வெள்ளி, 17 டிசம்பர், 2021

தங்கு , சங்கம், தமிழ்வரைச் சிறப்புற்ற சொற்கள்.

 தங்கு என்ற வினைச்சொல் எவ்வாறு அமைந்தது  என்று அறிந்துகொள்வது ஓர் இன்றியமையாத முயற்சி என்று சொல்லுதல் சரியானதே ஆகும்.  இச்சொல்லில் கு என்பது சேர்ந்திருக்கும் இடத்தைக் குறிக்கும் உள்ளுறைவு .  இதற்கும்  உருபு ஏற்ற "சென்னைக்கு" என்ற சொல்லுக்கும் "கு " என்பதன் பொருண்மையில் வேறுபாடு  பெரிதாக ஒன்றுமில்லை.  இவ்வாறு சிந்திக்கவே,  த என்ற ஓரெழுத்து மொழியே மீதமாய் நிற்கின்றது.  இதனோடு, தான், தன், தம், தாம் என்பவற்றை ஒரு தொடர்புள்ளவை என்று முடிபு கொள்ள, பெரிய இன்னல் எதுவும் வந்து இடையுற்றுத் தொல்லைதரவில்லை. செல்வழி எளிதாகவே உள்ளது.


த என்ற ஓரெழுத்து உள்ளுறைவு,  அசைவின்மை காட்டுகிறது.  ஒரு மனிதன் ஓரிடத்தில் தங்குகிறான் என்றால் அவன் "சில" (சிறிது)  நேரமாவது இயங்குவதை நிறுத்திக்கொள்கிறான் என்று,  பொருள் தெளிவாகவே உள்ளது.  தங்கு என்ற சொல் சங்கு என்று திரியுமென்பதை நாம் முன்பே அறிந்துள்ளதால் ( பழைய இடுகைகளைக் காண்க),  ஒரு கூட்டுக்குள் தங்கி உயிர்வாழும் உயிரியை நாம் அப்பெயரால் அழைத்தமையில் பொருத்தத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.  அடுத்து, சங்கு என்ற  சொல் அம் விகுதி பெற்றுச் சங்கம் என்றாகி,  தங்கி உணவு குடிநீர் முதலிய கொண்டு,  அரசரால் விருந்தோம்பலும் பெற்றுக்கொண்டவர்களாய்,  உரிய நேரத்தில் அவ்வரசரின் முன் தோன்றித் தம் பாடலைச் சமர்ப்பித்துப் பரிசில் பெறும் புலவர்தம் கூட்டத்தினைக் குறித்தது மிகமிகப் பொருத்தமானதே என்பதும் நமக்கு ஒருசிறிதும் வியப்பினை விளைவிக்கவில்லை.  இச் சங்கமென்னும் சொற்கும் அசைவின்மைக்கும் தங்குதற்கும் யாது தொடர்பெனின்,  சங்கப் புலவர் எனப்பட்டோரும் சில நாள் அல்லது சிலமணி நேரமாவது ஆங்குத் தங்கியே விருந்துண்டு பரிசில் பெற்று மகிழ்ந்து  தம்மூர்கட்கு யாத்திரை பெற்றனர்,  ஆதலின் தொடர்பு மிக்குண்மை வெள்ளிடைமலை   ஆகின்றது.

சங்கமென்பது அவ்வாறாயின்,  சனி என்ற கோளும் அல்லது கிரகமும், கோள் எனப்பட்டவை யாவற்றினும் பெரிதும் தனிமதிப்பீடு பெற்று,  அட்டமத்துச் சனி, ஏழரைச் சனி என்றெல்லாம் தன் இயற்றுவினைகளால் உயர்த்திக் கூறப்பட்டு,  ஏழரையாண்டுகள் மானிடர்க்கு தொடர்தொல்லைகளையும் தந்து ஓர் இணையற்ற உலவுதன்மை பெற்றமையால்,  தனிச்சிறப்பினால் ஈசுவரப் பட்டமும் எய்தி,  தனி என்ற சொல் சனி என்று பெயராய் வந்து தன்னை மேடை ஏற்றிக்கொண்டு,  ஞாலத்துப் புகழ் கொண்டமையுடன் அப்பெயராலே நமக்குச் சொல்லின்பமும் பொருளின்பமும் அளித்து நிலவுகிறதென்பதை  நாம் எண்ணிப்பார்த்து இறும்பூதெய்தவே செய்கின்றோம்.

இனி, தான் என்பதும் ஒருவகைத் தங்குதற் கருத்தேயாகி, தனிச்சிறப்புக் கருத்தும் வெளிப்படுத்தி,   ஆப்கானிஸ்தான், தெர்க்மனிஸ்தான் என்றே பல பெயர்களுடன் இணைந்து தோன்றி,  பல மொழிகட்கும் உதவி இருத்தலும் நாம் அறிந்து இன்புறத்தக்கதே  ஆகும்.

இன்னும் பல விரித்தல் கூடுமெனினும்,  த என்ற ஓரெழுத்து மிக்க முதன்மை வாய்ந்த எழுத்து என்பதில் ஐயமில்லை.  நிற்றலுணர்த்தும் தகரத் தொடக்கமாகவே,  தமிழ் என்ற மொழிப்பெயரும் வருதலும் நாம் மகிழற் குரியதே  ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.  

வியாழன், 16 டிசம்பர், 2021

தெரிந்துகொள்ளவேண்டிய சொல்: ஆசு, இர, ~இ-த்தல் வினையாக்கம்

 ஆசிரயித்தல் என்ற சொல் இப்போது வழங்குவதில்லை.  தாளிகைகளையும்  வார மாத இதழ்களையும் யாம் வாசித்தவரையில் இச்சொல்லை அண்மையில் பயன்படுத்தி எதையும் எழுதிய எழுத்தாளர்களையும் யாம் எதிர்கொண்டதில்லை,  எமக்குத் தெரிந்தவரை இச்சொல் வழக்கில் இல்லை.

ஆசு என்ற சொல், பலவேறு சொற்புனைவுகளில் பாகங்கொண்டிருத்தலை நோக்குங்கால்,  அது ஈண்டும் வந்திருப்பது எமக்கு வியப்பை விளைவிக்கவில்லை என்றாலும், அதை நன்கு நந்தமிழர் அறிந்து  கொள்ள வேண்டுமென்ற  அவாவை மீக்கொள்விக்கின்றது.

ஆசு என்பது பற்றிக்கொள்வு.  இங்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமெனில், ஆற்றுவெள்ளத்தில் தவிக்கும்போது,  ஒரு மரத்துண்டைப் பற்றி நீந்துதல் போலும் பற்றிக்கொள்ளுதல்.  பற்றுக்கொள்வு அன்று.  பற்று என்ற பாசமாகாது இது.

இர என்பது வேண்டுதல்.  இர இத்தல் > இரயித்தல் என்பது வேண்டிக்கொள்ளுதல்,    ஒருவாறு வலியுறுத்திக் கொண்டு தாழ்ந்து நின்று கேட்பது  போன்றது.

இவை எல்லாம் ஒன்றாகக் கோவைப்பட்டு நின்று "ஆசிரயித்தல்" ஆயிற்று.  இரு வினைச்சொற்களும் ஒரு வினை யாக்க விகுதியும் கலந்து வினைச்சொல் அமைந்துள்ளது.

ஆசு என்பது பல் சொற்களில் வரக்காண்கின்றோம்.  இராசி -   இரு ஆசு இ > ~  என்று ஆனது ஆகும்.   ஆசுகொண்டு இருக்குமிடம்.  பற்றிக்கொண்டு வாழுமிடம்.  இவ்வாறு இருக்கை கொள்வதால் விளையும் பலாபலன்கள். கணியம் மிகச்சிறந்து விளங்கியது தமிழரிடையிலாகும்.  கணியர் பலர் தமிழ் நாட்டில் முன்னர் வாழ்ந்தனர். அதனால் அக்கலை வளர்ந்தது.  கணியன் பூங்குன்றன் அவர்களில் ஒருவர். சங்கத்துச் சான்றோர்.

ஆசீவகம் என்ற சொல்லும் ஈண்டு நினைவுகூர்தல் பாலது. இது ஆசு ஈ  அகம், அதாவது பற்றிக்கொள்ள இடம் ஈயும் நிலையம் அல்லது கொள்கையமைப்பு என்பது பொருள். இதற்கப்பால், அதை யார் பயன்படுத்தி எந்தக் கொள்கையைச் சொல்லியிருந்தாலும்,  அதை அதன்பால் அக்கறை உடையோரிடம் விட்டுவிட்டு, நாம் சொல் எவ்வாறு அமைந்தது என்பதை மட்டும் காட்டுவோம்.  ஓர் ஆய்வாளன் Christ  என்ற சொல்லை ஆய்கிறான். anointed person என்பதை அதன் சொல்லமைப்புப் பொருளாகத் தருகிறான். அவ்வளவு தான் சொல்லாக்கப் பொருளின் எல்லை.  அதற்கப்பால் உள்ள கதைகளும் வரலாறும் சொல்லாக்கத்துக்கு அப்பால் சென்று நம் கவனத்திலிருந்து நீங்குவதே நலம் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.


புதன், 15 டிசம்பர், 2021

சொத்தும் தொத்தும். மற்றும் சுயம்பு

 சொத்து என்ற சொல்,   சொம் என்பதனடியாய் எழுந்தது என்று சென்ற நூற்றாண்டின் தமிழறிஞர்கள் கருதினர்.  சொந்தம் என்ற சொல்லுக்கும் சொம் என்பதே முந்துவடிவம்.  சொம்+து > சொத்து;  சொம்+தம் அல்லது சொம்+து+அம் =சொந்தம்  ஆகும்.

இதே பரிமாணங்களுடன் அமைந்த இன்னொரு முந்துவடிவம்தான் தொம் என்பது.  இது தொம்+து > தொத்து என்றும் தொம்+து + அம் > தொந்தம் என்றுமாவதால்,  பெறப்பட்ட வடிவங்களிடையே  போக்கொருமை காணப்படுதல் தெளிவாகும்.

சொ(ம்) >  சொ+ அம் >( சொயம்)  [ பேச்சில்]  >  சுயம்.

இனி இது சுயம் >  சுயம்பு என்றுமாகும்.  தானே தோன்றியது என்பது இந்த இறுதிவடிவத்தின் பொருள்.

தொங்கு,  தொந்தி என்பவையும் தொந்தம் என்பதும் தொம் என்பதனடிப் பிறந்தவை.  தகர வருக்கத்துச் சொற்கள் சகர வருக்கமாகும்.  இதன்படியே சங்கு என்ற சொல்லும் தங்கு என்ற முன்வடிவிற் போந்ததாகும். இதை ஒரு நூறு ஆண்டுகளின்முன் உரைத்த தமிழ்வலரும் பழைய சுவடிகள் மூலம் காண்க.  சங்கு என்ற பெயர் வந்ததும் அதனுள் ஓர் உயிரி தங்குதல் செய்ததனால்தான்.

உண்மையில் சொத்து என்பது நம்மைத் தொத்திக்கொண்டிருப்பதுதான்.  தொத்துதல் என்பதில் நிரந்தரமின்மை தெளிவாய் உள்ளது.  தொத்து > சொத்து.  தொம்> சொம்.

இவ்வட்டத்தில் உள்ள சொற்கள் பல. அவற்றைப் பின் அறிவோம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்