திங்கள், 27 செப்டம்பர், 2021

தவ- தப என்ற அடிச்சொற் பொருள்.

 பல சொற்களை அணுகி ஆராய்ந்த பின்புதான் அடிச்சொல்லைக் கண்டுபிடிக்க முடியும்.   முடியுமென்றால் சிலவேளைகளில் முடியாமற் போவதையும் அது உள்ளடக்க வேண்டும்.  இதற்குக் காரணம், நாம் எதிர்பார்ப்பதெல்லாம் உலகில் நடந்துவிடுவதில்லை என்பதுதான்.

நந்தவனம் என்று குறிக்கும் ஓர் இடத்தில் காடுபோல பெரிய மரங்கள் இருப்பதில்லை.  செடிகள்,  கொடிகள்,  தாழ்வாக வளரும் சில சிறுவகை மரங்கள் இருக்கலாம்.  காடு எது, நந்தவனம் எது என்பது பெரும்பாலான மக்களுக்கு எடுத்துச்சொல்லாமலே புரியக்கூடியது என்பது எம் துணிபு.

தவனம் என்பதென்ன என்பதும் ஆய்வுக்குரியது.

தாவு + அள் + ஐ  என்ற உள்ளுறைவுகளையே தவளை என்னும் சொல்லுக்குக் காட்டியுள்ளோம்.  தாவு அளை எனினும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

தாவு என்பதற்கும் தவழ் என்பதற்கும் தொடர்பு உள்ளது.  இவை இரண்டும் முற்செலவு குறிக்கும் சொற்கள். இவைதமக்குள் நுட்பவேறுபாடு வழக்கில் ஏற்படுவது ஆகும்.  தாவுதலில் தாவும் எதுவும் தவழ்தலினும் மேலெழுந்து பின் தரைக்குச் செல்லும் என்பதுதவிர,  முற்செலவில் வேறுபாடு ஒன்றுமில்லை. எனினும் இவற்றுள் இருக்கும் செயல் வேறுபாட்டினும்  தரையில் முற்செலவு என்ற பொதுக்கருத்தினை உன்னவேண்டும். 

தவளை என்ற சொல்போலவே தவணை என்ற சொல்லிலும் ஒரு தாவல் கருத்து உள்ளுறைந்துள்ளது. ஒரு தொகையைக் கொடுத்து, அப்புறம் இடையீடு விட்டு மீண்டும் ஒரு தொகையைக் கொடுத்து இவ்வாறாக,  தாவுதல் போலவே இச் செயலும் அமைந்துவிடுதல் காணலாம்.

தவறு அல்லது தவறுதலும் எப்போதும் ஏற்படுவதில்லை.  ஒருமுறை பிசகியும் அப்புறம் அதனின்று வழுவாமலும் அப்புறம் வழுவியும் மாறிமாறி இதுவும் ஏற்படும்.  கால்தவறுதல் என்ற வழக்கைக் காண்க.  எப்போதாவது ஒருமுறை கால் தவறுகிறது.

தப்புதலும் எப்போதும் நடவாமல் எப்போதாவது நடப்பதுதான்.  இதிலிருந்து தபு என்ற சொல் இடைக்குறைந்து தோன்றுகிறது.  அதில் அம் விகுதி இணைந்து தபம்>  தவம் ஆகிறது.  ப  > வ போலியால் ஏற்படும் மாற்றம் இது.  தவம் என்பதும் ஒரு குறிப்பிட்ட காலம் நடைபெற்று அப்புறம் முடிவதுதான். அதன் முடிவு ஒரு வெற்றி என்றும் கூறப்படும். வேண்டியதைப் பெற்ற மனநிறைவுடன்  அது முடிகிறது.

இந்தச் சொற்களிலெல்லாம் தவ, தப என்ற அடிச்சொற்கள் இடையீட்டுடன் நடைபெறுதலை  அடிச்சொல்லின் உள்ளுறை பொருளாகக் கண்டு உண்மையை உணரவேண்டும்.

இதைப் பின்னர் விரித்துணர்வோம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர். 

வருந்திய நாய்க்குட்டியை அழைத்துக்கொள்ளுதல்.


 வருத்தமோ கொண்டாய் குட்டி?

வந்துநான் அமர்ந்தேன் ஒட்டி!

அருத்துவேன்  பாலும் சோறும்,

அருகில்நான் அமர்ந்து விட்டேன்.

திருத்தமாய் முடியைச் சீவி

சீரிலே உன் தாய்   ஆக,

ஒருத்தன் நான்  போதும் வாவா

உண்மையில் நானுன் அன்பன்.


உணராத மொட்டை  ஞாலம்

ஓயாத கலகம் நீளம்!

அணர்தரு அன்பே  இல்லார்

அழிபோரை நடத்திக் கொள்வார்!

துணிவற்ற மனிதர் வேண்டாம்.

 தூணாக நிற்பேன்  வாவா!

தனியன்பு தழைக்க வாழ்வாய்

தயங்காமல் அடுத்து வாவா.!


----- என்று நாய்க்குட்டியை அழைக்கிறார் இந்த மூத்த குடிமகன்.


அரும்பொருள்:

அருத்துவேன் -  அருந்தச் செய்வேன்.

அருந்து - தன்வினை.  அருத்து -  பிறவினை.

சீரிலே உன் தாய் - உன்னைச் சீராட்டுவதிலே உன் தாய்போல

ஞாலம் -  உலகம்

மொட்டை - பண்பு இல்லாத

நீளம் - நீளமான,  தொடரும்

அணர்தரு --  உயர்வுதருகின்ற.

அணர்தல் -  மேலெழல்.  அடிச்சொல்:  அண் ( நெருங்கு )

அழிபோர் -  அழிவு ஏற்படுத்தும் போர்கள்.

துணிவு அற்ற - மனத்துத்  திடம் இல்லாத

தூணாக -  பக்க பலமாக

தனியன்பு  -  ஒப்பிலாத அன்பு.


தொடர்புடைய இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_27.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html




ஒரு நாய்க்குட்டியின் வருத்தம்

வரவேற்கவில்லை எனை யாரும் --- நான்
வந்து சேர்ந்து நிற்கிறேன் பாரும்!
துறவே மேற்கொண்டேன் போலும்  ---- எனைத்
தூரம் நிறுத்திவிட்டார் ஓரம் கட்டிவைத்தார்     (வர)

நாய்க்குட்டி  ஆகினேன் குற்றமோ----நான்
நல்லபடியே குலைப்பேன் ஒருதலைமை மதிப்பேன்,
பேய்க்குட்டியாய் என்னைப் பிறழ - -- நினைத்துப்
பேதப்படுத்துவர்  தொலைவிற் கடத்துவர்  (வர)  



இங்கு அருஞ்சொற்கள் இல்லை.  பொருள் வேண்டுமாயின்
பின்னூட்டம் செய்யுங்கள்





 

தொடர்புடைய இடுகைகள்: