆகும்.  ஒரு வியப்புக்குரிய நிகழ்வை அல்லது பொருளைக் கண்டவுடன் ஒருவகைச் சுழற்சி ஏற்படுகிறது.  கண்டு சுழலுதலே கண்டு மயங்குதலும் ஆகும்.  ஆகவே ஆச்சரியம் என்பது சரிதல் அல்லது சுழல்தல் என்பதே.  விழி என்ற சொல், இமைகளின் விரி என்பதே  ஆகும்.  இதிலிருந்து சழி, சரி என்ற திரிபை உணரலாம்.  வரி என்பது வழி என்று ஆயின் இரு வரிகளுக்கிடையில் இடனிருப்பதை உணர்த்துவதால் இவ்விரு சொற்களின் தொடர்பு அறியலாம்.  குரு என்பவர் ஒரு சீடர் குழுவினிடை பொலிகின்றவர்.  ஆகவே குழு மற்றும் குரு என்பவற்றின்ன் சொல்வளர்ச்சியை அறியலாம். குரு> குரவர் என்பது அவர் என்ற சொல் இணைந்த அமைப்பு  ஆகும். ஒழிதல், ஒருவுதல், ஒவுதல் என்பவற்றறின்  அணுக்கத்தினையும் அறிந்துகொள்க. வழி என்பது ஒரு வரிபோலும் நீர் ஓடுதல்.  இதிலிருந்து வழி வரி என்பவற்றின் அணுக்கத்தினையும் அறிந்துகொள்ளவேண்டும். ஆச்சரியம் என்பது ஒரு ஒப்பொலிக் கலவை ஆகும். ஒலிக்குறிப்புடன் இயற்சொல்லும் கலந்தது.

சுழலுதலும்  மருவுதலும் அசைவுகளே.   இவற்றை இணைத்தால்  சுழமரு என்று வரவேண்டும். ஒலிப்பில் இதனின் சற்று   வேறுபட்டும் வரலாம்.  சுழமரு  என்பதை ஏற்றுக்கொண்டு இதை ஸ்மர என்பதனுடன் ஒப்பீடு செய்வோம்.  மனத்துள் ஒரு எண்ணச்சுழல் உண்டாவதும் அதுபோய் உதடுகளில் மருவிப் புன்னகை யாவதும் எண்ணுவோம்.  இப்போது ஸ்மர என்பதிலிருந்து ஸ்மய்ல் என்றதும் அதன் முன்ன்னோடி வேறுபாடுகளுமான  ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பியச் சொற்கள் உண்டானமையும் இப்போது புரிந்துகொள்ளத் தக்கதாகி விடுகிறது.வியப்பைக் கண்ட மனச்சுழற்சியும் அது உதடுகளில் விரிவதுபோலும் அசைவாகிப் புன்னகை என்று அறியப்பட்டமையும் இவையெல்லாம் இறுதியில் "ஓண்ரன்" wondrun  ஆனமையும் பொழுது புலர்தல் போல் புதுச்சொல்லாய் அங்கு ஆனமையும் தெளிவாகிவிடுகிறது.  சுழமரு என்பதிலிருந்து  சுமர என்றாகி,  அது கிளைத்து :ஸ்மர ஆனது  எப்படி என்று தெளிவாகிறது.  ஸ்மர சார (காமனின் கணைகள்),     ஸ்மர ஜ்வாலா (  காமனின் ஆசைத்தீச்சுழல்கல்), ஸ்மர ருஜம்  ( காமனின்  உணர்வுகள்),  ஸ்மர வியால ( காமனின் எண்ண அலைகள்),  ஸ்மர அர்த  ( காமனின் வருநினைவுகள்), ஸ்மர தனு (காமனின் வில் ),ஸ்மர துர்மதனம்  (காமனின்  ஏற்புடைமை இல்லாத ஆசைகள்), எனப் புனைவுகள் விரிந்தன.சுழல், மருவுதல் என்ற அடிப்படைச் சொற்கள் இவற்றுக்கெல்லாம்  ஊற்றுக்களமாய் இருந்தது. 

வியப்பு என்பதை உணர்த்த,  எது இசைந்தது என்பதே இன்னொரு கேள்வியாகும்.  அது இசையும் என்பதே அதிசையும் > அதிசயம் ஆதலின்,  எதிசைந்தது என்பது அறிவுக்கு உணவாக்கும் கேள்வியாக்கிவிடுகிறது.  வியன் என்பது பெருமை அல்லது பெரிது ஆதலின்,  வியப்பு என்பது,  விய > வியப்பு எனப்  பெருமையே குறிக்கும்,  ஆகவே பெருமையானது ஒன்று இசைந்ததே வியப்பு  ஆகிவிடுகிறது

வி என்பது விரிவு குறிக்கும் எழுத்து/  இது விர் என்ற அடிச்சொல்லின் ரகர ஒற்று மறைந்த மீதம் ஆகுவது.    வி  அ >  விய என்றால் அங்கு விரிவு என்று பொருள். இனி, விர்> விய்> விய  என்று இதனை காட்டுதலும் ஆகும்.  வி அ > விய என்பதறிக. விரிவு அங்கு என்பது. பெரிது  என்பது இரு எல்லைகளும் ஒருபுறமும் இன்னும் இரு எல்லைகள் இன்னொரு புறமும் விரிந்தாலன்றி பெருமை என்பது ஏற்படாது ஒழியும். அதனால் வி அ என்பதும் விய என்பதும் உணரப்படும்.  வியப்பின் உள்ளீடு எல்லை விரிவாகவோ அன்றி உருவம் பெரிதாகவோ இருக்கலாம்.  எல்லாம் ஒருவழியில் வேறுபாடற்றவை.  அதில் எது இசைந்தாலும் அதிசையும் ,  அது அதிசயமே. அஃது இசையும் > அதிசையும் > அதிசயம் எனினுமாம்.

சகசமாக ஒன்று இசைந்திருந்தால்  அது சகசாதியம்.  அதையும் வியக்கலாம். Someone may be able to be surprised by just the common sense displayed. செயலில் ஒன்று இசைந்திருந்தால் அதை வியக்கலாம்.  தெய்விகத் தன்மை உள்ளதென்று ஒன்றை வியக்கலாம். அஃது இசைந்திருந்தலின் அதிசையும், > அதிசயம் ஆகிறது. இதை இசைவினால் வியப்பு என்க.  புத்த சைன நூலகளில் இவற்றைக் கண்டுணர்க.

சயம் என்ற தனிச்சொல் குறைதலையும் குறிக்குமாதலால் அதி சயமென்பது குறைவினிசைதலுமாகும்,

அயக்குதலென்பது அசைத்தல்.  ஒன்று அசைதலும் வியப்பை உண்ண்டாக்கலாம்.  அய என்பது சய ஆகும் பின் அம் விகுதியினால்  சயம் ஆகி,   அதிகுறைவும் அதிசயமே.

இப்போது அதிசயம் என்பதன் தன்மையை உணர்ந்துகொண்டீர்கள்.

அதிசையும் என்ற தொடரை அஃதிசையும் என்று எழுதுவர்.  சொல்லாக்கத்திற்கு அதிசையும் > அதிசயம் என்று திரிந்து சொல்லானது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

குறிப்பு:

அயக்கு-தல் >. அசக்கு-.  அசைத்தல். குன்றுக ளயக்கலின் (கம்பராமாயணம்.)

இந்த ஆங்கிலக் கவிதை கூட ஓர் அதிசயமான எழுத்துத்தான். முழுக்கவிதையையும் இங்குச் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள். இதைப் பாடிய கவி ஒலிவர் கோல்டுசிமித்.

Beside yon straggling fence that skirts the way
With blossom'd furze unprofitably gay,
There, in his noisy mansion, skill'd to rule,
The village master taught his little school;
A................................

https://allpoetry.com/The-Village-Schoolmaster2

இதை இன்னொரு முறை வாசிப்பதும் எமக்கு மகிழ்வு விளைப்பதே. சொடுக்கிப் படிக்க இனிது, இதைப் 13 அகவையில் யாம் வாசித்தது நினைவுக்கு வருகிறது.


திங்கள், 15 ஏப்ரல், 2024

தேர்தல் முன் கணிப்புகள்

கருத்துகள்  கணிப்புகள்  கொஞ்சமோ---- சொல்லும்

கனிச்சுவை  ஆரூடம் பஞ்சமோ?

பொருத்துறார் உண்மையைப்  பொய்களில்  ----- நம்மைப்

பொய்யறியார் என்றோ புனைகிறார்?


வாக்குகள் எண்ணிட அறிகிறோம் ---- இதற்கு

வரட்டுரை  ஆக்குதல்  என்பயன்?

நாக்குக்குக் கொடுங்கள்  ஓய்வினை----  வரும்

நாள்வரையில் காக்க வாய்மையே.


ஆனை கிடக்குது பானைக்குள் ---- அதை

அறிந்துவிட் டாலென்ன பொல்லாப்பு?

தேனென்னும் தீஞ்சுவை கிட்டுமே ----  இனித்

தேசத்தார் பாங்கினில் தென்றலே.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

புள்ளிவிவரம் கேட்பது

 புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின்

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்று

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்

படுக்கையைத் தேடிப் பறக்காமல் கேட்டுவிடின்

பூமியில் அஃதும் இயல்பன்று  நாமிதிலே

 நேமத்தால் நன்மைகாண் போம்

-----  சிவமாலா

இதன் பொருள்:

புள்ளிவிவ   ரங்களை  அள்ளித் தரத்தொடங்கின் --- ஒரு பொதுக்கூட்டத்தில் எழுதிக் கவனித்தாலே உருப்பெற்றுக் காணத்தக்க, புள்ளி விவரங்களை வாய்மொழியாகக் கூறத்தொடங்கிவிட்டால்,

ஒள்ளியரென்  போரும் உறங்கத் தொடங்கிடுவர்!--- மிக்கச் சிறந்த நினைவாற்றல் நிறைந்த அறிவாளிகள் கூடத் தூக்கத்தில் விழுந்துவிடுவர்;

சாப்பாடோ தேநீரோ சற்றே கிடைக்குமென்ற---- கூட்டத்தில் சாப்பாடோ குடிக்கத் தேநீரோ கொஞ்சம் கொடுப்பார்கள் குடிக்கலாம் என்னும்;

 ஏற்பா டறியா திறங்கிவந்த  ஊரார்--- ஏதாவது கிடைக்கும் பார்க்கலாம் என்று கூட்டத்திற்கு வருகின்ற ஊரின் பொதுமக்கள்;

கடினக் கருத்துகள் ஆரம்பம்  ஆனால்---  கடுமை மிகுந்த பொருளியல் கருத்துகள் சொற்பொழிவில்  வரத்தொடங்கிவிடுமானால்;

படுக்கையைத் தேடிப் ---  மீண்டும் வீட்டுக்குச் சென்று படுத்துத் தூங்கவே மனங்கொள்வர்;  பறக்காமல்---  வீட்டுக்கு ஓடிவிடாமல்,

கேட்டுவிடின்--- ( அவ்வாறின்றி) உட்கார்ந்து எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்வார்கள் ஆயின்;

பூமியில் அஃதும் இயல்பன்று ---  அதுவும் எங்கும் எப்போதும் 

நடைபெறுவதன்று;

 நாமிதிலே---  நாம் இதைப் பகுத்துணர்வதானால் இதில்

 நேமத்தால் நன்மைகாண் போம்.--- இயல்பான விதிமுறைகள் கடைப்பிடிப்புகள் எவையோ அவற்றால்,    உண்மையைத் தெரிந்துகொள்வோம்.

யாரையும் குறைகூறுவதைத் தவிர்ப்போம் என்றவாறு.

நேமம் :  எப்போதும் உள்ளபடி .

Note:  The meanings have been made clear; we may need to paraphrase correctly with due 

regard to the poetic wordings. Will attend when time permits.