புதன், 1 டிசம்பர், 2021

தமிழின் தொன்மை காட்டும் பதங்கள்

சொற்கள் எனப்படுவன எல்லாம் பொருள் பதிந்தவை ஆதலின் அவை "பதங்கள்"  எனவும் படும்.  பதி + அம் =  பதம். இகரம் கெட்டது. இது நடி+ அம் >  நட.ம் என்பது போலும் சொல்லமைப்பு.

நடம் ஆட, முழவு அதிர என்றது திருமுறை.

நடமாடித் திரிந்த உமது இடதுகால் முடமாகி-  ஒரு கர்நாடக சங்கீதப் பாடல் ( தமிழிசைப் பாடல்).

நடமாடுதல் ( ஆடுதல் ) என்ற வழக்கையும் நோக்குக. இது பின்னர் ஆடாமல் வெறுமனே நடத்தலையும் குறித்தது.  எ-டு:  ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.

படி+ அம் = படம்.  ஓர் உருவம் படிவு ஆகி அல்லது படிந்திருப்பதே படம்

இதில் கவனிக்கத்தக்கது:  இகரம் கெட்டுப் புணர்தல்.

இறைச்சியை நெருப்பிலிட்டு வாட்டினால் அது சற்றே கரிய நிறத்தை அடைந்துவிடும்.  இறைச்சி மட்டுமா?    இறகு மயிர் முதலியவற்றை அகற்றிவிட்ட,  கொன்ற கோழியின் உடலை வாட்டினாலும் சற்று கரிய நிறத்தை அடைந்துவிடும்.  மிக்கப் பழைய காலத்தில் -  நாம் சொல்வது :  கல்தோன்றி மண்ணும் தோன்றி விலங்குகளும் தோன்றி மனிதன் அவற்றை அடித்துத் தின்று உயிர்வாழ்ந்துகொண்டு "உற்சாகமாக"   இருந்த அந்த வரலாற்றுக்கெல்லாம் முந்திய காலத்தில்,  நெருப்பு மூட்டுவது எப்படி என்று தெரிந்துவிட்ட காலத்தில்,  அவனிடம்,  அடுப்பு என்று இருந்தனவெல்லாம் சில கற்களே. அவற்றில் மூன்று துண்டுகளை வைத்து, தீமூட்டி, இறைச்சியை வாட்டினான்....!

அவனறிந்த கருவியெல்லாம் அப்போது கல்தான்!  அடுப்புக்குச் சில பெயர்ந்த கற்கள்.  இறைச்சியைத் துண்டாக்கக் கைகளாலும் கால்களாலும் கிழித்தெடுக்கவேண்டும். அப்போதும் கல்லே உதவியது.  கூரான கற்கள் அவனுக்கு உதவின! அவற்றைக் கொண்டு இறைச்சியைத் துண்டுகளாக்கிக் கொண்டான்.

மின்னலின் வேகத்தை மிஞ்சிப் பாயும் ஏவுகணைகளை அவன் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமுடியாது.

இயற்கை அவனுக்குத் தந்த பெருந்தானம் -  கல்தான்.  அதற்கடுத்து மண்ணும் மரக்கிளைகளும் அவனுக்கு உதவியிருக்கும்.

தா என்றதும் இயற்கை தந்தது  தா- (இ)ன் - அம் =  தானம்.  கல்லே கருவி. அவன் பேசியது தமிழ்.  இன்றைத் தமிழ் அன்று.  அந்தக் கற்காலத் தமிழ்.  அப்போது அதற்குத் தமிழென்ற பெயர் ஒருவேளை ஏற்பட்டிருந்திருக்காது.

கல்லில் இருந்தே அவனுடைய கருவிகள் அமைந்தன.

அப்போது சொல் திரிந்தது.  எப்படி?  கல் என்பதிலிருந்து கரு என்று திரிந்தது. கல்லும் கருத்ததாகவே இருந்தது.    கல்> கரு> கருவி!

இந்தத் திரிபு ---  கண் காணாத, மனம் மட்டும் கற்பனை செய்யக்கூடிய திரிபு,  கருவி என்ற சொல்லைத் தந்த திரிபு,  கல் > கரு என்று திரிந்ததைவிட அருமையான வேறு திரிபு, எங்காவது கிட்டுமோ நமக்கு? 

அவன் செய்த வேலைகளுக்கெல்லாம் கல்லே பெருந்தானம்,  >  பெருதானம் > பிரதானம் ஆனது. இதில் எமக்கொன்றும் வியப்பில்லை.

கல் "கரு"வாகி,  பின்னர் கார் ஆகியது.  ஏனென்றால் அவன் கரிய நிறப் பாறைகளைக் கண்டதனால்.   கார் என்பதற்குக் கருப்பு என்ற பொருளை அந்த கற்பாறைகளே அவனுக்குச் சொல்லிக் கொடுத்தன.

அவன் தின்றது சுட்ட இறைச்சி.  உப்பு இல்லை. விலங்கின் குருதியே அவனுக்கு உப்பையும் தந்து உதவியிருக்கவேண்டும்.

சுட்ட இறைச்சி!  சுட்டுக் கரிந்த இறைச்சி!  அதை அவன் கரி என்றே உச்சரித்தான். இரண்டு ரகரங்களை இணைத்து  ரர  (ற)  என்று ஓர் எழுத்தை அமைத்தபின், முன்னைய நிலவரம் மாற்றமடையாமல்,  அதைக் " கறி" என்றே  அவன் குறித்தான்.  கறி என்பதற்குக் குழம்பு என்ற பொருளும், இறைச்சி என்ற பொருளும் இன்னும் உள்ளன. கரிந்தது என்ற பொருளும் தொலைவில் இல்லை.

றகர ரகர வேறுபாடு - பிற்காலத்தது.

இந்தச் சொல், சுட்டுக் கரிந்த இறைச்சியை அவன் உண்ட காலத்திலிருந்து,  கரி / கறி என்றே உள்ளது.  குழம்பு வைத்துச் சாப்பிடப் பிற்காலத்தில் அவன் கற்றுக்கொண்டான்.  அவன் மொழியில் அவன் வரலாறு இன்னும் உள்ளது. 

அவன் பசியடங்க, அந்த கரிந்த இறைச்சி முதலியவையே காரணம்.  கரு> கார்> காரணம். கருப்பினை அணவி நின்றது காரணம். இன்றைக்கு ஏன் என்பதற்கு வந்து உதவுவது காரணம்.  அடிப்படைப் பொருள் கல்லும் கருவும் காரும்  ஆவன.  ( ஓடும் கார் என்னும் வண்டியைக் குறிக்கவில்லை).

The writer is a vegetarian.  The purpose is to explain the term kaRi and kari or curry.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


குறிப்புகள்

சில எழுத்துப் பிறழ்வுகள் இருக்கலாம்.

கண்டுபிடிக்க இயலவில்லை. பின்னர் நோக்குவோம்.

நீங்கள் கண்டுபிடித்தால் பின்னூட்டம் செய்து உதவுங்கள்.

வெறுமனே என்பது வெறுமான என்று மாறியிருந்தது. இது இப்போது

திருத்தம் பெற்றுள்ளது. 1218 15122021

தொலைபேசி மென்பொருள்முலம் திருத்தமுடியவில்லை. இது

ஒரு புதுமென்பொருள் மேலேற்றியதன் காரணமாய் இருக்கலாம்.


செவ்வாய், 30 நவம்பர், 2021

கருவி, கருத்து, கரு>கார், காரணம், காரியம்.

 இந்தச் சொற்களைப் பற்றிச் சிந்தித்துச் சிலவற்றைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனையிலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொண்டால், அதைச் சிந்தனைப் பேறு அல்லது சிந்தனைச் செல்வம் என்று குறிப்பிடலாம்.  ஒருவர் பெற்று மகிழத் தக்க பான்மைப் பொருளைத்தான் ( சிந்தனைச்) செல்வம் அல்லது (சிந்தனைப்) பேறு என்று சொல்கின்றோம்.  அரிசியை ஆக்கினால்தான் சோறு கிட்டுகிறது; அதைப் போலவே, சிந்தனை செய்தால்தான் அதிலிருந்து பெறத்தக்க நல்லது எதாவது கிடைக்கும்.

உலகின் பொருட்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. வேறு எந்த நிறம் உடையதானாலும், அதை அடுப்பில் வைத்து எரித்தவுடன், அது சற்றுக் "கருவல்" நிறத்தை அடைந்துவிடுகிறது. கருமயிர், கருமணி, கருமுரல் முதலிய சொற்களிலும், கருப்பன் என்ற சொல்லிலும், கருமை நிறமே குறிக்கப்படுகிறது. ஆனால் கருவலி என்பது மிகுந்த வலிமை என்று பொருள்படுகிறது: ஆதலின் இங்கு கரு என்ற சொல் மிகுதி குறிக்கிறது. கருமான் என்பது கொல்லனைக் குறிப்பதுடன், கலைமான், பன்றி என்ற பொருள்களையும் தருகிறது. கருமாயம் என்றால் அதிகவிலை என்று பொருள். கருப்பூரம்   என்பது நீருக்கும் நெல்லுக்கும் பெயராதலுடன்  கற்பூரத்தையும் குறிக்கிறது.  எனவே,  "கரு" என்ற சொல் முன்னிணைந்துவிட்டால், அது கருப்பு நிறத்தைத்தான் குறிக்கவேண்டுமென்பதில்லை.

முன்னைய ஆய்வுகளின்படி, கள் என்பது கறு என்பதன் மூலம்.   கல் என்பது கரு என்பதன் மூலம். இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டே நாம் சொற்கள் பலவற்றுக்குள் புகுந்து வெளிப்பட்டிருக்கிறோம்.

கரு என்பது கார் என்று திரியும்.  கார்முகில் -  கருமுகில் அல்லது கருமேகம். இவை  நிறம் குறிப்பன.  ஆனால் கரு> கார்> காரியம் என்பதில் செயல் குறிக்கப்படுகிறது.  கரு> கார்> காரணம், காரணி என்பவற்றில்,  செயலே உள்ளுறைவு ஆகும். நன்னூலில் "கருவி காரியங் கருத்தன் "(நன். 290). என்ற  நூற்பாவில் அன் விகுதி பெற்ற வடிவம் வருகின்றது.  இது கருத்தா என்று பொருடருவதே. உந்துவன் (நல்லுந்துவன் ) என்ற வடிவில் அன் விகுதி வருதல் போலும் இக் கருத்தன்.  நிலா என்பது ஆ விகுதி பெற்றுவருதல் போலும் கருத்தா.  அர் விகுதிக் கருத்தர் என்ற வடிவும் உளது.  இக் கருத்தன் எனற்பாலதற்குச்  "செயலோன்"  எனற்பாலதே பொருளாகும்.

கருத்தல் என்ற வினை எங்கும் கிட்டவில்லை என்று ஆய்வாளர்கள் சொல்வர்.  இவர்கள் தேடிப்பார்த்தவர்கள்.  கரு + அணம் >  காரணம்,  இது எவ்வாறு எனில், ஒரு+ உயிர் > ஓருயிர் என்பதுபோலுமே திரிபன்றி வேறில்லை. ருகரத்தின்முன் உயிர்வர, முதனிலை நீண்டது காண்க.

கருவி என்பது எந்த நிறத்திலும் இருக்கலாம், கருத்துக்கு நிறம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், காரியம் என்பவற்றில் கருமை ஏதுமில்லை.

கரி என்ற சொல்லும் உள்ளது.  இது எரிகையில் கருநிறம் அடைந்த மரக்கட்டையைக் குறிக்கும்.    கரு + இ = கரி என்பது சரியாக வருகிறது.  இங்கு கரு என்பது கருநிறம் குறிக்கிறது.

கரி என்பது கருமை நிறமுள்ள, முழுமையாய் எரிந்துவிடாத மரப்பொருளைக் குறிக்கிறது.  கருப்பாய் உள்ளமையால் பன்றிக்கும் யானைக்கும் கருமான் என்ற பெயர்.  கருமான் என்ற கொல்லன்பெயரில் மான் என்பது மகன் என்பதன் திரிபு.  யானை பன்றி என்பன குறிக்குங்கால் மா ( விலங்கு) என்ற சொல்லின் கடைமிகையே "மான்".  இதற்கு எடுத்துக்காட்டு:  கோ(த்தல்) >  கோர்(த்தல்).  கோர் என்பது மறுக்கப்பட்ட வடிவம்.

ஆனால் கரு என்பது சரு என்று திரியும்.  எடுத்துக்காட்டு: 

சருக்கம் என்பது படைப்பு என்று பொருள்படுகிறது.  அதாவது செய்யப்பட்டது.

சரு>  சார் > கார் என்று திரிதல் கூடும்.

ஆர்தல் என்ற வினை சார்தல் என்றும் திரியும்.  ஆர்தல் செய்தல், நிறைதல் என்ற பொருளில் வரும்.  அரு என்பதும் ஆர் என்று திரியத்தக்கது.

அரு> கரு>< சரு.

ஆர் > கார் >< சார்.

உயிருடன் இருந்த ஒருவன் மறைவு எய்திவிடினும் அவன் வாழ்ந்ததற்கான சான்றாக அவன் விட்டுச்சென்றவை இருத்தலேபோல்,  சரு, அரு, சார், ஆர் என்பன வாழ்கின்றன.  ஆதலின் முன் இருந்த ஆய்வாளர்கள் கரு என்பது மறைந்த வினைச்சொல் என்று மொழிந்தமையின் ஏற்புடைமை அறிந்து மகிழற் பாலதே.

எழுதருகை என்ற  மீட்டுருவாக்கத்திலிருந்து எச்சரிக்கை  என்ற தமிழ்ச்சொல் வந்ததாக முன்னர் மொழிநூலார் கூறியுள்ளனர்.  எழுதருகை போல,  கரு, என்ற மீட்புரு இனிய ஆய்வே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

 


ஞாயிறு, 28 நவம்பர், 2021

நோய்நுண்மி உருமாற்றம்

 பழைய நோய்நுண்மி பவனி முற்றவில்லை

நுழைய முந்துகிற  புதிய உருமாற்றம்!

இழையும் வாசலிலே இறுதி செயல்வேண்டும்

தழைய விடலாமோ தரணி அறிவியலார்?


அதுவே பரவிடிலோ  கதறும் உலகிற்கே

சிதைவே அன்றியினிச் சேரும் நலமுண்டோ?

முதலே நாமடைந்த முடியாத் துன்பமெலாம்

விதமாய் வரும்போது விடுதல் விளக்கேது?


நோய்நுண்மி -  வைரஸ்

உருமாற்றம் -  mutation

இழையும் - நடமாடும்

வாசல் --  அது தோன்றிய இடம்

தழைய -  அது விருத்தி அடைய ( இதற்குரிய வினைச்சொல், தழைதல். தழைத்தல் அன்று).


முதலே = முன்னர்

( இங்கு  ஏகாரம் இசைநிறை.  அதாவது ஏகாரத்துக்குப்  பொருளில்லை. முதல் - முன்பு என்று மட்டும்  பொருள் கொள்க. )

விதமாய்  - உருமாறி, வேறுவிதமாய்.

விதம் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபடுவதால் உண்டாகும். விதத்தல் என்பது வினைச்சொல். விதந்து  என்பது வினைஎச்சம். ஆகவே விதமாய் எனின், தனிநிலையாக என்று பொருள்கொள்ளவேண்டும்.

பவனி என்பது பரவு அணி > பரவணி என்பதன் இடைக்குறை.

இங்கு நடமாட்டம் என்பது பொருள்.  பரவணி > ப(ர)வணி> பவனி.

திரிபுச்சொல்.