வெள்ளி, 16 ஜூன், 2023

உதாசீனம் ---- சொல்லின் மூலங்கள்.

இது மதிப்பீடு வகைகள் பற்றிய சொல். 

நட்பு, உதாசீனம், பகை என்று மூன்று பகுப்புகள் கூறுவர். இவற்றுக்கு முன்,  நட்பு பகை என்ற இரண்டே பெரிதும்  கருதினர்.  ஒரு குற்றமுங் கூறாமல் ஒன்றை  ஏற்றல்,  அப்பொருளின் சிறப்பைக் காட்டும்.  ஒன்றை எதிர்கொண்ட மாத்திரத்தில் இது சரியில்லை,  அது அப்படி இருக்கவேண்டும். இது மட்டும் ஏற்கலாம் என்று பல்வேறு பகுப்புகள் செய்து பேசினால்,  அது  பகை ஆகும்.   பகு +ஐ =  பகை, அதனுட் புகுந்து பகுத்து உரைத்து இறுதியில் வேண்டாமை. இவை இரண்டே அல்லாமல்,  மூன்றாவதொன்றும் தோன்றியது.  அதுவே உதாசீனம்.

உதாசீனம் என்பதைச் சிறுமைப்படுத்தல் என்போம். உங்கள் முன் தோன்றிய ஒன்றைப்  பெரிதென்று கொள்ளாமை.  இந்தச் சொல் எவ்வாறு வந்ததென்பதைக் காண்போம்.

உது  :  அது, இது  உது  என்ற மூன்றிலும்  உது என்பது முன்னிடத்தில் வந்துற்றது ஆகும். உன் என்ற சொல்லில்,  இந்த முன்மை இருப்பதை அறிந்துகொள்ளலாம். உம், உங்கள் என்பவை பன்மை வடிவங்கள்.  உது என்பதில் து என்பது அஃறிணை விகுதியாக இன்றும் நம் மொழியில் உள்ளது. சுட்டுச்சொல் உ என்பதே.

ஆ =  ஆன என்பது

சீனம் என்பது சீன நாடு குறிக்கவில்லை.   சின் + அம் >  சீனம் ஆகும். இது முன்னிருப்பது,    ஆனால் சிறிய மதிப்புடையது,  அல்லது இருக்குமிடத்திற்கு ஏற்ற உயர்வு இல்லாதது என்று ஒதுக்கப்படுதல் ஏற்பட்டு வீழ்வது என்று பொருள். சீனம் என்பது முதனிலை நீண்டு அம் விகுதி ஏற்ற சொல்.

இது  " முன்னிருக்கலாம்  ஆனால்  முன்மை உடையதாகக் கருதத்தக்கதன்று"  -சிறியது  என்னும் பொருளினதால்,  உதாசீனம்  ஆயிற்று.

சின்னம் என்ற சொல்  இயல்பான உருவினின்று சிறிதாகச் செய்யப்பட்டது  என்பதைப் பொருளாய் உடைய சொல்.   சின்னம் என்பது இயல்பாய் நின்ற முதனிலை உடையது.  ஆனாற்  சீனி என்பது  சின்+ இ என்ற மூலங்கள் உள்ளதாய்,  சீனி என்று நீண்டு,   சிறிய துகள்களான இனிப்பரிகளைக் குறிக்கிறது.  சீனா நாட்டினின்று வருவிக்கப்பட்டதால், சீனி எனப்பட்டதென்பாருமுளர்.  சீனா என்பதன் அடிச்சொல்லான சின் என்பதும் சீன் என்றே நீண்டு நாட்டுப்பெயரானமை கண்டுகொள்க.  சின் > சீனா.ஆகவே இத்தகு நீட்சித் திரிபுகள் பிறமொழிகளிலும் வரும். [ not language-specific ]

சீனை என்ற ஒரு மூலிகை,  சிறிய வடிவினதானதனால் அப்பெயர் பெற்றது.  இங்கும் சின் என்பது சீன் என்றாகி ஐ விகுதி பெற்றது.  சீக்கல் என்பது சிறுகல்வகையைக் குறிப்பது,  பெரும்பாலும் இரும்புமண் கலந்து இயற்கையில் கிட்டுவது.   இங்கெல்லாம்  சிறு > சீர் > சீ  என்று திரிந்துள்ளது.  சீழ் வடிவது சிறு நீரினும் அருவருப்புக்குரியது,   சிறு > சீ > சீழ்.  மனித உடலின் சிறுமை காட்டும் புண்ணின் வடிநீர். சினை என்பது உறுப்பு என்னும் பொருளுடைத்து.  ஓர் உயிரிக்குள் இருக்கும் சிறிய உயிரி அல்லது விலங்கின் கரு.  இஃது இலக்கணக் குறியீடுமாகும் (. சினைப்பெயர்.)

சில் கல் >  சிற்கல் >  சிக்கல் என்பதும் கொள்க.

சில் என்பது  சின் என்பதன் அடிச்சொல்.   சில்> சீலை> சீலைவாளை.  ஒரு சிறிய வாளை வகை.  இது சொட்டை வாளை எனவும் படும்.  நம் மீனவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க.   ( சேலை   என்பதும் சீலை ஆகுமெனினும் குழப்பம் தவிர்க ).

சில்லு என்பது ஒரு பெரிய பாறையிலிருந்து பிரிந்து பறந்துவிழும் கல் துண்டு.

சீன என்ற சொல்லுடன் தொடர்புடைய சிறுமைக் கருத்துக்கள் இங்கு விளக்கப்பட்டன.  இங்கு,   சிறுமை, சிற்றுரு,  சிறுமெய்.

நட்பே யுதாசீ னம்பகை யென்னும்

ஒப்புடைக் குறிப்பி னொருமூன் றாகும். 56

------பன்னிருபாட்டியல் ( இலக்கணநூல் ).

இது எட்டாம் நூற்றாண்டு  நூல் என்பர்

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர் செய்வோம்,

வியாழன், 15 ஜூன், 2023

சொல்லாய்வுத் தரவியல்-- உதயமும் உதையும்

 இன்று "தை" என்ற விகுதியையும் அதன் பயனையும் அறிந்துகொள்வோம்.

உதை என்ற சொல்லில்  தை என்பது விகுதி  ( வி- மி போலி,  எனவே  பகுதியின் மிகுந்து நின்ற ஒலி என்பதாம்).  உ என்பது ஒரு சொல்,  அதன் பொருள் முன்னிருப்பது என்பது.  தை என்பதற்குப் பொருள் உண்டு. விகுதிகளிற் சில பொருள் தரும்,  சில தாரா.  பொருளை நாம் கண்டுபிடித்துப் பொருந்துமாயின் அதன் பொருள் அதுவெனலாம். இன்றேல் அஃது வெற்று விகுதி எனல் வேண்டும்.

உதை என்ற பகுதி விகுதிப் புணர்ப்புச் சொல்லின் பொருள் காலால் தொடுதல், அல்லது தாக்குதல் எனலாம். தை என்பது தொடுதல், தடவுதல், இணைத்தல் என்றெல்லாம் பொருளுடைத்து ஆதலின்,  உதை எனின், கால் முன்சென்று தொடுதல் அல்லது இடித்தல் என்று பொருள்.  உயிரிகளை இயற்கை அழகுடன் இணைக்கும் மாதத்துக்கு " தை"  என்று சொல்லப்பட்டடதால்  அது பொருளுடையதே.  தை+ இல் + அம் =  தை( இ ) ல் + அம் =  தைலம்.  இது வாக்கியச் சொற்களின் புணர்ச்சி அன்று;  சொல் உருவாக்கப் புணர்ச்சி. இங்கு இ கெட்டது. பிற ஒன்றிப் பிணைந்து  ஒரு சொல்லானது. பொருள்: ஓரிடத்து * {உடலில்) தடவும் மருந்து என்பது . இங்கு தை என்பது பொருள் உடையது.  இடைநிலை "( ~ ல்) "  இடப்பொருளது.  அம்: பொருள் உள்ளதாகவோ இல்லாததாகவோ கொள்ளப்படலாம்.  எவ்வாறாயினும் அதனால் நட்டமொன்று மில்லை.   அம் = "அமைக்கப்பட்டது" எனினும் கொள்க.  (ஏற்கலாம்.)

உதை +  அம் =  உதையம்,   ஐகாரம் குறுகி, உதயம் எனின் பொருள்கண்டோம். அல்லது  உ+ து + ஐ + அம் =  உதையம் > உதயம் என்று குறுக்கினும் பெரிதும் வேறுபாடின்மை அறிக. இவ்வாறு செய்வதில் நன்மைகள் சில காணப்படினும், இது ஒவ்வொரு சொல்லிலும் எழுவதே ஆகும்.  நாய்க்குட்டி என்றாலும் குட்டிநாய் என்றாலும் இவை பேசுகிறவன் மாற்றிக்கொள்ளும் உரிமையிற் பட்ட மாற்றங்கள்.  இவை சொல்லியலில் பேசப் பயனற்றவை.  அவற்றுள் புகோம்.

எந்த மனிதக் கூட்டமும், பேசுகையில் அவர்கள் பேசும் பாணிக்கும் சொற்றொகுதிக்கும் பெயர் வைத்துக்கொண்டு பேசுவதில்லை.  காலப்போக்கில் பெயர்கள் ஏற்பட்டு இன்று பெயர்கள் மொழிகளுடன் ஒட்டிக்கொண்டன.  சில சொற்கள் இதற்குரியன என்றும் அதற்குரியன என்றும் அறியப்பட்டாலும் அதனால் நட்டமொன்றுமில்லை.  கடனும்  (  கட்டிமுடிக்கவேண்டியது)  ஒன்றும் இல்லை.

உதை என்பது காலோடு தொடர்புபட்ட பொருளுடையதாய் இருத்தலால் அதை  வேறு பாணியிற் காட்ட விழையலாம்.  உதை என்பதிலிருந்து உதயம் வந்தபின் நாம் காலை எண்ணிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.  மறவாச் சிந்தனை எழுமாயின் வேறுவிதமாகக் காட்டிக்கொள்ள,   பெரும்பாலான சொற்களில் வசதி உளவாதல் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்.






to note:

உதயபானு

திங்கள், 12 ஜூன், 2023

குச்சி குறுச்சி கூர்ச்சி ( சொல்லியல் உண்மைகளும் மரபுகளும் )

 மொழி எனப்படும் தொடர்புக்கருவி,  நம் பிறப்புக்கு முன்னிருப்பது,  நமக்குப் பின்னரும் வெகுகாலம் வழங்கி மனிதர்களுக்கிடையில் பயன் தருவது ஆகும். யாரும் அதை முழுதுணர்ந்துவிட்டதாகக் கூறிவிட இயலாது. தொல்காப்பிய முனிவரே  தமக்கு முன்னிருந்தோர் சொல்லிவைத்தனவாகப் பலவற்றைக் கூறிச்செல்கின்றார். வள்ளுவனாரும்  பல கருத்துக்களிடையே,  பிறர் கூறியனவற்றையும் குறிப்பிட்டு,  அவற்றுடன் இயைந்தும் முரணியும் செல்கின்றார்.  எடுத்துக்காட்டாக,   "  அறத்திற்கே  அன்பு சார்  பென்ப  அறியார்!  மறத்திற்கும் அஃதே துணை" என்று இடித்துரை வழங்குகின்றார்.  "எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றும் விளக்குகின்றார்.

"நான் சொல்வதே சரி"  என்று யாரும் முடிவாகக் கூறிவிடுதல் முடியாது. யாரும் முடிவென்று சொல்லியிருந்தாலும்,  அது முடிவாகிவிடாது என்பதை அறிதல் அறிவாகும்.இப்போது குச்சி என்பதையும்  குச்சு என்பதையும் இவற்றுடன் தொடர்புடைய சொற்களுடன் கண்டு சில விளக்கங்களை அடைந்து மகிழ்வோம்.  குச்சி என்பதில் கு என்பதே அடிச்சொல்.  சி என்பது விகுதி.   குச்சு என்பதிலும் அங்ஙனமே  சு என்பது விகுதி ஆகும்,  கு என்ற பகுதியின் பொருள்,  குறுகியது என்பதே ஆகும்   கு என்ற ஓரெழுத்து ஒருசொல்லின் பொருள் யாதோவெனின், அதற்கும் குறு  ( குறுகியது) என்பதற்கும் வேறுபாடின்மை அறிக.

இதைப் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்யின், பொருள் மிகத் தெளிவாம் காண்க:

குறு = கு,

குறுச்சி  : ( இது இடைக்குறைந்தால்  )  குச்சி  ஆகிவிடும்.

சி என்பதும்  சு என்பதும் விகுதிகளாதலின்,

குச்சி என்பதும் குச்சு என்பதும் ஒரு பொருளின் விரிவமைவுகளே.

இங்கு  வரும் "ச்"  என்னும் எழுத்து,  வல்லெழுத்து,  இதனை மென்மையாக்க எழுந்த சொல்லே:  குஞ்சு என்பதாகும். கோழிக்குஞ்சு கியாகியா என்று கத்திக்கொண்டு தொடுதற்கும் மிக்க மென்மையானதே.  குச்சு என்பது மெலிந்து குஞ்சு ஆனது பொருத்தமே ஆகும்.  பொருள் மென்மை உடையதாதலின் அதுவும் மெல்லெழுத்துக்களாலே குறிக்கப்படுதல் வேண்டுமென்பது தமிழ்ச் சொல்லியல் நெறியாகும். மெல்லிய பொருளைக் குறிக்குங்கால் தடபுட கடபுட என்று உருட்டுமுரடாக இல்லாமல்  குஞ்சு என்று வந்ததே சிறப்பமைவு என்பது கண்டுகொள்க.

கு என்பதிலிருந்து நேரடியாக, குன் என்ற அடிச்சொல் பிறக்கிறது. குன் என்பதிலிருந்து  சிறிதாகுதல் குறிக்கும் குன் + சு என்று இணைத்து,  குஞ்சு என்ற சொல்லை உருவாக்கியும் காட்டலாம்.    அதே தத்துவத்தை ( தன்+ து + அம்>  த + து + அம் > தத்துவம்)  அல்லது தன்மையை விளக்க,  இஃது இன்னொரு குறுஞ்சாலை  ஆகும் என்பதறிக. 

குன் > குன்றுதல்:  சிறிதாயமைவு.

கொடிநாட்டுக் குழி குறுமை உடையதாதலின்,  அதுவும் குஞ்சி எனப்பட்டது. மென்மையான கொடி தாங்கு கம்பு நிற்பிடம் இதுவாதலின் சொல்லும் மென்மை காட்டுகிறது.

குறு என்பது நீட்டப்படின்  கூற் என்றாகாது. கூறு என்பது கூடுமாயினும் அது கூர் என்று மென்மை காட்டுதலின், ஏற்புழி கொள்ளப்படும்.  அடி அகன்று இருப்பினும் நுனி குறுகியே கூராதல் கூடும்.  கூரான கால்களை உடைய சிறு இருக்கை கூர்ச்சி ஆகிப்   பின் குருச்சி ஆகித் திரிந்தது.  இதில் வரும் குரு என்பது ஆசிரியன் என்று பொருள்படும் குரு என்பதனுடன் தொடர்பிலாதது, கூர் என்பது குரு என்று திரிந்தது.  முற்படக் கூரியது எனவாகும் பொருளில் கூரியம் > குரியம் >  குயம் என்பது பெண்ணின் மார்பகம் குறித்தது,  நெடில் குறுகியதும் இடைக்குறை கொண்டதும் ஆன சொல்.

குச்சு  இல் என்பது குச்சில் ஆகிச் சிறு வீட்டைக் குறித்தது.

தொடர்புடையன  பிற, பின்னொரு நாள் எடுத்துக்கொள்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.

பார்வை: 13062023